search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரங்கசாமி"

    • தேர்தல் விதிமுறைகள் நடை முறைக்கு வந்துள்ளதால், புதுவை சட்டசபைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மந்தமாக இருப்பது அந்த கூட்டணி கட்சிகளின் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலையொட்டி சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சட்டசபை வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. தேர்தல் விதிமுறைகள் நடை முறைக்கு வந்துள்ளதால், புதுவை சட்டசபைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டும் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் வெளிநபர்கள், கட்சி நபர்கள், தொகுதி மக்கள் வர அனுமதி கிடையாது.

    இதையடுத்து சட்டசபை நுழைவு வாயிலை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு சட்டசபை செயலாளர் தயாளன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சட்டசபை காவலர்கள், நுழைவு வாயிலை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    தேர்தல் முடியும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என சட்டசபை அலுவலகம் அறிவித்துள்ளது.

    அதேநேரத்தில் சட்ட சபையில் அமைச்சர்கள், சில எம்.எல்.ஏ.க்கள் ரிலாக்சாக அமர்ந்து அரசியல் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    அதுபோல் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று காலை வீட்டிலிருந்து சட்டசபைக்கு வரும் முன்பு, நேரு வீதியில் காரை நிறுத்தி விட்டு தனது நண்பரின் வாட்ச் கடைக்கு சென்றார். அங்கு சுமார் 1 மணி நேரம் வாட்ச் கடையில் ரிலாக்ஸாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். பாதுகாவலர்களும் தங்களின் வாகனங்களுடன் அங்கு நின்றிருந்தனர்.

    இதுகுறித்து முதல்-அமைச்சரின் ஆதரவாளர்கள் கூறும்போது,

    சட்டசபைக்கு சென்றாலும் மக்களை சந்திக்க முடியாது. அதனால் வழக்கமாக வரும் தனது நண்பர் கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் கூறுகையில், புதுச்சேரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுகிறது. இம்முடிவு அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையிலும் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் நிலவி வருகிறது. பா.ஜனதாவினர் வேட்பாளர் அறிவிப்பில் மும்முரமான முயற்சியில் இருக்கின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் சட்டசபைக்கு வர அனுமதி இல்லை. இதனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி தற்போது ரிலாக்ஸாக உள்ளார்" என்று தெரிவித்தனர்.

    மற்ற மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்த நிலையில் அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்ற வேளையில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மந்தமாக இருப்பது அந்த கூட்டணி கட்சிகளின் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2 முறை அவரது பதவி ஏற்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று திருமுருகன் பதவியேற்றுக்கொண்டார்.
    • பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 4 மாதமாக புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இதையடுத்து திருமுருகன் இன்று அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகை வளாகத்தில் நடந்தது. தேசியகீதம், தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த ஆணையை தலைமை செயலாளர் சரத்சவுகான் வாசித்தார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை, திருமுருகனுக்கு அமைச்சர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

    அமைச்சராக பதவியேற்ற திருமுருகன் முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். கவர்னர் தமிழிசைக்கு அமைச்சர் திருமுருகன் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கினார்.

    அமைச்சர் திருமுருகனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

    • காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரசின் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
    • புதுவை அமைச்சராக திருமுருகனை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான இந்த ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 அமைச்சர்களும், பா.ஜனதாவை சேர்ந்த 2 அமைச்சர்களும் பதவி வகித்து வந்தனர்.

    இதில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் காரைக்கால் நெடுங்காடு (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் துறைகளை சரியாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் சந்திரபிரியங்கா பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்தநிலையில், காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரசின் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். புதுவை அமைச்சராக திருமுருகனை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். புதிய அமைச்சராக திருமுருகன் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு சட்டசபை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்க உள்ளார். பதவி ஏற்ற பின், அவருக்கான துறை ஒதுக்கப்படும்.

    • தமிழ்நாட்டில் இருந்து ஆதினம் செங்கோலை மோடியிடம் கொடுத்தது குறிப்பிடதக்கது.
    • பா.ஜ.க, அ.தி.மு.க-வை தோற்கடித்து தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும்.

    தருமபுரி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் தயாரிப்பு பேரவை கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்ததலைவர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்திற்கு பின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னணி ஊழியர்கள் வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. பா.ஜ.க-வின் தலைவர் அண்ணாமலை பேசும் போது அரசியல் அநாகரிகமாக பேசக்கூடாது.

    அவர் குறிப்பாக தி.மு.க கூட்டணி கட்சியினரை தரம் தாழ்த்தி பேசிவருகிறார். தமிழகத்தில் பா.ஜ.க 40 தொகுதிகளிலும் தோற்பது, தேர்தலுக்கு முன்னரே உறுதியாகிவிட்டது. மேலும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை டெபாசிட் இழக்க வைப்போம்.

    மேலும் அவர்கள் ஆபாச படத்தை வெளியிடுவதாக கூறி தருமபுரம் ஆதினத்தை மிரட்டுகின்றனர். போலீசார் விசாரணையில், அவரை மிரட்டுவதே பா.ஜ.க கட்சியினர் என தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆதினம் செங்கோலை மோடியிடம் கொடுத்தது குறிப்பிடதக்கது. அவருக்கே அந்த நிலை என்றால் மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.

    பா.ஜ.க ,அ.தி.மு.க-வை தோற்கடித்து தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும். சாதிய கூட்டணியை தோற்கடிக்க கிராமங்கள் தோறும் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும்.

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து 2 சீட் கொடுத்துள்ளனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் எந்த தொகுதி என்பது முடிவாகும், தி.மு.க கூட்டணி தேர்தல் கால கூட்டணி அல்ல, மதச்சார்பின்மையை பாதுகாக்க, உருவான கொள்கை கூட்டணி.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வேட்பாளர் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
    • புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

    வேட்பாளர் பட்டியலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை, பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. சிவசங்கரன், கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

    வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் நமச்சிவாயத்தின் பெயர் முதலிடத்தில் இருந்தாலும் அவர் பாராளுமன்ற தேர்தலில் நிற்க விரும்பவில்லை. உள்ளூர் அரசியலிலேயே தொடர்ந்து ஈடுபட விரும்புகிறார்.

    இதனால் வேட்பாளர் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் புதுவை கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை பள்ளியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று காலை நடந்தது.

    முகாமை முதலமைச்சர் ரங்கசாமி ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள் புதுவை எம்.பி. தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி புதுவை எம்.பி. தொகுதி எங்கள் கூட்டணியில் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் யார் என்பதை அக்கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும் என்றார்.

    • காரைக்கால் மீனவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை.
    • காரைக்கால் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் படகுகளை இலங்கை அரசிடம் இருந்து மீட்டு தர வேண்டும்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்பாராத வகையில் சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன. காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படும்போது மத்திய வெளியுறவுத்துறை தலையீட்டின் மூலம் அவர்களை இலங்கை அரசு விடுவிக்கிறது.

    ஆனால் காரைக்கால் மீனவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு முதல் காரைக்கால் மீனவர்களது 11 படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.

    மோட்டார் பொருத்தப்பட்ட இந்த படகுகள் தலா ரூ. 1 கோடிக்கு மதிப்புள்ளவை. இதனால் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காரைக்கால் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் படகுகளை இலங்கை அரசிடம் இருந்து மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கடிதத்தில் கூறியுள்ளார்.

    • பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சைகளும் தங்களுக்கும் வாரிய பதவி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
    • ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் சிவசங்கர் தனக்கு பா.ஜனதாவில் எம்.பி. சீட் கேட்டு வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் திருபுவனை (தனி) தொகுதி அங்காளன், உழவர்கரை சிவசங்கர், ஏனாம் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதோடு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோசியேட் எம்.எல்.ஏ.க்கள் என்ற முறையில் பங்கேற்று வருகின்றனர்.

    அரசு பதவிகளில் இல்லாத ஆளுங்கட்சியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆட்சி அமைந்தது முதலே வாரிய பதவி கேட்டு வருகின்றனர். இவர்களோடு பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சைகளும் தங்களுக்கும் வாரிய பதவி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால், ஆட்சி அமைந்து 3 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை வாரிய பதவி வழங்கப்படவில்லை. இதனால் பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அதோடு பா.ஜனதாவை ஆதரிப்பதால் தங்கள் தொகுதிகள் புறக்கணிப்படுவதாக சட்டமன்றத்தில் அவர்கள் குற்றம்சாட்டினர். சட்டமன்றத்தின் முன்பு படிக்கட்டில் அமர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் போராட்டமும் நடத்தினர்.

    இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டமன்றத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். தனக்கு அரசு பழைய காரை கொடுத்ததால் கார் அடிக்கடி பழுதாவதாகவும், பெட்ரோல் அலவன்ஸ் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

    ஆனாலும் அங்காளனுக்கு அரசு இதுவரை புதிய கார் வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. தனது பழைய காரின் சாவியை சபாநாயகரை சந்தித்து ஒப்படைத்தார்.

    ஓடாமல் இருந்த காரை பட்டி பார்த்து தனக்கு வழங்கியுள்ளதால் செல்லுமிடமெல்லாம் அது மக்கர் செய்து நிற்பதாகவும் மற்ற எம்.எல்.ஏ.க்களின் காருக்கு ரூ.30 ஆயிரம் டீசல் அலவன்ஸ் வழங்கும் நிலையில் தனது காருக்கு வழங்கவில்லை என்பதால் காரை திரும்ப ஒப்படைத்துள்ளதாக அங்காளன் தெரிவித்தார்.

    ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் சிவசங்கர் தனக்கு பா.ஜனதாவில் எம்.பி. சீட் கேட்டு வருகிறார். இவர் ஏற்கனவே உழவர் கரை சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதாவில் வாய்ப்பு கேட்டு வழங்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

    இதனால் புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிட வாய்ப்பளிக்காத பட்சத்தில் சிவசங்கர் எம்.எல்.ஏ. என்ன நிலைப்பாடு எடுப்பார் என தெரியவில்லை.

    மற்றொரு பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஏனாம் தொகுதியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனால் தனது தொகுதியை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்து வருகிறார்.

    இதோடு தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் புகார் தெரிவித்து வருகிறார். இதனால் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ.வும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தி புதுவை பாராளுமன்ற தொகுதியில் களம் இறங்கும் பா.ஜனதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

    • புதுவை மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் ஆண்டறிக்கை நகலை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சபையில் சமர்பித்தார்.
    • பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி, அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ளதால் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.45 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.

    சபையில் முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் அமைச்சர் ப.கண்ணனுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான மறைந்த விஜயகாந்த், விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் மார்க்சிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, மறைந்த தலைவர்களுக்காக, சபை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து புதுவை மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் ஆண்டறிக்கை நகலை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சபையில் சமர்பித்தார்.

    தொடர்ந்து சட்ட முன்வரைவுகளுக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் பெறப்பட்டது. சட்டசபை குழு அறிக்கை, கூடுதல் செலவின அறிக்கை, பேரவை முன் வைக்கப்பட்டது.

    தொடர்ந்து அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சபையில் தாக்கல் செய்தார்.

    ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5 மாத அரசு செலவினங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.

    இந்த பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி, அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    இந்த நிலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாததை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    காலை 9.45 மணிக்கு தொடங்கிய சட்டசபை கூட்டம் 10.45 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.

    • 2011-ல் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து ரங்கசாமி மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
    • எந்த கோப்பையும் நான் முடக்கவில்லை. நிர்வாக ரீதியாக சில வழிமுறைகள் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உள்ள சட்டசபை கட்டிடம் 1820-ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

    சட்டசபை, தலைமை செயலகம் தனித்தனியே இருப்பதால் நிர்வாக சிக்கல் ஏற்படுகிறது. இதனால் 2008-ல் காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி முதலமைச்சராக இருந்தபோது தட்டாஞ்சாவடியில் தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை கட்ட முடிவு செய்யப்பட்டது.

    அப்போது தனது தொகுதிக்கே அனைத்து திட்டங்களையும் கொண்டு செல்கிறார் என ரங்கசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.

    2011-ல் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து ரங்கசாமி மீண்டும் முதலமைச்சர் ஆனார். அப்போதும் சட்டசபை கட்ட நடவடிக்கை எடுத்தார். ஆனால் நிதி பற்றாக்குறையால் கட்ட முடியவில்லை. தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசு திட்டத்தை கைவிட்டது. மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா 2021-ல் ஆட்சி பொறுப்பேற்றதும் சட்டசபை கட்ட தீவிரம் காட்டியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ரூ.612 கோடியில் திட்டம் தயாரித்து கொள்கை அளவில் ஒப்புதல் பெற்றார். இருப்பினும் பணிகள் தொடங்கவில்லை.

    இந்த நிலையில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறுகையில், பிரதமர், மத்திய அரசு சட்டசபை கட்ட ஒப்புதல் தெரிவித்துவிட்டனர். ஆனால் 5 மாதமாக கவர்னரிடம் கோப்பு உள்ளது. சில விளக்கங்களை அவர் கேட்டுள்ளார். இதனால்தான் பணிகள் முடக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் கொடுத்தவுடன் புதிய சட்டசபை கட்டப்படும் என தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்து கவர்னர் தமிழிசை கூறுகையில்:-

    புதிய சட்டசபை கட்டும் கோப்பை நான் முடக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்து மீண்டும் அனுப்பினோம். தற்போது மீண்டும் சில கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

    எந்த கோப்பையும் நான் முடக்கவில்லை. நிர்வாக ரீதியாக சில வழிமுறைகள் உள்ளது. அந்த வழிமுறையில்தான் கோப்பு செல்கிறது என தெரிவித்தார்.

    புதிய சட்டசபை கட்டும் விவகாரத்தில் சபாநாயகர், கவர்னர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்த உள்ளூர் பா.ஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • அரசு பதவிகளில் இருப்பவர்களை போட்டியிட செய்தால் தொடர் விளைவுகள் ஏற்படும் எனவும் கூறி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    கூட்டணி கட்சியான பா.ஜனதா வெற்றிபெற பாடுபடுவோம் என முதலமைச்சரும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிதலைவருமான ரங்கசாமி என்ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டு விழாவில் தெரிவித்தார். இதனால் பாஜனதா வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    யூனியன் பிரதேசமான புதுவை 4 பிராந்தியமாக உள்ளது. இதனால் 4 பிராந்தியங்களிலும் பிரபலமானவர்களை நிறுத்தினால்தான் எளிதில் வெற்றி பெற முடியும். இதை அறிவுறுத்தும் வகையில் முதலமைச்சர் ரங்கசாமி, பிரபலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என பாஜனதா மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் தெரிவித்துள்ளார்.

    புதுவை தொகுதியில் பாஜனதா சார்பில் போட்டியிட காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர், புதுவை சுயேச்சை எம்.எல்.ஏ., நியமன எம்எல்ஏ, புதுவை நிர்வாகி ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்த உள்ளூர் பா.ஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளராக நிறுத்தினால் எதிர்கட்சிகள் அதையே பிரச்சாரமாக செய்வார்கள். இது வெற்றியை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் வெளியூர் வேட்பாளர்களை பாஜனதா தவிர்க்கும் என தெரிகிறது.

    அதேநேரத்தில் அரசு பதவிகளில் இருப்பவர்களை போட்டியிடசெய்தால் தொடர் விளைவுகள் ஏற்படும் எனவும் கூறி வருகின்றனர். பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்தை கட்சித் தலைமையிடம் பலரும் கைகாட்டியுள்ளதாக தெரிகிறது.

    ஆனால் அவர் உள்ளூர் அரசியலை விட்டு விலக விரும்பவில்லை என தலைமையிடம் கூறியுள்ளார். அவரை போட்டியாக கருதுபவர்கள் உள்ளூர் அரசியலிலிருந்து, மத்திய அரசியலுக்கு அனுப்ப திட்டமிட்டு அவர் பெயரை வேட்பாளராக சிபாரிசு செய்துள்ளனர்.

    உளவுத்துறை மூலமாகவும், தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் பாஜனதா ஏற்கனவே கள ஆய்வு நடத்தியுள்ளனர். ஆர்எஸ்எஸ் இயக்கமும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் பாஜனதா விவிஐபி வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியாக உள்ளது.

    இந்த பட்டியலில் புதுவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பெயரும் இடம்பெறும் என பாஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    • தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.
    • அடுத்தக்கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தப்படும்' என்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா போட்டியிடுகிறது. வேட்பாளர் தேர்வு குறித்து, முதலமைச்சர் ரங்கசாமியுடன் பா.ஜனதா, மேலிடப் பொறுப்பாளர் ஆலோசனை நடத்தினார்.

    பா.ஜனதா, மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அடங்கிய குழுவினர் 2-வது முறையாக முதலமைச்சர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை 30 நிமிடம் வரை நீடித்தது.


    கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில்,

    தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். அதற்கேற்ற வியூகங்களை வகுக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் மற்றும் பா.ஜனதாவினரின் எண்ணம் அதுகுறித்து விவாதித்தோம். அடுத்தக்கட்டமாகவும் பேச்சு வார்த்தை நடத்தப்படும்' என்றார்.

    பா.ஜனதா வேட்பாளரை இறுதி செய்ய முடியவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜனதாவில் வேட்பாளரை முடிவு செய்யவில்லை என்று யார் சொன்னது? அதுபோன்ற குற்றச்சாட்டு ஏதும் இல்லை. லோக்சபா தேர்தலில் பா.ஜ.க, சார்பில் போட்டியிட பலரும் சீட் கேட்டுள்ளனர். நேரம் வரும் போது அதிகாரப்பூர்வமாக அறிப்போம் என்றார்.

    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் என்ற தகவல் வெளியானது.
    • மாநில வளர்ச்சிக்காக என்.ஆர். காங்கிரஸ் கட்சி பாடுபட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதுவை அமைச்சரவையில் என்.ஆர். காங்கிரசும், பா.ஜனதாவும் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் என்ற தகவல் வெளியானது.

    இதை உறுதி செய்யும் வகையில் பா.ஜனதாவின் மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியை சந்தித்து பேசினார்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிட சம்மதம் தெரிவித்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியிடம், கட்சி நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். கட்சி ஆண்டு விழாவின்போது முடிவு தெரிவிப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

    இதனால் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் போட்டியிடுவார்? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு இன்று என்ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டுவிழாவில் பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் 14-ம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது.

    விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி (பா.ஜனதா) போட்டியிடுகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு முழு மனதோடும், பலத்தோடும் பணியாற்றி வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். கட்சி ஆட்சி அமைந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மாநில வளர்ச்சிக்காக என்.ஆர். காங்கிரஸ் கட்சி பாடுபட்டுள்ளது. இதையெல்லாம் மக்களிடம் எடுத்துக்கூறி என்.ஆர்.காங்கிரசார் தேர்தல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவதை முதலமைச்சர் ரங்கசாமி உறுதி செய்துள்ளார். தொண்டர்களிடையே நிலவி வந்த சந்தேகங்களுக்கும் முதலமைச்சர் ரங்கசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    ×