search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாங்குநேரி"

    • புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து மூலக்கரைப்பட்டிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் பழைய பஸ்களாக மாறிவிட்டதால் புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் சமீபத்தில் மூலக்கரைப்பட்டிக்கு சென்ற அரசு பஸ்சின் பின்புற படிக்கட்டுகள் ஏதும் இல்லாமல் மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.

    அந்த வழியாக பயணிகள், மாணவ-மாணவிகள் ஏறி உள்ளே செல்லும் நிலையில் அதே வழியாக இறங்கவேண்டிய நிலை இருக்கிறது. எனவே ஆபத்தான நிலையில் மக்கள் பயணம் செய்யும் நிலையை தவிர்க்கும் விதமாக உடனடியாக பஸ் படிக்கட்டுகளை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவனுக்கு கையில் அறுவைச் சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
    • 18 வயதை கடந்ததும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

    நாங்குநேரி:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய பாகுபாடு காரணமாக அரிவாளால் வெட்டி தாக்கப்பட்ட மாணவனை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டதாக தெரிவித்தார்.

    மேலும், மாணவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    மகனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என மாணவனின் தாயார் கோரிக்கை வைத்திருக்கிறார். அந்த மாணவன் 18 வயதை கடந்ததும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். காயமடைந்த இருவரும் குணமடைந்ததும் அவர்களை பாதுகாப்பாக படிப்பை தொடர நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். அவர்களுக்கு தேவையான கல்வியை தொடர அரசு துணை நிற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    • தாக்குதல் தொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மாணவனின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

    சென்னை:

    நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சமூக நீதிக்கான அரசு இது. பாதிக்கப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன். நாளைய தமிழ்ச் சமூகத்தைப் படைக்கக் காத்திருக்கும் மாணவ மலர்களுக்கு அன்பான வேண்டுகோள்... என பதிவிட்டுள்ளார்.

    • நாகர்கோவில் மற்றும் நெல்லை பஸ் நிலையங்களில் இருந்து ஏறும் பயணிகளிடம் முன்னதாகவே வேறு எந்த இடத்திலும் பஸ் நிற்காது என்று கண்டக்டர்கள் தெரிவித்து விடுகின்றனர்.
    • பல்வேறு கிராம மக்களும் அரசு பஸ் சேவை கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பெரும்பாலான பஸ்கள் நாங்குநேரி ஊருக்குள் செல்லாமலும், அதேபோல் நான்கு வழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ள தாலுகா அலுவலக பகுதிகளில் நிற்காமலும் சென்று வருகிறது.

    இதனால் நாங்குநேரி பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பொதுமக்களை புறக்கணித்து பஸ் நிலையத்திற்கு செல்லாமலும், புறவழிச்சாலை வழியாக அரசு அனுமதி இன்றி இடைநில்லா சேவை என்ற பெயரில் சட்ட விரோதமாகவும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

    நாகர்கோவில் மற்றும் நெல்லை பஸ் நிலையங்களில் இருந்து ஏறும் பயணிகளிடம் முன்னதாகவே வேறு எந்த இடத்திலும் பஸ் நிற்காது என்று கண்டக்டர்கள் தெரிவித்து விடுகின்றனர். மேலும் இடைப்பட்ட ஊர்களில் உள்ள பொதுமக்களை அவர்கள் பஸ்சை நிறுத்தி ஏற்ற மறுக்கின்றனர் என்றும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

    மேலும் கூடுதல் கட்டணங்கள் வசூலித்து விட்டு உரிய நிறுத்தங்களில் நிறுத்தாமல் நடுவழியில் இறக்கிவிட்டு செல்வதால் அடிக்கடி டிரைவர் மற்றும் பொதுமக்கள் இடையே மோதல்கள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் வருகின்றன. இதனால் நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட சிறு நகரங்கள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலையை யொட்டி இருக்கும் பல்வேறு கிராம மக்களும் அரசு பஸ் சேவை கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என பலமுறை புகார் அளித்தும் நீதிமன்ற உத்தரவுகள், வருவாய்த்துறையினருடனான சமாதான பேச்சுவார்த்தை முடிவுகள், மாவட்ட கலெக்டர் உத்தரவு ஆகிய அனைத்தும் இருந்தும், இவை எதையும் மதிக்காமல் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு வெவ்வேறு பெயர்களில் அரசு பஸ்களை கூடுதல் கட்டணங்களுடன் இயக்கி வருகின்ற னர்.

    இதனை கண்டித்தும், அரசு அனுமதி இன்றி இயங்கும் இடைநில்லா சேவை என்று இயங்கும் பஸ்களின் வழித்தடங்களை தடை செய்யவும், சட்ட விரோதமாக முறைகேட்டில் ஈடுபடும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாங்குநேரியில் இன்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது.

    அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தரப்பில் இருந்து போக்குவரத்து கழக அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 100-க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கிட்டுமணி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாகைகுளத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார்.
    • சுடலைவடிவு என்ற சுதாவையும், அவரது மகன் ஆறுமுகவேலையும் காணவில்லை.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் பாபநாசம் மகள் சுடலைவடிவு என்ற சுதா (வயது34). இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராம நல்லூரை சேர்ந்த கிட்டுமணி (39) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆறுமுகவேல் (11) என்ற மகனும், மனிஷா (8) என்ற மகளும் உள்ளனர். கிட்டுமணி பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கிட்டுமணி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாகைகுளத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார். இரவில் அனைவரும் வீட்டில் தூங்கினர். பின்னர் பார்த்த போது, சுடலைவடிவு என்ற சுதாவையும், அவரது மகன் ஆறுமுகவேலையும் காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிட்டுமணி பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.எஸ்.பி.ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகனுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    • கல்லூரிக்கு சென்று மதிப்பெண் பட்டியல் வாங்கி வருவதாக வீட்டில் கூறி விட்டு அந்த மாணவி சென்றுள்ளார்.
    • மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி நெல்லையில் உள்ள கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை அவர் கல்லூரிக்கு சென்று மதிப்பெண் பட்டியல் வாங்கி வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பின் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர்கள் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆர்வமாக உள்ளார்.
    • பொருளாதார மண்டல வளாகத்தில் கையுறை தயாரிக்கும் நிறுவனம் திறக்கப்பட உள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த 2000-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2,100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது.

    கிடப்பில் போடப்பட்ட திட்டம்

    இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட தொழில் நுட்ப பூங்கா திட்டம் அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், கிடப்பில் போடப்பட்டது.

    பின்னர் கடந்த 2006-ம் ஆண்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மீண்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனை விரிவுபடுத்தும் பொறுப்பு ஆந்திராவை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஆனால் அந்த நிறுவனம் தொழில் நுட்ப பூங்கா திட்டத்தை செயல்படுத்தாமல் இந்த நிலத்தை அடமானம் வைத்து அதன் மூலம் கடன் வாங்கி மோசடி செய்து விட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.

    தற்போது 9 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மேலும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏதுவாக சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் தொழிற் சாலைகள் தொடங்கப்படாமல் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    சபாநாயகர் ஆய்வு

    இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு இன்று நாங்குநேரி தொழில் நுட்ப பூங்காவை பார்வையிட்டார். இங்கு செயல்பட்டு வரும் தொழி ற்சாலைகளில் ஆய்வு மேற்கொ ண்டார். அதனை தொடர்ந்து தொழிற்சாலைகளின் உரிமை யாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது.

    இதுபற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    முதல்-அமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். எனவே நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கி உள்ளவர்கள் தைரியமாக தொழில் செய்யுங்கள். உங்களுக்கு முதல்-அமைச்சர் பாதுகாப்பாக இருப்பார். கலைஞரின் கனவு திட்டமான இந்த திட்டத்திற்கு உயிரூட்டப்படும்.

    வருகிற ஜூலைமாதம் இந்த பொருளாதார மண்டல வளாகத்தில் கையுறை தயாரிக்கும் நிறுவனம் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாங்குநேரி மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரம் பேருக்கு வேலை அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜோசப் பெல்சி, ராஜன், ஆரோக்கிய எட்வின் மற்றும் தொழில் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    • நாங்குநேரி ரெயில் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கியது.
    • நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி மேலப்பாளை யம் ரெயில் நிலையங்களுக்கு இடையில் புதியதாக அமைக்கப்பட்ட இரட்டை ரெயில்வே பாதையில் மின் அமைப்புகள் குறித்த ஆய்வு இன்று நடந்தது.

    தென்னக ரயில்வே மின்சார பிரிவு தலைமை பொறியாளர் சித்தார்த்தா மற்றும் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட ரெயில்வே மேலாளர் சச்சிந்தர் மோகன்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.

    முன்னதாக நாங்குநேரி ரெயில் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாங்குநேரி ரெயில் நிலையத்திலிருந்து சிறப்பு ஆய்வு வாகனத்தில் தொடங்கிய ஆய்வு பணி மேலப்பாளையம் வரை நடந்தது.

    இதில் புதிதாக அமைக்கப்பட்ட ரெயில்வே தண்டவாளம் மின் பாதை மற்றும் கருவிகள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட பல பங்கேற்றனர்.

    அப்போது நாங்குநேரி ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்த பொதுமக்கள் சிலர், கொரோனாவுக்கு முன்பு நாங்குநேரி வழியாக 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்ற நிலையில் தற்போது 5 ரெயில்கள் மட்டுமே நாங்குநேரியில் நின்று செல்கிறது. பெரும்பாலான ரெயில்கள் நிறுத்தப்பட்டு விட்டன. எனவே நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்கவும் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் கேரள எல்லையில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் அனைத்து ரெயில்களும் என்று செல்லும் நிலையில் தமிழக எல்லைப் பகுதியில் பாரபட்சம் காட்டப்படுகிறது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நாங்குநேரியில் ரெயில்களை நிறுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்ட மேலாளர் உறுதி அளித்தார்.

    • சுப்பிரமணியனின் தாயார் கடந்த 1 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார்.
    • ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன், பரமேஸ்வரியை தாக்கினார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி (38). சுப்பிரமணியனின் தாயார் கடந்த 1 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அவரது 8 பவுன் தங்க செயினை பரமேஸ்வரி தனது அண்ணன் செந்தில் குமாரிடம் கொடுத்து வைத்துள்ளார். சுப்பிரமணியன் மது அருந்தி விட்டு வந்து, தங்க செயினை தருமாறு பரமேஸ்வரியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    சம்பவத்தன்றும் செயினை தருமாறு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன், பரமேஸ்வரியை தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர்.
    • 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் மற்றும் போலீசார் நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதைக்கண்ட போலீசார் விரட்டி சென்று 2 பேரை பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

    பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விஜயநாரா யணத்தை சேர்ந்த இசக்கி பாண்டி (வயது 45), ஆண்டான்குளத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (32), என்பதும், தப்பி ஓடியது புதுக்குளம் நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் (34) என்பதும், 3 பேரும் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம், தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ஜான்சிராணி வடக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கள பொறுப்பாளராக உள்ளார்.
    • சம்பவத்தன்று இரவில் ஜான்சிராணியின் தாயாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக, அவரது தந்தை போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம், தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சென்னையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ஜான்சிராணி (வயது 43) வடக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கள பொறுப்பாளராக உள்ளார். இவருக்கும், இவரது தம்பியான அதே ஊரை சேர்ந்த எட்வர்டு ராஜனுக்கும் பணம் மற்றும் நகை கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று இரவில் ஜான்சிராணியின் தாயாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக, அவரது தந்தை போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஜான்சிராணி கீழரதவீதியில் உள்ள தந்தை வீட்டிற்கு தாயாரை பார்ப்பதற்காக சென்றார்.

    அப்போது எட்வர்டு ராஜன் எங்கள் வீட்டிற்கு எப்படி வரலாம் என கேட்டு ஜான்சிராணியை அவதூறாக பேசினார். மேலும் அரிவாளால் வெட்டினார். பின்னர் கொலை மிரட்டலும் விடுத்தார்.

    இதனால் காயமடைந்த ஜான்சிராணி சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி எட்வர்டு ராஜனை தேடி வருகின்றனர்.

    • நாங்குநேரி ரெயில்வே கேட் பகுதியில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி ரெயில்வே கேட் பகுதியில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். மேலும் அவர்களிடம் ஒரு மூட்டையும் இருந்தது.

    இதைப்பார்த்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த மூட்டையை சோதனையிட்டனர். அப்போது அதில் 30 கிலோ அளவிலான புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சிங்கநேரியை சேர்ந்த சங்கர்கணேஷ் (வயது 25), வேல்கண்ணன் (27) தூத்துக்குடியை சேர்ந்த வீரபத்ரன் (32) என்பது தெரியவந்தது. 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×