search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2024 தேர்தலில் அடிமைகளை மட்டுமின்றி எஜமானர்களையும் வீட்டுக்கு அனுப்புங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறோம்.
    • 6 ஆண்டுகளில் அனிதா ஆரம்பித்து 22 குழந்தைகள் நீட் தேர்வு காரணமாக இறந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அழகிய மண்டபத்தில் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பலமுறை வருகை தந்துள்ளேன். கட்சி உறுப்பினராக இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக வந்து உள்ளேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என்னால் மறக்க முடியாது. அமைச்சர் பதவி ஏற்று உங்களின் வாழ்த்துக்களை பெற தற்பொழுது வந்துள்ளேன்.

    சேலத்தில் இளைஞரணி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இதற்கு அனுமதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    காஞ்சிபுரம், தேனி, விருதுநகர், நெல்லையை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் தற்போது செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    1956-ம் ஆண்டு குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்தது. இன்னும் 3 நாட்களில் குமரி மாவட்டம் பிறந்தநாள் கொண்டாடுகிறது. குமரி மாவட்டம் பிறந்த நவம்பர் மாதத்தில் தான் நானும் பிறந்துள்ளேன். சூரியனை ஓவியமாக, புகைப்படமாக பார்ப்பார்கள்.

    ஆனால் குமரி மாவட்ட மக்கள் மட்டும் தான் சூரியன் உதிப்பதை நேரில் பார்க்கிறீர்கள். வடக்கில் இமயமலை உயரமாக உள்ளது. தெற்கில் அய்யன் திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்தில் உள்ளது. தலைவர் கலைஞர் இந்த சிலையை நிறுவினார். தலைவர் கட்டளையை எதிர்பாராமல் சுயநலம், தன்னலம் பார்க்காமல் நிறைவேற்றுபவர் தான் செயல்வீரர்கள். தலைவர் இடும் கட்டளையை செயல்படுத்துபவர்கள் தான் செயல்வீரர்கள்.

    சேலத்தில் நடக்கும் மாநாட்டிற்கு அழைக்கத் தான் நான் வந்திருக்கிறேன். என்னை விட நீங்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளீர்கள். உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு இளைஞரணியே சாட்சி.

    தி.மு.கவில் 23 அணிகள் உண்டு. கழகத்தின் முதன்மை அணி என கலைஞராலும், முதல்வராலும் பாராட்டப்பட்ட அணி இளைஞரணி. இளைஞரணி 1981-ல் ஆரம்பிக்கப்பட்டது. முதல் மாநாட்டை 2017-ல் கலைஞர் தலைமையில் நம் தலைவர் நெல்லையில் நடத்தினார். 2-வது மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடக்கிறது. குடும்பத்துடன் அனைவரும் கலந்துகொண்டு வெற்றி பெற வைக்க வேண்டும்.

    2 மாதம் முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. தயிர் சாதமா, புளி சாதமா என தெரியவில்லை. மாநாடு எதற்காக நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. மிமிக்ரி, ஆடல்பாடல், பட்டப்பெயர் வழங்கும் நிகழ்ச்சிகள் மாநாட்டில் நடந்தன.

    கட்சிகொள்கை, இயக்க வரலாறு, இயக்க தலைவர்கள் பற்றி பேசவில்லை. ஒரு மாநாடு எப்படி நடக்கக்கூடாது என நடந்ததுதான் மதுரை மாநாடு.

    இந்தியாவில் இப்படி ஒரு மாநாடு நடந்ததில்லை என்ற அளவில் சேலம் மாநாடு நடக்க வேண்டும். நம் மாநாட்டில் இயக்கம் மற்றும் கொள்கை பற்றி பேசவேண்டும். தலைவர் ஆட்சி ஏற்று 2½ ஆண்டுகள் ஆகிறது. தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளையும், சொல்லாத வாக்குறுதிகளையும் செய்துள்ளோம்.

    இதில் 4 சாதனைகள் மிக முக்கியமாக உள்ளது. ஆட்சி பொறுப்பேற்றதும் முதலமைச்சர் போட்ட 3 கையெழுத்தில் முதல் கையெழுத்து மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து. பெண்கள் கல்விக்காக புதுமைப்பெண் திட்டம். அவர்கள் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் ஊக்கதொகை வழங்குகிறோம்.

    1 முதல் 5 வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 31 ஆயிரம் பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

    இந்தியாவுக்கு எடுத்துக்காட்டான இந்த திட்டத்தை பக்கத்து மாநிலங்கள் பாராட்டுகின்றன. முன்பு வேலைக்குச் செல்பவர்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கவிலை என வருத்தப்பட்டார்கள். இப்போது முதலமைச்சரை நம்பி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    தேர்தல் வாக்குறுதியில் சொன்ன திட்டமான அனைத்து மகளிருக்கும் கலைஞர் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். ஒரு கோடியே ஆறு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு அதனை வழங்கி வருகிறோம். ஆனால் பிரதமர் மோடி சொன்ன ரூ.15 லட்சம் என்னாச்சு.

    மோடி, மத்திய பிரதேசம் உள்பட எங்கு சென்றாலும் தி.மு.க. பற்றியும், தலைவரை பற்றியும் குறிப்பாக என்னைப் பற்றியும்தான் பேசுகிறார். அவருக்கு என் மேல் அவ்வளவு பிரியம். பிரதமர் மோடி 9 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை.

    தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடப்பதாக சொல்கிறார். தமிழகமே ஒரே குடும்பமாக செயல்படுகிறோம். மத்திய ஆட்சியில் ஏர்போர்ட், ரோடு, ரெயில்வே என அனைத்து பொதுத்துறையும் அதானியிடம் கொடுத்து விட்டார். ஒரு தனியார் துறை எப்படி 9 வருடத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது.

    சி.ஏ.ஜி அமைப்பு அறிக்கையில் 9 ஆண்டில் பா.ஜ.க ஊழல் வெளியே வந்துள்ளது. 7½ லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது என தெரியவில்லை. ஒரு கிலோ மீட்டர் ரோட்டுக்கு 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள். ரமணா படத்தில் இறந்து போனவருக்கு ஆபரேஷன் செய்ய சொன்னதுபோன்று, ஆயுஷ்மன் பாரத் திட்டத்தில் இறந்துபோன 88 ஆயிரம் பேருக்கு ஆயுள் காப்பீட்டுத்திட்டம் கொடுத்திருக்கிறார்கள்.

    நான் பேசாததை பேசியதாக பரப்பினார்கள். நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன், நான் கலைஞரின் பேரன். எடப்பாடிக்கு நம் தலைவர் ஒரு பெயர் வைத்திருக்கிறார். பாதம் தாங்கி பழனிசாமி. அவர் பிரதமர், அமித்ஷாவின் பாதங்களை தாங்கி வருகிறார்.

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகிறோம். கிராமப்புற மாணவர்கள் டாக்டர் ஆக வேண்டும் என கருதி பிளஸ்-2 மதிப்பெண்ணே போதும் என மருத்துவ நுழைவுத்தேர்வை ரத்து செய்தது கலைஞர். ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வை நுழைய விடவில்லை.

    பா.ஜ.க நீட் தேர்வை நுழைத்து விட்டது. 6 ஆண்டுகளில் அனிதா ஆரம்பித்து 22 குழந்தைகள் நீட் தேர்வு காரணமாக இறந்துள்ளனர். கடைசியாக சென்னையைச் சேர்ந்த மாணவன் ஜெகதீசனும், அவரது தந்தையும் இறந்துவிட்டனர். நீட் தேர்வு தி.மு.க பிரச்சனை இல்லை. அனைத்து மாணவர்களின் கல்வி உரிமை பிரச்சனை ஆகும்.

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொன்னோம். 2 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். மாணவர்களின் கல்வி உரிமை அது. பா.ஜ.க கூட்டணியை விட்டு அ.தி.மு.க. வெளியே வந்து விட்டது. இப்போதாவது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் எனவும். கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவியுங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னேன்.

    இந்த போராட்டத்தில் வெற்றிபெற்றால் அதற்கான வெற்றிக்கான காரணம் நீங்கள் என நாங்கள் சொல்கிறோம். ஆனால், நீட் ரத்து கையெழுத்து மிகப்பெரிய நாடகம் என்கிறார் பழனிசாமி. உண்மையான நாடகக்காரர் யார் என சசிகலா, பன்னீர்செல்வத்திடம் கேட்டால் தெரியும்.

    மக்களை சந்திக்காமல் கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை அடைத்து வைத்து சசிகலா காலில் விழுந்து முதல்வர் ஆனார். பின்னர் சசிகலாவையே கட்சியில் இருந்து நீக்கிவிட்டார் பழனிசாமி.

    சேலத்தில் நடைபெறும் இளைஞர்களின் மாநாட்டில் 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட போஸ்ட் கார்டை முதலமைச்சரிடம் வழங்க வேண்டும்.

    இந்தியாவை மீட்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். 2021-ல் அடிமைகளை வீட்டிற்கு அனுப்பினீர்கள். தற்பொழுது 2024-ல் நடைபெறும் தேர்தலில் அடிமைகளை மட்டும் இன்றி எஜமானர்களையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். சேலம் இளைஞர் அணி மாநாடு இதற்கு முத்தாய்ப்பாய் அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் சேலம் மாநாட்டிற்கு ரூ.50 லட்சத்திற்கான நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடம் வழங்கினார்.

    Next Story
    ×