என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "geetha jeevan"

    • விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி கூறினார்.
    • தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளும் காலை உணவு சாப்பிட வேண்டும் என கூறினார்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அங்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் காலை உணவு சமைத்து வழங்குகிறார்.

    அங்கு பயிலும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலான குழந்தைகளை காலை உணவு சாப்பிட வேண்டாம் என்று பெற்றோர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் கிடைத்ததும் வருவாய்துறை, ஊராட்சி துறை, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பெற்றோர்கள் ஏற்க மறுத்தனர்.

    இதனை அறிந்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று உசிலம்பட்டி பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். காலை உணவையும் சாப்பிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர், காலை உணவு திட்ட சமையலர், மாணவ-மாணவிகள் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், ''உசிலம்பட்டியில் உள்ள சிலருக்கும், காலை உணவு திட்ட சமையலருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காலை உணவு சாப்பிட அனுமதிக்க மறுத்து வருகின்றனர். இதுகுறித்து குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும்'' என்றார்.

    இந்நிலையில் சம்பந்தப்படட அந்த பள்ளியில் இன்று கனிமொழி எம்.பி., ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். தொடர்ந்து கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர். தொடர்ந்து கிராம பொதுமக்களிடம் தங்களின் அடிப்படை பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.

    பொதுமக்கள் சாலை வசதி, வாறுகால்வசதி, தார்ச்சாலை வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி கூறினார். மேலும் காலை உணவு மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ள திட்டம். எனவே தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளும் காலை உணவு சாப்பிட வேண்டும் என கூறினார்.

    அப்போது கிராமமக்கள் கூறுகையில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம். எந்த வேறுபாடும் இல்லை. எனவே தொடர்ந்து மாணவ-மாணவிகள் காலை உணவுதிட்டத்தில் சாப்பிடுவார்கள் என்றனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மேயர் ஜெகன் பெரியசாமி, எட்டயபுரம் பேரூராட்சிமன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர் நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • உலக இருதய தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பொதுமக்கள் சத்தான பழங்கள் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடி:

    உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற நடைபயிற்சி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் முன்பாக இருந்து தொடங்கி மீன்பிடி துறைமுகம், இனிகோநகர், ரோஜ்பூங்கா, படகு குழாம் ஆகிய பகுதிகளை கடந்து மீண்டும் அதே வழியில் மாதா கோவில் முன்பு வந்து நிறைவடைந்தது.

    இதில் தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், நகர போலீஸ் டி.எஸ்.பி.சத்யராஜ், மாநகராட்சி அலுவலர்கள் அதிகாரிகள் மண்டல தலைவர்கள் ராமகிருஷ்ணன், விஜயகுமார், பச்சிராஜ் உள்ளிட்ட மாநகர கவுன்சிலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அங்கு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதய மருத்துவ பிரிவு சார்பாக உலக இருதய தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி சிவக்குமார் தலைமை வகித்தார். இயக்குனர் செல்வவிநாயகம் உறைவிட மருத்துவர் சைலஸ் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் முன்னிலை வகித்தனர், பேரணியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினர்.

    அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:-

    முதலமைச்சர் உத்தரவுபடி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் மக்கள் நலன்கருதி இதுபோன்று 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இங்கு இந்த கடற்கரை சாலை இருபுறமும் கடல்நீருடன் மரங்கள் அடங்கிய ரம்மியமான பகுதியாக உள்ளது. இந்த திட்டத்தை அக்டோபர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சியை மேற்கொள்கிறார்.

    இரண்டாயிரம் ஆண்டில் உலக இருதய தினம் கடைபிடிக்கப்பட்டு இன்று 23-ம் ஆண்டு நடைபெறுகிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் நடைபயிற்சி தற்போது உள்ள சூழ்நிலையில் அவசியம் தற்போது குறைந்த வயதில் மாரடைப்பு ஏற்படுகிறது. நமது உணவு பழக்கவழக்கங்களிலும் அதை முறையாக கடைபிடிக்க வேண்டும். நோயற்ற வாழ்வு தான் நமக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் தமிழக கிராமப்புறங்களில் 10999 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாரடைப்பு மரணத்தை தவிர்க்கும் வகையில் முதல்கட்ட சிகிச்சையாக 14 வகையான மாத்திரைகள் வழங்கப்பட்டு பல உயிர்கள் காக்கப்படுகின்றன. இதுபோன்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்த துறை முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு செயல்படுகிறது

    நான் இங்கு 8 கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டேன். ஆனால் நான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து நடந்து 13½ கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டு உள்ளேன். தினசரி இதுபோன்று நான் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

    இதனால் மூன்று வேளையும் பிடித்த உணவுகளை சாப்பிடுகிறேன். பொதுமக்கள் சத்தான பழங்கள் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். புரோட்டா, பர்கர் உள்ளிட்டவைகளை அதிகம் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும் தினசரி நடப்போம் நலம் பெறுவோம் என்று கூறினார்.

    அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், மக்கள் நலன் தான் முக்கியம் என்ற அடிப்படையில் செயல்படும் முதலமைச்சரின் சிறப்பான பணிகளின் மூலம் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் வகையில் நடைபயிற்சி அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. அதே போல் இதயம் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெறுகிறது. உணவு வகைகள் கட்டுப்பாட்டுடன் சத்தான உணவுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். என்று பேசினார். பின்னர் பசுமையை வலியுறுத்தி மரக்கன்று நட்டனர்.

    • நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை.
    • மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    சென்னை செங்குன்றத்தில் பா.ஜனதா சார்பில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பா.ஜனதா நிர்வாகியுமான நடிகை குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார்.

    குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதாஜீவனும், நடிகை குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது:-

    நடிகை குஷ்பு முதலமைச்சர் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை பற்றி மிக இழிவாக பேசி இருக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையை பிச்சை போடுவதாக இழிவுபடுத்தி உள்ளார்.

    உரிமைத்தொகையை பெறுகின்ற ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் இழிவுபடுத்தி பேசி இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை நிலையை அறியாதவர் அவர் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

    குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய-நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா?. அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் (குஷ்பு) அறிவீர்களா?. ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கை பார்த்து பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை. உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும்.இந்த ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்துக்காக, மருத்துவ செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக என எத்தனையோ பேருக்கு பலன் தருகிறது.

    இதனை சிலர், 'முதலமைச்சர் எனக்கு தரும் சீர்' என சொல்கிறார்கள். சில தாய்மார்கள், 'என் பிள்ளைகள் என்னை பார்த்து கொள்ளாவிட்டாலும் மகராசன் முதலமைச்சர் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னை பார்த்து கொள்கிறார்' என சொல்கிறார்கள்.

    நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படியெல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக இதற்காக உங்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களை பார்த்து கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

    • கலைஞர் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவது தலைவருக்கான அழகல்ல.
    • மாற்றி மாற்றி பேசும் சீமான் தனது மனநிலையை பரிசோதித்து கொள்வது நல்லது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 70 ஆண்டுகள் தமிழ்நாட்டில் இருந்த சிறந்த ஆளுமை என கலைஞரை புகழ்ந்த சீமானே இப்போது கலைஞர் குறித்து அவதூறாக பேசுகிறார்.

    * அடுக்குமொழியில் பேசி தமிழ் சமூகத்தை சீமான் தவறாக வழிநடத்துகிறார்.

    * கருத்துரிமை என்கிற பெயரில் உண்மைக்கு புறம்பாக பேசுவதை ஏற்க முடியாது.

    * கலைஞர் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவது தலைவருக்கான அழகல்ல.

    * சீமான் ஒரு அரசியல் அரைவேக்காடு, பச்சோந்தி.

    * இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சாத்தானுடைய பிள்ளைகள் என சீமான் பேசியிருந்தார்.

    * சட்டம், ஒழுங்கு பிரச்சனை, சாதி, மத ரீதியான பிரச்சனை உருவாக்குவதாகவே அவரது பேச்சு உள்ளது. அவரது பேச்சை திமுக வன்மையாக கண்டிக்கிறது.

    * மாற்றி மாற்றி பேசும் சீமான் தனது மனநிலையை பரிசோதித்து கொள்வது நல்லது என்று கூறினார்.

    • மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து விமர்சித்தும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் வகையிலும் பேசுகிறார்.
    • தலைவரின் கண் அசைவுக்காகத்தான், கட்சி தொண்டர்கள் பொறுமை காக்கிறார்கள்.

    தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது,

    மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த சீமானின் பேச்சை திமுக வன்மையாக கண்டிக்கிறது. தலைவர் கலைஞர் குறித்து தமிழ் மக்கள் நன்கு அறிவர்.

    தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர். இளைஞர்களுக்காக முதல் தலைமுறை பட்டதாரி திட்டம், கல்வி கடன் ரத்து, நுழைவு தேர்வு ரத்து, கணினி கல்வி வளர்ச்சி என அவர் கொண்டு வந்த திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

    அவரை பற்றி இழிவாக பேசுவதை திமுக கண்டிக்கிறது. கட்சி தலைவர் என்பவர், ஆதரவாளர்களோ நிர்வாகிகளோ தவறாக பேசும் போது கண்டிக்க வேண்டும். மாறாக தலைவர் கலைஞர் குறித்து பேசும் போது இவர் சிரித்து கொண்டு இருக்கிறார். அவர் வழி நடத்த தெரியாத நிலையில் இருக்கிறார்.

    நமக்கு முன்பாக ஒன்று பேசுகிறார். பின்பு அந்த கருத்தை மாற்றி பேசுகிறார். கலைஞர் ஓய்வின்றி உழைப்பவர் எனவும், ஆளுமை எனவும் கலைஞர் மறைவின் போது தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். தற்போது வேறு விதமாக பேசுகிறார்.

    திமுக தொண்டர்களை பொறுத்தவரையிலும், தற்போதைய தலைவரின் கண் அசைவுக்காகதான் காத்திருக்கிறார்கள். பொறுமையாக இருக்கிறார்கள். ஆளுங்கட்சியில் இருக்கிறோம். முதலமைச்சராக தலைவர் பொறுப்புடன் இருக்கிறார். ஆகவே பொறுமையாக இருக்கிறோம்.

    அவதூறு குற்றச்சாட்டு சொல்லும் போது கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை., 'சீமான் கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் சாதி பேரை சொல்லி இழிவாக பேசுகிறார்' என, அருண் என்பவர் புகார் அளித்ததன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

    ஆனால் கருத்துரிமை பறிக்கப்படுவதாக சீமான் சொல்கிறார். பட்டியலின பட்டியலில் 15வது இடத்தில் அந்த சொல் இருப்பது சீமானுக்கும் தெரியும். திரைப்படத்தில் இந்த சொல்லை பயன்படுத்தியதற்காக சீமான் சில ஆண்டுகளுக்கு முன்பு வருத்தம் தெரிவித்ததை அனைவரும் அறிவார்கள். ஆனாலும் வாய்க்கு வந்தது போல் பேசி இருக்கிறார்கள். மீண்டும் அதே கருத்தை பேசி கைது செய்து பாருங்கள் என சீமான் பேசுவது, ஒரு தலைவருக்கான பண்பு இல்லை.

    சாதி, மத ரீதியிலான பிரச்சினைகளை உருவாக்கும் வகையில் சீமானின் பேச்சு இருக்கிறது. "நாமெல்லாம் தேவனுடைய பிள்ளைகள் என நினைக்கிறோம். ஆனால் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் ஆகி நீண்டகாலம் ஆகி விட்டது" என ஒரு அறிக்கையில் பழி சொல்லி பேசி இருக்கிறார்.

    துாய்மை பணியாளர்கள் எல்லாம் தெலுங்கில் இருந்து வந்தவர்கள் என பேசி இருக்கிறார். தமிழ், தமிழ்குடி என பேசும் இவர்கள் எப்படி சாதி பெயர் சொல்லி இழிவாக பேசுகிறார்கள்? சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் வகையில் அவர் பேசுவதை திமுக கண்டிக்கிறது.

    இன்று ஒன்று பேசுகிறார். அடுத்தாண்டு மாற்றி பேசுகிறார். ஆகையால் அவரது மனநிலையை சோதித்து கொள்ள வேண்டும்.

    தனிப்பட்ட முறையில் தவறான சொற்களை பயன்படுத்தி சீமான் பேசுவது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் வகையில் அமைகிறது. இது ஏற்கதக்கதல்ல. நடைமுறைக்கு சாத்தியமில்லாததை அடுக்கு மொழியில் பேசி தமிழ் சமுகத்தை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறார்.

    கட்சி நடத்த எங்கிருந்து அவர் பணம் வாங்குகிறார் அனைவருக்கும் தெரிய வாய்ப்புள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி உலகளவில் நன்கொடையை பெற்று வருகிறார்.

    தமிழ்நாட்டில் திமுக எதிர்ப்பை காட்டிக் கொள்வதற்காக திமுகவையும், தலைவரையும் அவதூறாக பேசுவதாக தெரிகிறது. சீமான்

    நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல் அரைவேக்காடுத்தனமாக பேசக்கூடாது. அரசியல் முதிர்ச்சி இல்லாத தலைவராக தெரிகிறார்.

    பச்சோந்தி போல் ஒருநாள் ஒரு கருத்தை ஆதரித்தும், பின்பு எதிர்த்தும் பேசி வருகிறார். சீமான் அரசியல் தலைவருக்கே

    தகுதியானவர் அல்ல. எங்களது தலைவர் குறித்து பேச அவருக்கு அருகதை கிடையாது எனவும் கூறினார்.

    • இந்தி தெரிந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிக்கையால் சர்ச்சை வெடித்தது.
    • தவறுதலான அறிவிக்கையைப் பதிவேற்றிய இணை இயக்குநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

    மகளிர் உதவி கட்டுப்பாட்டு மைய விளம்பரத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி தெரிந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற தவறுதலான அறிவிக்கையைப் பதிவேற்றிய இணை இயக்குநர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும். சமூக நல ஆணையரகம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம், "மகளிர் உதவி எண்.181" சென்னையில் செயல்பட்டு வருகிறது. மகளிர் உதவி எண்.181 பணியிடத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெற்றிட tn.gov.h என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் "அழைப்பு ஏற்பாளர்" (Call Responders) roன்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

    இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்தவுடன், அவ்விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

    மேலும், தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தாய்மொழியாம் தமிழ் மொழியினை உயிருக்கும் மேலாய் மதிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. மாண்பமை நீதிமன்றம். ஒன்றிய அரசுடனான கடிதப் போக்குவரத்து போன்றவற்றிற்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

    தமிழ்த்தாய் வாழ்த்து, அய்யன் திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டமும், 133 அடியில் வானுயர சிலையும் அமைத்தது. உலகத் தமிழ் மாநாடு நடத்தியது. தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத் தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள் கொண்டதுதான் திராவிட முன்னேற்றக் கழக வரலாறு. தமிழர் பெருமை கூறும் கீழடி அருங்காட்சியகம் அமைத்து, உலகத்தின் பார்வையை நம் மீது திருப்பியது அண்மைக் கால வரலாறு. மேலும், அரசுப்பணிகளில் தமிழ் மொழியில் பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்ட அரசு, நமது திராவிட மாடல் அரசு.

    தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது என தமிழ்மொழி வளர்ச்சிக்கான இவ்வரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

    ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் மக்கள் ஏமாறப் போவதில்லை.

    நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சியில், தமிழ் மொழி மென்மேலும் சிறப்புகள் பெற்று வளர்ந்து வருகிறது. இதனைக் காண சகிக்காதவர்கள் தான் இப்போது கூக்குரல் இடுகிறார்கள். அதனை புறம் தள்ளி, எங்கள் தாய்மொழியாம் தமிழ் வழி பயணத்தை சிறப்புற தொடர்வோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மீண்டும் ஒருமுறை, பள்ளிக் குழந்தைகளுக்கு, மதிய உணவில் அழுகிய முட்டைகளை வழங்கியிருக்கிறது Disaster model திமுக அரசு.
    • உணவில் தரமற்ற முட்டைகளை வழங்கி குழந்தைகள் உயிருடன் விளையாடிக் கொண்டிருப்பதை அழுகிய முட்டை அமைச்சர் கீதா ஜீவன் உணர வேண்டும்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    மீண்டும் ஒருமுறை, பள்ளிக் குழந்தைகளுக்கு, மதிய உணவில் அழுகிய முட்டைகளை வழங்கியிருக்கிறது Disaster model திமுக அரசு. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதி பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது, தமிழகப் பள்ளிகளில் இது நிகழ்கிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக, பாரதப் பிரதமர் மோடி அரசு வழங்கும் நிதி, எங்கு செல்கிறது?

    பள்ளிகளில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள், அரசு முத்திரையோடு கடைகளில் விற்கப்படுவதாகச் செய்திகளைப் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கு தரமற்ற முட்டைகள் கொடுக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் பொறுப்பான அழுகிய முட்டை அமைச்சர், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    உணவில் தரமற்ற முட்டைகளை வழங்கி, குழந்தைகள் உயிருடன் விளையாடிக் கொண்டிருப்பதை, அழுகிய முட்டை அமைச்சர் கீதா ஜீவன் உணர வேண்டும். இனியும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால், திமுக அரசுக்கு, பெற்றோர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அண்ணாமலை அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • மாணிக்கம் மகாலில் நடைபெறும் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.
    • புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி வருகிறார்.

    இதுதொடர்பாக தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகிறார். அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள நியோ டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார்.

    மாலை 5 மணிக்கு மாணிக்கம் மகாலில் நடைபெறும் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    நிகழ்ச்சி முடித்து காமராஜர் சாலை, போல்டன்புரம், தேவர்புரம் ரோடு, தென்பாகம் போலீஸ் நிலையம், பாளையங்கோட்டை ரோடு, 3-வது மைல் வழியாக சத்யா ரிசாட் செல்கிறார்.

    மறுநாள் (திங்கட்கிழமை) காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, காமராஜ் கல்லூரியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சி முடிந்து சிவந்தாகுளம் ரோடு, பக்கிள்புரம், புதுகிராமம், வி.இ.ரோடு, அண்ணா சாலை, பாளையங்கோட்டை ரோடு வழியாக கன்னியா குமரி புறப்பட்டு செல்கிறார்.

    எனவே அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கருணாநிதி பிறந்தநாள் விழா ஜூன் மாதம் முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பா ளரும், சமூகநலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவிற்கு 50 மின் விசிறிகள் மற்றும் 4 வாட்டர் ஹீட்டர்களை வழங்கினார்.

    இதில், மாநகரட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மருத்துவமனை டீன் நேரு, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துமனை கண்காணிப்பாளர் டாக்டர் குமரன்,  மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், துணை அமைப்பாளர் பெருமாள், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவிந்திரன், கவுன்சிலர் விஜயலட்சுமி,

    மாவட்ட பிரதிநிதி கதிரேசன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடந்து அமைச்சர் கீதாஜீவன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கழிவு நீர் வெளியேறும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக வரலாற்றில் இடம்பெற்ற தலைவருமான கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி கொண்டாடப்பட்ட உள்ளது. 3-ந் தேதி கலைஞரின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக அனைத்து துறைகளும் தயாராகி வருகிறது. தி.மு.க சார்பிலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் ஜூன் மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    விளாத்திகுளம் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற உழைக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசினார்.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலை, எப்போதும்வென்றான் மற்றும் பசுவந்தனை ஆகிய இடங்களில் ஒட்டப்பிடாரம் கிழக்கு தி.மு.க ஒன்றியம் சார்பில் தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ தலைமை தாங் கினார்.

    இதில் விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய ஊராட்சி கழக செயலாளர் கள், நிர்வாகிகள் ஒருங் கிணைந்து செயல்பட வேண் டும். இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வர இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகளை இப் போதே  செயல்படுத்த வேண் டும்.
     இவ்வாறு எம்.எல்.ஏ பேசினார். 

    தொடர்ந்து தலைமை கழக பூத் கமிட்டி ஆய்வாளர் பூத் கமிட்டிகளை ஆய்வு செய் தனர். அப்போது தலைமை கழக பூத் கமிட்டி ஆய்வாளர் பல்லாவரம் எம்.எல்.ஏ கிரி, ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமூவேல், ஒன்றிய அவைத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சத்தியராஜ், ரவி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    கயத்தாறில் திமுக தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.கிழக்கு ஒன்றியம், இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரசாரகூட்டம் ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலைமையில் கயத்தாறில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காளிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு வருகைபுரிந்த அனைவரையும் கயத்தாறு பேரூர் இளைஞரணி அமைப்பாளர் அருண்பாண்டியன் வரவேற்றார்.

    கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கருப்பசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மோகன், மாவட்ட தொண்டரணி துணைஅமைப்பாளர்கள் செல்வகுமார். சுரேஷ்கண்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் பஹீர், நகர துணை செயலாளர் குருசாமிப்பாண்டியன், பேரூர் செயலாளர்கள் கிருஷ்ணகுமார், ராகவன், மாவட்ட பிரதிநிதி கொம்பையா, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அய்யாத்துரை,

    மாவட்ட பிரதிநிதி, பவுன்ராஜ், எட்டுராஜ், ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சந்தனமாரியம்மாள், ஒன்றிய வக்கீல் பிரிவு துணை அமைப்பாளர் மாரியப்பன் மற்றும் ஒன்றிய ,நகர நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய, நகர இளைஞரணியினர் செய்திருந்தனர்.

    தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் சொத்து வரி உயர்வை கண்டித்து நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி, வீட்டு வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.

    இந்த வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும என்று தமிழக அரசை வலியுறுத்தி நாளை(வெள்ளிக்கிழமை) மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்பேரில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் எனது(கீதாஜீவன் எம்.எல்.ஏ.) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதே போன்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

    இந்த ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய, பேரூர் பகுதி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    ×