search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தரசன்"

    • தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார்.
    • நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

    கோவை:

    கோவையில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், ஆவாரம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டு நபர்களுக்கு இடையே நடக்க கூடிய தேர்தல் அல்ல. இந்த தேர்தல் மூலமாகத்தான் நாம் நாட்டை காக்கப் போகிறோமா, கைவிடப் போகிறோமா என்பதை முடிவு செய்யப் போகிறோம்.

    இந்த தேர்தலில் மோடி மீண்டும் வென்றால் இந்தியாவில் இனி தேர்தல்களே நடக்காது. நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

    தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, அ.தி.மு.க. என்ற கட்சி அழிந்து விடும் என்று பேசுகிறார். அப்படி என்றால் தேர்தலுக்கு பிறகு இந்த இரண்டு கட்சிகளையும் இவர்கள் அழித்து விடுவார்களா, அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத சர்வாதிகாரிகள் போல் பேசுகிறார்கள்.


    இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனாவால் பிரச்சனை இல்லை. பாரதிய ஜனதாவால் தான் பிரச்சனை. அதனால் இந்த தேர்தலில் இவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.

    மோடி கியாரண்டி என்ற தலைப்பில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் வரும் 5 ஆண்டுகளில் என்ன செய்வோம் என்பதை பட்டியலிட்டுள்ளனர். ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சொல்லியதை எல்லாம் செய்து விட்டீர்களா என்று கேட்டால் பதில் இல்லை. தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வராத மோடி, நிதி கொடுக்காத மோடி, இப்போது தமிழக மக்களிடம் ஓட்டுக் கேட்க மட்டும் அடிக்கடி வருகிறார். இதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்றியதைப் போல தேனி மக்களையும் ஏமாற்ற பிரசாரம் செய்து வருகிறார்.
    • அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து வருவதை பற்றி பேச மோடிக்கு மனமில்லை.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் அப்பகுதி மக்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தான் வெற்றி பெற்றவுடன் பெரியதொகை தருவதாக ஏமாற்றிச் சென்றவர்தான் இங்கு போட்டியிடும் டி.டி.வி. தினகரன்.

    ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்றியதைப் போல தேனி மக்களையும் ஏமாற்ற பிரசாரம் செய்து வருகிறார். அவரை வாக்காளர்கள் நம்ப மாட்டார்கள். மத்தியில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டபோதும் சரி தொழிலாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்ட போதும் மத்திய அரசுக்கு துணையாக இருந்தது அ.தி.மு.க. அரசு. தற்போது கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக நாடகமாடி வருகின்றனர்.

    இவர்கள் கபட கூட்டணியை மக்கள் நம்ப மாட்டார்கள். திருவிழாவில் புகுந்து கொள்ளும் திருடன் தான் நகையை திருடி விட்டு திருடன் ஓடுகிறான்... திருடன் ஓடுகிறான்... என்று சத்தம் போடுவான். பொதுமக்கள் அவனை பிடிக்க செல்லும் போது இந்த திருடன் தப்பித்து ஓடி விடுவான். அதே போல்தான் மத்திய மந்திரிகள் இன்று தேர்தலுக்காக வாகன பேரணி, பிரசாரம் போன்றவற்றை செய்து வருகின்றனர்.

    இந்தியாவில் வேலையின்மை, பொருளாதார சீர்கேடுகள், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக கச்சத்தீவு பிரச்சினையை மோடி கையில் எடுத்து வருகிறார். அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து வருவதை பற்றி பேச மோடிக்கு மனமில்லை. இது போன்ற ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியா அழிவுப்பாதையில் செல்லும். எனவே மக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்திய ஜனநாயகத்தையும், மத சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல்.
    • புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துவிட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் இன்று புதுவை உழவர்கரை நகராட்சி ஜவகர் நகரில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நாடுமுழுவதும் 18-வது பொதுத்தேர்தல் நடக்கிறது. சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இது 2 வேட்பாளர்களுக்கு இடையில் நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய ஜனநாயகத்தையும், மத சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல்.

    இது வழக்கமான தேர்தலும் அல்ல. இது தேர்தல் யுத்தம். புதுவைக்கு பிரதமர் மோடி பிரசாரத்துக்கு வருவதாக தெரியவில்லை. ஒரு வேளை வந்தால், அவரிடம் கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறதிகள் என்ன ஆச்சு? என புதுவை மக்கள் கேள்வியாக கேட்க வேண்டும்.

    பாராளுமன்றத்தில் சுப்புராயன் எம்.பி., புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். அப்போது புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துவிட்டது. தற்போது எப்படி மாநில அந்தஸ்து கெடுப்போம்? என எதை வைத்து சொல்கின்றனர்.

    புதுவையில் 800 மதுக்கடைகள் இருந்தது. தற்போது கூடுதலாக 250 ரெஸ்டோபார்கள் திறந்துள்ளனர். இளைஞர்களை சீரழிக்கவே ரெஸ்டோபார்கள் திறக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கஞ்சா போதையால் சிறுமி பாலியல் வன்கொடு மையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

    புதுவையின் உள்துறை அமைச்சர் யார்? அவருக்கும், கஞ்சா வியாபாரிகளுக்கும் என்ன தொடர்பு என? அவர்தான் விளக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிசயமான மாநிலம் புதுவை. இங்குதான் ரேஷன்கடைகள் இல்லை.


    ரங்கசாமி நல்ல மனிதர்தான். ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என புலம்புகிறார். சுயமரியாதை இல்லை என புலம்புகிறார். தன் கைகள் கட்டுப் பட்டுள்ளதாகவும், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் கூறுகிறார்.

    சுதந்திரமாக செயல்பட முடியாத முதலமைச்சரால் மாநில மக்களுக்கு என்ன செய்ய முடியும்?இந்தியா கூட்டணி தவிர்த்து தேர்தலில் 2 கூட்டணி நிற்கிறது.

    மோடி தலைமையிலான நள்ளிரவு கூட்டணி ஒன்று, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கள்ளக் கூட்டணி மற்றொன்று. மோடியை பற்றி எந்த இடத்திலும் பழனிசாமி விமர்சிப்பதில்லை. பாராளுமன்ற தேர்தலில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது அதிமுக. இந்தியா கூட்டணி கட்சிகள் தனித்தனியே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம்.

    10 ஆண்டுக்கு மேல் ஒரே கூட்டணியாக செயல்பட்டு வருகிறோம். தேர்தல் அறிக்கை தனித்தனியே விட்டிருந்தாலும், அதில் எந்த முரண்பாடும் கிடையாது.

    நெல்லையில் சமீபத்தில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.

    ஆனால் நயினார் நாகேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் விதி மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கும் பிற மாநிலங்களில் இருந்து பணம் வந்துள்ளது. எனவே பாஜனதா வேட்பாளர்கள் வீடுகளில் தேர்தல் துறை சோதனையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகமும், புதுச்சேரியையும் சேர்த்து இந்தியா கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தருவார்கள்.
    • போதை பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூரில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரித்தார்.

    இந்த பாராளுமன்ற தேர்தல் 2-வது சுதந்திர போராட்டம் போன்றது. பாசிசம் தோற்கடிக்கப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி எங்களுக்கும் பா.ஜ.க.வுக்கு தொடர்பில்லை என்று கூறுகிறார்.

    தமிழகத்தில் ஒன்று கள்ள கூட்டணி. மற்றொன்று நள்ளிரவு கூட்டணி உள்ளது. இவர்களுக்கு எதிராக தமிழகமும், புதுச்சேரியையும் சேர்த்து இந்தியா கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தருவார்கள்.

    போதை பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போதை பொருள் இறக்குமதி செய்யும் தாயிடம் குஜராத் தான்.

    மோடி ஆட்சிக்கு வரும் போது வீட்டு சிலிண்டர் ரூ.410. ஆனால் இப்போது ரூ.1200 ஆக சிலிண்டர் விலை உள்ளது. அண்மையில் வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இப்போது குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை சம அளவில் உள்ளது.

    கச்சத்தீவை இந்திரா காந்தி தான் இலங்கைக்கு கொடுத்தார். அப்போதைய முதல்வரைகூட கேட்கவில்லை.

    கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்க பயன்படுத்தி வந்தனர். இன்றைக்கு கச்சத்தீவு பற்றி பேசும் மோடி 10 ஆண்டுகளில் அவர் விரும்பி இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்கலாம். ஆனால் மீனவர்களையும் படகுகளை அவரால் காப்பாற்ற முடியவில்லை.

    சுங்கசாவடி கட்டனங்களும் உயர்த்தப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது.

    தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க மோடி கட்டுபாட்டில் உள்ளது.மோடி நிர்ணயித்த தேதியில் தேர்தல் நடக்கிறது. சின்னம் ஒதுக்குவதற்கும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.
    • அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.

    இதில் பங்கேற்பதற்காக அரியலூரில் இருந்து அமைச்சர் சிவசங்கர் காரில் புறப்பட்டு சென்றார். கார் ஜெயங்கொண்டம் அருகே அசினாபுரம் பகுதியில் சென்ற போது அங்கு பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    இந்த வேளையில் அந்த வழியாக வந்த அமைச்சர் சிவசங்கரின் காரையும் பறக்கும் படையினர் நிறுத்துமாறு கூறினர். இதையடுத்து டிரைவர் காரை நிறுத்தினார். அதில் அமைச்சர் சிவசங்கர் இருப்பதை பார்த்த அதிகாரிகள் காரை சோதனையிட வேண்டும் என்றனர்.

    அதற்கு தாராளமாக உங்கள் கடமையை செய்யுங்கள் என்றவாறு காரை விட்டு இறங்கினார். சிறிது நேர சோதனைக்கு பின்னர் காரில் எதுவும் இல்லாததால் அமைச்சரின் காரை அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

    அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு வழிவிட்டு ஒத்துழைப்பு கொடுத்த அமைச்சர் சிவசங்கரை அந்த பகுதியினர் பாராட்டினார்கள்.

    • பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் அவர்கள் கேட்கிற சின்னங்கள் வழங்கப்படுகிறது.
    • தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கடமைப்பட்டு உள்ளோம்.

    பெரம்பலூர்:

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். பெரம்பலூரில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. அணி என்பது ஒரு மகத்தான அணி. கொள்கைகான அணி. கொள்கைக்காக போராடிக் கொண்டிருக்கிற அணி. தமிழக முதல்-அமைச்சர் தனது பிரசாரத்தை பெரம்பலூர், திருச்சி தொகுதியில் தொடங்கி தற்போது தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.

    நடைபெற இருக்கின்ற தேர்தல் ஒரு சாதாரண தேர்தல் அல்ல. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வியுடன் இந்த தேர்தல் நடக்க இருக்கிறது. முற்றிலுமாக ஜனநாயகம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பானை சின்னம் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல ம.தி.மு.க.விற்கான பம்பர சின்னம் கொடுக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. நம்மை எதிர்க்கும் நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் கூட பறிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் அவர்கள் கேட்கிற சின்னங்கள் வழங்கப்படுகிறது. ஒரு நடுநிலையோடு, நேர்மையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையமே, இன்றைக்கு கேள்விக் குறியாக இருக்கிறது.

    தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆகவே நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றவும், மதச்சார் பின்மை என்கிற மகத்தான கொள்கையை காப்பாற்றவும், நாம் இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கடமைப்பட்டு உள்ளோம்.

    அதேபோல மத்தியில ஆளும் மோடி தலைமையிலான அரசு என்பது ஒரு மாற்றான் தாய் மனப்போக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது, தமிழ் மக்களை புறக்கணிக்கிறது. தமிழை புறக்கணிக்கிறது. அதே நேரத்தில் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகிறது.

    நம்முடைய நிதி அமைச்சர் சட்டப்பேரவையில் குறிப்பிட்டது போல, நாம் செலுத்துகிற ஒவ்வொரு ரூபாய்க்கும், மத்திய அரசு திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசா தான். அதே நேரத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் இரண்டு ரூபாய் வழங்கப்படு கிறது. அதாவது இரு மடங்காக வழங்கப்படுகிறது நமக்கு குறைத்து வழங்கப்படு கிறது. எனவே பா.ஜ.க.வை நிராகரிக்க வேண்டும்.

    எதிர் தரப்பில் அமைந்தி ருக்கிற கூட்டணியில், ஒன்று நள்ளிரவு கூட்டணி. மற்றொன்று கள்ளக் கூட்டணி என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண் டும். எனவே ஜனநாயக முறையில் இயங்கிக் கொண்டிருக்கிற தி.மு.க. தலைமையிலான இந்த அணி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலும் 40 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரதமரின் உத்தரவாதத்தை விட உபத்திரவாதம் தான் அதிகமாக உள்ளது.
    • பா.ம.க. கூட்டணி குறித்து மாறி மாறி பேசி தற்போது பா.ஜ.க.வில் இணைந்து உள்ளனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை. தற்போது தேர்தலில் மோடி உத்தரவாதம் என்று பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமரின் உத்தரவாதத்தை விட உபத்திரவாதம் தான் அதிகமாக உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மொத்தம் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போதும் இந்த கூட்டணி வெற்றி பெறும். 10 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணி செயலாற்றி வருகிறது. தொகுதி பங்கீட்டில் எங்களுக்குள் எந்த வித முரண்பாடும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் உருவாகியிருக்கிற கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். பா.ம.க. கூட்டணி குறித்து மாறி மாறி பேசி தற்போது பா.ஜ.க.வில் இணைந்து உள்ளனர். இந்த கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்.

    கடந்த காலங்களில் மக்களுக்கு எதிரான சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியபோது அதனை ஆதரித்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரையும் மக்கள் நிராகரிப்பார்கள்.

    பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதற்கு பா.ஜ.க. மத்திய இணை அமைச்சர் ஷோபாவுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் நாடாளுமன்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

    அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    ஏற்கனவே திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஏழையின் பணம் சுரண்டப்படுதல் குறித்த விளக்க நாடகம் செய்து காண்பித்தனர்.
    • மத்திய ஆட்சிப்பொறுப்பில் உள்ள மோடி தலைமையிலான அரசு மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

    சென்னை:

    விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட சென்னை மாவட்டம் சார்பில் பாரிமுனையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.

    மத்திய அரசின் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து பாடையில் கியாஸ் சிலிண்டரை சுமந்து வருவது போன்றும், ஏழையின் பணம் சுரண்டப்படுதல் குறித்த விளக்க நாடகம் செய்து காண்பித்தனர்.

    இதில் 200-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

    மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் முத்தரசன் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக மாநிலச்செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

    மத்திய ஆட்சிப்பொறுப்பில் உள்ள மோடி தலைமையிலான அரசு மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

    மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்க முயற்சிக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் என்ற பெயரில் கூட்டாட்சி கோட்பாடுகளை தகர்த்து வருகிறது. தமிழ்நாடு உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர் மாளிகை வழியாக போட்டி அரசு நடத்தி வருகிறது.

    இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. விலைவாசி உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல கோடி மக்கள் வேலை வாய்ப்பை இழந்து வேலையில்லாமல் இருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரே தீர்வு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சரியாக இருக்காது.
    • சாத்தியம் இல்லாத ஒரு திட்டத்தை மோடி திணிக்க பார்க்கிறார் என்றார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்று எழுந்துள்ள பிரச்சினை பற்றி இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

    அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால் கோடிக்கணக்கில் நிதி வீணாக செலவழிகிறது .அதிகாரிகள் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்துவதை விட தேர்தல் நடத்துவதில் தான் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பதெல்லாம் உண்மைதான்.

    இதற்கு ஒரே தீர்வு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சரியாக இருக்காது. ஏற்கனவே 1967 வரை ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தான் அமலில் இருந்தது .அதன் பிறகு தான் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டப்படி தேர்தலையும் நடத்தி முடித்து விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். சட்டமன்றங்கள் கலைந்தால் என்ன செய்வது? ஒருவேளை பாராளுமன்றமே கவிழ்ந்து போனால் என்ன செய்வது? இதற்கு தீர்வு என்ன? சர்வாதிகார நாட்டில் தான் இது சாத்தியமாகும். ஜனநாயக நாட்டில் சாத்தியம் இல்லை. ஆனால் சாத்தியம் இல்லாத ஒரு திட்டத்தை மோடி திணிக்க பார்க்கிறார் என்றார்.

    • காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.
    • 2014ல் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் நலன் காக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார்.

    ஈரோடு:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- பா.ஜ.க. பொறுப்பேற்று 10 ஆண்டு காலம் ஆகியும் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    அதற்கு மாறாக விலைவாசி நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கட்டுப்படுத்துவதற்கு எந்தவித முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. பிரதமர் செல்லும் இடங்களில் குடும்ப அரசியல் மற்றும் ஊழலை பற்றி மட்டுமே பேசுகிறார்.

    ஊழலை பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக பலம் இருக்கிறதா என்பதை அவர் யோசிக்க வேண்டும். ஊழல், வேலையில்லா திண்டாட்டம் இதையெல்லாம் கண்டித்து வருகிற செப்டம்பர் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

    12-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், 13 ,14 இரு நாட்களில் வட்ட மற்றும் ஒன்றிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

    தமிழ்நாடு ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டி அரசாங்கத்தையும் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கை அரசாங்கத்திற்கு எதிரானது மட்டுமல்ல தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கையாக உள்ளது.

    அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பூர்த்தி செய்ய வேண்டும், ஆனால் அரசை செயல்படுத்த முடியாத நடவடிக்கையை ஆளுநர் மேற்கொண்டு வருகிறார். ஆளுநரின் செயல்பாட்டை எதிர்த்து குடியரசுத் தலைவரிடம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு முறையீடு செய்துள்ளார்கள்.

    ஆனால் இதுவரை குடியரசுத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் ஏட்டிக்கு போட்டியாக தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில் கவர்னரின் நடவடிக்கை உள்ளது.

    கவர்னரை கண்டித்து தமிழ்நாட்டு நலன் கருதி கவர்னரின் அராஜகத்தை கண்டித்து மக்களே வெகுண்டெழுந்து போராட வேண்டிய நிலைமை ஏற்படும். இது போன்று ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு கவர்னரும், மத்திய அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது. 25-ம் தேதி முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி 25-ம் தேதி அவரவர் தொகுதியில் திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும்.

    நாட்டிலேயே மிக மோசமான முறையில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் உயிர் உடமை பாதுகாப்பில்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதும், சேதப்படுத்தப்படுவதும் தொடர்ந்து வருகிறது. கடற்கொள்ளையர்களாலும் பொருட்கள் களவாடப்படுகிறது.

    2014ல் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் நலன் காக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார். இலங்கையுடன் நல்ல நட்பில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகம் முழுவதும் சுற்றி வரும் பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வர மறுக்கிறார்.
    • நாட்டில் 22 மொழிகளும் தேசிய மொழிகளாக கருதப்பட வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் சுற்றி வரும் பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வர மறுக்கிறார். மணிப்பூரில் நடைபெற்ற சம்பவம் மிக கொடூரமான சம்பவம். கலவரத்தின் மூலம் 2024 தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலமாக மோடியை அவைக்கு கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    அவருக்கு நிர்ப்பந்தம் கொடுத்து அவரை பாராளுமன்றத்திற்கு வரவழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தின் மூலமாக ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் 3-வது முறையாக வெற்றி பெறவும் முயற்சி செய்கிறார்கள். குஜராத்தில் கற்ற பாடத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

    நாட்டில் 22 மொழிகளும் தேசிய மொழிகளாக கருதப்பட வேண்டும். அனைத்து மொழிகளுக்குமான வளர்ச்சிக்குரிய நிதியை மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய அரசு ஒதுக்க வேண்டும். ஆனால் மிகக் குறைவான அளவு பேசக்கூடிய சமஸ்கிருதத்திற்கு மிக அதிகபட்ச நிதியை ஒதுக்குகிறார்கள். தமிழ் மொழிக்கு மிக குறைவான நிதி ஒதுக்கப்படுகிறது.

    இந்தி மொழியை காலப்போக்கில் அனைவரும் ஏற்க வேண்டும் என உள்துறை அமைச்சர் வலுக்கட்டாயமான முறையில் திணிக்க முயற்சி செய்கிறார். ஒரு பக்கம் கலவரத்தின் மூலமாகவும், மத மோதல்கள் மூலமாகவும் அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கின்றனர்.

    இந்தியை திணித்து மொழியின் மூலமாகவும் மொழி மோதலை ஏற்படுத்த முயற்சிக்கிறது. மத்திய அரசு ஜனநாயகத்தை சீரழித்து விட்டு ஒரு சர்வதிகார பாசிச பாதையில் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது. ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வரக்கூடாது என்ற நோக்கம் மட்டுமல்ல அடுத்த 8 ஆண்டு காலத்திற்கு தேர்தலுக்கு வரக்கூடாது என்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும் இன்னும் அவருடைய பதவி நீக்கத்தை விலக்க மறுக்கிறது.

    அமலாக்கத்துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது. அரசியல் ரீதியாக பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கக்கூடிய அரசுகளையும், கட்சிகளையும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மூலமாக அடி பணி வைக்கக்கூடிய அப்பட்டமான ஜனநாயக விரோத செயலில் மத்திய அரசு ஈடுபடுத்தி வருகிறது. இது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஆபத்தானது.

    மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாடு நாடாக இருக்காது. சர்வாதிகாரி கையில் ஆட்சி சென்று விடும். அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக 26 கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கியுள்ளது கர்நாடகத்தில் தோல்வி அடைய வைத்தது போல் நாடும் முழுவதும் மோடியை பா.ஜ.க.வை தோல்வியடைய வைக்க மக்கள் தயாராக உள்ளனர்.

    அண்ணாமலை நல்ல விளம்பர பிரியர், ஆனால் பாதயாத்திரையை அவர் மணிப்பூரில் நடத்தி இருக்க வேண்டும். கலவரத்தை தடுத்து அமைதியை நிலை நாட்ட மணிப்பூரில் அவர் நடைபயணம் நடத்தியிருந்தால் நல்லது. ஆனால் இங்கு நடை பயணம் என்ற பெயரால் வாகன பயணம் செய்து நாடகம் நடத்தி வருகிறார். மக்கள் பெரும் திரளாக வந்து கூடுவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் மக்கள் கூடவில்லை. இது அப்பட்டமான நாடகம்.

    தமிழ்நாட்டில் அதிகாரத்திற்கு வர இது போன்று முயற்சிக்கிறார். அ.தி.மு.க. ஊழலையும், தி.மு.க. ஊழலையும் பேசுவேன் என்றார், ஜெயலலிதாவை ஊழல்வாதி என்றார், ஆனால் ஜெயலலிதாவை பற்றி பெரிய தலைவர் என்கிறார், தற்போது அதை பற்றி பேச மறுக்கிறார், பாதயாத்திரை துவக்க விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை, அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை, மோடி அமித்ஷாவுடன் தான் கூட்டணி என அறிவித்திருக்கிறார்.

    இந்த நிலையில் பி.ஜே.பி. தலைமையில் இருக்கக்கூடிய அணி ஒன்று சேரக்கூடிய முடியாத ஒரு அணியாக உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் இந்த முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகள், விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்சனை, இந்தி திணைப்பு முயற்சி இவைகளை கண்டித்து வருகிற செப்டம்பர் 12 13, 14 ஆகிய மூன்று நாட்களில், தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக தொடர் மறியல் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ள முடிவு செய்து இருக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×