search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனாதனம்"

    • அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது.
    • நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது

    சென்னை:

    சென்னை அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கோவில் அர்ச்சகர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:-

    சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்றத்தாழ்வையும் வலியுறுத்தவில்லை. நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது. பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சனாதனத்துடன் நெருங்கிய பிணைப்புடன் செயல்படும் அரசுடன் இணைகிறேன்
    • பாடகி அனுராதாவுக்கு 2017ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

    பிரபல பாலிவுட் பாடகி அனுராதா பட்வால் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

    பாஜக டெல்லி தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலுனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் அனுராதா பட்வால் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

    பாஜகவில் இணைந்த பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அனுராதா, "சனாதனத்துடன் நெருங்கிய பிணைப்புடன் செயல்படும் அரசுடன் இணைகிறேன். பாஜகவின் ஓர் அங்கமாக இருப்பது தனக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதுவதாக தெரிவித்தார்.

    மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "அது குறித்து இன்னும் தெரியவில்லை" என்று அவர் பதிலளித்துள்ளார்.

    பாடகி அனுராதாவுக்கு 2017ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில், அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில், பாடகி அனுராதா இசை நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய பிரதேசம் உள்பட 3 மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
    • காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

    இந்நிலையில், சனாதன தர்மத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், சனாதன தர்மத்தைக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதால் அக்கட்சி தோல்வியின் விளிம்பில் உள்ளது. சனாதனத்தை எதிர்த்து இந்தியாவில் அரசியல் செய்யமுடியாது. சனாதனத்தின் அழிவை அறிவிப்பவர்களுடன் காங்கிரஸ் கட்சி நிற்கிறது. சனாதன தர்மத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் கட்சியை மூழ்கடித்து விட்டது. சாதிவாரி அரசியலை நாடு ஏற்காது, சனாதனத்தை எதிர்த்தால் இதுதான் நடக்கும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

    • ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும்.
    • சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.

    சேலம்:

    சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து 2017-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கருவறை மண்டபம், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்பட அழகிய வேலைபாடுகளுடன் கூடிய திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிலையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும். பொதுவாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடைமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும்.

    சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான 8 வழிச்சாலை வருங்காலத்தில் வரும். சேலம் மாநகரம் சென்னைக்கு மற்றும் பெங்களூருக்கு நிகராக வளர வேண்டும் என வேண்டுகிறேன்.

    சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறும் தி.மு.க. முதலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். சனாதனத்தை ஒழிப்பேன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்து. சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.

    கவர்னர்கள் வாங்கும் சம்பளம் குறித்து அமைச்சர்கள் விமர்சிப்பதை கண்டிக்கிறேன். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கொலையாளிகள், குண்டு வைத்தவர்களை விடுவிக்க தீர்மானங்கள் நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதை கவர்னர்களால் வேடிக்கை பார்க்க முடியாது. மாநிலங்களில் அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது கவர்னர்களின் கடமை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கோவில் ஆன்மிகச் சுற்றுலாவினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • சனாதான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனை சட்டப்படி எதிர்கொள்வோம்.

    சென்னை:

    திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத வைணவத் கோவில் ஆன்மிகச் சுற்றுலாவினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    புரட்டாசி மாதத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் ஒரே நாளில் காலையில் தொடங்கி மாலைக்குள் 6 வைணவ கோவில்களில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனமும் அந்தந்த கோவில்களின் பிரசாதங்களும், மதிய உணவும் வழங்கப்படும்.

    சென்னையில் 2 பயணத் திட்டங்களாகவும், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 4 மண்டலங்களில் இன்று தொடங்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஆடி மாதத்தில் ஒரே நாளில் 6 அம்மன் கோவில்கள், எட்டு கோவில்கள் என இரண்டு பிரிவாக பிரித்து அம்மனை தரிசிப்பதற்கு இதேபோன்று ஒரு ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 1,000 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றது மகிழ்ச்சியை தருகிறது.

    நவராத்திரியை முன்னிட்டு ஒரே இடத்தில் பிரசித்தி பெற்ற 9 அம்மன்களை தரிசனம் செய்யக்கூடிய அளவில் ஒரு நிகழ்ச்சியினை நவ ராத்திரி விழாவாக ஏற்பாடு செய்ய இருக்கின்றோம். அந்த நிகழ்விலே கொலுவும் அமைக்கப்பட இருக்கின்றது.

    இன்றைக்கு திருவல்லிக்கேணியில் தொடங்கப்பட்டுள்ள ஆன்மிகச் சுற்றுலாவில் 62 நபர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம், தல சயன பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு 34 நபர்களும்.

    இரண்டாவது திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர், வைத்திய வீரராகவ பெருமாள் கோவில், ஸ்ரீ பெரும்புதூர், ஆதிகேசவ பெருமாள் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு 28 நபர்களும் அழைத்து செல்லப்படுகின்றனர்.

    சனாதான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனை சட்டப்படி எதிர்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக கவர்னர் கூறுகிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மஸ்தான் பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவச்சிலை திறப்பு விழா, தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதுபோல் தெரியவில்லை. இதனை அமல்படுத்த வேண்டுமென்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும், தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

    பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப்போகிறார்கள் என்ற தெளிவு இல்லை. மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து வருகிறோம்.

    தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக கவர்னர் கூறுகிறார். எனவேதான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். சாதிய வேறுபாடுகள் எப்போதும் இருக்கக்கூடாது. சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் நம்பவில்லையா, நம்புங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதான விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் மணிமாறன், கோ.தளபதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    • சனாதனத்தின் மீதான தாக்குதல் என்பது இந்துக்களுக்கு எதிரானது அல்ல.
    • சனாதனம் பற்றிய புரிதலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கிறது.

    இந்தியா கூட்டணி உருவானதில் இருந்து மோடி பதற்றத்தில் இருக்கிறார். சனாதனத்தின் மீதான தாக்குதல் என்பது இந்துக்களுக்கு எதிரானது அல்ல.

    சனாதனம் பற்றிய புரிதலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கிறது. தமிழகத்தில் புரிந்து கொள்வதற்கும், வட இந்தியாவில் புரிந்து கொள்வதற்கும் வேறுபாடு தெரிகிறது.

    • கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க. அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.
    • உலக அளவில் பெரிய பொருளாதார நாடாக இந்தியா 5வது இடத்தில் உள்ளது.

    பழனி:

    என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பல்வேறு இடங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார். மாரியம்மன் கோவில் தேரடி வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க. அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தேய்ந்துகொண்டே வருகிறது. தமிழகத்திலும் இதே நிலை ஏற்படும். 2014க்கு முன்பு 60 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. பா.ஜ.க. 15 ஆண்டுகள்தான் ஆட்சி செய்திருக்கிறது. ஆனால் இந்த 15 ஆண்டுகளில் 200 வருடங்கள் கழித்து எப்படி இருக்க வேண்டுமோ? அதுபோன்ற வளர்ச்சியை கண்டுள்ளது.

    இந்தியாவில் மட்டும் 47 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெரிய பொருளாதார நாடாக இந்தியா 5வது இடத்தில் உள்ளது. தனி மனித வருமானம் உயர்ந்திருக்கிறது. உள்நாட்டு பிரச்சினைகள் அனைத்தையும் பா.ஜ.க. அரசு சரி செய்து உள்ளது. 3-வது முறையாக மோடி 2024-ம் ஆண்டு பிரதமராக அமரும்போது இந்தியா பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுக்கும்.

    தற்போது அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் பேமிலி கோட்டாவில் உள்ளனர். குடும்ப கோட்டாவில் சீட் வாங்கி ஜெயிப்பதுதான் தி.மு.க.வின் பார்முலா.

    முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை வாரிசு அரசியல் கூடாது என்றார். அவரது கொள்கையை கடைபிடிக்கும் ஒரே கட்சி பா.ஜ.க. மட்டும்தான். தி.மு.க. அரசியலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டிய ஒரு கட்சி. ஏழை மக்களின் வலி அவர்களுக்கு தெரியாது.

    காங்கிரசை எதிர்த்து அரசியலுக்கு வந்தவர்கள் மம்தாவும், கெஜ்ரிவாலும்.

    தற்போது இவர்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் உள்ளனர். இதை மக்கள் எவ்வாறு ஏற்பார்கள். சனாதனத்தை ஒழிப்பேன் என்று தி.மு.க. தொடர்ந்து கூறி வருகிறது. சனாதனத்தை ஒழிப்பதும், இந்து தர்மத்தை ஒழிப்பதும்தான் இந்தியா கூட்டணியின் கொள்கை. இந்த கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாது. 400 எம்.பி.க்களோடு மோடியை மீண்டும் பிரதமராக அமர வைக்க வேண்டும். தமிழகத்தில் இந்து கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் களவு போகிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என்ற நிலை ஏற்படும். பழனி கோவில் சொத்துக்களும் தொடர்ந்து மாயமாகி வருகின்றன. எனவே அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகால எதிர்காலத்தை யோசித்து பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாகர்கோவிலில் விடியல் சேகர் பேட்டி
    • மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    நாகர்கோவில் :

    தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் இன்று நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சர்ச்சையை தொடங்கி உள்ளார். இந்தியாவும், தமிழகமும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு திகழ்கிறது. ஆனால் தேர்தல், வாக்கு அரசியலுக்காக சிறுபான்மை மக்களை குறி வைத்து உதயநிதி ஸ்டாலின் சனாதானம் குறித்து சர்ச்சையை கிளப்பி உள்ளார். இது தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. சிறைகளில் கூட கஞ்சா, செல்போன்கள் தாராளமாக கிடைக்கிறது. போதை பொருட்கள் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. உளவுத்துறை போலீசார் அதை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். உளவுத்துறை செயல் இழந்து காணப்படுகிறது. சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் சென்ற வாகனமே பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இது அரசின் நிர்வாக திறமை சீர்கேட்டை காட்டுகிறது.

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அதிக அளவு கனிமங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் 6 லட்சம் விவசாயிகளின் சான்றிதழ்களை வேளாண் துறை அதிகாரிகள் அனுப்பாமல் உள்ளனர். இதனால் 6 லட்சம் விவசாயிகள் பயன்பெற முடியாமல் உள்ளனர்.

    கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு, மெட்ராஸ் ஐ பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் வருகிற நாடாளுமன்ற தேர்தல் அமையும்.

    நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியுடன் த.மா.க. உள்ளது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும். நாடாளுமன்ற தேர்தல் குறித்து த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் வருகிற அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியா, பாரதம் என்பது ஒரே வார்த்தை தான். இதை அரசியலாக வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட தலைவர் டி.ஆர். செல்வம், பொருளாளர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்
    • INDIA என்பது சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான்- பொன்முடி

    சானதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்க INDIA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் திமுக உள்ளது. இதில் உள்ள மற்ற பெரும்பாலான கட்சிகள் உதயநிதி ஸ்டாலின் கருத்தை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ராகவ் சதா இதுகுறித்து கூறியதாவது:-

    நான் சனாதனத்தில் இருந்து வந்தவன். இதுபோன்ற எதிர் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மேலும் எதிர்க்கிறேன். இதுபோன்ற கருத்துகளை கூறக் கூடாது. எந்தவொரு மதத்திற்கு எதிராகவும், இதுபோன்ற கருத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். அனைத்து மதத்திற்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.

    சில கட்சிகளில் இருந்து சில தலைவர்கள் இதுபோன்று கருத்துகளை தெரிவிக்கின்றனர். இது INDIA கூட்டணியின் கருத்து என்று அர்த்தம் இல்லை. நாடு எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றிற்கு எதிராக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து மாநிலத்தின் மாவட்டத்தில் இருந்து சிறிய தலைவரால் உருவானது. இது கூட்டணியின் அதிகாரப்பூர்வ கருத்து கிடையாது.

    இவ்வாறு ராகவ் சதா தெரிவித்தார்.

    திமுக அமைச்சர் பொன்முடி, இந்தியா என்பது சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான் எனப் பேசிய வீடியோவை நேற்று பா.ஜனதா வெளியிட்டுள்ளது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
    • பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பதில் அளித்துள்ளனர்

    சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பா.ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜனதா தலைவர்கள் முதல் பிரதமர் மோடி வரை இந்த கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர்.

    தனது பேச்சு திரித்து பொய் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே தமிழக பா.ஜனதா தலைவர்கள் இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தனர். அப்போது, சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோரை பதவியில் இருந்து நீக்கக்கோரி மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவில் "சனாதன எதிர்ப்பு குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதும், அதே மேடையில் அமைச்சர் சேகர் பாபு அமர்ந்திருப்பதும் பதவி ஏற்கும் பொழுது எடுத்த உறுதி மொழிக்கு எதிரானது. இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து சட்ட ரீதியாக நீக்கம் செய்ய வேண்டும்" என அதில் தெரிவித்துள்ளனர்.

    • ஒரு செய்தி வந்தால், அது உண்மையா- பொய்யா என்பதை அறிந்துகொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு.
    • அமைச்சர் உதயநிதி சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப் பரப்பியது குறித்து, பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா?

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி, சனாதனம் குறித்த சில கருத்துகளைத் தெரிவித்தார்.

    பிற்படுத்தப்பட்டோர்– பட்டியலினத்தவர்– பழங்குடியினர்– பெண்ணினத்திற்கு எதிரான 'சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும்' என்றுதான் அமைச்சர் பேசினாரே தவிர எந்த மதத்தையும்– மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை.

    பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வையும் பெண்ணடிமைத் தனத்தையும் நியாயப்படுத்தும் பழமைவாத வர்ணாஸ்ரம- மனுவாத- சனாதன சிந்தனைகளுக்கு எதிராக, இந்திய துணைக்கண்டத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜோதிபா பூலே, நாராயணகுரு, வள்ளலார், வைகுண்டர் என பல பெரியோர்கள் குரல் கொடுத்து வந்துள்ளனர்.

    அந்த மரபின் நீட்சியாக, சாதியின் பெயராலும் சாஸ்திரங்களின் பெயராலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை, பெண்களின் சமத்துவ வேட்கையை மறுத்து- சுரண்டலை நியாயப்படுத்துவதற்கு எதிரான கருத்தியல் ரீதியான வாதங்கள் இந்திய தேசத்தின் பல முனைகளில் இருந்தும் தொடர்ந்து ஒலிப்பதை சமூகவியல் ஆய்வாளர்கள் அறிவார்கள்.

    நிலவுக்குச் சந்திராயன் விடும் இந்தக் காலத்திலும் சாதி வேற்றுமைகள் கற்பித்தும், வர்ணாசிரமக் கருத்துகளைச் சொல்லி பாகுபாடுகளை வலியுறுத்தியும், இந்தப் பிளவுபடுத்தும் எண்ணங்களுக்கு ஆதரவாக சாஸ்திரங்களையும், சில பழைய நூல்களையும் மேற்கோள் காட்டியும் சிலர் பிரச்சாரம் செய்து வரத்தான் செய்கிறார்கள்.

    குழந்தைத் திருமணத்தை ஆதரித்து மாநிலத்தின் ஆளுநரே பேசுகிறார். குழந்தைத் திருமணம் செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால், அதற்கும் தடை போடுகிறார். 'நானே குழந்தைத் திருமணம் செய்து கொண்டவன்தான்' என்றும், அந்த எண்ணங்களை நியாயப்படுத்திப் பேசி வருகிறார்.

    பெண்களை இழிவுபடுத்தியும், அவர்கள் வேலைக்குப் போகக்கூடாது என்றும், கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும், மறுமணத்துக்கு மந்திரமே கிடையாது என்றும் இன்னமும் சிலர் ஆன்மீக மேடைகளில் பேசி வருகிறார்கள்.

    சமூகத்தின் சரிபாதிக்கும் அதிகமான பெண் இனத்தை 'சனாதனம்' என்ற சொல்லை வைத்துத்தான் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். இத்தகைய அடக்குமுறை சிந்தனைகளுக்கு எதிராகத்தான் அமைச்சர் உதயநிதி பேசினார். இத்தகைய கொள்கைகளை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும் என்று சொன்னார்.

    இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத பா.ஜ.க. ஆதரவு சக்திகள், 'சனாதன எண்ணம் கொண்டவர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னார் உதயநிதி' என்று பொய்யைப் பரப்பினார்கள். இத்தகைய பொய்யைப் பரப்புவதற்காக பா.ஜ.க.வினரால் திட்டமிட்டு வளர்க்கப்படும் சமூக வலைத்தள கும்பலானது, இதனை வட மாநிலம் முழுவதும் பரப்பியது.

    'இனப்படுகொலை' என்ற சொல்லை தமிழிலோ, ஆங்கிலத்திலோ அமைச்சர் உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஆனால் அப்படிச் சொன்னதாக பரப்பினார்கள்.

    பொய்யர்கள்தான் இதனை பரப்புகிறார்கள் என்றால், பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ.க. முதலமைச்சர்கள்- உண்மையில் அமைச்சர் உதயநிதி என்ன பேசினார் என்பதைத் தெரிந்து கருத்து சொல்லி இருக்க வேண்டும். மாறாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் அதே பொய்ச் செய்தியையே பரப்பி உதயநிதியைக் கண்டித்துள்ளார்கள்.

    'நான் அப்படி பேசவில்லை' என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துவிட்ட பிறகாவது தங்களது பேச்சுகளை ஒன்றிய அமைச்சர்கள் மாற்றி இருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை.

    உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஒருவர், அமைச்சர் உதயநிதியின் படத்தை எரித்து, 'தலைக்கு 10 கோடி' என்று விலை வைத்திருப்பதும்- அதனை பா.ஜ.க. ஆதரவு சக்திகள் பரப்புவதும்தான் இவர்களது பாணியா?

    அமைச்சரின் தலைக்கு விலை வைத்து ஒருவர் அறிவிக்கிறார் என்றால், அவர் மீது உத்தர பிரதேச மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததா? வழக்கு போட்டதா? மாறாக, உதயநிதி மேல் வழக்கு போட்டுள்ளார்கள்.

    இந்த நிலையில், 'சனாதனத்தைப் பற்றி தவறாகப் பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்' என்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பேசியதாக தேசிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஒரு செய்தி வந்தால், அது உண்மையா- பொய்யா என்பதை அறிந்துகொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு.

    அப்படி இருக்கையில், அமைச்சர் உதயநிதி சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப் பரப்பியது குறித்து, பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா?

    ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அமைச்சர் எ.வ.வேலு பேசிய வீடியோ ஒன்றின் உண்மைத்தன்மையை அறியாமல் நாடாளுமன்றத்திலேயே பேசியிருந்தார் பிரதமர்.

    இதையெல்லாம் பார்த்தால், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத பிரதமர், இப்போது, மக்களைத் திசைதிருப்பி சனாதனப் போர்வையைப் போர்த்திக்கொண்டு குளிர்காய நினைப்பதாகவே தெரிகிறது.

    மணிப்பூர் பற்றியோ- சி.ஏ.ஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள 7.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றியோ பிரதமரும்- ஒன்றிய அமைச்சர்களும் இன்னும் வாயே திறக்கவில்லை.

    ஆனால் சனாதனத்தைப் பற்றி பேசியவுடன், ஒன்றிய அமைச்சரவையே கூடி இருக்கிறது என்றால், இவர்கள்தான் பிற்படுத்தபட்ட– பட்டியலின – பழங்குடியின மக்களைக் காப்பற்றப் போகிறார்களா? பெண்ணினத்தை முன்னேற்றப் போகிறார்களா?

    அதனால்தான் நேற்று அம்பேத்கரின் பேரன் பிராகாஷ் அம்பேத்கர் கூட, "தீண்டாமையை ஆதரிக்கும் சனாதனத்தை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பிரதமர் பதில் என்ன?

    பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியுள்ள 'இந்தியா' கூட்டணியானது பிரதமரை நிலைதடுமாற வைத்துவிட்டது. 'ஒரே நாடு- ஒரே தேர்தல்' என ஏதோ பூச்சாண்டி காட்டி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலைப் பார்த்து பயந்திருப்பது பா.ஜ.க. தானே தவிர, 'இந்தியா' கூட்டணி அல்ல.

    பா.ஜ.க.வுக்கு இப்போது வந்திருப்பது, சனாதனத்தின் மீதான ஈடுபாடு அல்ல. இந்தியா கூட்டணிக்குள் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட முடியாதா? என்ற அரசியல் கணக்கு. இதைப் புரிந்துகொள்ள பெரிய அரசியல் வித்தகம் எதுவும் தேவையில்லை.

    மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அவர்களே, "சமூக அமைப்பில் சக மனிதர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டோம். நாம் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. மேலும் அது 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும் வரை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்புத் தீர்வுகள் இருக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

    எனவே, இதற்கு மேலும் உதயநிதி பேசியது தொடர்பாக பா.ஜ.க.வினருக்கு விளக்கம் வேண்டும் என்றால், மோகன் பாகவத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

    அரசியலுக்காக மத உணர்வைக் கிளறி ஆதாயம் தேடும் அற்ப அரசியலை, பழுத்த அனுபவமும் நாட்டின் மீது மாறாப் பற்றும் கொண்ட தலைவர்கள் புறந்தள்ளி, பா.ஜ.க.விடமிருந்து நாட்டைக் காக்கும் கடமையை மேலும் வேகப்படுத்துவார்கள்.

    திமுக-வை பொறுத்தவரையில் அதனுடைய கொள்கை கோட்பாடுகள் என்பவை வெளிப்படையானவை.

    'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும், ''ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்றும் இயங்கும் இயக்கம். பிற்படுத்தப்பட்ட- மிகவும் பிற்படுத்தப்பட்ட- பட்டியலின - பழங்குடி மக்களுக்கும்; சிறுபான்மைச் சமூகத்துக்கும்; பெண்ணினத்துக்கும்; ஏழை - எளிய மக்களுக்கும் 'எல்லாம்' கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டு, அவர்களது உயர்வுக்காக குரல் கொடுத்து வரும் இயக்கம். அதனால்தான் ஆறாவது முறையாக ஆட்சியைக் கொடுத்து அலங்கரித்துள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள்.

    அதனால்தான், அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆக முடியும் என்பதை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். இந்தியாவிலேயே முதலில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கொடுத்து, சனாதனம் மறுத்ததை சாத்தியம் ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழகம்.

    எந்தத் தனிமனிதர் உணர்வுக்கும் மதிப்பளித்து அவர்களை சுயமரியாதை உள்ள மனிதர்களாக ஆக்கி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இனம், மொழி, சாதி வேறுபாடு இன்றி அனைவரும் ஒருதாய் மக்களாக வாழும் அமைதிமிகு வாழ்க்கையை உறுதிசெய்து வரும் இயக்கம். கொள்கையை அறிவுப்பிரச்சாரம் செய்தவர்களே தவிர, எந்தக் காலத்திலும் வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம். அத்தகைய பழம்பெரும் பேரியக்கத்தின் மீது களங்கம் கற்பிப்பதன் மூலமாக அரசியல் செய்ய நினைத்தால் அந்தப் புதைகுழியில், பா.ஜ.க.தான் மூழ்கும்!

    இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டள்ளார்.

    ×