search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள்"

    • நீங்கள் அனைவரும் இங்கு கூடி இந்தியாவின் எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்று ஆலோசித்துள்ளீர்கள்.
    • ஒரு சுற்றறிக்கையை அனுப்புவதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை என்னால் உருவாக்க முடியாது.

    புதுடெல்லி:

    தேசிய படைப்பாளர்கள் விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடந்தது. முதல் முறையாக இவ்விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

    சிறந்த கதை சொல்லல் விருது, ஆண்டின் பிரபல படைப்பாளி, பசுமை சாம்பியன் விருது, சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி, மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் விவசாய படைப்பாளி, தூய்மை தூதர் விருது, கல்விப் பிரிவில் சிறந்த படைப்பாளி உள்பட 20 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் விருதுகளை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது:-

    இன்று நீங்கள் அனைவரும் இங்கு கூடி இந்தியாவின் எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்று ஆலோசித்துள்ளீர்கள். காலம் மாறும் போது, ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் போது, அதற்கு ஏற்ப மாற்றியமைப்பது ஒவ்வொரு நாட்டின் பொறுப்பாகும்.

    அந்த பொறுப்பை இன்று பாரத மண்டபத்தில் இந்தியா நிறைவேற்றுகிறது. டேட்டா புரட்சியில் இருந்து மலிவான மொபைல் போன்கள் வரை உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை உருவாக்கி உள்ளது.

    இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் பெருமை, டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்கும் இளைஞர்களுக்குச் சேரும்.

    நான் மாணவர்களுடன் தேர்வு பற்றிய விவாதம் நடத்துவது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை பலர் கேலி செய்கிறார்கள். பிரதமர் ஏன் இதையெல்லாம் செய்கிறார் என்று நினைக்கிறார்கள்? எனக்குத் தெரியும். ஒரு சுற்றறிக்கையை அனுப்புவதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை என்னால் உருவாக்க முடியாது.

    ஆனால் நான் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள வேண்டும். நான் ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்தை தவறாமல் செய்கிறேன்.

    இந்தியா, அதன் கலாச்சாரம், பாரம்பரியம் பற்றி உலகத்துடன் கொள்ள 'இந்தியாவில் உருவாக்கம்' இயக்கத்தைத் தொடங்குவோம். பெண்கள் சக்தியை உள்ளடக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுமாறு படைப்பாளிகளை கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
    • பயிற்சியின் போது மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.

    சென்னை:

    பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ தோ்வுகளுக்கு கடந்த நவம்பா் முதல் பிப்ரவரி வரை பள்ளி அளவில் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, பொதுத்தோ்வு முடிந்த பிறகு 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு கல்விமாவட்ட அளவில் மாா்ச் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை தொடா் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

    அதன்படி, ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்துக்கு 40 போ் வீதம் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். இணையதளம் மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறை வசதி கொண்ட பள்ளிகளை மையங்களாகத் தோ்வுசெய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வழியில் பயிற்சி நடைபெறும்.

    தினந்தோறும் தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய 4 பாடங்களிலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதுதவிர பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை வழங்கப்படும். பயிற்சியின் போது மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.

    வாரந்தோறும் சனிக் கிழமை திருப்புதல் தோ்வுகள் நடத்தப்பட்டு அதுகுறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும். அதற்குரிய கால அட்டவணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி பயிற்சி மையங்கள் சிறப்பாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தனர்.
    • 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு.

    தமிழகத்தில் இன்று பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.

    இந்த தேர்வில், 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தனர்.

    இதைத்தவிர, 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர் எனவும் கூறப்பட்டது.

    இதற்காக, தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    தமிழ் பாடத்தேர்வான இன்று சுமார் 12,364 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என கூறப்படுகிறது.

    • பறிமுதல் செய்யப்பட்ட போதை ஸ்டாம்ப்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது.
    • போதை ஸ்டாம்ப் சப்ளை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் 'ஸ்டாம்ப்' வடிவிலான போதைப் பொருள் புதுச்சேரி தாகூர் நகர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், தாகூர் நகரை சேர்ந்த இசை கலைஞர் சுசீந்திரன் (வயது 28) என்பதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எல்.எஸ்.டி. எனப்படும் போதை 'ஸ்டாம்ப்' விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சுசீந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 போதை 'ஸ்டாம்ப்'கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சென்னையை சேர்ந்த ஆஷிக் (23) என்பவரிடம் இருந்து போதை ஸ்டாம்பை வாங்கியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து ஆஷிக்கை கைது செய்து விசாரித்த போது, அவரது நண்பர் சென்னையை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சந்தோஷ்(22) என்பவரிடம் இருந்து வாங்கியதாக கூறினார்.

    உடனே போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று, அவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் 2 பேரிடம் இருந்து 13 போதை ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

    மருத்துவ மாணவர் ஆஷிக், டி.ஜே . நிகழ்ச்சியை பார்க்க செல்லும் போது சுசீந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது சுசீந்திரன் தனக்கு போதை ஸ்டாம்ப் வேண்டும் என்று ஆஷிக்கிடம் கேட்டுள்ளார்.

    அவர் தனது நண்பர் சந்தோசின், கல்லூரியில் படிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் அதனை பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.

    இதற்கிடையே சந்தோஷ் தனது நண்பர் ஆஷிக்கை பார்ப்பதற்காக புதுச்சேரி வந்தார். அப்போது இவர்கள் 3 பேரும் சந்தித்து பேசினர்.

    பின்னர் காரில் சென்னை சென்று அங்கிருந்து 20 போதை ஸ்டாம்ப்களை வாங்கி புதுச்சேரி வந்தனர். அதில் 7-ஐ சுசீந்திரனிடம் கொடுத்தனர்.

    மேலும் 13 போதை ஸ்டாம்புகளை அவர்கள் பயன்படுத்த வைத்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதை ஸ்டாம்ப்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    இவர்களுக்கு போதை ஸ்டாம்ப் சப்ளை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து மூலக்கரைப்பட்டிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் பழைய பஸ்களாக மாறிவிட்டதால் புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் சமீபத்தில் மூலக்கரைப்பட்டிக்கு சென்ற அரசு பஸ்சின் பின்புற படிக்கட்டுகள் ஏதும் இல்லாமல் மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.

    அந்த வழியாக பயணிகள், மாணவ-மாணவிகள் ஏறி உள்ளே செல்லும் நிலையில் அதே வழியாக இறங்கவேண்டிய நிலை இருக்கிறது. எனவே ஆபத்தான நிலையில் மக்கள் பயணம் செய்யும் நிலையை தவிர்க்கும் விதமாக உடனடியாக பஸ் படிக்கட்டுகளை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழையால் பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
    • கருப்பாநதி அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை திடீரென பரவலாக மழை பெய்தது.

    நெல்லையில் கடந்த சில நாட்களாக காலை 7 மணி முதலே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. ஒரு சில இடங்களில் லேசான சாரல் அதிகாலையில் பெய்தது.

    நெல்லை மாநகர பகுதியில் இன்று காலை 7.30 மணிக்கு பிறகு பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது. குறிப்பாக வண்ணார்பேட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் தொடக்கத்தில் லேசான சாரல் அடித்த நிலையில் படிப்படியாக மழை அதிகரித்தது. சுமார் 1 மணி நேரம் தச்சநல்லூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. டவுனில் சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டையில் அரை மணி நேரமாக பெய்த கனமழையினால் வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர்.

    பெரும்பாலான வாகன ஓட்டிகள் வண்ணார் பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நனையாமல் மழைக்கு ஒதுங்கி நின்றனர். காலையில் பெய்த மழையால் பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதி அடைந்தனர். திடீரென பெய்த மழையால் அவர்கள் பணிக்கு செல்லவும், பள்ளிகளுக்கு செல்லவும் தாமதம் ஏற்பட்டது. மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் பெய்த மழையில் பெண்கள் குடைபிடித்தபடி நடந்து சென்றதை காணமுடிந்தது.

    மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பாளையில் 20 மில்லிமீட்டரும், நெல்லை யில் 7.40 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அணை பகுதியில் மழை இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் லேசான சாரல் அடித்தது. இன்று காலை முதல் ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக அங்கு 27 மில்லிமீட்டர் மழை பெய்தது. கருப்பாநதி அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்தது. தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவில் மற்றும் சிவகிரி பகுதிகளிலும் காலையில் இருந்து சாரல் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியிலும் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. தூத்துக்குடி நகர் பகுதி, திருச்செந்தூர் சாலை, கடற்கரை பகுதிகளில் இன்று காலை சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டியது. ஒரு சில இடங்களில் அதிகாலை 3 மணிக்கு சாரல் மழை தொடங்கிய நிலையில் 4 மணி அளவில் இடி-மின்னலுடன் ஒரு மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. இதனால் திருச்செந்தூர் சாலையில் மழை நீர் தேங்கி கிடந்தது.

    மாவட்டத்தில் முள்ளக்காடு, பழைய காயல், ஆறுமுகநேரி, முத்தையா புரம் ஆகிய இடங்களில் உப்பு உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிய நிலையில் தற்போதைய மழையால் அவை தடைபட்டுள்ளன. மாவட்டத்தில் அதிக பட்சமாக காயல்பட்டி னத்தில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. 

    • தேர்வுகளின்போது மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனை பராமரிக்க வேண்டும்.
    • நாம் சாப்பிடும் உணவுதான் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், மன நலனையும் தீர்மானிக்கிறது.

    கடுமையான போட்டி சூழலில் கல்வியில் சிறந்து விளங்குவதற்கும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் பெரும் சவாலை எதிர்கொள்கின்றனர்.

    குறிப்பாக தேர்வு நேரத்தில் கல்வி மற்றும் செயல்திறன் குறித்த அழுத்தத்தை மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலை மிக முக்கியமாக கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

    இதுபோன்ற அழுத்தம் மாணவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை வெகுவாக பாதிக்கிறது. தேர்வுக்கான தயார்நிலை முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருப்பதை முக்கியமாக பார்க்க வேண்டும். படிப்புக்கும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் இடையில் ஒரு நியாயமான நல்ல சமநிலையை பராமரிப்பது மிக முக்கியமானது.

    உடற்பயிற்சி

    தேர்வுகளின்போது மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனை பராமரிக்க வேண்டும். அதற்கு குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    வழக்கமான உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது அறிவாற்றல் செயல்பாடு மற்றும் படித்தவற்றை நினைவுபடுத்தும் திறனை மேம்படுத்துகிறது. இவை இரண்டும் தேர்வு எழுதுவதற்கான செயல்திறனை மேம்படுத்த முக்கியமானவை.

    தேர்வுக்கு தயாராகும்போது, மாணவர்கள் ஆரோக்கியத்தை விட படிப்புக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். நடைபயிற்சி, யோகா போன்ற சில வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். இது மன அழுத்தத்தை கணிசமாக குறைக்கும். மாணவர்கள் தங்கள் மனதை புதுப்பிக்க உதவி செய்யும்.

    நல்ல தூக்கம்

    நாம் சாப்பிடும் உணவுதான் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், மன நலனையும் தீர்மானிக்கிறது. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சீரான உணவை உட்கொள்வது மூளை செயல்பாட்டிற்கு தேவையான சக்தியை வழங்குகிறது.

    போதுமான நீர்ச்சத்தை நாம் கொண்டிருக்கிறோமா என்பதில் அக்கறையின்மை உள்ளது. திட உணவுக்கு சமமாக நீர்ச்சத்து முக்கியமானது. நீர்ச்சத்து இல்லாதது அறிவாற்றல் திறனையும், செரிமானத்தையும் வெகுவாக பாதிக்கும்.

    மாணவர்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு சென்று காலையில் விழித்து சீரான தூக்க நடைமுறைகளைப் பராமரிக்க வேண்டும். இரவு நேரத்தில் முறையான தூக்கத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் எப்போதும் சிறப்பான நினைவாற்றலுடன் படிக்க முடியும். நல்ல தூக்கம் என்பது சிறந்த ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும்.

    தியானம்

    மன அழுத்தம், பதற்றம், பிற மனநல பிரச்சனைகளை கையாள மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதை முன்னுரிமையாக கொண்டிருக்க வேண்டும்.

    தேர்வுகளின்போது மன அழுத்தங்கள் குறித்து மாணவர்கள் வெளிப்படையாக பெற்றோர் அல்லது ஆசிரியர் அல்லது ஆலோசகர்களிடம் தெரிவிப்பதை ஊக்குவிக்க வேண்டும். உளவியல் ரீதியாக மாணவர்கள் சிக்கி கொள்ளாமல் அவர்களை திறம்பட கையாள வேண்டும்.

    தேர்வு மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க தியானம் ஒரு கருவியாக இருக்கும். தியானம், ஆழ்ந்த சுவாசம், யோகா போன்ற பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். இது, மனதை அமைதிப்படுத்தவும், கவன சிதறலை தடுக்கவும், பதற்றத்தை குறைக்கவும் உதவும்.

    நேர நிர்வாக யுக்தி

    கடைசி நிமிட பதற்றத்தை குறைக்க மாணவர்கள் படிக்கும் நேரத்தை நிர்வகிப்பதற்கான யுக்திகளை கையாள வேண்டும்.

    மின்னணு ஊடகத்தை அதிகமாக மாணவர்கள் சார்ந்துள்ளனர். செல்போன், மடிக்கணினி போன்றவற்றில் அதிக நேரத்தை மாணவர்கள் செலவிடுகின்றனர். இதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

    இன்றைய காலகட்டத்தில் மின்னணு ஊடகம் இன்றியமையாததாகி விட்டது. தேர்வுக்கு மாணவர்கள் தாயாராவதற்கு சில மணி நேரங்களை சேமிக்க செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் இருந்து விலகி இருப்பது மிக அவசியம் ஆகும்.

    வெற்றியை ஒருங்கிணைக்கும்

    தேர்வுகளின் போது மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனை வளர்ப்பது அவர்களின் ஒட்டுமொத்த வெற்றியை ஒருங்கிணைக்கும்.

    மாணவர்களின் நல்வாழ்வை கவனித்துக்கொள்வது அவர்களின் கல்வி செயல்திறனை மேம்படுத்தும். இவை தேர்வு அறைக்கு அப்பால் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவர்களை தயார்படுத்துகிறது.

    தேர்வு மன அழுத்தத்தை திறம்பட கையாளுவதன் மூலம், நமது இளம் மாணவர்கள், தங்கள் திறனுக்கு ஏற்ப செயல்படுவார்கள்.

    இதன்மூலம் 2047-ம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்குகளை அடையும் வகையில் நம்பிக்கையான மற்றும் முன்னோக்கி செல்லும் இளைஞர்களாக உருவெடுப்பார்கள்.

    • ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையில் கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக் கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியக்கப்படுகிறார்.

    இண்டர்நெட் வசதியுடன் இந்த ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஒரு பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.

    இதைப் போல 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    திரை மற்றும் புரஜெக்டருடன் கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடங்களை கற்பிக்க முடியும்.

    இது தவிர தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும் திட்டமும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை வளர்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள திரையின் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளலாம்.

    அந்த அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் இந்த புதிய திட்டங்களை வருகிற கல்வியாண்டில் செயல்படுத்த டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-

    தொடக்க கல்வித் துறை யின் தரத்தை உயர்த்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    எண்ணறிவும் எழுத்தறிவும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களின் கல்வித் திறனும் உயரும். வருகிற கல்வியாண்டில் இந்த புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு துறைகளில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
    • காரைக்கால் வேளாண் கல்லூரியில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளில் பணிபுரிந்து வருவது பெருமைக்குரியது.

    புதுச்சேரி:

    காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியின் 5-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    படிப்பில்லாத மாணவர்கள் தீய வழியில் செல்கின்றனர். படிப்பு இருந்தால் மட்டுமே மாணவர்கள் நல்ல வழியில் செல்ல முடியும். ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படுவதால் கல்வியில் புதுவை மாநிலம் சிறந்து விளங்குகின்றது.

    தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளிநாட்டிற்கு சென்று படிக்க விரும்பினால் அதற்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.

    காரைக்காலில் ரூ.410 கோடியில் ஜிப்மர் கிளை கல்லூரிரி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.460 கோடியில் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்தஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும். இன்னும் 2 ஆண்டுகளில் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரிக்கு போதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும். மாணவர்கள் தொழில்முறை படிப்புகளில் கவனம் செலுத்தி நாட்டிற்கும், நம் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    காரைக்கால் வேளாண் கல்லூரியில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளில் பணிபுரிந்து வருவது பெருமைக்குரியது. அரசு துறைகளில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

    நான் இளங்கலை சட்டப்படிப்பு முடித்த போது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. இதற்காக ஒரு வாரத்துக்கு முன்பே தெரிந்தவர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு சென்னை சென்றேன். அங்கு சென்று மேடையில் ஏறி பட்டம் பெற ஷூ, பட்டமளிப்பு கவுன், தொப்பி ஆகியவற்றை வாங்கி பட்டம் பெற்றேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • நல்ல வேலையாக தீ விபத்து நடப்பதற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்தவர்கள் இறங்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். நேற்று இரவு 11.15 மணியளவில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை கல்லூரியில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    மாணவர் சிகிச்சை முடிந்து மீண்டும் ஆம்புலன்சில் ஏற முயன்றார். அப்போது ஆம்புலன்சில் இருந்து கரும்புகை வெளிவருவதை கண்டு மாணவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மாணவருடன் வந்தவர் வேகமாக கீழே இறங்கிவிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் தீ பிடித்து எரிய தொடங்கியது.

    இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 20 நிமிடம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருக்கைகள் எரிந்து நாசமானது. நல்ல வேலையாக தீ விபத்து நடப்பதற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்தவர்கள் இறங்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

    • இந்திய மாணவர்கள் படிப்பதற்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
    • இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்கனவே உள்ள கட்டணம் ரூ.6 லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 5 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன.

    அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் ஒரு சில பிரிவுகளை தவிர அனைத்து வகைகளுக்கும் நிலையான கட்டணம் 7,500 அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் என்.ஆர்.ஐ.க்கள் கணினி அறிவியல் பொறியியல் (சி.எஸ்.இ.) தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.) மற்றும் எலக்ட்ரா னிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் (இ.சி.இ.) உள்ளிட்ட 3 பாடப்பிரிவு களில் மட்டுமே சேருகிறார் கள். அதனால் இந்த 3 பாடப் பிரிவுகளுக்கான கட்டணத்தை 7,500 அமெரிக்க டாலராகவும் இவை தவிர எந்திர பொறியியல், சிவில் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிற கிளைகளுக்கு கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.

    பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் 3750 அமெரிக்க டாலராக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்கனவே உள்ள கட்டணம் ரூ.6 லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது.

    வரும் கல்வி ஆண்டு முதல் ரூ.3 லட்சத்து 11 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. 50 சதவீதம் கட்ட ணத்தை குறைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

    கல்வி கட்டணம் குறைப்பு நடவடிக்கை அதிக மாணவர்கள் தேர்வு செய்யாத படிப்புகளை பிரபலப்படுத்த உதவும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறினார்.

    • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
    • அரையாண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    சென்னை:

    அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை நுங்கப்பாக்கத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது;-

    தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ந்தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

    தென் மாவட்டங்களில் மழை பாதிப்பால் ரத்து செய்யப்பட்டுள்ள அரையாண்டு தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது பற்றி முதல்- அமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

    ×