search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல்"

    • பாம்பை பிடித்துக் கொண்டும், பிரசாரம் நடந்த பகுதியில் சுற்றி திரிந்தார்.
    • வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அவர் பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது அந்த கூட்டத்திற்கு வாலிபர் ஒருவர் வயல் வெளியில் சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றை பிடித்து கழுத்தில் போட்டுக்கொண்டு வந்தார். 2 கைகளிலும் பாம்பை பிடித்துக் கொண்டும், பிரசாரம் நடந்த பகுதியில் சுற்றி திரிந்தார். இதைக்கண்ட அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீசார் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


    ஆனால் அந்த வாலிபர் பிரசாரம் முடியும் வரை, அந்த பகுதியை சுற்றிச்சுற்றி வந்தார். டி.எம்.செல்வகணபதி தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்ற பிறகு தான் அந்த வாலிபரும் அந்த இடத்தில் இருந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதை அறிந்த மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பாம்புடன் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வந்த அந்த வாலிபரை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சேலம் தெற்கு வனச்சரகர் துரை முருகன் அந்த வாலிபர் யார்? என விசாரணை நடத்தியபோது பாம்புடன் பிரசார கூட்டத்திற்கு வந்தவர் கருப்பூர் பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார் (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன்.
    • கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மகனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    உங்கள் அண்ணன் மகனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும். 32 வயதில் படித்து முடித்துவிட்டு எத்தனையோ கனவுகள் இருந்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு தந்தையின் வழியில் மக்கள் சேவை செய்ய இந்த தொகுதியில் அவர் போட்டியிடுகின்றார். உங்கள் எல்லாருக்கும் தெரியும் தம்பிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. இந்த விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் இந்த தொகுதி மக்களின் தலைமையில் தான் அவருக்கு திருமணம் நடக்கும்.

    கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகவும் அனைத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இந்த தொகுதியில் தே. மு.தி.க. வெற்றி பெற்றவுடன் அவர் பல நல்ல திட்டங்களை இந்த தொகுதியில் அறிவித்து செயல்படுத்த உள்ளார். அதில் சிலவற்றை என்னிடம் கூறினார். அதை நான் உங்களிடம் கூறுகின்றேன்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கேப்டன் பிறந்தநாள் அன்று 60 பெண்களை தேர்வு செய்து பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தின் மூலம் எங்களது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க உள்ளார். ஆண்டுதோறும் 6 லட்சம் வீதம் 5 வருடத்தில் ரூ.30 லட்சம் வரை பெண்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளார்.

    தொகுதி முழுவதிலும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் தொடங்கப்படும். இலவச தையல் பள்ளிகள், இலவச நீட் கோச்சிங் சென்டர், படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு இலவச தையல் மிஷின்கள் வாங்கி கொடுத்து அவர்கள் வாழ்வாதாரம் உயர நடவடிக்கை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்தவும் கூலித் தொகையை ரூ.500 ஆக அதிகரிக்கவும் பாராளுமன் றத்தில் கோரிக்கை வைப்பார்.

    நமது வேட்பாளர் வயதில் சின்னவர் என்று நினைக்காதீர்கள். அவர் நல்ல அறிவாளி, உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். பல்வேறு மொழிகளை பேசும் திறமை கொண்டவர். பாராளுமன்றத்தில் உங்கள் பிரச்சனைகளை எழுப்பி அதற்கு தீர்வு காணும் வல்லமை அவரிடம் உள்ளது. குணத்திலும், பழகுவதிலும் கேப்டனின் மறு உருவம். 34 வருடம் கேப்டனுக்கு மனைவியாக வாழ்ந்தும், அவருக்கு தாயாக இருந்தும் சேவை செய்திருக்கிறேன். கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    இவர் அவர் பேசினார்.

    • இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் தெரிவித்தார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் மாவட்டம் முழுவதும் சென்று மக்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று அகஸ்தீஸ்வரம், காமராஜ் நகர், ராமன்புதூர், சந்தையடி, இலந்தையடிவிளை, சாமிதோப்பு, செட்டிவிளை, பொற்றையடி, வைகுண்டபதி, கொட்டாரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.

    பிரசாரத்தின் போது விஜய்வசந்த் பேசியதாவது:-

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு தந்த அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன். மேலும் இன்று (அதாவது நேற்று) எனது வாழ்வில் மிகவும் முக்கியமான நாள். எனது அன்பு தந்தை எச்.வசந்தகுமார் பிறந்த நாள் ஆகும்.

    எனது தந்தை விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர்வதற்கு அவர் மேல் வைத்திருக்கும் பாசத்தால் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    குமரி மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற என் தந்தையின் கனவை நிறைவேற்ற உங்களுக்காக இன்னும் பல பணிகள் செய்ய வேண்டும். இதற்காக நான் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறேன். மாவட்டத்தில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாராளுமன்ற உறுப்பினராக நான் வாங்கிய அனைத்து சம்பளப் பணத்தையும் கொடுத்துள்ளேன்.

    குமரி மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை நிறைவேற்றும் வகையில் எனது தந்தை தொடங்கி வைத்த வேலைவாய்ப்பு முகாமை தொடர்ந்து நடத்தி சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன். குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். எனக்கு நீங்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மாநகர மேயர் மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. எச்.வசந்தகுமாரின் 74- வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் குமரி மாவட்ட மக்களுடன் உரையாடுவது போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில்) தயாரிக்கப்பட்ட காணொலியை தமிழ்ச்செல்வி வசந்தகுமார் வெளியிட்டார். நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., சகோதரர் வினோத் குமார், காமராஜ், எச்.வசந்தகுமாரின் தங்கை வசந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ‘ரோடு ஷோ ’வில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கிறார்.
    • தேசிய தலைவர்கள் வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வைத்தி லிங்கம் எம்.பி.யும், அ.தி.மு.க. சார்பில் தமிழ் வேந்தனும் போட்டியிடுகின்றனர். இதனால் புதுச்சேரியில் மும்முனை போட்டி நிலவுகிறது.

    வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி தொகுதி வாரியாக வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

    அதுபோல் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்து வருகிறார்கள். தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அதுபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 30-ந் தேதி பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை 4 மணி அளவில் விமானம் மூலமாக புதுச்சேரிக்கு வருகிறார்.

    மாலை 6 மணி அளவில் அண்ணாசிலையில் இருந்து அஜந்தா சிக்னல் வரை 'ரோடு-ஷோ' செல்கிறார். இந்த 'ரோடு ஷோ 'வில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கிறார்.

    தேசிய தலைவர்கள் வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார்.
    • நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

    கோவை:

    கோவையில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், ஆவாரம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டு நபர்களுக்கு இடையே நடக்க கூடிய தேர்தல் அல்ல. இந்த தேர்தல் மூலமாகத்தான் நாம் நாட்டை காக்கப் போகிறோமா, கைவிடப் போகிறோமா என்பதை முடிவு செய்யப் போகிறோம்.

    இந்த தேர்தலில் மோடி மீண்டும் வென்றால் இந்தியாவில் இனி தேர்தல்களே நடக்காது. நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

    தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, அ.தி.மு.க. என்ற கட்சி அழிந்து விடும் என்று பேசுகிறார். அப்படி என்றால் தேர்தலுக்கு பிறகு இந்த இரண்டு கட்சிகளையும் இவர்கள் அழித்து விடுவார்களா, அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத சர்வாதிகாரிகள் போல் பேசுகிறார்கள்.


    இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனாவால் பிரச்சனை இல்லை. பாரதிய ஜனதாவால் தான் பிரச்சனை. அதனால் இந்த தேர்தலில் இவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.

    மோடி கியாரண்டி என்ற தலைப்பில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் வரும் 5 ஆண்டுகளில் என்ன செய்வோம் என்பதை பட்டியலிட்டுள்ளனர். ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சொல்லியதை எல்லாம் செய்து விட்டீர்களா என்று கேட்டால் பதில் இல்லை. தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வராத மோடி, நிதி கொடுக்காத மோடி, இப்போது தமிழக மக்களிடம் ஓட்டுக் கேட்க மட்டும் அடிக்கடி வருகிறார். இதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன
    • அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

    அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.

    இந்நிலையில், இன்று அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

    இதனையடுத்து பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாகத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "2004 ஆம் ஆண்டு பா.ஜ.க வெளியிட்ட ஒளிரும் இந்தியா தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரித்ததுபோல் இம்முறையும் வளர்ந்த இந்தியா தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரிப்பார்கள்.

    பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை என்பது தோல்வியடைந்த வங்கியில் எடுக்கப்பட்ட செல்லா காசோலை. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மக்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவரும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
    • தமிழ்நாட்டிற்கு அடுத்து கர்நாடகம் இரண்டாம் இடத்தில் 4.52 பில்லியன் அமெரிக்க டாலர்.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    நடைபெறக்கூடிய பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. காணாமல் போய்விடும் என்று கூறிய பிரதமர் மோடி தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் சில நாட்களுக்குமுன் தமிழ் நாட்டிற்கு வருகைபுரிந்து வாய் ஜாலம் காட்டினார். அவர் தலைமையில் இதுவரை இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் ஆய்வு அமைப்புகள் தமிழ் நாட்டின் உண்மை நிலையினை விளக்கி ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டு உள்ளது.

    அதில் சில நாட்களுக்கு முன் 7 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலம் என்பதை ஒன்றிய அரசின் ஆய்வு அமைப்புகள் வெளியிட்டன.

    தற்போது, மேலும் 3 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலம் என்பதை தம்முடைய ஆய்வு அறிக்கைகளின் மூலம், அறிந்தும் அறியாமல் புரிந்தும் புரியாமல் இழித்தும் பழித்தும் தி.மு.க.வை பற்றிப் பேசிக் கொண்டிருக்கக் கூடிய "பெரிய பதவியில்" உள்ளவர்களுக்கு மீண்டும் எடுத்துச் சொல்லிப் புரியவைத்துள்ளன.

    ஜவுளித் துணிகள் ஏற்றுமதி குறித்து 2022-2023-ம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசின் நிர்யாத் நிறுவனம் அண்மையில் வெளியிட்டு உள்ளது. அதில் தேசிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஜவுளித் துணிகளின் மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 22.58 சதவிகிதம் என அறிவித்து ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

    அதாவது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 35.38 பில்லியன் அமெரிக்க டாலர் இதில் முதலிடம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 7.990 பில்லியன் அமெரிக்க டாலர். அடுத்து இரண்டாம் இடத்தில் குஜராத் மாநிலம் 4.378 பில்லியன் அமெரிக்க டாலர். மூன்றாம் இடத்தில் மகாராஷ்ட்ரா 3.784 பில்லியன் அமெரிக்க டாலர் என்று குறிப்பிட்டு ஜவுளிப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

    2022-2023-ம் ஆண்டுக்கான தேசிய இறக்குமதி ஏற்றுமதி வர்த்தக ஆண்டாய்வு பதிவுகள் குறித்த அறிக்கையில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறித்து அறிவித்துள்ள புள்ளி விவரங்களில் இந்தியாவிலிருந்து ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு மிக அதிகமாக ஏற்றுமதி செய்து உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளின் மொத்த மதிப்பு 16.19 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் 5.30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலம் என்று அறிவித்துள்ளது.


    தமிழ்நாட்டிற்கு அடுத்து கர்நாடகம் இரண்டாம் இடத்தில் 4.52 பில்லியன் அமெரிக்க டாலர். உத்தரபிரதேசம் மூன்றாம் இடத்தில் 2.27 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    2022-2023-ஆம் நிதியாண்டுக்கான தோல் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு குறித்து ஒன்றிய அரசின் நிர்யாத் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 2022-2023-ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள தோல் பொருட்களின் மொத்த மதிப்பு 4.27 பில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறியுள்ளது.

    அதே நேரத்தில், இதில், 43.20 சதவிகித தோல் பொருள்களை அதாவது 2.048 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தோல் பொருள்களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலம் எனும் பாராட்டு முத்திரையை வெளியிட்டு தமிழ்நாட்டின் பெருமையைத் தரணிக்குப் பறைசாற்றியுள்ளது.

    இப்படி மத்திய அரசின் ஆய்வு அறிக்கைகளே தமிழ்நாடு பெரும்பாலான முக்கிய துறைகளில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

    பா.ஜ.க.ஆளும் மாநிலங்கள் பல்வேறு துறைகளிலும் பின்தங்கியிருப்பது மட்டுமல்லாமல், எவ்வித வளர்ச்சியுமின்றி குன்றி உள்ளதையும் இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் கூட தமிழ்நாடு வளர்ச்சியும் முன்னேற்றமும் இன்றி மிகவும் பின்தங்கி இருந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

    மத்திய அரசின் பிரதமரும் மத்திய அரசின் அமைச்சர்களும், பா.ஜ.க. உடன் கள்ள உறவு வைத்து உள்ள அ.தி.மு.க.வினரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிகளைப்பற்றிக் குறைகூறி வருவது உண்மைக்கு மாறானது மட்டுமல்ல. உண்மைகளை மறைத்து பொய்களைக் கூறி, போலியான விளம்பரம் தேடுபவர்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பொது மக்களுக்கு ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும்
    • வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை

    பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

    இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க. 2024 தேர்தலுக்கு முதல்கட்ட தேர்தல் தொடங்கி அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு அவற்றை பார்த்து இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை சமூகநீதி, மதநல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    பல்வேறு மதம், மொழி, ஜாதி, இனங்களை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும்.

    தற்போது நடைபெறுகின்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 இல் ஆரம்பித்து ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிற நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும் என்பதை பிரதமர் மோடி தான் விளக்க வேண்டும்.

    புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களை அழைக்காமல் புறக்கணித்த பா.ஜ.க.வினர் 2025 ஆம் ஆண்டை பழங்குடியினர் ஆண்டாக கொண்டாடுவோம் என்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும்.

    ஏற்கனவே ஆயுஷ்மான் திட்டத்தில் ஊழல் புரையோடிப் போயிருக்கிற நேரத்தில் மீண்டும் அத்திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. நிதி ஒதுக்குவதில் தமிழ் மொழியை விட 18 மடங்கு அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டுகிற பா.ஜ.க., தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. இதன்மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

    தேர்தல் நன்கொடை பத்திரம் மூலமாக ரூபாய் 8,000 கோடி கார்ப்பரேட்டுகளிடம் நிதியை பெற்று குவித்த பா.ஜ.க., ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது மிகுந்த கேலிக்குரியதாக இருக்கிறது.

    வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை. தமிழகத்தில் மெட்ரோ ரயிலை புறக்கணித்த பா.ஜ.க.வை எவரும் மறந்திட இயலாது.

    மோடியின் உத்திரவாதம் நம்பகத் தன்மையை இழந்துள்ளது. ஏற்கனவே 2014 இல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டப்படும், கருப்பு பணத்தை ஒழித்து அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற உத்திரவாதத்தை நிறைவேற்றாத மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள்.

    தேர்தல் அறிக்கையை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஜாதிவாரியாக கணக்கெடுத்து இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்காத பா.ஜ.க., டாக்டர் அம்பேத்கர் பெயரை உச்சரிக்க தகுதியில்லை.

    எனவே, மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பா.ஜ.க. கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்.

    கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிகழ்த்திய ஜூம்லா நாடகத்தை மீண்டும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு அரங்கேற்றியிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்
    • பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வேலையின்மை என்ற வார்த்தையே இல்லை - ராகுல்காந்தி

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

    அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.

    இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்கான விழா டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.

    முதலில் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தேர்தல் அறிக்கை தொடர்பாக விளக்கி பேசினார். அப்போது அவர் சமுதாய மேம்பாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க. தன்னை அர்ப்பணித்து இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.

    இதையடுத்து பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

    பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் நரேந்திர மோடியின் உரையில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய இரண்டு வார்த்தைகள் இல்லை. மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்சனைகளை கூட விவாதிக்க பாஜக விரும்பவில்லை.

    இந்தியா கூட்டணியின் நோக்கம் மிகவும் தெளிவானது - அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் நிரந்தர வேலை உறுதி.

    இந்த முறை மோடியின் மாய வலையில் இளைஞர்கள் சிக்கப் போவதில்லை, இனி அவர்கள் காங்கிரசின் கரங்களை வலுப்படுத்தி நாட்டில் வேலைவாய்ப்பு புரட்சியை ஏற்படுத்துவர்" என்று பதிவிட்டுள்ளார்.

    • சமூகம் சார்ந்த பிரசாரங்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் மக்கள் பார்த்து தான் வாக்களிப்பார்கள்.
    • தேனி தொகுதியில் உள்ள எந்த கிராமத்துக்கு சென்றாலும் மக்கள் நலனுக்காக நான் என்னென்ன செய்துள்ளேன் என்பது தெரியும்.

    சென்னை:

    பா.ஜனதா ஆதரவுடன் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் பா.ஜனதாவை ஆதரிப்பதற்கான காரணம் பற்றி விளக்கினார்.

    கேள்வி:-1999-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் வெற்றி பெற்றீர்கள். 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரும்பி வந்து மக்களை சந்திக்கிறீர்கள். மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது?

    பதில்:-1999-2004 கால கட்டத்தில் நான் பெரிய குளம் தொகுதி எம்.பி.யாக இருந்து நிறைய பணிகள் செய்து இருக்கிறேன். அரசியல் சூழ்நிலையால் அதன் பிறகு வெற்றி வாய்ப்பை இழந்தேன். நான் 21,155 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தேன். இது மற்ற வேட்பாளர்களின் வாக்கு சதவீதத்துடன் ஒப்பிடும் போது நன்றாகவே இருந்தது. அதனால் என்னை அம்மா ஜெயலலிதா மேல்சபை எம்.பி. ஆக்கினார். தேனி தொகுதியில் உள்ள எந்த கிராமத்துக்கு சென்றாலும் மக்கள் நலனுக்காக நான் என்னென்ன செய்துள்ளேன் என்பது தெரியும்.

    ஆண்டிப்பட்டி மற்றும் சேடப்பட்டியில் என்னால் உருவான அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் ஆகியவற்றால் 14 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்த எனக்கு மக்கள் மிக சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள்.

    கேள்வி:- உங்களை எதிர்த்து போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் (தி.மு.க.), நாராயணசாமி (அ.தி.மு.க.) ஆகியோர் உங்களோடு அ.தி.மு.க.வில் இருந்தவர்கள்தான். இதனால் வாக்குகள் பிரிய வாய்ப்பு இருக்கிறதா?

    பதில்:-ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரிஜினல் அ.தி.மு.க. என்பது இல்லை. இப்போது இருப்பது எடப்பாடி பழனிசாமியின் கட்சி. இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகள் போய் விடாமல் தடுக்கலாம் என்று நினைக்கிறார். தி.மு.க. மக்கள் விரோத கட்சியாக உள்ளது. எனவே அவர்கள் கனவு நிறைவேறப் போவதில்லை.


    கேள்வி:-தங்க தமிழ்செல்வனும், நீங்களும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் போது சமூக ரீதியான வாக்குகள் அதிக அளவில் யாருக்கு கிடைக்கும்?

    பதில்:-தேனி ஒரு காஸ்மோபாலிடன் தொகுதி. 1952-ம் ஆண்டு முதல் முஸ்லீம்கள் உள்பட அனைத்து சமூகங்களின் வேட்பாளர்களும் இங்கிருந்து தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    சமூகம் சார்ந்த பிரசாரங்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் மக்கள் பார்த்து தான் வாக்களிப்பார்கள்.

    கேள்வி:-அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகும் பா.ஜனதா கூட்டணியால் வாக்குகளை அதிக அளவு பெற முடியும் என்று நினைக்கிறீர்களா?

    பதில்:-நான் அ.ம.மு.க.வை தொடங்கிய போது பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கவில்லை. ஆனால் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்பியதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம்.

    இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பிரதமரின் ஒத்துழைப்போடு பல திட்டங்களை தொகுதியில் நிறைவேற்றுவேன்.

    கேள்வி:-உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா?

    பதில்:-அந்த நேரத்தில் என் அத்தை சசிகலா ஜெயிலில் இருந்தார். நானும் கைது செய்யப்பட்டிருந்தேன். ஒரு காவலாளி மட்டும்தான் இருந்தார். பங்களாவுக்குள் நுழைந்தவர்கள் அம்மாவின் பாதுகாப்பில் ஊழல் அமைச்சர்கள் பற்றிய பதிவுகள் இருப்பதாக நம்பினார்கள்.

    எனவே இந்த கொலை மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

    கேள்வி:-ஜெயலலிதாவின் கொள்கைகளை பின் பற்றுவதாக கூறுகிறீர்கள். ஆனால் அவர் பா.ஜனதாவுக்கு எதிரானவர். நீங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

    பதில்:-அம்மா உயிருடன் இருந்திருந்தால் அவரது நிலைப்பாட்டை நாங்கள் பின்பற்றி இருப்போம். தற்போது தேசத்துக்கு தேவை சிறந்த பிரதமர். மோடிக்கு நிகரானவர்கள் இல்லை. எனவே உலகம் முழுவதும் உள்ள தலைவர்களால் பாராட்டப்படும் மோடிக்கு ஆதரவாக இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.

    கேள்வி:-எடப்பாடி பழனிசாமிக்கான வாய்ப்புகள் மற்றும் உங்களைப் பற்றிய அவரது விமர்சனங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:-எடப்பாடி பழனிசாமி யாரால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். என் அத்தை சசிகலா ஜெயிலில் இருந்த போது அவரை கட்சியை விட்டு நீக்கினார். எனவே மற்றவர்களை விமர்சிக்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை. அவரது வேட்பாளர்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்து பாடம் புகட்டுவார்கள்.

    கேள்வி:-உங்களால்தான் அ.தி.மு.க. பிளவு பட்டதாக தங்க தமிழ்செல்வன் கூறுகிறாரே?

    பதில்:-அவருக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் 2½ ஆண்டுகள் என்னுடன் இருந்தார். ஏன் அப்படி செய்தார் என்பது என் கேள்வி.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பான கவனம் செலுத்தப்பட்டது.
    • வரும் ஆண்டுகளில் ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:-

    இன்று மிகவும் புனிதமான நாள். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னல் அம்பேத்கருக்கு இன்று பிறந்தநாள். இந்த சிறப்பான நாளில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் வகையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடமும் கருத்துக்கள் கேட்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படடுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பான கவனம் செலுத்தப்பட்டது. அதற்கு வெற்றி கிடைத்துள்ளது.

    வரும் ஆண்டுகளில் ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தமானில் சுற்றுலா மேம்படுத்தப்படும். இளைஞர்கள், பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படும்.

    தற்போது உலகம் முழுவதும் போர் பதற்றம் சூழ்நிலை நீடிக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டியது அவசியமாகும். மத்தியில் வலுவான அரசு அமைந்தால்தான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிறப்பாக வாழ முடியும்.

    அது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். அதற்கு மக்கள் மத்தியில் வலுவான அரசை மீண்டும் உருவாக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • நாடு முழுவதும் அனைத்து துறை மக்களிடமும் பா.ஜ.க. சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் முறை விரைவில் அமல்படுத்தப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

    அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளராக பியூஸ்கோயலும் பொறுப்பேற்றனர். மேலும் 24 உறுப்பினர்களும் இந்த குழுவில் இடம் பெற்றனர். 27 பேர் கொண்ட அந்த குழு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தயாரித்தது.

    நாடு முழுவதும் அனைத்து துறை மக்களிடமும் பா.ஜ.க. சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டன. சுமார் 4 லட்சம் பேர் தங்களது கருத்துக்களை பரிந்துரையாக அளித்து இருந்தனர். அவற்றை எல்லாம் ஆய்வு செய்து பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்கான விழா டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.

    முதலில் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தேர்தல் அறிக்கை தொடர்பாக விளக்கி பேசினார். அப்போது அவர் சமுதாய மேம்பாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க. தன்னை அர்ப்பணித்து இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.

    இதையடுத்து பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளி யிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * ஒரே நாடு ஒரே தேர்தல் முறை விரைவில் அமல்படுத்தப்படும்.

    * நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.


    * மேலும் 5 ஆண்டுகளுக்கு ரேஷன் கடைகளில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

    * 2025-ம் ஆண்டு பழங்குடியின மக்களின் பெருமைமிகு ஆண்டாக கடைபிடிக்கப்படும்.

    * 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

    * கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

    * வேலை வாய்ப்பு முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    * வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முத்ரா கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

    * ஏழைகளுக்கு ஊட்டச் சத்து கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்.

    * நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வந்து அமல்படுத்தப்படும்.

    * ஏழைகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் சிலிண்டர் கொடுக்கும் திட்டம் மேலும் நீட்டிக்கப்படும்.

    * கிராம மக்களின் நலனுக்காக குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வினியோகம் செய்யும் திட்டம் தீவிரப்படுத்தப்படும்.

    * பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    * கிராமத்து பெண்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு ஒரு ரூபாயில் ஒரு நாப்கின் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்.

    * திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

    * பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பொருளாதார கொள்கை திட்டம் வகுக்கப்படும்.

    * உலகின் சக்தி மிக்க பொருளாதார நாடுகளில் 3-வது நாடு என்ற மிகப்பெரிய பொருளாதார அந்தஸ்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பெண்களுக்கு கருப்பை புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம் வகுக்கப்படும்.

    * சாலையோரம் வசிப்பவர்களுக்கு மிகவும் குறைந்த வாடகையில் தங்குவதற்கு அரசே கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கும்.

    * மக்கள் மருந்தகங்களில் மருந்து விலை 80 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படும்.

    * புல்லட் ரெயில் திட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்படும்.

    * நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

    * ஸ்டாட்அப் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் தனி திட்டம் வகுக்கப்படும்.

    * தமிழுக்கு சேவை செய்யும் வகையில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும்.

    இவ்வாறு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×