search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neet Exam"

    • கோப்புகள் சரியாக அமைந்திருந்தால் கவர்னர் ஏன் கையெழுத்து போட மாட்டார்.
    • மக்கள் நலனை தி.மு.க. அரசு மறந்ததற்கு வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்.

    இதற்காக இன்று சிறப்பு கூட்டம் நடத்தி மீண்டும் நிறைவேற்றி அனுப்புகிறார்கள். இது பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    இந்த விவகாரத்தில் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்கள்? கவர்னருக்கு கண்டனம், கவர்னருக்கு எதிராக போராட்டம் இப்படி ஒரே அஜண்டாவை வைத்து தி.மு.க. அரசியல் செய்கிறது.

    கவர்னருக்கு எதிரான அவர்களது நடவடிக்கையில் ஆச்சரியம் இல்லை. தாங்கள் செய்த ஊழல்கள் வெளியே வந்துவிடக்கூடாது. ஊழல் வழக்குகளில் சிக்கும் அமைச்சர்களை பற்றி பொதுமக்கள் பேசக்கூடாது என்பதற்காக திசை திருப்பும் முயற்சியை தி.மு.க. செய்து வருகிறது.

    கோப்புகள் சரியாக அமைந்திருந்தால் கவர்னர் ஏன் கையெழுத்து போட மாட்டார். நீட்டை பொறுத்தவரை தமிழகத்தை தவிர எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மாநில மக்களுக்கு நன்மை பயக்காத தனக்கும், குடும்பத்துக்கும் தங்கள் அமைச்சரவை சகாக்களுக்கும் மட்டுமே பலன் அளிப்பதாக இருந்தால் கவர்னர் எப்படி அனுமதிப்பார்? ஒருமுறைக்கு பலமுறை யோசித்துதான் முடிவெடுப்பார். அவர் என்ன தாசில்தார் வேலையா பார்க்கிறார்? இருக்கிற சாலைகள் எதுவும் சரியில்லை. 15 நாட்களுக்கு முன்பு போட்ட ரோடுகளும் குண்டும் குழியுமாகிவிட்டன.

    ஆனால் முதல்வர் வீடு, அலுவலகம், அதை போல அமைச்சர்கள் வீடுகள் இருக்கும் சாலைகள் எங்கும் பழுதாகவில்லை. அந்த சாலைகள் மட்டும் பழுதாகவில்லை. இது எப்படி?

    மக்கள் நலனை தி.மு.க. அரசு மறந்ததற்கு வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். ஊழலை மறைக்க இதுபோல் இன்னும் நாடகம் ஆடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கையெழுத்து இயக்கத்தில் எல்லா தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    • கவிஞர் வைரமுத்துவும் நீட் தேர்வுக்கு எதிரான இந்த இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டார்.

    சென்னை:

    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நபராக கையெழுத்து போட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். நீட் தேர்வுக்கு எதிரான இந்த கையெழுத்து இயக்கத்தில் எல்லா தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

    இதையொட்டி கவிஞர் வைரமுத்துவும் நீட் தேர்வுக்கு எதிரான இந்த இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டார். இதுகுறித்து அவர் பதிவிட்ட கருத்துக்கள் வருமாறு:-

    நீட் தேர்வுக்கு எதிராக எனது கையெழுத்து இடம் பெறுவதில் மகிழ்ச்சி. தேர்வு எழுதியே மாணவர்கள் வாழ்நாள் கழிந்து விடுகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். நீட் தேர்வு சமூகத்திற்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது. மாணவர்களுக்கு எதிரானது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது.

    அரூர்:

    தருமபுரி மாவட்டத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அரூரில் செய்திகளை சந்தித்தார்.

    தருமபுரி மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு, புளி, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த பொருட்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.

    வேளாண் விளைபொருள்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றவும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். சென்னை அதன் சுற்று வட்டாரப் பகுதியில் மட்டுமே தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் போதை ஒழிப்பு பிரிவுக்கு கூடுதலாக 18 ஆயிரம் போலீசார்களை பணியில் அமர்த்த வேண்டும். நீட் தேர்வில் விலக்கு கோரும் கோரிக்கையை அனைத்து கட்சிகளும் இணைந்து வலியுறுத்த வேண்டும். சித்தேரி, வத்தல்மலையை சுற்றுலா தலமாகவும், தீர்த்தமலையை ஆன்மீக தலமாகவும் தமிழக அரசு மாற்ற வேண்டும். தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    அரூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோர்தான் பா.ம.க.வின் முன்னோடிகள். எனவே, எங்கள் கட்சியின் வழிகாட்டிகள், முன்னோடிகளை எதிர்பவர்களை பா.ம.க. எதிர்க்கும். இந்தியாவில் சமூக நீதியை கொண்டு வந்தவர் தந்தை பெரியார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கோவில் முன்பாக உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. தமிழக கவர்னர் நடுநிலையாக செயல்பட வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களின் சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது.

    தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தியபோது சாதி, மதம், அரசியல் கட்சிகளை அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கையெழுத்திட்டனர். 

    அதேபோல நீட் என்பது தமிழகத்தில் பொது பிரச்சனை ஆகையால் தி.மு.க.வின் நீட் எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு நாங்களும் ஆதரவு தருவோம் என்றும் நீட் தேர்வில் அரசியல் செய்யக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைன் மூலம் ‘நீட் தடை’ என்ற தலைப்பில் கருத்து தெரிவிக்கும் பகுதியில் 3 லட்சம் பேர் பங்கேற்று கையெழுத்து போட்டுள்ளனர்.
    • நீதிமன்ற வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்.

    சென்னை:

    தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞர் அணி, மருத்துவர் அணி மற்றும் மாணவர் அணி ஆகியவை சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற சத்தியமூர்த்தி பவன் சென்றார். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்களிடம் கையெழுத்து பெற்றார்.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கையெழுத்து பெறுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கட்சித் தலைவர் திருமாவளவனிடம் அவர் கையெழுத்து பெற்றார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் , எம்.எல்.ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு மற்றும் நிர்வாகிகள் கையெழுத்து போட்டனர்.

    இதில், திமுக எம்.எல்.ஏ. மயிலை வேலு கலந்து கொண்டார்.

    பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் விலக்கு நம் இலக்கு என்ற கையெழுத்து இயக்கம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெறுவதற்காக தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 6 வருடத்தில் அனிதா ஆரம்பித்து 22 மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 10 லட்சம் கையெழுத்து பெற்றுள்ளோம்.

    ஆன்லைன் மூலம் 'நீட் தடை' என்ற தலைப்பில் கருத்து தெரிவிக்கும் பகுதியில் 3 லட்சம் பேர் பங்கேற்று கையெழுத்து போட்டுள்ளனர்.

    அனைத்து இயக்கமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அடுத்தகட்டமாக அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். நாங்கள் உண்மையாக போராடி வருகிறோம், எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒன்று என்று இல்லை. இது தி.மு.க. பிரச்சனை மட்டும் இல்லை.

    கேள்வி:- சனாதன மாநாட்டில் பேசியதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளாரே?

    பதில்:- அம்பேத்கர், பெரியார் பேசியதை விட தவறாக ஒன்றும் நான் பேசவில்லை. நான் பேசியது தவறு இல்லை. அமைச்சர் பதவி இன்று வரும், நாளைக்கு போகும். சட்டமன்ற உறுப்பினர் பதவி இன்றைக்கு வரும், நாளைக்கு போகும். இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு இன்றைக்கு வரும், நாளைக்கு போகும். அதைவிட முக்கியம் முதலில் மனிதனாக இருக்க வேண்டும்.

    நீட் தேர்வு என்பது 6 வருட பிரச்சனைதான். முதலில் அதை ரத்து செய்வோம். சனாதனத்தை பற்றி பல ஆண்டுகளாக பேசி வருகிறோம். இது பல நூறு ஆண்டு கால பிரச்சனை. சனாதனத்தை எந்த காலத்திலும், எப்போதும் எதிர்ப்போம். நீதிமன்ற வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது இங்கு வந்து பேசும் போது, 'ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில பட்டியலில் கல்வி உரிமை இருக்க வேண்டும் என்றால் அதை கொடுப்போம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்ன தேவையோ அதை செய்து கொடுப்போம். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்' என்று கூறி இருக்கிறார்.

    கேள்வி:- நீட் தேர்வு விலக்கு கிடையாது, நீட் தேர்வு எழுதித்தான் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் சொல்லும் போது மாணவர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறதே?

    பதில்:- 6 வருடமாக நீட் விலக்கு கோரிக்கையை வைத்து வருகிறோம். சட்டமன்றத்தில் 230 சட்டமன்ற உறுப்பினர்கள் இதைத்தான் சொல்லி இருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். மக்களின் எண்ணத்தை சட்டமன்றத்தில் பேசுபவர்கள். இதற்கு ஆதரவு தெரிவிக்காத 4 சட்டமன்ற உறுப்பினர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும்.

    நாங்கள் மாணவர்களை குழப்பவில்லை. இன்னொரு உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நாங்கள் செயல்படுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில் 'தி.மு.க. நடத்துகின்ற கையெழுத்து இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் முழுமையாக பங்கேற்கிறது' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்.
    • வாரத்தின் 5 நாட்கள், பள்ளி முடிந்த பிறகு மாலை நேரத்தில் இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்.

    சென்னை:

    நடப்பு கல்வி ஆண்டு துவங்கி 5 மாதங்கள் முடிவடைந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் துவங்காமல் உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகளை உடனடியாக துவங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, நீட் பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

    அதன்படி , தற்போது நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    தொழிற்கல்வி இணை இயக்குனர் அனுப்பி உள்ள அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்களில் ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு எழுத விருப்பமும் ஆர்வமும் உள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.

    மேலும், பெரும்பாலான மாணவர்கள் நுழைவுத் தேர்வு பயிற்சியில் பங்கேற்கும் வகையில், அனைத்து மாணவர்களையும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமூட்டி ஊக்கப்படுத்தலாம். ஆனால் கட்டாயப்படுத்துதல் கூடாது.

    மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்க, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் முதுகலை பாட ஆசிரியர்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும்.

    நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் தன்னார்வத்துடன் செயல்படவல்ல ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களையும் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் இருப்பின் இக்குழுவில் இணைத்துக் கொள்ளலாம்.

    அனைத்து வேலைநாட்களிலும் பாடவாரியாக மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பின்வருமாறு ஜே.இ.இ., நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பள்ளியிலேயே பயிற்சி வகுப்புகள் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும்.

    திங்கள்-தாவரவியல், கணிதம்; செவ்வாய்-இயற்பியல்; புதன்-விலங்கியல், கணிதம்; வியாழன்-வேதியியல்; வெள்ளி-மீள்பார்வை, சிறுதேர்வு என பள்ளி அளவிலான தினசரி தேர்வுகள் வார இறுதி நாளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வழங்கிட மாநிலக்குழு உதவி புரியும். மேலும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியேயும் மாணவர்களுக்கு தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப்படும். அதுசார்ந்து அவ்வப்போது வாட்ஸ்அப்பில் பகிரப்படும்.

    நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்ககத்தால் வழங்கப்படும் கால அட்டவணையை பின்பற்றி முறையாக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

    பயிற்சி வழங்கப்படும் பாடத்தலைப்பினைப் பற்றிய சிறு அறிமுகம், அப்பாடப் பகுதியில் இருந்து நுழைவுத் தேர்வுகளுக்கு எதிர்நோக்கப்படும் வினாக்களைத் தீர்ப்பதற்கான சிறு குறிப்புகள், சூத்திரங்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான எளிய முறைகள் ஆகியன மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.

    இப்பயிற்சிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு பாட வல்லுநர்கள் (5 பாடங்களுக்கு 2 ஆசிரியர்கள் என 10 பேர்) அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும்.

    முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நிலை) இக்குழுவின் உறுப்பினர் செயலராக செயல்படுவார்.

    பள்ளிதோறும் இப்பயிற்சியில் பங்குபெறும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் மாவட்ட அளவில் பங்குபெறும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தொகுத்தல் மற்றும் தேர்வு சார்ந்த ஏற்பாடுகள் ஆகியவற்றை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும்.

    மாநிலக் குழுவில் இருந்து வரும் வினாத்தாள்கள், விடைக்குறிப்புகள் ஆகியவற்றை பள்ளிகளுக்கு அனுப்பி இச்செயல்பாடுகள் நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும். மாவட்ட அளவிலான இருவகையான (மாவட்டக்குழு மற்றும் பாட ஆசிரியர்கள் குழு) வாட்ஸ்அப் உருவாக்கி தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல் வேண்டும்.

    இதற்கு விருப்பமுள்ள மாணவ / மாணவிகளை தேர்வு செய்ய வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்.

    பயிற்சிக்கான கால அட்டவணையை மாநிலக் குழுவின் உதவியோடு தயார் செய்வது. பயிற்சிக்குரிய வினாத்தாள்களைத் தயார் செய்ய முகாம் நடத்துதல். வினாவிற்கான விடைகளைத் தயாரித்தல்.

    பயிற்சிக்குத் தேவையான காணொளிக் காட்சிகளைத் தயாரித்தல். குழுக்களின் பணிகளை ஒருங்கிணைத்தல். மாவட்ட பணிகளை ஆய்வு செய்தல்.

    அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்பு கள் நடைபெறச் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு கால அட்டவணை தயார் செய்தல். பயிற்சிக்குரிய வினாத்தாள்கள், விடைக் குறிப்புகள் தயார் செய்தல்.

    ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை கண்காணித்தல். மாவட்டக் குழுக்கள் விளக்குவதை கண்காணிப்பது. அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் வட்டார அளவில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதைக் கண்காணிப்பது, பாடம் ஒன்றிற்கு 4 ஆசிரியர்கள் வீதம் 20 ஆசிரியர்களை ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறோம்.
    • 6 ஆண்டுகளில் அனிதா ஆரம்பித்து 22 குழந்தைகள் நீட் தேர்வு காரணமாக இறந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அழகிய மண்டபத்தில் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பலமுறை வருகை தந்துள்ளேன். கட்சி உறுப்பினராக இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக வந்து உள்ளேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என்னால் மறக்க முடியாது. அமைச்சர் பதவி ஏற்று உங்களின் வாழ்த்துக்களை பெற தற்பொழுது வந்துள்ளேன்.

    சேலத்தில் இளைஞரணி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இதற்கு அனுமதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    காஞ்சிபுரம், தேனி, விருதுநகர், நெல்லையை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் தற்போது செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    1956-ம் ஆண்டு குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்தது. இன்னும் 3 நாட்களில் குமரி மாவட்டம் பிறந்தநாள் கொண்டாடுகிறது. குமரி மாவட்டம் பிறந்த நவம்பர் மாதத்தில் தான் நானும் பிறந்துள்ளேன். சூரியனை ஓவியமாக, புகைப்படமாக பார்ப்பார்கள்.

    ஆனால் குமரி மாவட்ட மக்கள் மட்டும் தான் சூரியன் உதிப்பதை நேரில் பார்க்கிறீர்கள். வடக்கில் இமயமலை உயரமாக உள்ளது. தெற்கில் அய்யன் திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்தில் உள்ளது. தலைவர் கலைஞர் இந்த சிலையை நிறுவினார். தலைவர் கட்டளையை எதிர்பாராமல் சுயநலம், தன்னலம் பார்க்காமல் நிறைவேற்றுபவர் தான் செயல்வீரர்கள். தலைவர் இடும் கட்டளையை செயல்படுத்துபவர்கள் தான் செயல்வீரர்கள்.

    சேலத்தில் நடக்கும் மாநாட்டிற்கு அழைக்கத் தான் நான் வந்திருக்கிறேன். என்னை விட நீங்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளீர்கள். உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு இளைஞரணியே சாட்சி.

    தி.மு.கவில் 23 அணிகள் உண்டு. கழகத்தின் முதன்மை அணி என கலைஞராலும், முதல்வராலும் பாராட்டப்பட்ட அணி இளைஞரணி. இளைஞரணி 1981-ல் ஆரம்பிக்கப்பட்டது. முதல் மாநாட்டை 2017-ல் கலைஞர் தலைமையில் நம் தலைவர் நெல்லையில் நடத்தினார். 2-வது மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடக்கிறது. குடும்பத்துடன் அனைவரும் கலந்துகொண்டு வெற்றி பெற வைக்க வேண்டும்.

    2 மாதம் முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. தயிர் சாதமா, புளி சாதமா என தெரியவில்லை. மாநாடு எதற்காக நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. மிமிக்ரி, ஆடல்பாடல், பட்டப்பெயர் வழங்கும் நிகழ்ச்சிகள் மாநாட்டில் நடந்தன.

    கட்சிகொள்கை, இயக்க வரலாறு, இயக்க தலைவர்கள் பற்றி பேசவில்லை. ஒரு மாநாடு எப்படி நடக்கக்கூடாது என நடந்ததுதான் மதுரை மாநாடு.

    இந்தியாவில் இப்படி ஒரு மாநாடு நடந்ததில்லை என்ற அளவில் சேலம் மாநாடு நடக்க வேண்டும். நம் மாநாட்டில் இயக்கம் மற்றும் கொள்கை பற்றி பேசவேண்டும். தலைவர் ஆட்சி ஏற்று 2½ ஆண்டுகள் ஆகிறது. தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளையும், சொல்லாத வாக்குறுதிகளையும் செய்துள்ளோம்.

    இதில் 4 சாதனைகள் மிக முக்கியமாக உள்ளது. ஆட்சி பொறுப்பேற்றதும் முதலமைச்சர் போட்ட 3 கையெழுத்தில் முதல் கையெழுத்து மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து. பெண்கள் கல்விக்காக புதுமைப்பெண் திட்டம். அவர்கள் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் ஊக்கதொகை வழங்குகிறோம்.

    1 முதல் 5 வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 31 ஆயிரம் பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

    இந்தியாவுக்கு எடுத்துக்காட்டான இந்த திட்டத்தை பக்கத்து மாநிலங்கள் பாராட்டுகின்றன. முன்பு வேலைக்குச் செல்பவர்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கவிலை என வருத்தப்பட்டார்கள். இப்போது முதலமைச்சரை நம்பி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    தேர்தல் வாக்குறுதியில் சொன்ன திட்டமான அனைத்து மகளிருக்கும் கலைஞர் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். ஒரு கோடியே ஆறு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு அதனை வழங்கி வருகிறோம். ஆனால் பிரதமர் மோடி சொன்ன ரூ.15 லட்சம் என்னாச்சு.

    மோடி, மத்திய பிரதேசம் உள்பட எங்கு சென்றாலும் தி.மு.க. பற்றியும், தலைவரை பற்றியும் குறிப்பாக என்னைப் பற்றியும்தான் பேசுகிறார். அவருக்கு என் மேல் அவ்வளவு பிரியம். பிரதமர் மோடி 9 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை.

    தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடப்பதாக சொல்கிறார். தமிழகமே ஒரே குடும்பமாக செயல்படுகிறோம். மத்திய ஆட்சியில் ஏர்போர்ட், ரோடு, ரெயில்வே என அனைத்து பொதுத்துறையும் அதானியிடம் கொடுத்து விட்டார். ஒரு தனியார் துறை எப்படி 9 வருடத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது.

    சி.ஏ.ஜி அமைப்பு அறிக்கையில் 9 ஆண்டில் பா.ஜ.க ஊழல் வெளியே வந்துள்ளது. 7½ லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது என தெரியவில்லை. ஒரு கிலோ மீட்டர் ரோட்டுக்கு 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள். ரமணா படத்தில் இறந்து போனவருக்கு ஆபரேஷன் செய்ய சொன்னதுபோன்று, ஆயுஷ்மன் பாரத் திட்டத்தில் இறந்துபோன 88 ஆயிரம் பேருக்கு ஆயுள் காப்பீட்டுத்திட்டம் கொடுத்திருக்கிறார்கள்.

    நான் பேசாததை பேசியதாக பரப்பினார்கள். நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன், நான் கலைஞரின் பேரன். எடப்பாடிக்கு நம் தலைவர் ஒரு பெயர் வைத்திருக்கிறார். பாதம் தாங்கி பழனிசாமி. அவர் பிரதமர், அமித்ஷாவின் பாதங்களை தாங்கி வருகிறார்.

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறோம். கிராமப்புற மாணவர்கள் டாக்டர் ஆக வேண்டும் என கருதி பிளஸ்-2 மதிப்பெண்ணே போதும் என மருத்துவ நுழைவுத்தேர்வை ரத்து செய்தது கலைஞர். ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வை நுழைய விடவில்லை.

    பா.ஜ.க நீட் தேர்வை நுழைத்து விட்டது. 6 ஆண்டுகளில் அனிதா ஆரம்பித்து 22 குழந்தைகள் நீட் தேர்வு காரணமாக இறந்துள்ளனர். கடைசியாக சென்னையைச் சேர்ந்த மாணவன் ஜெகதீசனும், அவரது தந்தையும் இறந்துவிட்டனர். நீட் தேர்வு தி.மு.க பிரச்சனை இல்லை. அனைத்து மாணவர்களின் கல்வி உரிமை பிரச்சனை ஆகும்.

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொன்னோம். 2 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். மாணவர்களின் கல்வி உரிமை அது. பா.ஜ.க கூட்டணியை விட்டு அ.தி.மு.க. வெளியே வந்து விட்டது. இப்போதாவது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் எனவும். கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவியுங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னேன்.

    இந்த போராட்டத்தில் வெற்றிபெற்றால் அதற்கான வெற்றிக்கான காரணம் நீங்கள் என நாங்கள் சொல்கிறோம். ஆனால், நீட் ரத்து கையெழுத்து மிகப்பெரிய நாடகம் என்கிறார் பழனிசாமி. உண்மையான நாடகக்காரர் யார் என சசிகலா, பன்னீர்செல்வத்திடம் கேட்டால் தெரியும்.

    மக்களை சந்திக்காமல் கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை அடைத்து வைத்து சசிகலா காலில் விழுந்து முதல்வர் ஆனார். பின்னர் சசிகலாவையே கட்சியில் இருந்து நீக்கிவிட்டார் பழனிசாமி.

    சேலத்தில் நடைபெறும் இளைஞர்களின் மாநாட்டில் 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட போஸ்ட் கார்டை முதலமைச்சரிடம் வழங்க வேண்டும்.

    இந்தியாவை மீட்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். 2021-ல் அடிமைகளை வீட்டிற்கு அனுப்பினீர்கள். தற்பொழுது 2024-ல் நடைபெறும் தேர்தலில் அடிமைகளை மட்டும் இன்றி எஜமானர்களையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். சேலம் இளைஞர் அணி மாநாடு இதற்கு முத்தாய்ப்பாய் அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் சேலம் மாநாட்டிற்கு ரூ.50 லட்சத்திற்கான நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடம் வழங்கினார்.

    • அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைப் பறித்துள்ளது.
    • தமிழ்நாட்டில் பரந்த சட்டமன்ற, அரசியல் மற்றும் சமூக ஒருமித்த கருத்தின் நோக்கத்தைச் செயல்படுத்திட இயலாமல் முடக்கியுள்ளது.

    சென்னை:

    சென்னை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, டெல்லி புறப்பட்டுச் செல்லும் இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இன்று சந்தித்தார்.

    அப்போது, இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள, தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு 2021-க்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டுமென நேரில் வலியுறுத்திய முதலமைச்சர், இதுதொடர்பாக இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, இன்று தான் எழுதியுள்ள கடிதத்தையும் வழங்கினார்.

    அக்கடிதத்தில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றதாகவும், இந்தச் செயல்முறை கடந்த காலங்களில் மாநிலத்தில் நல்ல பலன்களை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ஒன்றிய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதாலும், அதைத் தொடர்ந்து ஒன்றிய சட்டங்களில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாகவும், பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் நடைபெற்ற சேர்க்கை முறை நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கிட நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று 'தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021' (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2021) நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளுநருக்கு 18-9-2021 அன்று அனுப்பப்பட்டதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், ஆளுநர் ஐந்து மாத காலத்திற்குப் பிறகு, மேற்படி சட்டமுன்வடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குத் திருப்பியனுப்பிய நிலையில், 8-2-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறவேண்டி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    பின்னர், மேற்படி சட்டமுன்வடிவு ஆளுநரால் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்தச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஒன்றிய உயர்கல்வித் துறை, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கோரிய அனைத்து விளக்கங்களும், ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு உரிய காலத்திற்குள் வழங்கப்பட்டுள்ளதாக தேதி வாரியாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பில் போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட பிறகும் இந்த விஷயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, 14-8-2023 அன்று தான் கடிதம் எழுதியிருந்ததாகவும், அதில், நீட் தேர்வினால் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மாணவர்கள் தற்கொலைகள் குறித்தெல்லாம் குறிப்பிட்டு, இனியும் தாமதிக்காமல் மேற்படி சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென தான் கோரியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். அதோடு, ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இதுவரை இந்தச் சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கப்படாத நிலை உள்ளது என்றும் முதலமைச்சர் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சூழ்நிலையில், நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைப் பறித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் பரந்த சட்டமன்ற, அரசியல் மற்றும் சமூக ஒருமித்த கருத்தின் நோக்கத்தைச் செயல்படுத்திட இயலாமல் முடக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
    • மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி வாயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முகாம் அமைத்து டிஜிட்டலில் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.

    சென்னை:

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நடத்திய நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிரான இயக்கத்தில் தனது கையெழுத்தை பதிவு செய்தார்.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இதே போல் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணிகளின் மாநில நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தி.மு.க. சிறப்பு பேச்சாளர் பங்கேற்று மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வு குறித்தும் அதன் பின்னால் உள்ள அரசியல் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்து கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

    50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

    மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி வாயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முகாம் அமைத்து டிஜிட்டலில் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. ஆன்லைன் பதிவும் நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் இதுவரை 8 லட்சம் கையெழுத்து பெறப்பட்டு உள்ளது. சென்னையில் விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா ஒரு பள்ளியில் சென்று மாணவர்களிடம் கையெழுத்து பெற்றது சர்ச்சையாகி உள்ளது. இதனால் இப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு வெளியே கையெழுத்து வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்போது ஒரு எம்.எல்.ஏ. தொகுதிக்கு 1000 கார்டு வீதம் முதற்கட்டமாக அனுப்பப்பட்டு கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து இந்த கார்டுகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிஜிட்டலாக பெறப்படும் கையெழுத்துகள் சேலத்தில் டிசம்பரில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பின்னர் அறிவாலயம் வழியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்க அறப்போர் தமிழகத்தில் இருந்து விரட்டும் வரை தொடர் நிகழ்வாக இருக்கும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி மாணவரணி, மருத்துவரணி இணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    அமைச்சர் கீதாஜீவன்

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைதுறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மருத்துவரணி அமைப்பாளர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கி ணங்க, தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாணவரணி, மருத்துவரணி இணைந்து நடத்துகின்ற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்க அறப்போர் தமிழகத்தில் இருந்து விரட்டும் வரை தொடர் நிகழ்வாக இருக்கும்.

    மாணவர்களின் எதிர்காலம்

    தேவையில்லாத ஒன்றை நம்மீது திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாணவர்களின் எதிர்காலம் கருதி இந்த நீட் தேர்வை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    நிகழ்ச்சியில், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செய லாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் அன்ன லெட்சுமி, கலைச்செல்வி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி,

    ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சின்னப்பாண்டி யன், ராதாகிருஷ்ணன், காசிவிஸ்வநாதன், மும்மூர்த்தி, செல்வராஜ், சின்னமாரி முத்து, நவநீத கண்ணன், அன்புராஜன், ராமசுப்பு, மாவட்ட அணி அமைப்பாளர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்பழகன், குபேர்இளம்பரிதி, கவிதா தேவி, ரமேஷ், துணை அமைப்பா ளர்கள் பிரதீப், ஜோசப் அமல்ராஜ், ஜுடி, பார்வதி, மகேந்திரன், ராதாகிருஷ்ணன், பாரதி, கோகுல்நாத், பார்வதி, பெனில்டஸ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இளை ஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் ஆலோசனையின்படி இன்று மதுரை திருப்பாலை குறிஞ்சி மகாலில் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பாக நீட்தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் ஜனாதிபதிக்கு தமிழ் நாட்டில் உள்ள ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என கையெழுத்திட்டனர்

    இந்த கையெழுத்து இயக்கத்திற்கு இளைஞரணி மாநில துணை அமைப்பாளர் ஜி.பி.ராஜா, வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலை மை வகித்தனர். தி.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் முன்னாள் எம்.பி., கம்பம் செல்வேந்திரன் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் பால சுப்பிர மணி யன், சோம சுந்தரபாண்டியன், நேரு பாண்டி, சசிகுமார், வீரராக வன், வாடிபட்டி பால் பாண்டி, சிறை செல் வன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் வைகை மருது, இளங்கோ, குமரேசன், மற்றும் கவுன் சிலர் ரோகினி பொம்மத் தேவன், பேரூ ராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • நீட் தேர்வுக்கு எதிராக போராட அ.தி.மு.க.வினரையும் அழைக்கிறேன்.
    • தமிழர்களின் உரிமையை காக்க வாருங்கள். இதை வெறும் தி.மு.க.வின் பிரச்சனை என்று யாரும் கருத வேண்டாம்.

    சென்னை:

    நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தி.மு.க. மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் 50 நாட்களில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் இன்று தொடங்கியது.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மருத்துவர் அணி செயலாளர் எழிலன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., மருத்துவர் அணி தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் அணி இணை செயலாளர் எஸ்.மோகன் வரவேற்றார்.

    கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நீட் விலக்குதான் எங்கள் இலக்கு என்று தொடர்ந்து போராடி வருகிறோம். நீட் தேர்வால் தரமான டாக்டர்கள் கிடைப்பார்கள் என்றார்கள். மருத்துவக் கல்லூரிகளில் பணம் கொடுத்து சேருவது தடுக்கப்படும் என்றும் சொன்னார்கள்.


    ஆனால் முதுகலை பட்டப்படிப்பில் நீட் தேர்வில் முட்டை மதிப்பெண் எடுத்தாலும் பணம் கொடுத்து சேர முடியும் என்பதைதான் உருவாக்கி இருக்கிறார்கள். (அப்போது ஒரு முட்டையை கையில் எடுத்து காட்டினார்)

    நீட் தேர்வுக்கு எதிராக போராட அ.தி.மு.க.வினரையும் அழைக்கிறேன். எல்லோரும் சேர்ந்து போராடுவோம் வாருங்கள். கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுங்கள். முன்பு பா.ஜனதா கூட்டணியில் இருந்ததால் வரமுடியவில்லை. இப்போது வெளியே வந்து விட்டீர்கள்.


    தமிழர்களின் உரிமையை காக்க வாருங்கள். இதை வெறும் தி.மு.க.வின் பிரச்சனை என்று யாரும் கருத வேண்டாம். இது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சனை. இதில் தொடர்ந்து ஒன்றிய அரசு அலட்சியம் செய்தால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்கிறேன்.

    இந்த நேரத்தில் ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன். சாவியை பார்த்து சுத்தியல் கேட்டதாம் நான் இவ்வளவு பெரியதாகவும் வலிமையாகவும் இருந்தும் பூட்டை திறக்க முடியவில்லை. ஆனால் நீ எளிதாக திறந்து விடுகிறாய் என்றதாம்.

    அதற்கு சாவி சொன்னதாம் நீ தலையில் அடிக்கிறாய். நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன் என்றதாம். அதை போல் எவ்வளவு வலிமையான கட்சியாக இருந்தாலும் பாரதிய ஜனதாவால் தமிழர்களின் இதயத்தை தொட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முடிவில் சென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் மணிரத்தினம், செந்தில்வேல், வக்கீல் மதிவதனி, பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் பேசினார்கள்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதிமாறன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் தமிழகம் முழுவதும் 63 கட்சி மாவட்டங்களிலும் இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கியது.

    • அனைவரின் கையெழுத்தையும் டிஜிட்டலாக பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய முழு இலக்கு.
    • சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி அன்று நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் முதலமைச்சரிடம் 50 நாட்களில் பெறப்படும் கையெழுத்துகளை வழங்க இருக்கிறோம்.

    சென்னை:

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

    இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கல்வி உரிமைக்கான கழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

    நம்முடைய அரசு அமைந்த பிறகு, கடந்த ஆகஸ்டு 20-ந்தேதி நம்மு டைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி முடித்தோம். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    அந்தப் போராட்டத்திலேயே நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தை நாம் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு பேசியிருந்தேன். அதற்கான முன்னெடுப்பாக தான் வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) கையெழுத்து இயக்கத்தை நாம் தொடங்க உள்ளோம்.

    50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையில் நம் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை இந்திய ஒன்றியத்துக்கு உணர்த்தும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் இருக்க வேண்டும்.

    மக்களின் கையெழுத்துகளை பெறுவதற்காக 'போஸ்ட் கார்டு' மற்றும் இணையதளம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் அனைவரின் கையெழுத்தையும் டிஜிட்டலாக பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய முழு இலக்கு.

    ஏனெனில் அதில் ஒவ்வொருவரும் கையெழுத்து இடஇட நீட் தேர்வுக்கு எதிராக எத்தனை பேர் கையெழுத்து போட்டுள்ளனர் என்ற கவுண்ட் டிஜிட்டலாக அந்த வெப்சைட்டில் தெரியும்.

    அதனால் உறுப்பினர் சேர்க்கைக்கு படிவங்களை எடுத்து செல்வதுபோல் ஐபாட், டேப்களை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று வீடு வீடாக ஏறி நாம் கையெழுத்து பெற வேண்டும்.

    கவுன்ட் காட்ட வேண்டும் என்பதற்காக இல்லாதவர்களின் பெயர்களை போலியாக எழுதி, ஏதோ 10 நம்பர்களை போன் நம்பர் என டைப் செய்வது போன்ற தவறான விஷயங்களை தயவு செய்து தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி அன்று நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் முதல்-அமைச்சரிடம் 50 நாட்களில் பெறப்படும் கையெழுத்துகளை வழங்க இருக்கிறோம். பிறகு முறைப்படி அறிவாலயத்தின் வழியாக, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் என்று இலக்கு வைத்துள்ளோம். கல்லூரி முன்பு நின்று மாணவர்களின் கையெழுத்துகளை பெறலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சியை பொதுமக்கள், மாணவர்கள் அறியும் வகையில் சிறப்பாக செய்திட வேண்டும்.

    சென்னையில் கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை (21-ந்தேதி) கையெழுத்து இயக்கத்தை நான் தொடங்கி வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து நடத்த உள்ளனர்.

    ×