search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டணி கட்சி"

    • 5 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்து விடப்பட்டுள்ளது.
    • கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க. வுக்கு கூடுதலாக கிடைக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி என மும்முனைப்போட்டி உருவாகியுள்ளது.

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிறிய கட்சிகள் ஆதரவு அளித்திருந்தாலும், குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்து விடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இடம் பெற்ற கட்சிகளுக்கு புதுச்சேரியில் செல்வாக்கும், வாக்கு சதவீதமும் அவ்வளவாக இல்லை.

    கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க. வுக்கு கூடுதலாக கிடைக்கும்.

    ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பெறும் ஓட்டுகள், வரும் காலத்தில் கூட்டணி அமைந்தால் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூடுதல் சீட் பெற உதவும்.

    இதனால் கூட்டணியின்றி தனித்து விடப்பட்ட புதுச்சேரி அ.தி.மு.க.வினர் தவித்து வருகின்றனர்.

    • பாராளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
    • கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழகத்தின் சார்பில் கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி. சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, பா. பென்ஜமின் இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கு கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில், இரா. விசுவநாதன், சி.பொன்னையன், பொள்ளாச்சி வி. ஜெயராமன், டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில், டாக்டர் மு. தம்பிதுரை, கே.ஏ. செங்கோட்டையன், என். தளவாய்சுந்தரம், செல்லூர் கே. ராஜூ, ப. தனபால், கே.பி. அன்பழகன், ஆர்.காமராஜ், எஸ். கோகுல இந்திரா, உடுமலை கே. ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் சம்பந்தமான விளம்பரப் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில், டாக்டர் சி. விஜய பாஸ்கர், கடம்பூர் சி. ராஜூ, கே.டி. ராஜேந்திரபாலாஜி, அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ண மூர்த்தி, டாக்டர் பி. வேணு கோபால், டாக்டர் வி.பி.பி. பரமசிவம், ஐ.எஸ். இன்பதுரை, எஸ். அப்துல் ரஹீம், வி.வி.ஆர். ராஜ் சத்யன், வி.எம். ராஜலெட்சுமி இடம் பெற்றுள்ளனர்.

    இவர்களுக்கு, கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

    • கடலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள்,தி.மு.க. கவுன்சிலர்கள் ஆகியோர் நேரில் வந்து பரபரப்பு புகார் மனு அளித்தனர்.
    • மேயர் சுந்தரி ராஜா, 21 தி.மு.க. கவுன்சிலர்கள் வழங்கிய புகார் மனுவை பெற்றுக் கொண்டார்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி ராஜா, துணை மேயராக தாமரைச்செல்வன் இருந்து வருகிறார்கள். கடந்த ஆண்டு மாநகரா ட்சி மேயர் தேர்தலில் சுந்தரி ராஜா போட்டியிட்டு கவுன்சிலர்கள் வாக்களித்து வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்றார் . இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம், கடலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள்,தி.மு.க. கவுன்சிலர்கள் ஆகியோர் நேரில் வந்து பரபரப்பு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரை ச்செல்வன் துணை மேயர் தேர்தலில் போட்டி யின்றி தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ஆதரவுடன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டடார். எங்கள் வார்டு பகுதிகளில் தொடர்ந்து துணை மேயர், வார்டு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார்கள் வந்துள்ளது. இதன் காரணமாக வருகின்ற மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, 21 தி.மு.க. கவுன்சிலர்கள் வழங்கிய புகார் மனுவை பெற்றுக் கொண்டார் . தி.மு.க.தலைமை மற்றும் மாவட்ட செயலாளர் எடுக்கும் முடிவு இறுதியானதாகும் என தெரிவித்தார். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்து வருகின்றன. தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரே துணை மேயராக தாமரைச்செல்வன் மட்டும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் திடீரென்று துணைமேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என போர்கொடி தூக்கி புகார் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அச்சாரமாக ஈரோடு இடைத்தேர்தலில் கமல்ஹாசன் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
    • கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற சபதம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    சென்னை:

    மக்கள் நீதி மையம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்ட ஓராண்டிலேயே நடந்த பாராளுமன்ற தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மையம் கட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்த போதிலும் கணிசமான வாக்குகளை பெற்றது. இதை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றையும் கமல்ஹாசன் தனித்தே சந்தித்தார். சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வானதி சீனிவாசனிடம் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார்.

    இப்படி கட்சி தொடங்கிய பிறகு தனித்தே களம் கண்ட மக்கள் நீதி மையம் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து களம் காண முடிவு செய்து உள்ளது. இதற்கு அச்சாரமாக ஈரோடு இடைத்தேர்தலில் கமல்ஹாசன் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று தேர்தலை சந்திக்க கமல் திட்டமிட்டுள்ளார். இந்த தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்றி வியூகம் அமைத்து செயல்பட அவர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு தங்கி இருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார்.

    இதன் பிறகு மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற சபதம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் கோவை, தென்சென்னை, மதுரை ஆகிய 3 தொகுதிகளிலும் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பாராளுமன்ற தேர்தலில் தென் சென்னை அல்லது கோவை தொகுதியில் கமல் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை முழுமையாக எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்த முறை வெற்றியை ருசிக்க வேண்டும் என்று அவர் நிர்வாகிகளிடம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதனால் கட்சி நிர்வாகிகளும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சியினர் உற்சாகமாக தயாராகி வருகிறார்கள். இது தொடர்பாக கமல் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது சட்ட மன்ற தேர்தலில் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தலைவர் கமல்ஹாசன் தோல்வி அடைந்தது கட்சியினர் மத்தியில் இப்போதும் வருத்தமான விஷயமாகவே பேசப்பட்டு வருகிறது.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதற்காக பூத் கமிட்டிகளை பலப்படுத்தி கட்சியை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறோம் என்றார். இதன் மூலம் கூட்டணி அரசியலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நிர்வாகி தெரிவித்தார்.

    ×