search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொகுதி பங்கீடு"

    • இன்றைக்கும் மக்களுக்கு இலவச சோறு போடுகிற நிலைமையில் தான் இருக்கிறோம்.
    • போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க.வினரின் போராட்டம் அரசியல்.

    வேலூர்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் இன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலூர் தாலுக்கா மற்றும் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொது செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கினார்.

    ஒருவனுக்கு தங்க நிழல் கூட இல்லாமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் விண்ணில் ஊர்திகளை செல்கிறோம், சந்திரனுக்கு அனுப்புகிறோம், சூரியனை நெருங்கிவிட்டோம் என்று பேசுவது மனிதாபிமானம் ஆகாது. அது அறிவுடைமைக்கு வேண்டுமானால் எடுத்துக்காட்டாக இருக்கலாம்.

    அதனால் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகளை வழங்கி வருகிறோம்.

    இன்றைக்கும் மக்களுக்கு இலவச சோறு போடுகிற நிலைமையில் தான் இருக்கிறோம். பிள்ளைகளுக்கு மூன்று வேளை சோறு கூட போட முடியாத சூழ்நிலையில் உள்ளது பஞ்சத்தில் உள்ளார்கள்.

    உடுக்கும் உடை கூட யாராவது கொடுக்க மாட்டார்களா என காத்துக்கொண்டி ருக்கிறார்கள். இதை மாற்றுவது தான் நமது அரசு. தேர்தல் முடிந்த உடன் 8 லட்சம் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்படும்.

    மக்களுக்கு தொண்டு செய்வது எங்கள் தலையாய கடமை என கருணாநிதி செய்தார் அதை அவரது மகன் மு க ஸ்டாலின் இப்போது செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும்.

    மதுரை எய்ம்ஸ் அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான், அவர்கள் தான் செயல்படுத்தவில்லை. எங்கள் மீது பழி சொல்வது நியாயம் இல்லை. நாங்கள் தடுத்திருக்கிறோம் என்று ஒரு திட்டத்தை சொல்ல சொல்லுங்கள். மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர், நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர் எந்த திட்டத்தை தடுத்தோமா? இல்லையா என்று சொல்ல வேண்டும்.

    பா.ஜ.க.வினர் அ.தி.மு.க. தலைவர்கள் படத்தை தவறாக பயன்படுத்து கிறார்கள் என்று அதிமுகவினருக்கு தான் ரோசம், கோபம் வர வேண்டும்.

    பிரதம மந்திரி பத்து முறை கூட வரலாம் யார் வேண்டாம் என்று சொன்னார்கள்.

    இவ்வளவு நாள் தி.மு.க.வை பற்றி பேசினாரா பிரதமர். தேர்தல் வரும்போதுதான் தி.மு.க.வை பற்றி பேசுகிறார். ஜல்லிக்கட்டு காலத்தில் வண்டி மாடு ஒரு மாறி தலையை ஆட்டும். அதுபோல தான் பிரதமரின் பேச்சு. இதெல்லாம் ஒரு அரசியல் சீசன்.

    போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க.வினரின் போராட்டம் அரசியல்.

    இதெல்லாம் பண்ணாமலா இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசப்பற்று உள்ள கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இணையவேண்டும்.
    • நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர மாநில கட்சிகள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக- தமிழ் மாநில காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜி.கே.வாசனுடன், பொன்.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை உறுதி செய்தார். முதல் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது. தொகுதி எண்ணிக்கை குறித்து பேசியுள்ளோம். தேசப்பற்று உள்ள கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இணையவேண்டும். நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர மாநில கட்சிகள் சிந்தித்து செயல்பட வேண்டும். முரண்பாடுகளின் மொத்த வடிவம் இந்தியா கூட்டணி என்றார்.

    முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தொகுதி பங்கீடு குறித்து ஜி.கே.வாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பா.ஜ.க, த.மா.கா இடையே சுமூகமாக பேச்சுவார்த்தை தொடர்கிறது. வரும் 4-ம் தேதிக்கு பிறகு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எந்த மக்களவை தொகுதி ஒதுக்கினாலும் அதிலும் போட்டியிட தயாராக உள்ளோம்.
    • இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - மனிதநேய மக்கள் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவுடன் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா கூறியதாவது:-

    * 2013-ம் ஆண்டு முதல் தி.மு.க. கூட்டணியில் பணியாற்றி வருகிறோம்.

    * வரும் பாராளுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

    * எந்த மக்களவை தொகுதி ஒதுக்கினாலும் அதிலும் போட்டியிட தயாராக உள்ளோம்.

    * இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என்றார்.

    முன்னதாக, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகள் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தோழமை கட்சிகளின் பிடிவாதம் தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
    • இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் தி.மு.க.வுடன் தோழமை கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

    சென்னை:

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லீம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இதில் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியிலும், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி நாமக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் தி.மு.க.வுடன் நடத்திய 2 கட்ட பேச்சுவார்த்தையில் இதுவரை காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் உடன்பாடுக்கு வரவில்லை. இந்த கட்சிகள் கடந்த தேர்தலை விட இந்த தடவை கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன.

    காங்கிரஸ் கட்சி 12 இடங்கள் கேட்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்கள் கேட்கிறது. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 3 இடங்கள் கேட்கின்றன.

    ம.தி.மு.க. 2 இடம் வேண்டும் என்கிறது. இந்த கூட்டணிக்கு புதிதாக வந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் 2 இடம் வேண்டும் என்கிறது. இதனால் இழுபறி நீடித்து கொண்டே இருக்கிறது.

    இந்த நிலையில் தோழமை கட்சிகளின் பிடிவாதம் தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தி.மு.க. தரப்பில் புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வருகிற 9-ந்தேதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யும் வகையில் ஒத்துழைக்க கேட்டு கொண்டு உள்ளது.

    அதன் பேரில் இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் தி.மு.க.வுடன் தோழமை கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. அதில் சுமூக தீர்வு எட்டப்படும் என்று தெரிகிறது.

    • கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன.
    • தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பற்றி தெரிவித்தது மட்டுமின்றி, ராஜ்யசபா தொகுதி ஒன்றையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.

    திருவனந்தபுரம்:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிவடைவதால், 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலில் களமிறங்க தயாராகி வருகின்றன.

    அனைத்து மாநிலங்களிலும் பிரதான கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. கேரள மாநிலத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டது மட்டுமின்றி, தங்களது கூட்ட ணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றன.

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் வயநாடு, திருவனந்தபுரம், கோழிக்கோடு, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, எர்ணாகுளம், வடகரை, கண்ணூர், மாவேலிக்கரை, பாலக்காடு, திருச்சூர், ஆலத்தூர், காசர்கோடு ஆகிய 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன.

    அந்த தொகுதிகள் மட்டுமின்றி, மீதமுள்ள 5 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

    காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன், த.மு.மு.க. தலைவர் குஞ்சாலிக்குட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனக்காடு சயீத் சாதிக் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி இரு கட்சி தலைவர்களும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தங்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை திருப்தி கரமாக இருந்ததாக கூறி யுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பற்றி தெரிவித்தது மட்டுமின்றி, ராஜ்யசபா தொகுதி ஒன்றையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.

    அதுபற்றி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகரன் கூறும்போது, ராஜ்யசபா சீட் காலியாகும்போது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏற்க தயாராக இருந்தால், அதை அவர்களுக்கு நாங்கள் வழங்குவோம் என்று தெரிவித்தார். தங்களது தொகுதி பங்கீடு முடிவுகளை நாளை (27-நதேதி) அறிவிப்போம் என்று இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
    • தி.மு.க. பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு கடந்த 2 நாட்களாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

    ஏற்கனவே தி.மு.க. குழுவுடன் தமிழக காங்கிரஸ் குழு ஒரு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. அப்போது 15 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போதே தி.மு.க. தரப்பில் 'அதிகம் ஆசைப்படாதீர்கள். மற்ற கட்சிகளுக்கும் ஒதுக்க வேண்டும். எனவே தொகுதிகள் குறையும்' என்று கூறப்பட்டது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே 9 தொகுதி குறைய கூடாது என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

    இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அப்போது அஜோய்குமார் 'காங்கிரசுக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என்று வெளியே தகவல்கள் பரவுகிறது. தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க கூடாது என்று மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே பதில் எதுவும் சொல்லவில்லை.

    இதற்கிடையில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டு சிக்கல்களை சுமூகமாக பேசி முடிக்கும் வேலையில் டெல்லி தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

    உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவுடன் பேசியதில் காங்கிரசுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. டெல்லியிலும் காங்கிரசுக்கு 3 தொகுதிகள் வழங்க ஆம்ஆத்மி ஒத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஒவ்வொரு மாநில வாரியாக சுமூகமாக முடிவுகள் எட்டப்பட்டு வருவதால் இந்தியா கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் தி.மு.க.வுடனும் சுமூகமாக பேசி உடன்பாடு காண முடிவு செய்துள்ளார்கள். இதையடுத்து தி.மு.க. பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு கடந்த 2 நாட்களாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினார்.

    அப்போது காங்கிரசுக்கு மொத்தம் 9 தொகுதிகள் வழங்கவும் ஒரு தொகுதியை கமலுக்கு கொடுக்கும்படியும் பேசியதாக கூறப்படுகிறது.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

    • இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டம்.
    • 4 விருப்ப தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் இந்திய கம்யூனிட் கட்சி வழங்கியது.

    சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.

    இதில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது.

    இந்த கூட்டத்தில், 4 விருப்ப தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் இந்திய கம்யூனிட் கட்சி வழங்கியது. இதில், இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த முறையை விட கூடுதலாக தொகுதிகளைக் கேட்டுள்ளோம் என்று தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் குழு பேட்டியளித்தது.

    • தி.மு.க. வழங்கும் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டால் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.
    • காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    சென்னை:

    தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்குகிறது.

    இதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகிய மூவரும் நாளை டெல்லியில் இருந்து சென்னை வருகிறார்கள்.

    விமான நிலையத்தில் இருந்து நேராக சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் கு.செல்வபெருந்தகை, காரிய கமிட்டி உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    பின்னர் மாலை 3 மணியளவில் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச செல்கிறார்கள். டெல்லி தலைவர்கள், கே. எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை ஆகியோர் செல்கிறார்கள்.

    கடந்த முறை தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதே போல் இந்த ஆண்டும் குறைந்த பட்சம் 9 தொகுதிகள் தர வேண்டும் என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்கள். ஆளும் தி.மு.க. தரப்பில் 7 தொகுதிகள் வரை ஒதுக்க சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் பங்கீட்டில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

    எனவே நெருக்கடியான சூழ்நிலையில் டெல்லி தலைவர்கள் நேரில் அமர்ந்து பேச முடிவு செய்கிறார்கள். எனவே நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.


    இந்த கூட்டத்தில் தொகுதிகள் எண்ணிக்கையை உறுதி செய்து விடுவார்கள். அதன் பிறகு டெல்லியில் உள்ள தலைவர்கள் உறுதி செய்த பிறகு எந்தெந்த தொகுதிகளை பெறுவது என்பது பற்றி பேசப்படும் என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. வழங்கும் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டால் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.

    காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    • தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் இடையே வருகிற 28-ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

    • பாராளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
    • கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழகத்தின் சார்பில் கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி. சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, பா. பென்ஜமின் இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கு கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில், இரா. விசுவநாதன், சி.பொன்னையன், பொள்ளாச்சி வி. ஜெயராமன், டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில், டாக்டர் மு. தம்பிதுரை, கே.ஏ. செங்கோட்டையன், என். தளவாய்சுந்தரம், செல்லூர் கே. ராஜூ, ப. தனபால், கே.பி. அன்பழகன், ஆர்.காமராஜ், எஸ். கோகுல இந்திரா, உடுமலை கே. ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் சம்பந்தமான விளம்பரப் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில், டாக்டர் சி. விஜய பாஸ்கர், கடம்பூர் சி. ராஜூ, கே.டி. ராஜேந்திரபாலாஜி, அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ண மூர்த்தி, டாக்டர் பி. வேணு கோபால், டாக்டர் வி.பி.பி. பரமசிவம், ஐ.எஸ். இன்பதுரை, எஸ். அப்துல் ரஹீம், வி.வி.ஆர். ராஜ் சத்யன், வி.எம். ராஜலெட்சுமி இடம் பெற்றுள்ளனர்.

    இவர்களுக்கு, கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

    • காங்கிரஸ் தலைவர் மல்லகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம்.
    • ஆலோசனை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தமிழக காங்கிஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோருக்கு அழைப்பு.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தொகுதி பங்கீடு குறித்து டிசம்பர் 29ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் காங்கிரஸ் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆலோசனை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற உள்ளது.

    ஆலோசனை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தமிழக காங்கிஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வம் பெருந்தகை, மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • 28 கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பொதுவான அலுவலகம் இல்லை.
    • கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும், தலைவராக சோனியா காந்தியும் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து "இந்தியா" (இந்திய தேசிய உள்ளடக்கிய வளர்ச்சி கூட்டணி) என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.

    இந்த புதிய கூட்டணியை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கடந்த சில மாதங்களாக கடுமையாக பாடுபட்டு உருவாக்கி உள்ளார். இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.

    2-வது ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து 3-வது ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை புறநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது.

    கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்பட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்தியா கூட்டணியின் இன்றைய 3-வது கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 பேர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். அவருடன் டி.ஆர்.பாலுவும் சென்றிருக்கிறார்.

    இதுபோல மற்ற கட்சி தலைவர்களும் இன்று காலை மும்பை சென்று சேர்ந்தனர். அவர்களுக்கு ஓட்டலில் மதிய விருந்து அளிக்கப்படுகிறது.

    இந்தியா கூட்டணியின் 3-வது ஆலோசனை கூட்டம் முந்தைய 2 கூட்டங்களை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றும், நாளையும் 2 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். குறிப்பாக பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குகிறார்கள்.

    அதன் அடிப்படையில் அடுத்தடுத்து கொள்கை அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. அதிலும் குறிப்பாக நாடு முழுவதும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டு போராட்டங்கள் நடத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதுபற்றி 28 கட்சி தலைவர்களும் இன்று விவாதிக்க உள்ளனர்.

    28 கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பொதுவான அலுவலகம் இல்லை. டெல்லியில் அதற்கான அலுவலகத்தை திறப்பதற்கு இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. அது போல இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், தலைவர் மற்றும் நிர்வாகிகளும் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும், தலைவராக சோனியா காந்தியும் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் வேட்பாளர் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டுமானால் பெரும்பாலான தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு நாடு முழுவதும் 22 கோடி வாக்குகள் கிடைத்திருந்தன. அதே சமயத்தில் தற்போதைய இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு 23 கோடி வாக்குகள் கிடைத்து இருந்தன.

    எனவே பொது வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் பா.ஜனதா வேட்பாளரை எளிதில் வீழ்த்த முடியும் என்று இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் கருதுகிறார்கள். இதற்காக தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என்று சில கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

    இது தொடர்பாக இன்றும், நாளையும் இந்தியா கூட்டணி தலைவர்கள் விவாதித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

    இந்தநிலையில் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இடையே திடீர் சிக்கல் எழுந்துள்ளது. மும்பை கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பட்டியலில் தொகுதி பங்கீடு பிரதானமாக இடம் பெற்று இருந்தது. திடீரென அதை விவாதிக்க வேண்டிய பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர்.

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கேட்டு கொண்டதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்தியா கூட்டணியில் இப்போதே தொகுதி பங்கீடு பற்றி பேசினால் அது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி விடும். அதனால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே தேர்தல் தேதி அறிவித்த பிறகு கடைசி நாட்களில் தொகுதி பங்கீடை தீர்மானிக்கலாம் என்று நிதிஷ் குமார் வலியுறுத்தினார். அதனால் தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்க வாய்ப்பில்லை" என்று கூறினார்.

    நிதிஷ்குமாரின் கோரிக்கையை சோனியா காந்தி உள்பட பல தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே தொகுதி பங்கீடு இந்தியா கூட்டணியில் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமாக பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் என்று தெரிவிக்கிறார்கள்.

    பெரும்பாலான மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்பது யார் என்பதில் இன்னமும் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை. பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் மாநிலங்களில் காங்கிரசுக்கும், மாநில கட்சிகளுக்கும் மோதல் ஏற்படும் சூழல் உள்ளது.

    டெல்லியிலும், பஞ்சாபிலும் கூட்டணிக்கு தலைமை ஏற்க ஆம் ஆத்மி தீவிரமாக உள்ளது. அதற்கு காங்கிரஸ் ஒத்துழைக்குமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. அதுபோல மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசும், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை கொடுக்க விரும்பவில்லை.

    வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் காங்கிரசை களம் இறக்க மாநில கட்சிகள் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால்தான் தொகுதி பங்கீட்டை ஒத்தி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

    தொகுதி பங்கீடு செய்ய இயலாவிட்டாலும் குழுக்கள் அமைத்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருங்கிணைப்பை உருவாக்கி விட முடியும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் கருதுகிறார்கள். இந்திரா காந்தியை எதிர்த்து ஜனதா கட்சி தலைமை புதிய கூட்டணி உருவான போது நாடு முழுவதும் மக்கள் எப்படி ஆதரவு தெரிவித்தார்களோ அதே போன்று இந்தியா கூட்டணிக்கும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று இந்த கூட்டணியின் முக்கிய தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    என்றாலும் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது பற்றி மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. எனவே மும்பை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை பா.ஜனதா ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

    ×