search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India readymade garment exports"

    • ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
    • தமிழ்நாட்டிற்கு அடுத்து கர்நாடகம் இரண்டாம் இடத்தில் 4.52 பில்லியன் அமெரிக்க டாலர்.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    நடைபெறக்கூடிய பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. காணாமல் போய்விடும் என்று கூறிய பிரதமர் மோடி தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் சில நாட்களுக்குமுன் தமிழ் நாட்டிற்கு வருகைபுரிந்து வாய் ஜாலம் காட்டினார். அவர் தலைமையில் இதுவரை இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் ஆய்வு அமைப்புகள் தமிழ் நாட்டின் உண்மை நிலையினை விளக்கி ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டு உள்ளது.

    அதில் சில நாட்களுக்கு முன் 7 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலம் என்பதை ஒன்றிய அரசின் ஆய்வு அமைப்புகள் வெளியிட்டன.

    தற்போது, மேலும் 3 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலம் என்பதை தம்முடைய ஆய்வு அறிக்கைகளின் மூலம், அறிந்தும் அறியாமல் புரிந்தும் புரியாமல் இழித்தும் பழித்தும் தி.மு.க.வை பற்றிப் பேசிக் கொண்டிருக்கக் கூடிய "பெரிய பதவியில்" உள்ளவர்களுக்கு மீண்டும் எடுத்துச் சொல்லிப் புரியவைத்துள்ளன.

    ஜவுளித் துணிகள் ஏற்றுமதி குறித்து 2022-2023-ம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசின் நிர்யாத் நிறுவனம் அண்மையில் வெளியிட்டு உள்ளது. அதில் தேசிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஜவுளித் துணிகளின் மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 22.58 சதவிகிதம் என அறிவித்து ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

    அதாவது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 35.38 பில்லியன் அமெரிக்க டாலர் இதில் முதலிடம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 7.990 பில்லியன் அமெரிக்க டாலர். அடுத்து இரண்டாம் இடத்தில் குஜராத் மாநிலம் 4.378 பில்லியன் அமெரிக்க டாலர். மூன்றாம் இடத்தில் மகாராஷ்ட்ரா 3.784 பில்லியன் அமெரிக்க டாலர் என்று குறிப்பிட்டு ஜவுளிப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

    2022-2023-ம் ஆண்டுக்கான தேசிய இறக்குமதி ஏற்றுமதி வர்த்தக ஆண்டாய்வு பதிவுகள் குறித்த அறிக்கையில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறித்து அறிவித்துள்ள புள்ளி விவரங்களில் இந்தியாவிலிருந்து ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு மிக அதிகமாக ஏற்றுமதி செய்து உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளின் மொத்த மதிப்பு 16.19 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் 5.30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலம் என்று அறிவித்துள்ளது.


    தமிழ்நாட்டிற்கு அடுத்து கர்நாடகம் இரண்டாம் இடத்தில் 4.52 பில்லியன் அமெரிக்க டாலர். உத்தரபிரதேசம் மூன்றாம் இடத்தில் 2.27 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    2022-2023-ஆம் நிதியாண்டுக்கான தோல் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு குறித்து ஒன்றிய அரசின் நிர்யாத் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 2022-2023-ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள தோல் பொருட்களின் மொத்த மதிப்பு 4.27 பில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறியுள்ளது.

    அதே நேரத்தில், இதில், 43.20 சதவிகித தோல் பொருள்களை அதாவது 2.048 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தோல் பொருள்களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலம் எனும் பாராட்டு முத்திரையை வெளியிட்டு தமிழ்நாட்டின் பெருமையைத் தரணிக்குப் பறைசாற்றியுள்ளது.

    இப்படி மத்திய அரசின் ஆய்வு அறிக்கைகளே தமிழ்நாடு பெரும்பாலான முக்கிய துறைகளில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

    பா.ஜ.க.ஆளும் மாநிலங்கள் பல்வேறு துறைகளிலும் பின்தங்கியிருப்பது மட்டுமல்லாமல், எவ்வித வளர்ச்சியுமின்றி குன்றி உள்ளதையும் இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் கூட தமிழ்நாடு வளர்ச்சியும் முன்னேற்றமும் இன்றி மிகவும் பின்தங்கி இருந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

    மத்திய அரசின் பிரதமரும் மத்திய அரசின் அமைச்சர்களும், பா.ஜ.க. உடன் கள்ள உறவு வைத்து உள்ள அ.தி.மு.க.வினரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிகளைப்பற்றிக் குறைகூறி வருவது உண்மைக்கு மாறானது மட்டுமல்ல. உண்மைகளை மறைத்து பொய்களைக் கூறி, போலியான விளம்பரம் தேடுபவர்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பொது மக்களுக்கு ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×