என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக"

    • மறைமுகமாக பணம் கொடுக்கவும், செய்த ஊழலில் உங்களையும் உட்படுத்தவும் முயற்சிக்கின்றனர்.
    • எனவே இதுவே சரியான தருணம். மயக்கத்திலிருந்து தெளிந்து வாருங்கள். நாம் ஒருங்கிணைந்து போராடுவோம்.

    பா.ம.க. தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…?

    நான் பொது வாழ்விற்கு வந்தபோது கிராமத்திற்கு 25 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன் என்று அன்றே சொன்னேன். ஆனால் மக்களின் வாழ்கைத் தரம் உயரவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவ சமூகம் உருவாக்க சமூக நீதி பற்றிய தெளிவில்லாத ஆட்சியாளர்கள் போதைக்கும், இலவசத்திற்கும் மக்களை அடிமைப்படுத்திவிட்டனர்.

    தமிழகத்தில் தற்போது நாள்தோறும் பல்வேறு துறையினர் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    அதனைக் காதுகொடுத்து கேட்கக்கூட நாதியில்லை. ஆனால் வாக்குக்கு இப்போதே மறைமுகமாக பணம் கொடுக்கவும், செய்த ஊழலில் உங்களையும் உட்படுத்தவும் முயற்சிக்கின்றனர். எனவே இதுவே சரியான தருணம். மயக்கத்திலிருந்து தெளிந்து வாருங்கள். நாம் ஒருங்கிணைந்து போராடுவோம். கடந்த காலங்களில் நாம் போராடித்தான் உரிமைகளைப் பெற்றோம். இங்கு போராடாமல் எதுவும் கிடைக்காது.

    வரும் தேர்தலில் அரசியல் அதிகாரம் பெற்று சாதிவாரிக் கணக்கெடுத்து அனைத்து சாதியினருக்கும் விகிதாச்சார இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் கிடைக்க ஆவன செய்வோம். மனித வளத்தை மேம்படுத்த, சமூக ஒற்றுமையை வளர்க்க, ஊழலையும், துரோகத்தையும் துடைத்தெரிய சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்.

    நம்மை நாமே தூற்றிக்கொள்வது நம்மை மயக்கம் தெளியாமல் பார்த்துக்கொள்வோருக்கு ஆதாயம் கிடைக்க வழிவகுக்கும். புரிந்துகொண்டு என்னுடன் தொடர்ந்து பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து உங்களோடு பேசுவேன்.

    இவ்வாறு பா.ம.க. தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • வன்னியர்களை திமுக ஏமாற்றி விட்டது. திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
    • காங்கிரஸ் கட்சியை திமுக-வே தோற்கடித்து விடும். பெற்றி பெற்றால்தானே ஆட்சியில் பங்கு கேட்பார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    * பா.ம.க. நிறுவனர் ராமதாசை சுற்றியுள்ள தீய சக்திகள் அவரது மனதை மாற்றி விட்டார்கள்.

    * பா.ம.க.-விற்குள் பதவி போட்டி சண்டை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தியது திமுக-தான்.

    * பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்று தொண்டர்களுக்கு அன்புமணி வலியுறுத்தல்

    * பா.ம.க.-வின் எதிரி திமுக-தான்

    * காங்கிரஸ் கட்சியை திமுக-வே தோற்கடித்து விடும். பெற்றி பெற்றால்தானே ஆட்சியில் பங்கு கேட்பார்கள்.

    * வன்னியர்களை திமுக ஏமாற்றி விட்டது. திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

    * பாமக-வின் கட்சி, சின்னம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தரப்பில் இருந்து பொய்யை பரப்புகிறார்கள்.

    * பா.ம.க. நிறுவனர் ராமதாஸை சுற்றியுள்ள தீய சக்திகள் அவரது மனதை மாற்றிவிட்டார்கள்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

    • தேர்தல் தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது என்ற முடிவில் இருந்து மக்கள் பின்வாங்க மாட்டார்கள்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் திமுக அரசு திடீரென ரூ.5 ஆயிரத்தை வரவு வைத்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கி வந்த திமுக அரசு, பிப்ரவரி மாதத்திற்கான தொகையுடன், மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.2 ஆயிரத்தை முன்பணமாகவும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரமும் சேர்த்து இந்த தொகை வரவு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஆட்சி கையை விட்டுப் போவது உறுதியானதை உணர்ந்து கொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்திருக்கிறது.

    தமிழ்நாட்டு மக்களுக்கு இவ்வாறு திடீர் கரிசனம் காட்டுவதற்காக கம்பி கட்டும் கதைகளையெல்லாம் முதலமைச்சர் அவிழ்த்து விட்டிருக்கிறார். அடுத்த 3 மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப் படுவதை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், அதனால் தான் திமுக அரசு முந்திக் கொண்டு இந்தத் திட்டத்தை அறிவித்திருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மக்கள் நலனில் அக்கறை இருப்பதைப் போல மு.க.ஸ்டாலின் போடும் வேடங்கள் எல்லாம் களைந்து விட்ட நிலையில், தமது நாடகங்களையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நம்புவார்கள் என்ற நப்பாசையில் தான் முதலமைச்சர் வசனம் பேசியிருக்கிறார். அதெல்லாம் நடக்காது.

    தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தாலும் கூட ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு தடை இல்லை என்பது பாமரர்களுக்குக் கூட தெரிந்த உண்மை. முதலமைச்சருக்கும் இது தெரியும். ஆனாலும், தேர்தல் தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மொத்தமாக பணத்தைக் கொடுத்தாவது மக்களின் எதிர்ப்பைக் குறைக்க முடியுமா? என்ற எண்ணத்தில் தான் இப்படி ஒரு முயற்சியை செய்திருக்கிறார். என்ன செய்தாலும் மக்களின் கோபம் குறையாது என்பதே உண்மை.

    தமிழ்நாட்டு மக்களின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டிருக்கும் அக்கறை என்னவென்பதையும், அவர் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தான் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது.

    ஆனால், ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்படவில்லை. அதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போதெல்லாம்,'' வாக்குறுதி அளித்தது உண்மை தான். ஆனால், எப்போதிலிருந்து வாக்குறுதி செயல்படுத்தப்படும் என்று தேதியை சொன்னோமா?'' என அதிகாரத் திமிரில் திமுக அமைச்சர்கள் வினா எழுப்பியதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வர இருப்பதை அறிந்து கொண்டு 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தத் திட்டத்தை திமுக அரசு அரைகுறையாக செயல்படுத்தியதையும் மக்கள் மறந்துவிடவில்லை.

    அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்குவதாக அறிவித்த திமுக, 1.15 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கி விட்டு, மீதமுள்ள 1.10 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க முடியாது என்று அறிவித்தது. அந்த துரோகத்தையும் பாதிக்கப்பட்ட 1 கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் இன்னும் மறக்கவில்லை.

    பொங்கல் பரிசு வழங்குவதிலும் திமுகவின் அணுகுமுறை மக்களை ஏமாற்றுவதாகவே உள்ளது. எப்போதெல்லாம் தேர்தல் வரவில்லையோ, அப்போதெல்லாம் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பொங்கல் பரிசு வழங்க மறுப்பதும், தேர்தல் வந்து விட்டால் அந்த ஆண்டில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதும் திமுகவின் கபட நாடகங்கள். இந்த நாடகங்கள் இனியும் தமிழகத்தில் எடுபடாது.

    தமிழ்நாட்டில் ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட போதும், கிட்டத்தட்ட 150% அளவுக்கு சொத்து வரியும், குடிநீர் வரியும் உயர்த்தப்பட்ட போதும், ஆவின் பால் விலையை மறைமுகமாக உயர்த்திய போதும் தமிழ்நாட்டு மக்கள் மீது திமுகவுக்கு வராத அக்கறை இப்போது வந்திருப்பது விந்தை தான். ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபம் உச்சத்தை அடைந்துள்ளது; அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்று எதிர்க்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடந்த தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலேயே அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.2000 வழங்கப்படும் என்று பா.ம.க. அறிவித்திருந்தது. இவை தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தான் நானும் அறிவிப்பை வெளியிடுகிறேன் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    உழவர்களுக்கான கொள்முதல் விலை, பாசனத் திட்டங்கள், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, மின் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட வளர்ச்சிக்கான திட்டங்களை நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி செயல்படுத்த மறுத்த மு.க.ஸ்டாலின், ஏற்கனவே வாங்கிக் குவித்திருக்கும் சுமார் ரூ.10 லட்சம் கோடி கடன் போதாதென கூடுதலாக ரூ.6,550 கோடியை கடனாக வாங்கித் தான் இந்தத் தொகையை வழங்கியுள்ளார் என்பதையும், இந்தத் கடனும் தங்கள் தலையில் தான் விழும் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

    திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாக உயர்த்தப்பட்ட கட்டணங்கள், வரிகள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் ஆண்டுக்கு சுமார் ரூ.25,000 கூடுதலாக பறிக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் ரூ.1.25 லட்சத்தை பறித்துக் கொண்டு ஒரே முறை ரூ.5 ஆயிரத்தை வழங்குவதன் மூலம் மக்களை ஏமாற்றி விட முடியாது. வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது என்ற முடிவில் இருந்து மக்கள் பின்வாங்க மாட்டார்கள். மே மாதத்தில் வரும் தேர்தல் முடிவு அதை உறுதி செய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கனிமக் கொள்ளையர்களுக்கு திமுக அரசு கருணை காட்டுவது இது முதல் முறையல்ல.
    • ஊழலில் திளைத்தவர்களால் நடத்தப்படும் ஆட்சியில் கனிமக் கொள்ளையர்களுக்கு மட்டும் தான் கருணை காட்டப்படும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    எரியும் வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்பதைப் போல, இன்னும் இரு வாரங்களில் திமுக ஆட்சி முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், கிடைத்தவற்றை எல்லாம் சுருட்டும் முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை வளங்களை கொள்ளையடித்தவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவர்களுக்கு ஒருமுறை மன்னிப்பு வழங்கப்படும்; அவர்கள் கொள்ளையடித்த கனிமங்களுக்கு டன்னுக்கு ரூ.75 வீதம் தண்டம் வசூலிக்கப்படும் என்று திமுக அரசு அறிவித்திருக்கிறது. ஆட்சிக்காலத்தின் கடைசி நேரத்தில் பல்லாயிரம் கோடி ஊழல் செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்துத் திசைகளிலும் கனிமவளக் கொள்ளை தான் தடையின்றி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 1845 கருங்கல் குவாரிகள் உரிமம் பெற்று இயங்கி வருவதாகக் கூறப்படும் நிலையில், 2000-க்கும் மேற்பட்ட குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. இந்தக் குவாரிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோதக் கனிமக் கொள்ளைகளுக்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் தான் காட்பாதர்களாக செயல்பட்டு வருகின்றனர். கனிமக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு செவி சாய்க்காத திமுக அரசு, கனிமக் கொள்ளையர்கள் அனைவரையும் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான ஒரு முறை மன்னிப்பு திட்டத்தை ரகசியமாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    தமிழக அரசின் இயற்கைவளத்துறை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 03-இன் மூலம் இந்த ஒருமுறை மன்னிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி எந்த ஊடகத்திலும் வெளிவராமல் திமுக அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருமுறை ஒழுங்குபடுத்தும் திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கொள்ளையடித்த கனிமத்திற்கு ஒருமுறை தண்டம் செலுத்தி விட்டு புனிதமானவர்களாகி விடலாம்.

    இந்தத் திட்டத்தின்படி, உரிமம் பெற்ற குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கொள்ளையடிக்கப்பட்ட கனிமங்களுக்கு ராயல்டி தொகையாக டன்னுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு, அத்துடன் இரு மடங்கு தொகையை சேர்த்து, அதாவது மொத்தமாக ஒரு டன்னுக்கு ரூ.75 செலுத்தி விட்டால் கனிமக் கொள்ளையர்கள் மன்னிக்கப்படுவர். உரிமம் பெறாத குவாரிகளில் கனிமக் கொள்ளை நடத்தியவர்கள் ராயல்டி தொகையுடன் 5 மடங்கு அபராதம் சேர்த்து ரூ.150 செலுத்தி விட்டால் அவர்கள் பாவ விமோசனம் பெற்று உத்தமர்களாகி விடுவார்கள். அதுவும் கூட அவர்கள் அந்த அபராதத் தொகையை ஒரே தவணையாகக் கூட செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.

    கனிமக் கொள்ளையர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.10 கோடிக்கும் குறைவாக இருந்தால், அதில் முதல் கட்டமாக 20% செலுத்தி விட்டு, மீதமுள்ள தொகையை இரு மாதங்களுக்கு ஒரு முறை வீதம் 6 சம தவணைகளில் செலுத்தினால் போதுமானது. அபராதம் ரூ.10 கோடிக்கும் கூடுதலாக இருந்தால் முதல் தவணை 20% தவிர மீதமுள்ள தொகையை இரு ஆண்டுகளில் 12 தவணைகளாக செலுத்தினால் போதுமானது. இதில் கொடுமை என்னவென்றால் கொள்ளையடிக்கப்பட்ட கனிமங்களை அரசிடம் ஒப்படைக்கத் தேவையில்லை என்பதும், அவற்றை வெளிச்சந்தையில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு விற்று விட்டு அதில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான தொகையை தண்டமாக செலுத்தினால் போதும் என்பதும் தான். இந்த அநீதியை கேட்பதற்கே சகிக்கவில்லை.

    கட்டுமானப் பணிகளுக்காக தேவைப்படும் கருங்கல் ஜல்லியை, ஒன்றரை டன் எடை கொண்ட ஒரு யூனிட் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதாவது வெளிச்சந்தையில் ஒரு டன் கருங்கல் விலை ரூ.6,666 வரை. அதற்காக அவர்கள் செலுத்த வேண்டிய தண்டம் வெறும் ரூ.75 மட்டுமே. அதாவது கொள்ளையடித்த கனிமத்தின் மதிப்பில் சுமார் 1% மட்டும் தான். ஒரு டன்னுக்கு தண்டமாக வசூலிக்கப்படும் தொகையைக் கொண்டு 5 செங்கற்களைக் கூட வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருமுறை மன்னிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இரு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு முடிந்தவரை கொள்ளையடித்து விட்டு, அபராதத்தை செலுத்திக் கொள்ளலாம் என்றும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. மேலும் எந்த அளவுக்கு கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதை துல்லியமாக கணக்கிட முடியாது என அரசே கூறியிருப்பதால், உத்தேசமாக தண்டம் செலுத்தினால் போதுமானது. உண்மையாக கொள்ளை அடிக்கப்ப்பட்ட அளவு திமுக ஆட்சியாளர்களுக்கு தெரியும் என்பதால், அவர்கள் கனிமக் கொள்ளையர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய தொகையை வசூலிக்க வேண்டிய விதத்தில் வசூலித்துக் கொள்வார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    தாங்கள் செய்த கனிமக் கொள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதால், தங்களின் தொழில் பாதிக்கப் படுவதாகவும், அது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று கனிமக் கொள்ளையர்கள் அரசுக்கு அளித்த மனுவின் அடிப்படையில் இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரி கே.அலாவுதீன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதாகவும், அக்குழு அளித்த பரிந்துரை அறிக்கை அடிப்படையில் இந்த மன்னிப்புத் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் திமுக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஊழல் திட்டத்தின் பின்னணியில் பெரும் கூட்டுச் சதி நடந்திருப்பதை இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

    வசிக்க இடம் இல்லாத ஏழை மக்கள் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டால், இரவோடு, இரவாகச் சென்று கொடூரமாக அகற்றும் கொடுங்கோல் அரசு, கனிமக் கொள்ளையர்களிடம் மட்டும் இந்த அளவுக்கு இரக்கமும், கருணையும் காட்டுவது வியக்க வைக்கிறது. ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கனிமக் கொள்ளையர்கள் வாரி வழங்கும் வெகுமதிகள் தான் இரக்கத்தை சுரக்க வைக்கின்றன என்ற புகாரை புறந்தள்ளிவிட முடியாது.

    கனிமக் கொள்ளையர்களுக்கு திமுக அரசு கருணை காட்டுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, திமுக காட்பதரின் ஆசியில் நெல்லை மாவட்டங்களில் நடைபெற்ற ஒரு பகுதி கனிமக் கொள்ளை மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்காக 24 குவாரிகளுக்கு ரூ.262 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ஆட்சியாளர்களின் கருணைப் பார்வை பட்டவுடன் அது ரூ.13.80 கோடியாக குறைக்கப்பட்டது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் மற்றும் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒருமுறை தண்டமாக ரூ.321 கோடியை விதித்த திமுக அரசு, கனிமக் கொள்ளையர் அனைவரையும் மன்னித்து விட்டது. தண்டத் தொகையிலும் இதுவரை ரூ.20 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ''பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்'' என்று மகாகவி பாரதியார் பாடியதைப் போல, ஊழலில் திளைத்தவர்களால் நடத்தப்படும் ஆட்சியில் கனிமக் கொள்ளையர்களுக்கு மட்டும் தான் கருணை காட்டப்படும். ஆட்சிக் காலத்தின் கடைசியில் திமுகவினர் நடத்தும் கொள்ளைகளையும், ஊழல்களையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்; அவர்கள் இதை மன்னிக்க மாட்டார்கள். கனிமக் கொள்ளையர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் இந்த ஊழல் திட்டத்தின் பின்னணி பற்றி சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கு தொடரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொய்யும், புரட்டுமாக பேசுகின்றனர். எங்களை வசைப்பாடுகிறார்கள்.
    • தேர்தல் ஆணையத்தில் அடிமட்ட அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள்.

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை எதையோ பேசுகிறார்கள். ஒரு கூட்டம் பொய் பேசுவதையே அரசியலாக கொண்டு செயல்படுகிறது. அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி விட்டோம். அவர்களிடம் ஒரு கூட்டம் சேர்ந்து செயல்படுகிறது.

    என்னை பற்றி அவதூறாக மனம் புண்படும்படியும், ஏளனமாகவும், பொய்யும், புரட்டுமாக பேசுகின்றனர். எங்களை வசைப்பாடுகிறார்கள். என்னை மட்டுமின்றி அரசியல் அனுபவம் கொண்ட பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணியையும் அவர்கள் வசைப்பாடுகிறார்கள்.

    டெல்லி உயர்நீதிமன்றத்தில் நமக்கு சாதகமாக 2 முறை தீர்ப்பு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் சிலரை அக்கும்பல் தன் வசப்படுத்தியதால் அவர்களுக்காக தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

    தேர்தல் ஆணையத்தில் அடிமட்ட அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்யவேண்டிய வழக்கை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தேர்தல் ஆணையம் சரியான திசையில் செல்லவில்லை. கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பது அடக்குமுறையாகும்.
    • ஊராட்சி செயலர்களை ஏற்கனவே இருந்த இடத்திலேயே பணி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டு 2018-ம் ஆண்டு முதல் ரூ.15,900 – ரூ.50,400 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு ரூ.2,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையை மாற்றி தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிடவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை தொடர் விடுப்பு எடுத்து, சென்னையில் காத்திருப்புப் போராட்டமும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர்களுடன் பேச்சு நடத்திய ஆட்சியாளர்கள், அவர்களும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.

    ஆனால், அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாததை உணர்ந்த ஊராட்சி செயலாளர்கள் கடந்த 4-ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தைத் தொடரும் நிலையில், அவர்களிடம் அரசு பேசாமல், 500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் பணி நீக்க உத்தரவுகள் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் பிறப்பிக்கப்பட்டு மாநில அளவில் ரகசியமாக பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் 600-க்கும் மேற்பட்டோரை ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது.

    ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பது அடக்குமுறையாகும். இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களாக இருந்துவரும் நிலையில், அக்கிராமங்களின் ஊராட்சி செயலாளராக இருந்துவரும் இவர்களே அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக அடக்குமுறைகள் மூலம் பணியவைக்க முயல்வது மிகத்தவறு.

    எனவே அரசு பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும், பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து, ஊராட்சி செயலர்களை ஏற்கனவே இருந்த இடத்திலேயே பணி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட கட்சி பா.ம.க
    • கஷ்டப்பட்டு இந்த இயக்கத்தை உருவாக்கிய ராமதாஸை ஒரேநாளில் தூக்கி எறிய பார்த்தார்கள்.

    பாமகவின் அதிகாரப்பூர்வ தலைவராக அன்புமணி ராமதாஸை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ அருள், 'தேர்தல் ஆணையத்தை என்ன விலை கொடுத்து வாங்கினார்கள்' என தெரியவில்லை என அன்புமணி தரப்பை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,

    "அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட கட்சி பா.ம.க. அக்கட்சியின் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது" என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது இப்போது இந்த வாதத்தை மாற்றிக் கொள்கிறோம் என தேர்தல் ஆணையமே ஒரு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்கிறது. அதற்கு நீதிமன்றம் மாற்றமாட்டோம், பதிவு செய்துகொள்கிறோம் என கூறுகிறது.

    தற்போது தேர்தல் ஆணையத்தை இவர்கள் என்ன விலை கொடுத்து வாங்கினார்கள் என்று தெரியவில்லை. அதன்மூலம் ஒரு பொய்யான அறிக்கையை சமர்பிக்கிறார்கள். மறுசீராய்வு மனு என்பது 30 நாட்களுக்குள் தாக்கல்செய்ய வேண்டும். ஆனால் 72 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் போடுகிறது. இதன் உள்நோக்கம் எங்களுக்கு தெரியவில்லை. கஷ்டப்பட்டு இந்த இயக்கத்தை உருவாக்கிய ராமதாஸை ஒரேநாளில் தூக்கி எறிய பார்த்தார்கள். அதற்கு நீதிபதி அனுமதி தரவில்லை. நீதிமன்றத்தை விலைக்கு வாங்கமுடியவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தை வாங்கியுள்ளனர்." என தெரிவித்தார். 

    • நேற்றைய தினம் நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.
    • ஜி.கே.மணி செய்த துரோகங்கள் நிறைய இருக்கிறது.

    ராயப்பேட்டை:

    சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பா.ம.க. மாநில இளைஞரணி பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    * ராமதாசை சுற்றி சில துரோகிகள் இருக்கிறார்கள். அதில் முக்கியமான துரோகி ஜி.கே.மணி.

    * நேற்றைய தினம் நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் ராமதாசிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள்.

    * ராமதாசை சுற்றி இருக்கும் துரோகிகள் அவருக்கு தவறான தகவல்களை சொல்லி அவரது மனதை மாற்றுகிறார்கள்.

    * ஜி.கே.மணி செய்த துரோகங்கள் நிறைய இருக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் பேசும் அளவிற்கு அவருக்கு தகுதி இல்லை என்று பேசினார். 

    • அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
    • அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.

    ராயப்பேட்டை:

    சென்னை ராயப்பேட்டையில் பா.ம.க. மாநில இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    * எ.வ.வேலு அமைச்சர் கிடையாது வியாபாரி. இன்னும் 2 மாதத்தில் 1, 2, 3 என சிறையில் கம்பி எண்ணப்போகிறார்.

    * சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி உட்பட 47 தொகுதிகளை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஒதுக்கி உள்ளது தி.மு.க.

    * தி.மு.க.வினர் கிராமங்கள் அளவில் ஓட்டுக்கு பணம் கொடுக்க பணத்தை கொண்டுபோய் பதுக்கி வைத்துள்ளனர்.

    * பணத்தை மட்டுமே நம்பி தி.மு.க. இந்த சட்டசபை தேர்தலை சந்திக்கிறது.

    * கேடு கெட்ட தி.மு.க. ஆட்சி குறித்து வீடு வீடாக சென்று கூறுங்கள்.

    * இளைஞர்களால் எத்தனையோ பல புரட்சிகள் நாட்டில் நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற புரட்சி நடக்கும்.

    * தேர்தலில் தி.மு.க. ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெல்லும். தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்தது 200 தொகுதிகளில் வெல்லும்.

    * அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

    * அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.

    * துணை பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு ஊழியர்களுக்கு தி.மு.க. போலி வாக்குறுதி அளித்துள்ளது என்றார்.

    • நிலைப்பாட்டை வி.சி.க. மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை.
    • கூட்டணியில் யார் யார் இருக்க வேண்டும் என்பதை தி.மு.க.தான் முடிவு செய்யும்

    தி.மு.க. கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வையும் இணைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக நீண்ட நாட்களாகவே பேச்சு எழுந்துவருகிறது. ஆனால் பா.ம.க. இருக்கும் அணியில் இடம் பெற மாட்டோம் என்பது எங்கள் நிலைப்பாடு. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். திருமாவளவனின் இந்த நிலைப்பாட்டால், நீண்ட நாட்களாக இந்த கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்துவருகிறது. 

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 

    "அரசியலில் நிரந்தரப் பகைவர்களும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை. டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள்தான். இருவரும் பரஸ்பரம் ஆதரவாக நின்றவர்கள். வன்னியர் சங்கக் கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்திருக்கிறார்.

    அதேபோல் வி.சி.க கொடியை டாக்டர். ராமதாஸ் ஏற்றி வைத்திருக்கிறார். எனவே அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினால், அவர்களுக்கு இடையேயான இடைவெளி குறைந்துவிடும். தேவைப்பட்டால், அவர்கள் சந்தித்து பேசி பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணியின் அச்சாணியாக தி.மு.க தான் உள்ளது. தி.மு.க கூட்டணியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இணைவதற்கான முடிவை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் எடுப்பார். அவரது முடிவே இறுதியானது." என தெரிவித்திருந்தார். 

    தி.மு.க கூட்டணியில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இணைவதை ஆதரிக்கும் வகையில் பேசிய செல்வப்பெருந்தகை, இரு தலைவர்களுக்கும் இடையே இருந்த பழைய இணக்கமான சூழலை நினைவுகூர்ந்தார். இதன் மூலம், பா.ம.க, வி.சி.க கட்சிகளும் ஒரே கூட்டணியில் பயணிப்பதில் பெரிய சிக்கல்கள் இருக்காது என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

    இந்நிலையில் செல்வப்பெருந்தகையின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான எஸ்.எஸ். பாலாஜி வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில், 

    கூட்டணியில் யார் யார் இருக்க வேண்டும் என்பதை தி.மு.க.தான் முடிவு செய்யும் என்பதை தான் நாங்களும் சொல்லி விட்டோமே. சாதியவாத, மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை வி.சி.க. மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை. எனக் குறிப்பிட்டுள்ளார். 

    இதனிடையே செல்வப்பெருந்தகையின் கருத்து குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

    இதுவரை அதுபோன்ற ஒன்று நடைபெறவில்லை. ராமதாஸ் தரப்பும் எங்களிடம் பேசவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினும் அவர்களிடம் பேசவில்லை. இது அவரது கருத்து. சேர்வது என்பது அவரவர் கருத்து. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் எல்லா எதிர் கட்சிகளையும் சேர்த்து தேர்தலை சந்தித்து உள்ளோம். 2006-ல் அப்படி தான் தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வந்தோம். நல்லாட்சியும் கொடுத்தோம். தற்போது தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது.

    இடதுசாரி இயக்கம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி என எல்லா கட்சியும் நம்முடன் உள்ளது. யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுக்கப் போவதில்லை." என தெரிவித்துள்ளார். 

    • தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
    • தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கனவே அங்கீகரித்ததை தெளிவாக்கியுள்ளது.

    அங்கீகரிக்கப்படாத கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் ஆணையம் முடிவு செய்ய முடியாது என்ற உத்தரவை மாற்றக்கோரி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கட்சி உரிமை கோரல் பிரச்சனை எழுவதற்கு முன்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பாமக விஷயத்தில் முடிவெடுத்துள்ளது பற்றி தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம், தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கனவே அங்கீகரித்ததை தெளிவாக்கியுள்ளது.

    தற்போதைய சூழலில் நீதிமன்றம் பாமக கட்சி வழக்கு தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    பாமகவின் தலைவர், நிர்வாகிகள் யார் என்பதை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்தக்கு தடை இல்லை என்ற வாதத்தை பதிவு செய்கிறோம் என்றும் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை மட்டுமே பதிவு செய்கிறோம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 102 பொதுத்துறை நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் மட்டும் தான் செயல்பட்டு வருகின்றன.
    • திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4 கட்டங்களாக இதுவரை ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்தியாவில், 2022-23ஆம் ஆண்டில் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அதிக இழப்பை சந்தித்த மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்றும், உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பு மட்டும் ரூ.16,048 கோடி என்றும் பதினாறாம் நிதி ஆணையத்தின் முதன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது தான் சான்று ஆகும்.

    தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 102 பொதுத்துறை நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் மட்டும் தான் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 54 நிறுவனங்கள் லாபத்திலும், 35 நிறுவனங்கள் நஷ்டத்திலும் இயங்கி வருகின்றன. இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை நினைத்து மகிழ்ச்சி அடைவதற்கு எதுவும் இல்லை. மது வணிகம் செய்யும் டாஸ்மாக், உழவர்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களை பறித்து 1000%க்கும் மேல் அதிக விலைக்கு விற்பனை செய்யும் சிப்காட் போன்ற நிறுவனங்கள் தான் இலாபத்தில் இயங்கி வருகின்றன. இந்த 54 நிறுவனங்களும் சேர்ந்து 2022-23ஆம் ஆண்டில் ஈட்டிய இலாபம் வெறும் ரூ.2560 கோடி மட்டும் தான்.

    அதே நேரத்தில் நஷ்டத்தில் இயங்கும் 35 நிறுவனங்கள் அதே ஆண்டில் ஏற்படுத்திய இழப்பு ரூ.16,048 கோடி ஆகும். அந்த ஆண்டில் மேலும் 11 நிறுவனங்களின் இழப்பு குறித்த முழுமையான தகவல்கள் நிதி ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை. அந்தத் தொகையும் சேர்ந்திருந்தால், ரூ.18,814 கோடி இழப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் இராஜஸ்தான் மாநிலத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தைத் தமிழ்நாடு பிடித்திருக்கும்.

    2022-23ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு மானியமாக ரூ.26,867 கோடி வழங்கியது. அந்த மானியம் மட்டும் வழங்கப்படவில்லை என்றால், பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பு ரூ.52,915 கோடியாக அதிகரித்திருக்கும். அத்தகைய சூழலில் பொதுத்துறை நிறுவனங்கள் இழப்பில் ரூ.32,430 கோடியுடன் முதலிடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்தை தமிழகம் பிடித்திருக்கும்.

    இழப்பை எதிர்கொண்ட நிறுவனங்களில் மிகவும் முக்கியமானது மின்சார வாரியம் ஆகும். 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியம் ரூ.9192 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டான 2021-22ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.9000 கோடி ஆகும். 2022-23ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வின் மூலம் 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. அதன்படி 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதையும் தாண்டி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு அதிகரித்திருக்கிறது என்றால் எந்த அளவுக்கு அந்த நிறுவனம் சீரழிந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4 கட்டங்களாக இதுவரை ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் வாயிலாக மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனாலும் மின்சார வாரியம் இன்னும் இழப்பில் தான் இயங்கி வருகிறது. இதற்குக் காரணம் திமுக ஆட்சியாளர்களின் ஊழல் தான்.

    இந்தியாவிலேயே அதிக பொதுத்துறை நிறுவனங்களைக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். ஒரு மாநிலம் அதன் அனைத்துத் தேவைகளுக்கும் வரி வருவாயை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மாநிலங்களின் வரிவிதிப்பு அதிகாரம் பறிக்கப்பட்டு விட்ட நிலையில், வரி அல்லாத வருவாயை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்.

    மாநிலங்களின் வரி அல்லாத வருவாயைப் பெருக்குவதற்கான ஒரே வழி பொதுத்துறை நிறுவனங்களை இலாபத்தில் இயக்குவதும், கனிமவளங்கள் விற்பனையை முறைப்படுத்துவதன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவது தான். ஆனால், இரண்டிலுமே திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. ஆற்று மணல், கருங்கல் ஜல்லி போன்றவற்றின் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்றாலும், அதில் நடைபெறும் வரலாறு காணாத ஊழல்கள் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் ஆட்சியாளர்களின் பைகளுக்கு செல்கின்றன. அதேபோல், பொதுத்துறை நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குவதால் தமிழக அரசின் வரி அல்லாத மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    2025-26ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பு ரூ.4 லட்சத்து, 30,434 கோடி ஆகும். ஆனால், தமிழக அரசின் வரி அல்லாத வருவாய் நடப்பாண்டில் வெறும் ரூ.28,818.58 கோடி மட்டும் தான். இது தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் வெறும் 6.69% மட்டும் தான். ஒரு மாநிலத்தின் நிதிநிலை வலிமையாக இருக்க வேண்டும் என்றால், அதன் மொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பில் 20% அளவுக்கு வரி அல்லாத வருவாய் இருக்க வேண்டும். ஆனால், திமுக அரசின் ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிந்து விட்டதால், வரி அல்லாத வருவாய் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். இதற்கு காரணமான திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டப் போவது உறுதி என்று கூறியுள்ளார்.

    ×