search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிப்மர் மருத்துவமனை"

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
    • புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது

    ரம்ஜான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை (ஏப்ரல்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் பலனடைகின்றனர்.

    இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு நாளை மட்டும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட உள்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு துறைகளில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
    • காரைக்கால் வேளாண் கல்லூரியில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளில் பணிபுரிந்து வருவது பெருமைக்குரியது.

    புதுச்சேரி:

    காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியின் 5-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    படிப்பில்லாத மாணவர்கள் தீய வழியில் செல்கின்றனர். படிப்பு இருந்தால் மட்டுமே மாணவர்கள் நல்ல வழியில் செல்ல முடியும். ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படுவதால் கல்வியில் புதுவை மாநிலம் சிறந்து விளங்குகின்றது.

    தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளிநாட்டிற்கு சென்று படிக்க விரும்பினால் அதற்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.

    காரைக்காலில் ரூ.410 கோடியில் ஜிப்மர் கிளை கல்லூரிரி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.460 கோடியில் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்தஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும். இன்னும் 2 ஆண்டுகளில் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரிக்கு போதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும். மாணவர்கள் தொழில்முறை படிப்புகளில் கவனம் செலுத்தி நாட்டிற்கும், நம் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    காரைக்கால் வேளாண் கல்லூரியில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளில் பணிபுரிந்து வருவது பெருமைக்குரியது. அரசு துறைகளில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

    நான் இளங்கலை சட்டப்படிப்பு முடித்த போது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. இதற்காக ஒரு வாரத்துக்கு முன்பே தெரிந்தவர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு சென்னை சென்றேன். அங்கு சென்று மேடையில் ஏறி பட்டம் பெற ஷூ, பட்டமளிப்பு கவுன், தொப்பி ஆகியவற்றை வாங்கி பட்டம் பெற்றேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜிப்மரில் உள்ளிருப்பு டாக்டராக பயிற்சி பெற்று வரும் பெண் டாக்டர் ஒருவரின் செல்போனில் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி ஒரு மெசேஜ் வந்தது.
    • கவர்னர் உத்தரவின்பேரில் ஜிப்மர் நிர்வாகம் தற்போது மெயில் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

    இங்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் எம்.பி.பி.எஸ். எம்.டி. உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர்.

    ஜிப்மரில் உள்ளிருப்பு டாக்டராக பயிற்சி பெற்று வரும் பெண் டாக்டர் ஒருவரின் செல்போனில் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி ஒரு மெசேஜ் வந்தது.

    போலியான ஐ.டி. மூலம் வந்த அந்த மெயிலில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் தனது அறையில் தனிமையாக சந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் பயிற்சி மருத்துவர் படிப்பை முடிக்க முடியாது. தேர்ச்சி பெற்றுள்ள எம்.டி. முதலாம் ஆண்டு படிப்பில் தொடர முடியாது என கூறப்பட்டிருந்தது.

    இதேபோல மேலும் சில மருத்துவ மாணவிகளுக்கும் மெயில் வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம், ஜிப்மரில் உள்ள பெண்கள் வன்கொடுமை பிரிவு, சைபர் கிரைம் ஆகியோருக்கு மெயில் மூலம் புகார் அளித்தார். 3 மாதமாகியும் இந்த புகாரின்மீது நடவடிக்கை இல்லை.

    இதுகுறித்து கவர்னர் தமிழிசைக்கும் அந்த பெண் டாக்டர் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என கவர்னர் தமிழிசை பெண் டாக்டரின் இணையதள பக்கத்தில் உறுதியளித்தார். கவர்னர் உத்தரவின்பேரில் ஜிப்மர் நிர்வாகம் தற்போது அந்த மெயில் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    • ஜிப்மர் இயக்குனருக்கு எதிராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் சென்றது.
    • இயக்குனர் பதவிக்கு தகுதியானோர் வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் இயக்குனராக கடந்த 2029-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

    ஜிப்மர் இயக்குனராக ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டப் பிறகு இந்தி கட்டாயம், இலவச மருந்து மாத்திரை விநியோகம் நிறுத்தம், மாத்திரை தட்டுப்பாடு, உயர்சிகிச்சைக்கு ஏழைகளை தவிர்த்து கட்டணம் என அறிவித்து பல சர்ச்சைக்கு உள்ளானார்.

    இதனால் ஜிப்மருக்கு எதிராக அரசியல் கட்சிகளின் போராட்டம் நடந்தது. மத்திய அரசு கூடுதல் நிதி அளித்தும் அந்த நிதியை முறையாக பயன்படுத்தி செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    ஜிப்மர் இயக்குனருக்கு எதிராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் சென்றது.

    இதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் ஜிப்மர் இயக்குனர் மற்றும் நிர்வாக அதிகாரிகளை அழைத்து விளக்கம் பெறப்பட்டது. கவர்னர் தமிழிசை ஜிப்மர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வும் செய்தார்.

    இந்நிலையில் புதுவை ஜிப்மர் இயக்குனர் மாற்றம் உறுதியாகி உள்ளது. தற்போதைய இயக்குனர் ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரை பதவியில் இருக்கலாம். தற்போது அவர் பொறுப்பேற்று 4½ ஆண்டுகள் முடிந்துள்ளது.

    இந்த நிலையில் ஜிப்மர் இணையத்தளத்தில் இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஜிப்மர் இயக்குனர் பதவிக்கு தகுதியானோர் வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மருத்துவத்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்கவேண்டும். 10 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் துறையில் இருந்திருக்க வேண்டும். மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை அல்லது பொது சுகாதாரத்தில் உயர் முதுகலைத்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

    சம்பளம் ரூ.2 ½ லட்சத்துக்குள் தரப்படும். ஜிப்மர் வளாகத்தில் குடியிருப்பு விடுதி தரப்படும். வயது 60-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஜிப்மர் இயக்குனராக 65 வயது வரையிலோ, நியமனத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரையிலோ பதவியில் இருக்கலாம். நிர்வாக துணை இயக்குனருக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் எந்த குறைப்பும் செய்யவில்லை, நிதி பற்றாக்குறையும் ஏற்படவில்லை.
    • ஜிப்மர் வளாகத்தில் மக்கள் மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் மத்திய அரசு தன்னாட்சி நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

    இங்கு புதுவை மட்டுமின்றி, தமிழகம், கேரளா உட்பட தென்மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் ஆயிரக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜிப்மரில் 63 வகையான உயர் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிக்க நிர்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்தது.

    இதற்கு புதுவை அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதோடு ஜிப்மரில் நோயாளிகளுக்கு மருந்துகள் தருவதில்லை, மத்திய அரசு ஜிப்மரை புறக்கணிக்கிறது, டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது என அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் புதுவை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மரில் மருந்துகள், டாக்டர்கள் பற்றாக்குறை என வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. கடந்த 5 ஆண்டில் ஜிப்மருக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு உயர்ந்துள்ளது.

    2023-24ம் நிதியாண்டுக்கு ஜிப்மருக்கு ரூ.1,490 கோடியே 43 லட்சம் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    எய்ம்ஸ், சண்டிகர் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் நிதியை விட இது கூடுதல் நிதியாகும். மூலதன வசதிகளை உருவாக்க ரூ.300 கோடி, பொது செலவுகளுக்கு ரூ.355 கோடி, சம்பளத்துக்கு ரூ.835.43 கோடி ஒதுக்கப்பட்டுள்து. மூலதன வசதி மானியம் 2½ மடங்கு அதிகரித்துள்ளது.

    மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் எந்த குறைப்பும் செய்யவில்லை, நிதி பற்றாக்குறையும் ஏற்படவில்லை. கொரோனா தாக்கம் இருந்த நிலையிலும் ஜிப்மரில் நோயாளிகளின் வசதிக்காக டிஜிட்டல் ஆஞ்சியோகிராபி, புதிய லீனியர், கிருமிநீக்க துறை நவீனமயம், அல்ட்ரா சவுண்ட், ஹிமாட்டலஜி அனலைசர், உட்பட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    ஜிப்மர் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்த பல துறைகளிலும் புதிய உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளது.

    பிரதமர், மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்ப காகித மருந்து சீட்டுகள் தவிர்க்கப்பட்டு மின் சீட்டுகள் வழங்கப்படுகிறது. ஜிப்மரில் 786 பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அனுமதித்துள்ளது.

    இதில் 252 டாக்டர்கள், 431 செவிலியர்கள், 50-க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப நல்லுர்கள் அடங்குவர். 10 ஆண்டுக்கு பிறகு ஜிப்மரில் புதிய பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி 70 முதுநிலை டாக்டர்கள், 550 செவிலியர்கள் தேர்வு செய்யும் நடைமுறைகள் நிறைவு பெற்றுள்ளன.

    இவர்கள் இன்னும் 2 மாதத்தில் ஜிப்மரில் பணியில் சேர உள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்ட விதிகளின்படி முழு வசதிகள் வழங்கப்படுகிறது. வெளிப்புற நோயாளிகளுக்கும் தொடர்ந்து இலவச மருந்துகள் வழங்கப்படுகிறது.

    தற்போதுள்ள சேவைகளுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை.

    வழக்கமான இலவச மருந்தகம் தவிர, அம்ரித் மருந்துகம், 24மணி நேர தனியார் மருந்தகமும் அமைக்கப்பட்டுள்ளது. இவை மலிவு விலையில் நோயாளிகளுக்கு மருந்துகள், அறுவை சிகிச்சைக்கு தேவையான கருவிகளை வழங்குகின்றன. ஜிப்மர் வளாகத்தில் மக்கள் மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எப்போதும் போல புதுவை, சுற்றியுள்ள மக்களுக்கும், நோயாளிகளுக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஜிப்மர் உறுதியாக உள்ளது. இன்னும் பல உயரங்களை எட்ட முழு சக்தியுடன் ஜிப்மர் செயல்பட்டு வருகிறது.

    ஜிப்மர் பற்றி வெளியாகும் அனைத்து வதந்திகள், தவறான தக வல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜிப்மர் நிர்வாகம் விரும்புகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜிப்மரில் புதுவை மட்டுமின்றி அண்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
    • ஜிப்மர் கொண்டு வந்துள்ள புதிய கட்டணம் முறை அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மரில் புதிய மேம்பட்ட உயர் மதிப்பு சிகிச்சைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராத, மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணங்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் வசூலிக்கப்படுகிறது. இத்தொகை நிறுவன வருவாய் கணக்கில் துறைகள் வரவு வைக்கப்பட வேண்டும்.

    நோயாளியின் பராமரிப்பின் நலனுக்காக, மேம்பட்ட சோதனையை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த மேம்பட்ட சிகிச்சைகள் விலை உயர்ந்தவை என்பதால், பயனாளிகளிடம் இருந்து ஓரளவு வருவாய் கிடைத்தால் மட்டுமே இந்த சேவைகளை நிலையான முறையில் வழங்க முடியும். இதில் அடிப்படை பரிசோதனை சேவைகள் இலவசமாக தரப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்திருந்தது.

    ஜிப்மரில் புதுவை மட்டுமின்றி அண்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். பலருக்கு ஆயுஷ்மான்பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் இல்லை. ஜிப்மர் கொண்டு வந்துள்ள புதிய கட்டணம் முறை அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.

    குறிப்பாக புதுவை மற்றும் காரைக்காலை சேர்ந்த ஏழை நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கு புதுவையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுவை சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் சிவா உட்பட எம்.எல்.ஏ.க்கள் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்நிலையில் ஜிப்மர் நிர்வாகம் கொண்டுவந்துள்ள சிகிச்சைக்கு கட்டண முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுவை மாநில தி.மு.க. சார்பில் ஜிப்மர் நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார்.

    ஜிப்மரில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும், ஏழை-எளிய மக்களின் சுகாதார உரிமையை பறிக்கக்கூடாது. ஏழை நோயாளிகளை வஞ்சிக்க கூடாது. புதுவை நோயாளிகளை புறக்கணிக்காதே என தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நிர்வாகிகள் தைரியநாதன், கல்யாணி கிருஷ்ணன், சண்.குமரவேல், பூ.மூர்த்தி, லோகையன், ஜெ.வி.எஸ். ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சக்திவேல், சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கார்த்திகேயன், வேலவன், சண்முகம், கோகுல், தர்மராஜன், ரவீந்திரன், செந்தில்வேலன், இளம் பரிதி, பழனி, பிரபாகரன், மாறன், கோபாலகிருஷ்ணன், கோபால், அமுதாகுமார், நர்கீஸ், சிறப்பு அழைப்பா ளர்கள் முகிலன், டாக்டர் நித்திஷ், தொகுதி செயலா ளர்கள், பல்வேறு அணிகளின் துணை அமைப்பாளர்கள், தொகுதி கழக நிர்வாகிகள், கிளைக் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித்தலைவர் சிவா உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 100-க்கும் மேற்பேட்டோரை போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.
    • நாளை மறுநாள் முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாளை மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. எனது இந்த தேதியில் நோயாளிகள் ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவிற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். நாளை மறுநாள் (09-03-2023) முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு அதிகாரிக்கு சொத்து இல்லை என்றால் இல்லை என்பதை உரிய படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.
    • அசையா சொத்து கணக்கை சமர்பிக்க தவறினால் நிர்வாக ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

    புதுச்சேரி:

    புதுவையில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து ஜிப்மரில் உள்ள அனைத்து துறை தலைவர்களுக்கு நிர்வாக அலுவலர் சிவபாலன் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது-

    மத்திய குடிமை பணிகள் நடத்தை விதிகள் அடிப்படையில் ஜிப்மரில் பணியாற்றும் ஏ,பி,சி, ஊழியர்கள் கடந்தாண்டு டிசம்பர் 31-ந் தேதியில் அவர்களின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரில் வைத்திருக்கும் அசையா சொத்தின் முழு விவரங்களையும் வருகிற 31-ந்தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

    ஒரு அதிகாரிக்கு சொத்து இல்லை என்றால் இல்லை என்பதை உரிய படிவத்தில் தெரிவிக்க வேண்டும். அசையா சொத்து கணக்கை சமர்பிக்க தவறினால் நிர்வாக ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்கக்கோரி தொழிலாளர் துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • தினக்கூலி ஊழியர்களுக்கு பதிலாக துப்புரவு தொழிலாளர்களை நியமித்து ஜிப்மர் நிர்வாகம் பணிகளை கவனித்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 580 தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் மாதம் ரூ.11 ஆயிரம் வரை சம்பளம் பெறுகின்றனர். பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்கக்கோரி தொழிலாளர் துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 2017-ல் 2 மாதத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    ஆனால் ஜிப்மரில் இப்போதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதை கண்டித்து ஜிப்மர் ஹாஸ்பிடல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், கண்காணிப்பாளர் கிருஷ்ணகோபால்கோயல் ஆகியோர், சங்க தலைவர் சிவசங்கரன், பொதுச்செயலாளர் செல்வதுரை, பொருளாளர் டேனியல்சாமி உட்பட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் நோயாளிகளை இடமாற்றம் செய்தல், மருத்துவ பதிவேடு, புறநோயாளி பதிவு, உள் நோயாளிகளுக்கு உணவு வழங்குதல், சலவை, எக்ஸ்ரே, ரத்த வங்கி உட்பட 60-க்கும் மேற்பட்ட துறைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த துறைகளில் தினக்கூலி ஊழியர்களுக்கு பதிலாக துப்புரவு தொழிலாளர்களை நியமித்து ஜிப்மர் நிர்வாகம் பணிகளை கவனித்து வருகிறது.

    ×