search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஷ்பு"

    • தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.
    • மீண்டும் ஆட்சிக்கு மோடி தான் வரப்போகிறார்.

    நாகர்கோவில்:

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார். அதன் பிறகு முதல் முறையாக இன்று குமரி மாவட்டம் வந்தார்.

    அவருக்கு குமரி மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை தருவதை வரவேற்கிறேன். ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம் ஜெயலலிதாவால் கொண்டு வந்த காரணத்தால் அதை நிறுத்தி உள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை நியாயமான பெண்களுக்கு சென்று சேரவில்லை. கட்சியை சேர்ந்த பெண்களுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    தி.மு.க அரசு தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்குவதாக கூறியிருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டு வருகிறது. இதைதான் குஷ்பு கேட்டுள்ளார். அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

    உரிமை தொகை வாங்குபவர்கள் பிச்சைக்காரிகள் என்று குஷ்பு கூறியிருப்பது அவருடைய கருத்து. என்ன அர்த்தத்தில் அவர் பேசினார் என்று எனக்கு தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு இல்லை. நிறைய பெண்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள்.

    நன்றாக பேசுபவர்கள் சட்டசபையில் முன் இருக்கையில் இருக்க வேண்டும். ஆனால் எனக்கு முன் இருக்கையில் அமர வாய்ப்பு கிடைக்கவில்லை. 2-வது முறையாக வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சிகள்தான் காங்கிரசும், தி.மு.க.வும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களுக்கு பதவி கொடுக்காமல் எப்போது வேலை பார்த்தீர்கள் என்று ஒரு பெண்ணிடம் கேட்க முடியாது.

    பாரதிய ஜனதாவில் எனக்கு பதவி கண்டிப்பாக கொடுப்பார்கள். விரைவில் அங்கீகாரம் கொடுப்பார்கள். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பெண்களுக்கு எந்த சீட்டு கொடுத்தாலும் சரி, பதவிகள் கொடுத்தாலும் சரி, அதற்கு 2 விஷயங்கள் மையமாக கொண்டிருக்கும்.

    ஒன்று பெண்களை அங்கீகாரப்படுத்தும், அதிகாரப்படுத்தும் முயற்சி இருக்கும். பெண்கள் களப்பணி ஆற்று தளத்தை உருவாக்குவார்கள். அது தான் பாரதிய ஜனதாவின் சீரிய தன்மை. அதை விரைவில் செய்வார்கள்.


    பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் வந்துள்ளோம். குடும்பக் கட்சிகள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் எந்த சுயநலமும் இல்லாமல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் பணியை மட்டுமே பிரதான பணியாக நினைக்க கூடியது பாரதிய ஜனதா. மக்கள் பணி ஆற்றுவதற்காக சுயநலம் இல்லாமல் பணியாற்ற நான் பாரதிய ஜனதாவில் இணைந்து உள்ளேன்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தந்தை எம்.பி.யாக இருந்தால் மகன் எம்.எல்.ஏ.வாக இருப்பார். என்னைப் பொறுத்தவரை சாமானிய மக்கள் பதவிக்கு வர வேண்டும். நான் சாமானிய பெண். ஆனால் என்னை உயர்த்த காங்கிரஸ் கட்சி நினைக்கவில்லை.

    அதே நேரம் அவர்களது குடும்ப வாரிசுகளை தலைவர் ஆக்குவார்கள். வாரிசுகள், அதிகாரம், பணம் இருப்பவர்கள் காங்கிரசில் இருக்க முடியும். ஆனால் சாமானிய மக்களால் பாரதிய ஜனதாவில் இருக்க முடியும்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியிலும் வாரிசுக்கு தான் சீட்டு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இந்த 3 ஆண்டுகளில் ஏதாவது பணிகள் நடந்து இருக்கிறதா? எதுவும் செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு மோடி தான் வரப்போகிறார். எனவே அதற்கு ஏற்றார் போல் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் ஒருவர் வர வேண்டும்.

    இங்கிருந்து 2014-ல் 39 எம்.பி.க்கள் சென்றார்கள். அவர்கள் சென்று என்ன பிரயோஜனம். எதுவும் இல்லை. பாராளுமன்ற வாசலில் போராட்டம் நடத்தி விட்டு வந்து விடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு எதுவும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.

    மத்தியில் ஆளக்கூடிய கட்சி இங்கும் வெற்றி பெற வேண்டும். இங்கு வெற்றி உறுதி செய்யப்பட்டால் தான் மக்களுக்கு இன்னும் பலன்கள் கிடைக்கும். இந்த முறை களம் பெரிய அளவில் மாறி இருக்கிறது. தமிழ்நாட்டில் அந்த மாற்றமும் ஏற்றமும் பாரதிய ஜனதாவை உயர்த்தி பிடிக்கும். அதை நாங்கள் உறுதியாக எடுத்து செல்வோம்.

    தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் வெளியே போய்விடுகிறார்கள். விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்டீர்கள்? ஆனால் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட போவதில்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை முடிவு செய்தால் போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநிலச் செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை.
    • மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    சென்னை செங்குன்றத்தில் பா.ஜனதா சார்பில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பா.ஜனதா நிர்வாகியுமான நடிகை குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார்.

    குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதாஜீவனும், நடிகை குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது:-

    நடிகை குஷ்பு முதலமைச்சர் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை பற்றி மிக இழிவாக பேசி இருக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையை பிச்சை போடுவதாக இழிவுபடுத்தி உள்ளார்.

    உரிமைத்தொகையை பெறுகின்ற ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் இழிவுபடுத்தி பேசி இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை நிலையை அறியாதவர் அவர் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

    குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய-நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா?. அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் (குஷ்பு) அறிவீர்களா?. ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கை பார்த்து பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை. உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும்.இந்த ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்துக்காக, மருத்துவ செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக என எத்தனையோ பேருக்கு பலன் தருகிறது.

    இதனை சிலர், 'முதலமைச்சர் எனக்கு தரும் சீர்' என சொல்கிறார்கள். சில தாய்மார்கள், 'என் பிள்ளைகள் என்னை பார்த்து கொள்ளாவிட்டாலும் மகராசன் முதலமைச்சர் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னை பார்த்து கொள்கிறார்' என சொல்கிறார்கள்.

    நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படியெல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக இதற்காக உங்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களை பார்த்து கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.
    • பா.ஜ.க.-வை சேர்ந்த குஷ்பு தேர்தலில் போட்டியிடுவது குறித்து பதில் அளித்துள்ளார்.

    வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்த போது, பாராளுமன்றத்தில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "கமல்ஹாசனுக்கு மாநிலங்களவையில் ஒரு சீட் கொடுத்துள்ளார்கள். தி.மு.க.வில் பிரசாரம் செய்வதற்கு யாரும் இல்லை. தி.மு.க.வுக்கு கமல்ஹாசன் போன்ற முகம் பிரசாரம் செய்வதற்கு தேவை. அதைத் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைத்துள்ளார். கூட்டத்திற்காக முதலமைச்சருக்கு கமல்ஹாசன் தேவையா?"

    "பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா எங்கு நிற்க சொன்னாலும், நிற்பேன். நாடு முழுக்க பிரசாரம் செய்ய சொன்னாலும் முழுவீச்சில் பிரசாரம் செய்வேன்," என்று தெரிவித்தார்.  

    • பிரதமர் யார் என்பதை முடிவு செய்து மக்கள் வாக்களிக்கப் போகும் தேர்தல்.
    • காங்கிரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா களம் இறக்கப் போகும் வேட்பாளர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் பற்றி கட்சி மேலிடம் பரிசீலித்து வருகிறது.

    இதில் நடிகை குஷ்பு பெயரும் இடம் பெற்றுள்ளது. சென்னையில் அவரை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர். தென் சென்னை அல்லது மத்திய சென்னை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

    இது பற்றி குஷ்புவிடம் கேட்ட போது, எனக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு தேர்தலிலும் இப்படி பெயர் அடிபடுவது வழக்கமானதுதான். கட்சி என்ன சொல்கிறதோ அதை செய்வேன் என்றார்.

    இந்த தேர்தல் நாடு சந்திக்கும் வித்தியாசமான தேர்தல். பிரதமர் யார் என்பதை முடிவு செய்து மக்கள் வாக்களிக்கப் போகும் தேர்தல்.

    அடுத்ததாக காங்கிரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்.

    1967-க்கு பிறகு மத்தியில் ஆட்சியில் இருந்தும் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளில் தங்களுக்கு யார் சாதகமாக இருப்பார்களோ அவர்கள் மீது சவாரி செய்து பழக்கப்பட்டு விட்டது.

    இந்த தேர்தலில் ஏற்கனவே கையில் இருக்கும் தொகுதிகளையாவது தாருங்கள் என்று தி.மு.க.விடம் கையேந்தும் நிலைக்கு வந்துள்ளது. இந்த தேர்தலோடு காங்கிரசை மக்கள் கை கழுவி விடுவார்கள்.

    போதை பொருள் புழக்கத்தில் தமிழகம் முதலிடத்துக்கு வந்து விட்டது. ஆனால் அரசு போதையில் மயங்கி கிடக்கிறது.

    ரூ.3500 கோடி போதை பொருள் கடத்தலில் தி.மு.க. துணையோடுதான் ஈடுபட்டுள்ளார்கள். எனவே மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • தனது தவறுக்கு வருந்துவதாகவும், மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்கும்படி கூறி கேட்டிருந்தார்.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வந்தவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

    இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அதனை தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டிஸ்மிஸ் செய்து பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சியில் சேர்க்குமாறு தி.மு.க. தலைமைக்கு கடிதம் கொடுத்தார். அதில் தனது தவறுக்கு வருந்துவதாகவும், மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்கும்படி கூறி கேட்டிருந்தார்.

    அதை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் கழக உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    • இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார்.
    • பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் குஷ்பு. பாரதிய ஜனதா கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் குஷ்பு நேற்று முன்தினம் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார். சந்திப்பின்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி முர்முவுடன் குஷ்பு விவாதித்துள்ளார். ஜனாதிபதி முர்முவை சந்தித்த புகைப்படங்களை குஷ்பு தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

    • நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
    • மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அவரது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.

    நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டி, நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.


    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அவரது வழக்கை தள்ளுபடி செய்து உத்தர விட்டிருந்தார். இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தி, அதுகுறித்து தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இந்த தொகையை செலுத்த கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது.


    இந்த நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அபராத தொகையை செலுத்துவதாக தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு, கால அவகாசமும் பெற்று விட்டு, தற்போது அதனை எதிர்த்து எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும் என்று கேள்வி எழுப்பி, தனி நீதிபதி உத்தரவிற்கு தடைவிதிக்க மறுத்தனர்.

    அந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தனி நீதிபதி முன் வலியுறுத்தலாம் அல்லது பணத்தை கட்ட முடியுமா? முடியாதா? என்று தெரிவிக்கலாம் என்று மன்சூர் அலிகான் தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை பிப்ரவரி 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    • தமிழகத்தை பொறுத்தவரை இந்த முறை கணிசமான அளவுக்கு எம்.பி.க் கள் ஜெயிக்க வேண்டும் என்று டெல்லி மேலிடம் விரும்புகிறது.
    • ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள பிரபலங்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    தேர்தல் காலங்களில் கூட்டணிகள் உறுதிப்படுத்தப்பட்டு வேட்பாளர்கள் அறி விக்கப்பட்ட பிறகுதான் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்படும்.

    ஆனால் இந்த முறை பா. ஜனதாவில் வேட்பாளர் பட்டியல் வரும் பின்னே. அலுவலகங்களை திறக்க வேண்டும் முன்னே என்ற ரீதியில் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகத்தை உடனே திறக்கும்படி டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி எல்லா தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகங்கள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் திருநெல்வேலி தொகுதிக்கான அலுவலகம் திறக்கப்பட்டது.

    இன்று தென்சென்னை பாராளுமன்ற தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனை வேளச்சேரியில் ராம் நகர் 6-வது மெயின் ரோட்டில் இன்று திறக்கப்பட்டது. அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் கரு.நாகராஜன், இணை அமைப்பாளர் கராத்தே தியாகராஜன், பொறுப்பாளர் பாஸ்கர், இணை பொறுப்பாளர் முனியசாமி, மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய் சத்யன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தை பொறுத்தவரை இந்த முறை கணிசமான அளவுக்கு எம்.பி.க் கள் ஜெயிக்க வேண்டும் என்று டெல்லி மேலிடம் விரும்புகிறது. அதற்கு ஏற்ற வகையில் வேட்பாளர்களையும் தேர்வு செய்கிறார்கள்.

    தென்சென்னையில் போட்டியிட கரு.நாகராஜன், திருப்பதி நாராயன், ரமேஷ் சிவா, எஸ்.ஜி.சூரியா உள்பட சிலர் விருப்பம் தெரிவித்து உள்ளார்கள்.

    ஆனால் டெல்லி மேலிடம் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள பிரபலங்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தென்சென்னை தொகுதியில் நடிகை குஷ்பு களம் இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அவருடைய பெயரும் பரிசீலனை பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி குஷ்புவை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:-

    எனக்கு எதுவும் தெரியாது. எப்படியாவது கட்சி வெற்றி பெற ணே்டும் என்பதே எல்லோரது எண்ணம். தமிழ்நாட்டில் இருந்தும் பா.ஜனதா எம்.பி.க்கள் பலர் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி ஆசைப்படுகிறார். அதற்காகத்தான் எல்லோரும் உழைக்கிறோம். கட்சி என்ன கட்டளையிடுகிறதோ அதை செய்ய வேண்டியதுதான் எங்கள் கடமை என்றார்.

    • குஷ்பு தனது மாமியாருடன் விளையாட்டரங்கம் வந்திருந்தார்.
    • மோடியின் நெற்றியில் குங்குமம் வைத்து தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்.

    சென்னை:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோவிலுடன் தொடர்புடைய கோவில்களுக்கு பிரதமர் மோடி சென்று வருகிறார்.

    இதற்காக 11 நாள் கடுமையான விரதமும் இருந்து வருகிறார். இது ஆன்மீக உணர்வுடையவர்கள் மத்தியில் மோடி மீது மரியாதையை ஏற்படுத்தி உள்ளது.

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்புவின் மாமியார் தெய்வானை சிதம்பரம் பிள்ளை (கணவர் சுந்தர்.சி.யின் அம்மா).

    92 வயதாகும் தெய்வானை குஷ்புவுடன் வசித்து வருகிறார். அவர் ராம பக்தையும் ஆவார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்காக பிரதமர் மோடியை சந்தித்து பாராட்ட வேண்டும். வாய்ப்பு கிடைக்குமா? என்று மருமகள் குஷ்புவிடம் அடிக்கடி கேட்டுள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு குருவாயூரில் நடிகர் சுரேஷ்கோபி மகள் திருமணத்துக்கு மோடி சென்றிருந்தார். அங்கு மோடியை சந்தித்த குஷ்பு தனது மாமியாரின் ஆசை பற்றி தெரிவித்துள்ளார்.

    நேற்று மோடி சென்னை வந்ததால் குஷ்பு முன் கூட்டியே பிரதமர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி அனுமதி கேட்டு உள்ளார்.

    நேரு விளையாட்டரங்கில் சந்திப்பதற்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள். இதற்காக குஷ்பு தனது மாமியாருடன் விளையாட்டரங்கம் வந்திருந்தார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த பிறகு அங்கிருந்த பசுமை அறையில் வைத்து தெய்வானையை சந்தித்து உள்ளார்.

    இந்த சந்திப்பின்போது 'மோடியை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த தெய்வானை அவரது கைகளை பற்றியபடி ராமர் கோவில் கட்டிய உங்களை கடவுள் மாதிரி பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதை கேட்ட மோடி பெரியவர்கள் நீங்கள் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. நான் சாதாரண மனிதன். ராமர் கோவில் கட்ட கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.

    அதை கேட்ட தெய்வானை இந்த உலகம் உள்ளளவும் உங்கள் புகழும் நிலைத்து இருக்கும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு மோடியும் நன்றி தெரிவித்துள்ளார்.

    அப்போது தங்கள் குலதெய்வம் கோவில் குங்குமத்தை கையில் வைத்திருந்த தெய்வானை அதை சொல்லி நீங்கள் வாங்குவீர்களா? என்று கேட்டுள்ளார்.

    அதை கேட்டதும் உங்களை போன்றவர்களின் ஆசிதான் எனக்கு தேவை என்றவர் அவரையே தனது நெற்றியில் வைக்கும்படி கேட்டுக்கொண்டார். உடனே மகிழ்ச்சியுடன் மோடியின் நெற்றியில் குங்குமம் வைத்து தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்.

    5 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த சந்திப்பின்போது தெய்வானை தமிழில் பேசியதை குஷ்பு இந்தியில் மொழி பெயர்த்து மோடிக்கு தெரிவித்துள்ளார்.

    • திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் இவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.


    இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும் விளம்பர நோக்கத்திலும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால் பெரும் தொகையான இந்த ஒரு லட்சம் ரூபாயை செலுத்துவதற்கு பத்து நாட்கள் மேலும் அவகாசம் வேண்டும் என்று மன்சூர் அலிகான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைகேட்ட நீதிபதி ஒருவரை பற்றி கருத்து தெரிவிக்கும் முன்பு அதனால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்து 10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 5-ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    • புத்தாண்டு நிச்சயம் பல புதுமைகளை தாங்கி வரும். 3-வது முறையாக பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள்.
    • மாற்றத்தை மோடியால் மட்டுமே தர முடியும். இந்தியா கூட்டணி ஏமாற்றத்தையே பெறும்.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    பிறக்கும் புத்தாண்டில் அனைவரும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ இறைவன் அருள் புரியட்டும்.

    புத்தாண்டு நிச்சயம் பல புதுமைகளை தாங்கி வரும். 3-வது முறையாக பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள். அவரது தலைமையில் நாடு மேலும் புதிய உச்சத்தை நோக்கி செல்லும்.

    இந்தியா கூட்டணி இந்த ஆண்டுடன் முடிவுக்கு வரும். மம்தா பானர்ஜி காங்கிரசின் செல்வாக்கு தெரிந்துவிட்டது. எங்களால் மட்டும்தான் பா.ஜனதாவை எதிர்க்க முடியும் என்று பகிரங்கமாக கூறி உள்ளார்.

    சமாஜ்வாடி கட்சியும் காங்கிரசை தூக்கி சுமக்க தயாரில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் தி.மு.க.வை நம்பி இருக்கிறது. எப்படியாவது கடந்த தேர்தலில் பெற்றதை விட கூடுதல் 'சீட்' கேட்போம். கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.

    வட மாநில தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி தி.மு.க.வும் 'செக்' வைக்கும். இவர்கள் கை கட்டி நின்றாலும் சரி. கையேந்தி கேட்டாலும் சரி தி.மு.க. அதிக தொகுதிகள் கொடுக்கப்போவதில்லை.

    மின்சார கட்டணம் ஒவ்வொரு குடும்பத்தையும் 'ஷாக்' அடித்தது போல் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர்கள் மட்டும் சம்பாதிக்கிறார்கள். மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடுகிறார்கள்.

    இன்னும் தண்ணீரில் இருந்து தென் மாவட்ட மக்கள் மீளவில்லை. வரட்டும் தேர்தல் என்று காத்திருக்கிருக்கிறார்கள்.

    நடக்கப் போவது பாராளுமன்ற தேர்தல், நாட்டை பாதுகாக்க வேண்டிய தேர்தல். யாரால் நாட்டை காக்க முடியும் என்பதை மக்கள் அறிவார்கள்.

    எங்களை பொறுத்தவரை பிரதமர் மோடி முகம் மட்டும்தான் இந்தியா கூட்டணியில் யார் முகத்தை காட்டி ஓட்டு கேட்பார்கள்? உலக அளவில் 78 சதவீத ஆதரவை பெற்று உலக தலைவர்களில் முதலிடத்தில் இருக்கும் மோடியா? நாட்டில் நிராகரிக்கப்பட்ட ராகுலா? என்பதை மக்கள் சீர்தூக்கி பார்த்தே வாக்களிப்பார்கள். மாற்றத்தை மோடியால் மட்டுமே தர முடியும். இந்தியா கூட்டணி ஏமாற்றத்தையே பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய்காந்த் மறைவு செய்தி கேட்டு நாங்கள் அதிற்ச்சியுற்றோம்.
    • மிகவும் வேதனையும் , வருத்தமும் அடைந்தோம்.

    90-களிம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 'கேப்டன்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

    நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், நடிகர் நெப்போலியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலகில் வாழும் அனைத்து தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது பணிவான வணக்கம்..!

    தேமுதிகவின் தலைவரும் , கேப்டன் என நம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் , நமது அன்பு அண்ணன் திரு விஜய்காந்த் அவர்கள் மறைவு செய்தி கேட்டு நாங்கள் அதிற்ச்சியுற்றோம்..! மிகவும் வேதனையும் , வருத்தமும் அடைந்தோம்..!! அன்பு சகோதரி குஷ்பு அவர்களும், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா அவர்களும் எனக்கு தொலைபேசியில் அழைத்து அண்ணன் விஐய்காந்த் அவர்களின் மறைவு குறித்து தகவல் சொன்னார்கள்…!!

    இன்னும் அதிக நாள் இருந்து திரைப்படத் துறைக்கும், நமது நாட்டிற்கு நிறைய செய்யவேண்டிய ஒரு நல்ல நடிகரையும், ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்துவிட்டோம்…! அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் என, எண்ணிலடங்காத செயல்களை எல்லாம் , அவருடன் , நண்பர் சரத்குமார் அவர்களும் , நானும் உடன் இருந்து கடினமாக உழைத்து , வெற்றி கண்டு கடந்து வந்த பாதைகளை எல்லாம் , எங்களால் என்றும் , எதையும் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலாது ..!



    கடந்த ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்த போது , அவரை சந்திக்க அனுமதி கேட்டு, அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து உடல் நலம் விசாரித்தது, மகிழ்வோடு பழைய நினைவுகளை எல்லாம் பேசி அவரை மகிழ்வித்தது , இன்றும் எனது மனதில் நேற்று நடந்தது போல இருக்கிறது…! வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நல்ல மனிதர்..!!

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அவரது நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்களையும் , வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்…!! அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்..!! " என்று குறிப்பிட்டுள்ளார்.

    ×