search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanatan Dharma"

    • சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்
    • INDIA என்பது சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான்- பொன்முடி

    சானதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்க INDIA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் திமுக உள்ளது. இதில் உள்ள மற்ற பெரும்பாலான கட்சிகள் உதயநிதி ஸ்டாலின் கருத்தை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ராகவ் சதா இதுகுறித்து கூறியதாவது:-

    நான் சனாதனத்தில் இருந்து வந்தவன். இதுபோன்ற எதிர் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மேலும் எதிர்க்கிறேன். இதுபோன்ற கருத்துகளை கூறக் கூடாது. எந்தவொரு மதத்திற்கு எதிராகவும், இதுபோன்ற கருத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். அனைத்து மதத்திற்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.

    சில கட்சிகளில் இருந்து சில தலைவர்கள் இதுபோன்று கருத்துகளை தெரிவிக்கின்றனர். இது INDIA கூட்டணியின் கருத்து என்று அர்த்தம் இல்லை. நாடு எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றிற்கு எதிராக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து மாநிலத்தின் மாவட்டத்தில் இருந்து சிறிய தலைவரால் உருவானது. இது கூட்டணியின் அதிகாரப்பூர்வ கருத்து கிடையாது.

    இவ்வாறு ராகவ் சதா தெரிவித்தார்.

    திமுக அமைச்சர் பொன்முடி, இந்தியா என்பது சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான் எனப் பேசிய வீடியோவை நேற்று பா.ஜனதா வெளியிட்டுள்ளது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • சனாதனம் தர்மம் விவகாரத்தில் அதிமுக-வின் நிலைப்பாடு என்ன?
    • ஆட்சி அதிகாரத்தைவிட, கொள்கைதான் முக்கியம்

    ஜி20 உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்கியது. இதில் ஜி20 அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் மோடி, பேச்சை தொடங்கும்போதே பாரத் எனத் தொடங்கினார். மேலும், ஒவ்வொரு நாட்டின் பெயரை பிரதிநிதிப்படுத்தும் பெயர் பலகையில், பிரதமர் மோடியின் முன் பாரத் என வைக்கப்பட்டிருந்தது. இதனால் பாரத் நாட்டின் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் இந்தியாவின் பெயர் ஏறக்குறை பாரத் என மாற்றடைய உறுதியாகிவிட்டது எனக் கூறலாம்.

    இந்த நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் பின்வருவாறு:-

    கேள்வி: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் முன் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதே?

    பதில்: வாழ்த்துகள் (சிரித்துக்கொண்டே) 9 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது போலவே, இந்தியாவையே மோடி மாற்றி காட்டிவிட்டார்.

    கேள்வி: சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதற்காக உங்களையும், சேகர் பாபுவையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் பா.ஜனதா துணைத் தலைவர் உள்ளிட்டோர் புகார் மனு அளித்துள்ளனரே?

    பதில்: திமுக கட்சியே அதற்காக தொடங்கப்பட்ட கட்சி. எங்களுக்கு ஆட்சியை பற்றி கவலை கிடையாது. கொள்கை பக்கம் நிற்போம். ஆட்சி அதிகாரித்தை விட கொள்கையே முக்கியம்.

    கேள்வி: சனாதனம் தர்மம் ஒழிப்பு காரணமாக ஆட்சியே போனால் பரவாயில்லை என எடுத்துக் கொள்ளலாமா?

    பதில்: ஆம். எடுத்துக் கொள்ளலாம். அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோர் பேசாததை நான் பேசவில்லை.

    கேள்வி: மாநாட்டில் உங்களுடைய பேச்சு மட்டும் விமர்சனமாக்கப்படுகிறது. இது தனிமனித தாக்குதல் என்று எடுத்துக் கொள்ளலாமா?

    பதில்: தனி மனித தாக்குதல் கிடையாது. கொள்கை தாக்குதல்.

    இவ்வாறு குறிப்பிட்டார்.

    மேலும், "பா.ஜனதாவை விட்டுவிடுங்கள். என்னுடைய கேள்வி அ.தி.மு.க. பற்றியது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம். கட்சியில் அண்ணா பெயர் உள்ளது. அண்ணாதான் அதிக அளவில் சனாதன தர்மத்தை எதிர்த்து பேசியுள்ளார். சனாதன தர்மம் விவகாரத்தில் அவர்களுடைய கருத்து என்ன? அதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றார்

    • சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
    • பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பதில் அளித்துள்ளனர்

    சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பா.ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜனதா தலைவர்கள் முதல் பிரதமர் மோடி வரை இந்த கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர்.

    தனது பேச்சு திரித்து பொய் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே தமிழக பா.ஜனதா தலைவர்கள் இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தனர். அப்போது, சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோரை பதவியில் இருந்து நீக்கக்கோரி மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவில் "சனாதன எதிர்ப்பு குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதும், அதே மேடையில் அமைச்சர் சேகர் பாபு அமர்ந்திருப்பதும் பதவி ஏற்கும் பொழுது எடுத்த உறுதி மொழிக்கு எதிரானது. இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து சட்ட ரீதியாக நீக்கம் செய்ய வேண்டும்" என அதில் தெரிவித்துள்ளனர்.

    • ஒரு செய்தி வந்தால், அது உண்மையா- பொய்யா என்பதை அறிந்துகொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு.
    • அமைச்சர் உதயநிதி சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப் பரப்பியது குறித்து, பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா?

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி, சனாதனம் குறித்த சில கருத்துகளைத் தெரிவித்தார்.

    பிற்படுத்தப்பட்டோர்– பட்டியலினத்தவர்– பழங்குடியினர்– பெண்ணினத்திற்கு எதிரான 'சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும்' என்றுதான் அமைச்சர் பேசினாரே தவிர எந்த மதத்தையும்– மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை.

    பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வையும் பெண்ணடிமைத் தனத்தையும் நியாயப்படுத்தும் பழமைவாத வர்ணாஸ்ரம- மனுவாத- சனாதன சிந்தனைகளுக்கு எதிராக, இந்திய துணைக்கண்டத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜோதிபா பூலே, நாராயணகுரு, வள்ளலார், வைகுண்டர் என பல பெரியோர்கள் குரல் கொடுத்து வந்துள்ளனர்.

    அந்த மரபின் நீட்சியாக, சாதியின் பெயராலும் சாஸ்திரங்களின் பெயராலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை, பெண்களின் சமத்துவ வேட்கையை மறுத்து- சுரண்டலை நியாயப்படுத்துவதற்கு எதிரான கருத்தியல் ரீதியான வாதங்கள் இந்திய தேசத்தின் பல முனைகளில் இருந்தும் தொடர்ந்து ஒலிப்பதை சமூகவியல் ஆய்வாளர்கள் அறிவார்கள்.

    நிலவுக்குச் சந்திராயன் விடும் இந்தக் காலத்திலும் சாதி வேற்றுமைகள் கற்பித்தும், வர்ணாசிரமக் கருத்துகளைச் சொல்லி பாகுபாடுகளை வலியுறுத்தியும், இந்தப் பிளவுபடுத்தும் எண்ணங்களுக்கு ஆதரவாக சாஸ்திரங்களையும், சில பழைய நூல்களையும் மேற்கோள் காட்டியும் சிலர் பிரச்சாரம் செய்து வரத்தான் செய்கிறார்கள்.

    குழந்தைத் திருமணத்தை ஆதரித்து மாநிலத்தின் ஆளுநரே பேசுகிறார். குழந்தைத் திருமணம் செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால், அதற்கும் தடை போடுகிறார். 'நானே குழந்தைத் திருமணம் செய்து கொண்டவன்தான்' என்றும், அந்த எண்ணங்களை நியாயப்படுத்திப் பேசி வருகிறார்.

    பெண்களை இழிவுபடுத்தியும், அவர்கள் வேலைக்குப் போகக்கூடாது என்றும், கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும், மறுமணத்துக்கு மந்திரமே கிடையாது என்றும் இன்னமும் சிலர் ஆன்மீக மேடைகளில் பேசி வருகிறார்கள்.

    சமூகத்தின் சரிபாதிக்கும் அதிகமான பெண் இனத்தை 'சனாதனம்' என்ற சொல்லை வைத்துத்தான் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். இத்தகைய அடக்குமுறை சிந்தனைகளுக்கு எதிராகத்தான் அமைச்சர் உதயநிதி பேசினார். இத்தகைய கொள்கைகளை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும் என்று சொன்னார்.

    இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத பா.ஜ.க. ஆதரவு சக்திகள், 'சனாதன எண்ணம் கொண்டவர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னார் உதயநிதி' என்று பொய்யைப் பரப்பினார்கள். இத்தகைய பொய்யைப் பரப்புவதற்காக பா.ஜ.க.வினரால் திட்டமிட்டு வளர்க்கப்படும் சமூக வலைத்தள கும்பலானது, இதனை வட மாநிலம் முழுவதும் பரப்பியது.

    'இனப்படுகொலை' என்ற சொல்லை தமிழிலோ, ஆங்கிலத்திலோ அமைச்சர் உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஆனால் அப்படிச் சொன்னதாக பரப்பினார்கள்.

    பொய்யர்கள்தான் இதனை பரப்புகிறார்கள் என்றால், பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ.க. முதலமைச்சர்கள்- உண்மையில் அமைச்சர் உதயநிதி என்ன பேசினார் என்பதைத் தெரிந்து கருத்து சொல்லி இருக்க வேண்டும். மாறாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் அதே பொய்ச் செய்தியையே பரப்பி உதயநிதியைக் கண்டித்துள்ளார்கள்.

    'நான் அப்படி பேசவில்லை' என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துவிட்ட பிறகாவது தங்களது பேச்சுகளை ஒன்றிய அமைச்சர்கள் மாற்றி இருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை.

    உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஒருவர், அமைச்சர் உதயநிதியின் படத்தை எரித்து, 'தலைக்கு 10 கோடி' என்று விலை வைத்திருப்பதும்- அதனை பா.ஜ.க. ஆதரவு சக்திகள் பரப்புவதும்தான் இவர்களது பாணியா?

    அமைச்சரின் தலைக்கு விலை வைத்து ஒருவர் அறிவிக்கிறார் என்றால், அவர் மீது உத்தர பிரதேச மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததா? வழக்கு போட்டதா? மாறாக, உதயநிதி மேல் வழக்கு போட்டுள்ளார்கள்.

    இந்த நிலையில், 'சனாதனத்தைப் பற்றி தவறாகப் பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்' என்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பேசியதாக தேசிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஒரு செய்தி வந்தால், அது உண்மையா- பொய்யா என்பதை அறிந்துகொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு.

    அப்படி இருக்கையில், அமைச்சர் உதயநிதி சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப் பரப்பியது குறித்து, பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா?

    ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அமைச்சர் எ.வ.வேலு பேசிய வீடியோ ஒன்றின் உண்மைத்தன்மையை அறியாமல் நாடாளுமன்றத்திலேயே பேசியிருந்தார் பிரதமர்.

    இதையெல்லாம் பார்த்தால், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத பிரதமர், இப்போது, மக்களைத் திசைதிருப்பி சனாதனப் போர்வையைப் போர்த்திக்கொண்டு குளிர்காய நினைப்பதாகவே தெரிகிறது.

    மணிப்பூர் பற்றியோ- சி.ஏ.ஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள 7.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றியோ பிரதமரும்- ஒன்றிய அமைச்சர்களும் இன்னும் வாயே திறக்கவில்லை.

    ஆனால் சனாதனத்தைப் பற்றி பேசியவுடன், ஒன்றிய அமைச்சரவையே கூடி இருக்கிறது என்றால், இவர்கள்தான் பிற்படுத்தபட்ட– பட்டியலின – பழங்குடியின மக்களைக் காப்பற்றப் போகிறார்களா? பெண்ணினத்தை முன்னேற்றப் போகிறார்களா?

    அதனால்தான் நேற்று அம்பேத்கரின் பேரன் பிராகாஷ் அம்பேத்கர் கூட, "தீண்டாமையை ஆதரிக்கும் சனாதனத்தை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பிரதமர் பதில் என்ன?

    பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியுள்ள 'இந்தியா' கூட்டணியானது பிரதமரை நிலைதடுமாற வைத்துவிட்டது. 'ஒரே நாடு- ஒரே தேர்தல்' என ஏதோ பூச்சாண்டி காட்டி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலைப் பார்த்து பயந்திருப்பது பா.ஜ.க. தானே தவிர, 'இந்தியா' கூட்டணி அல்ல.

    பா.ஜ.க.வுக்கு இப்போது வந்திருப்பது, சனாதனத்தின் மீதான ஈடுபாடு அல்ல. இந்தியா கூட்டணிக்குள் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட முடியாதா? என்ற அரசியல் கணக்கு. இதைப் புரிந்துகொள்ள பெரிய அரசியல் வித்தகம் எதுவும் தேவையில்லை.

    மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அவர்களே, "சமூக அமைப்பில் சக மனிதர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டோம். நாம் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. மேலும் அது 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும் வரை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்புத் தீர்வுகள் இருக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

    எனவே, இதற்கு மேலும் உதயநிதி பேசியது தொடர்பாக பா.ஜ.க.வினருக்கு விளக்கம் வேண்டும் என்றால், மோகன் பாகவத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

    அரசியலுக்காக மத உணர்வைக் கிளறி ஆதாயம் தேடும் அற்ப அரசியலை, பழுத்த அனுபவமும் நாட்டின் மீது மாறாப் பற்றும் கொண்ட தலைவர்கள் புறந்தள்ளி, பா.ஜ.க.விடமிருந்து நாட்டைக் காக்கும் கடமையை மேலும் வேகப்படுத்துவார்கள்.

    திமுக-வை பொறுத்தவரையில் அதனுடைய கொள்கை கோட்பாடுகள் என்பவை வெளிப்படையானவை.

    'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும், ''ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்றும் இயங்கும் இயக்கம். பிற்படுத்தப்பட்ட- மிகவும் பிற்படுத்தப்பட்ட- பட்டியலின - பழங்குடி மக்களுக்கும்; சிறுபான்மைச் சமூகத்துக்கும்; பெண்ணினத்துக்கும்; ஏழை - எளிய மக்களுக்கும் 'எல்லாம்' கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டு, அவர்களது உயர்வுக்காக குரல் கொடுத்து வரும் இயக்கம். அதனால்தான் ஆறாவது முறையாக ஆட்சியைக் கொடுத்து அலங்கரித்துள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள்.

    அதனால்தான், அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆக முடியும் என்பதை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். இந்தியாவிலேயே முதலில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கொடுத்து, சனாதனம் மறுத்ததை சாத்தியம் ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழகம்.

    எந்தத் தனிமனிதர் உணர்வுக்கும் மதிப்பளித்து அவர்களை சுயமரியாதை உள்ள மனிதர்களாக ஆக்கி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இனம், மொழி, சாதி வேறுபாடு இன்றி அனைவரும் ஒருதாய் மக்களாக வாழும் அமைதிமிகு வாழ்க்கையை உறுதிசெய்து வரும் இயக்கம். கொள்கையை அறிவுப்பிரச்சாரம் செய்தவர்களே தவிர, எந்தக் காலத்திலும் வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம். அத்தகைய பழம்பெரும் பேரியக்கத்தின் மீது களங்கம் கற்பிப்பதன் மூலமாக அரசியல் செய்ய நினைத்தால் அந்தப் புதைகுழியில், பா.ஜ.க.தான் மூழ்கும்!

    இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டள்ளார்.

    • கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே...
    • நிராயுத பாணியாக நிற்கும் பாசிச பா.ஜ.க. அரசைக் கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில்...

    தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த நேரத்தில் சில விஷயங்களை திமுக-வினருக்கு தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்- கலைஞர்கள் சங்கம்' கடந்த 2-ம் தேதி ஏற்பாடு செய்திருந்த 'சனாதன ஒழிப்பு' மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.

    'கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன' என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுத பாணியாக நிற்கும் பாசிச பா.ஜ.க. அரசைக் கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, 'இனப்படுகொலை

    செய்யத் தூண்டினேன்' என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.

    இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அமித் ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார்யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

    நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், 'பிழைத்துப் போகட்டும்' என்று விட்டுவிட்டேன்.

    தந்தை பெரியாரிடம் இருந்து வந்த பேரறிஞர் அண்ணாவால் நிறுவப்பட்ட தி.மு.க.-வின் இரண்டு கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.

    மதங்களைப் பற்றி அண்ணா கூறியது இன்றும் பொருத்தமாக இருப்பதால் அதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். "எப்போது ஒரு மதம் மக்களை சமத்துவத்தை நோக்கி வழிநடத்துகிறதோ, அவர்களுக்கு சகோதரத்துவத்தை கற்பிக்கிறதோ, அப்போது நானும் ஆன்மிகவாதிதான்.

    எப்போது ஒரு மதம் சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறதோ, அவர்களுக்கு தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் கற்பிக்கிறதோ, அப்போது அந்த மதத்தை எதிர்த்து நிற்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்" என்றார் அண்ணா. `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.

    ஆனால், இவை எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோவை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. 'சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா' என நடிகர் வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டி போடும் அளவுக்கு மோடி கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார்.

    இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது… என வடிவேலுவின் `23-ஆம் புலிகேசி' கதாபாத்திரத்தோடு போட்டிபோட்டு நகைச்சுவை செய்து கொண்டுள்ளார்.

    திரையில் வடிவேலுவை ரசிக்க முடிந்தது. நிஜத்தில் இவர்களை… மக்களின் வாக்குகளைப் பெற எந்தளவுக்கும் சென்று, இவர்கள் நாடக அரசியலைச் செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

    நான் இதை நகைச்சுவைக்காக மட்டும் சொல்லவில்லை, ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்தும் 'புதுமைப்பெண்' திட்டம் போன்றோ, முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் போன்றோ, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றோ ஏதாவது ஒரு முற்போக்குத் திட்டம் கடந்த 9 ஆண்டுகால ஒன்றிய அரசிடம் இருந்து வந்திருக்கிறதா? மதுரை எய்ம்ஸை கட்டினார்களா? கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் போன்று ஏதாவது அறிவியக்கத்தை

    முன்னெடுத்தார்களா?

    'சனாதனம் என்றால் என்ன' என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

    'என்ன வாய் மட்டும் வேலை செய்யுது' என்பது போல, மீடியாவை சந்திப்பது மட்டுமே மக்கள் பணி என நினைக்கும் சிலர் நான் பேசாததைப் பேசியதாகத் திரிக்கும் அவதூறுகளை வைத்து, வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு

    நடத்தி வருகின்றனர். அவர்களின் பிழைப்பில் நான் மண் அள்ளிப்போட விரும்பவில்லை, பிழைத்துப்போகட்டும்.

    நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா காலத்தில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்க வீடு வீடாக ஏறிக்கொண்டிருந்தோமே அப்போது அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் என்ன செய்தன? மணி அடித்தபடியும், விளக்கு பிடித்தபடியும் கொரோனா கிருமியை ஒழிக்கப் போராடிக் கொண்டு இருந்தன.

    இன்று நாம் ஆளுங்கட்சி. இன்றும் நாம் கலைஞரின் நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாட, நலத்திட்ட உதவிகளை வழங்க வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க.வோ ஆடலும் பாடலும் பின்னணியில், புளி சாத மாநாடுகளை நடத்திக்கொண்டு, விழுவதற்குக் கால்கள் கிடைக்காதா, ஊர்ந்து போக ஏதாவது ஃபர்னிச்சர் கிடைக்காதா எனத் தேடிக் கொண்டிருக்கிறது.

    ஒன்றிய பிரதமர் மோடியோ கொரோனா நிதியாகத் திரட்டிய 'பி.எம். கேர்ஸ்'க்கு கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றபடி, 7.5 லட்சம் கோடி ரூபாய் என்ன ஆனது என்ற சி.ஏ.ஜி. கேள்விக்குப் பதிலளிக்காமல், ஊரில் இருந்தால், மணிப்பூர் பற்றிக் கேள்வி கேட்பார்களே என்று பயந்து நண்பர் அதானியை அழைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு இருக்கிறார். உண்மையைச் சொல்வது என்றால், மக்களின் அறியாமைதான் இவர்களின் நாடக அரசியலுக்கான மூலதனம்.

    மணிப்பூர் கலவரத்தைத் தூண்டிவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல்… போன்றவற்றைத் திசை திருப்பத்தான் மோடி அண்ட் கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது.

    இவர்களின் கைகளில் தான் மொத்தமாக சிக்கியுள்ளதால், 'ஒரே நாடு ஒரே தேர்தலா… நடத்திடுவோம் எஜமான்', 'பாரதம்னு மாத்துறீங்களா… மாத்திடுங்க ஓனர்' என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • கொலை மிரட்டல் விடுத்த சாமியாரை கைது செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் புகார்
    • சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது போன்ற செயல்களில் திமுக-வினர் ஈடுபட்டுள்ளனர்

    தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட 'முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி' என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், மாண்பமை நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது.

    இந்த நிலையில், 'கொலை மிரட்டல் விடுத்த அந்தச் சாமியாரை கைது செய்ய வேண்டும்' என்று கோரி நம் கழகத்தினர் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்தச் சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது, அவரின் படத்தைக் கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது.

    நாம் பிறருக்கு நாகரிகம் கற்றுத் தருபவர்கள். நம் தலைவர்கள் நம்மை அப்படித்தான் வளர்த்தெடுத்துள்ளனர். எனவே, அதுபோன்ற காரியங்களை நம் இயக்கத் தோழர்கள் அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தவிர, நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன.

    முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு அரசின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் பல பணிகளை நம் மாண்புமிகு முதலமைச்சர்- கழகத் தலைவர் அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கான பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள்… என ஏராளமான பணிகள் நமக்கு முன் உள்ளன.

    இவ்வளவு வேலைகள் இருக்கும்போது சாமியாரின் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது.. போன்ற, நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில் நம் கழகத்தினர் எவரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

    என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, கழகத் தலைவர் வழிகாட்டுதலும், தலைமைக் கழகத்தின் ஆலோசனையைப் பெற்று சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    எனக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பகிர்ந்த தோழமை கட்சியின் தலைவர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் 'சனாதன தர்மம்' எதை வலியுறுத்துகிறது, அதில் அப்படி என்னதான் சொல்லப்பட்டுள்ளது' என்பதை நாடு தழுவிய அளவில் ஒரு பேசுபொருளாக மாற்ற காரணமாக அமைந்த 'சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு'ம், அதை ஒருங்கிணைத்த த.மு.எ.க.ச தோழர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேச்சு
    • உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் தற்போது வழக்குப்பதிவு

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு இந்தியா அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

    ஆனால், உதயநிதி ஸ்டாலின் அந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்கறிஞர்கள் அளித்த புகார் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ, 295ஏ ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் உடன் கர்நாடக மாநில மந்திரி பிரியங்க் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    ×