search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt schools"

    • அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை, வகுப்பறைகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை.
    • அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டிய தமிழக அரசோ, தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்தி அவர்களின் கல்விக் கட்டணக் கொள்ளையை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் என்று போற்றப்பட்ட கர்மவீரர் காமராசரின் 122-ஆம் பிறந்த நாள் இன்று. தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பெருமகனார் அவர் தான். தமிழ்நாட்டில் மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது மட்டுமின்றி, வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.

    ஆனால், தமிழ்நாட்டில் இன்று அரசு பள்ளிகளின் நிலைமை கண்ணீரை வரவழைக்கிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை, வகுப்பறைகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை. அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டிய தமிழக அரசோ, தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்தி அவர்களின் கல்விக் கட்டணக் கொள்ளையை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றி அரசு பள்ளிகளை அனைவரும் தேடி வந்து கற்கும் கல்விக் கோயில்களாக மாற்றுவதற்கு இந்த நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்துவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை.
    • அரசு பள்ளிகளில் ஏற்கனவே கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் 2994 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

    தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பள்ளி மணி நேரத்தின் பெரும் பகுதியை தலைமை ஆசிரியர் பணிக்கான கடமைகளை நிறைவேற்றுவதிலேயே கழிப்பதால் அவர்களால் பாடங்களை நடத்த முடியவில்லை. அதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

    தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் ஆகும். கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அப்போது தான் காலியாக உள்ள பிற ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு அவற்றை நிரப்ப முடியும். ஆனால், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்துவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை. அதனால் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும், பிற ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

    அரசு பள்ளிகளில் ஏற்கனவே கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களையும் நிர்வாகப் பணிக்கு அனுப்ப வேண்டியிருப்பதால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித்தரத்தை மேலும் சீரழித்து வருகிறது. இந்த நிலையை மாற்றி, காலியாக உள்ள அனைத்துத் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாணவர் சேர்க்கைப் பணியை கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து பணிகளையும் வேகப்படுத்தி உள்ளார்.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 1-ந்தேதி தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறது. வழக்கமாக மாணவர் சேர்க்கை ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும்.

    ஆனால் இந்த வருடம் முன் கூட்டியே நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஒவ்வொரு பகுதியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று வரை 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவர்கள் சேர்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. தொடக்கப் பள்ளியில் 4,959 பேரும் மேல்நிலைப் பள்ளியில் 5,452 பேரும் சேர்ந்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் 3,890 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,770 பேரும் சேர்ந்து அடுத்தடுத்து முதலிடத்தில் உள்ளனர்.

    1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளில் மட்டும் 46,586 பேரும் நடுநிலைப் பள்ளிகளில் 21,853 பேரும் சேர்ந்துள்ளனர். உயர்நிலைப் பள்ளிகளில் 6,287 பேரும், மேல்நிலைப் பள்ளிகளில் 5,350 பேரும் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து மாணவர் சேர்க்கைப் பணியை கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதற்கான அனைத்து பணிகளையும் வேகப்படுத்தி உள்ளார்.

    • ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையில் கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக் கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியக்கப்படுகிறார்.

    இண்டர்நெட் வசதியுடன் இந்த ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஒரு பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.

    இதைப் போல 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    திரை மற்றும் புரஜெக்டருடன் கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடங்களை கற்பிக்க முடியும்.

    இது தவிர தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும் திட்டமும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை வளர்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள திரையின் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளலாம்.

    அந்த அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் இந்த புதிய திட்டங்களை வருகிற கல்வியாண்டில் செயல்படுத்த டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-

    தொடக்க கல்வித் துறை யின் தரத்தை உயர்த்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    எண்ணறிவும் எழுத்தறிவும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களின் கல்வித் திறனும் உயரும். வருகிற கல்வியாண்டில் இந்த புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குரும்பாபட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
    • அமைச்சர் சாய்.ஜெ சரவணன்குமார், சிவசங்கரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு அதிநவீன கண்காணிப்பு கேமராவை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி குரும்பபட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பு மற்றும் ஸ்ட்ரைவ் நிறுவனம் சார்பில், ஊசுடு தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச கணினி வழங்கும் விழா மற்றும் குருமாம்பேட் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், மக்கள் பயன்பாட்டிற்காக அதிநவீன கண்காணிப்பு கேமரா அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி குருமாம்பேட் சமுதாய நலக்கூடத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தலைவர் குணசேகரன், செயலாளர் மோகன், புரவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ சரவணன்குமார், சிவசங்கரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு அதிநவீன கண்காணிப்பு கேமராவை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

    மேலும் ஊசுடு தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச கணினிகளை வழங்கி சிறப்பித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ட்ரைவ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் , புதுவை வணிகர் கூட்டமைப்பு தலைவர் பாபு, பொதுச்செயலாளர் முருக பாண்டியன், கூட்டமைப்பின் துணைத் தலைவர் பிரபாகர், பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மரச்சாமான்கள், இரும்பு பொருட்கள் வகுப்பறைகளில் காணப்படுகின்றன.
    • அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் பள்ளி கல்வி துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன.கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் பழுதடைந்த மற்றும் உபயோகமற்ற மரச்சாமான்கள், இரும்பு பொருட்கள் காலங்கடந்து அலுவலகத்தில் உள்ள அறைகளிலும், வெளிப்புறங்களிலும் மற்றும் பள்ளிகளிலுள்ள வகுப்பறைகளிலும் காணப்படுகின்றன.

    இதனால் அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், இடம்பற்றாக்குறை ஏற்படுகிறது. அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.சுற்றுச்சூழல் மட்டுமின்றி மாணவ, மாணவிகள் நலன்கள் பாதிப்பு ஏற்படுகிறது.பழுதடைந்த மரச்சாமான்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்கள் அகற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிறது.எனவே அப்பொருட்களை அகற்றுவதற்கு முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி அதனை அகற்ற ஏலம் விளம்பரம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டும், அதற்கான தொகையை உரிய அரசு கணக்கில் செலுத்தவும் திருப்பூர் உள்பட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தகுதியான ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வி வழங்கப்படுகிறது.
    • அரசு பள்ளிகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், ஆறு தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

    பனஸ்கந்தா:

    குஜராத் மாநிலத்தில் புதிய மாற்றமாக தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர்.

    குஜராத் அரசின் தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, மாநிலம் முழுவதும் 2018-19 ஆண்டில் 33,822மாணவர்களும், 2019-20 ஆண்டில் 31,382 மாணவர்களும் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு இடமாறியுள்ளனர்.

    பனஸ்கந்தா மாவட்டத்தில் மட்டும் 2,969 தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், இந்த ஆண்டு, ஆறு தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளின் தரம் கணிசமாக உயர்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

    தகுதியான ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வி வழங்கப்படுவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுவது, உணவு, டிஜிட்டல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட வசதிகள், பெற்றோரை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை மாற்றுவதற்கு தூண்டியது என்று, உத்தம்புரா தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கமலேஷ் தக்கர் கூறியுள்ளார்.

    அகமதாபாத் நகரில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில், 40,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021-22 கல்வியாண்டில், மாநிலம் முழுவதும் உள்ள 32,000க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 61,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


    அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்து இருக்கிறார்.
    சென்னை:

    பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசு பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தற்போது தொழில் அதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும், தங்களுடைய சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும்.

    அதன்மூலம், பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வாருங்கள் என இருகரம் கூப்பி அழைக்கின்றேன். 2018-19-ம் ஆண்டு எங்களுடைய அழைப்பினை ஏற்று ரூ.58 கோடி மதிப்பில் 519 அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. அதை செய்தவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.



    கல்வி என்ற ஒப்பற்ற செல்வத்தை அடுத்த தலைமுறையினருக்கு வழங்க சேவை மனப்பான்மையும், அன்பு உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்ட முன்னாள் மாணவர்களையும், தொழில் நிறுவனங்களையும் தாங்கள் கல்வி பயின்ற மற்றும் தங்கள் நிறுவனத்துக்கு அருகில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று அன்போடு மீண்டும் அழைக்கின்றேன்.

    அரசு பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கு எந்த தடையும் தாமதமும் இன்றி உடனடியாக பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.

    அரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும்போது தான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும், வளம் பெறும். எனவே அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளம் மிகு அரசு பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
    ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் விடுமுறையை தள்ளி வைக்க வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஏப்ரல் கடைசி வாரம் கோடை விடுமுறை விடுவது வழக்கம்.

    இந்த ஆண்டு பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடந்தது. இதனால் பள்ளிகளுக்கு முன்னதாகவே அரசு பொது தேர்வுகளும் ஆண்டு இறுதி தேர்வுகளும் நடத்தப்பட்டன.

    முன்னதாகவே தேர்வுகள் முடிவடைந்ததால் பல தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 16-ந் தேதியே விடுமுறை விடப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கும் வழக்கத்தைவிட 2 வாரங்களுக்கு முன்னதாகவே விடுமுறை விடப்பட்டது.

    கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகளுக்கு மேலும் 2 வாரம் விடுமுறையை நீடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.


    எனவே, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடிக்கும். 3-ந் தேதி திறக்க வாய்ப்பு இல்லை. அரசு புதிய தேதியை முடிவு செய்யும் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். விடுமுறையை தள்ளி வைக்க வாய்ப்பு இல்லை’ என்று அறிவித்துள்ளார்.

    எனவே, திட்டமிட்டப்படி வருகிற 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புகிறார்கள்.
    சென்னை அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். #BreakfastProgramme #BanwarilalPurohit
    சென்னை:

    அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதைப் போன்று காலை உணவு வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் சென்னை மாநகராட்சியும் அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனமும் இணைந்து, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி, அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தொடங்கி வைத்தார். திருவான்மியூர் அரசுப்பள்ளியில் இந்த திட்டத்தை ஆளுநர் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், வி.சரோஜா, ஜெயவர்தன் எம்பி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


    முதலில் 1000 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அடுத்த 2 மாதங்களில் 5000 மாணவர்களுக்கும், வரும் கல்வியாண்டில் 20 ஆயிரம் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. #BreakfastProgramme #BanwarilalPurohit
    தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை அமைச்சர் அன்பழகன் இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். #LKG #KPAnbazhagan
    தர்மபுரி:

    தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். எல்.கே.ஜி. வகுப்புக்கு குழந்தைகள் சேர்க்கப்பட்டனர் இது தவிர மாவட்ட முழுவதும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    இது குறித்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி கூறியதாவது:-

    தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய-நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

    தர்மபுரி ஒன்றியத்தில் ராஜாதோப்பு, குண்டலப்பட்டி, புளியம்பட்டி, ஆட்டுக்காரம்பட்டி, ஆலிவாயன்கொட்டாய், சிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் குமாரசாமிபேட்டை, 4வது வார்டு சாலை விநாயகர் கோவில் தெரு, சந்தைப்பேட்டை, நகராட்சி நடுநிலைப்பள்ளிகள் என 9 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தேங்காமரத்துப்பட்டி, கமலநத்தம், ஓமல்நத்தம், காளேகவுண்டனூர், ஏறுபள்ளி, நெக்குந்தி, இ.கே.புதூர், மேல்பூரிக்கல், பாப்பம்பட்டி மற்றும் சோளியானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என 10 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    பென்னாகரம் ஒன்றியத்தில் மஞ்சாரஅள்ளி, நல்லாம்பட்டி, திகிலோடு, நாகமரை, பளிஞ்சரஅள்ளி, அஞ்சேஅள்ளி, ஏ.எட்டியாம்பட்டி, வேலம்பட்டி, கிட்டனஅள்ளி, சிட்லகாரம்பட்டி, வத்தல்பட்டி, கோடிஅள்ளி (ஜக்கம்பட்டி ), நாகனூர், மற்றும் வெள்ளமண்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 14 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    கோப்புப்படம்

    பாலக்கோடு ஒன்றியத்தில் சிங்காடு, மேல்சந்திராபுரம், பாலக்கோடு உருது மற்றும் திருமல்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 4 பள்ளிகளிலும், காரிமங்கலம் ஒன்றியத்தில் ஜம்பூத், அடிலம், கெரகோடஅள்ளி, பல்லேனஅள்ளி, சொன்னம்பட்டி, குண்டலஅள்ளி, கெங்குசெட்டிப்பட்டி, நாகணம்பட்டி, கொல்லப்பட்டி, கதிரம்பட்டி மற்றும் அ.முருகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 11 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    மொரப்பூர் ஒன்றியத்தில் அஸ்தகிரியூர், புளியம்பட்டி, அம்பாலப்பட்டி, சின்னமுருக்கம்பட்டி, கெலவல்லி, கொங்கரப்பட்டி, தாளநத்தம், குண்டலப்பட்டி, சுங்கரஅள்ளி மற்றும் ராணிமூக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 10 பள்ளிகள், அரூர் ஒன்றியத்தில் எருமியாம்பட்டி, கொங்கவேம்பு, பாப்பநாயக்கன் வலசை, அ.ஈச்சம்பாடி, நாச்சினாம்பட்டி, கணபதிப்பட்டி, வள்ளிமதுரை, சூரநத்தம், ஆண்டியூர், கீழானூர், கொக்கராப்பட்டி, மற்றும் அச்சல்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 12 பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் பாப்பம்பாடி மற்றும் குண்டலமடுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் 2 என தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 72 பள்ளிகளில் இன்று முதல் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மேற்காணும் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கை செய்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LKG #TNMinister #KPAnbazhagan
    அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNGovtSchools #Sengottaiyan
    காஞ்சிபுரம்:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலையில் காஞ்சிபுரம் வந்தார். அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்ற அவர் விஜயேந்திரரை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து வழக்கருத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார்.

    பின்னர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-


    முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றி வருவதன் மூலம் அனைத்து துறைகளும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு எடுத்த நடவடிக்கை, நடந்த நிவாரணப் பணிகள் பாராட்டும்படி இருந்தன. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 11 லட்சத்து 17 ஆயிரம் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவச திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.

    அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களின் பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி ஆசை இதன் மூலம் நிறைவேறும்.

    தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNGovtSchools #Sengottaiyan
    ×