search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahatma Gandhi"

    அக்டோபர் 2-ந்தேதிக்குள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். #MahatmaGandhi #SwachhataHiSeva #CleanIndia #SPVelumani
    கோவை:

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி கோவில் முன்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ், நடிகர் விவேக், கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் தூய்மை பணி மேற்கொண்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் இளம்பெண்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். தூய்மை பணியை தொடங்கி வைத்த பின் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 584 ஊராட்சிகளிலும் சிறந்த முறையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 53 லட்சம் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

    தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஊராட்சிகள் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அக்டோபர் 2-ந் தேதிக்குள் அந்த ஊராட்சிகளும் இந்த திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டு திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும்.


    வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை என்ற தமிழக முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு ஏற்ப பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பனை மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகிக்க அனைவரும் முன்வர வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MahatmaGandhi #SwachhataHiSeva #CleanIndia #SPVelumani
    தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஈஷா யோக மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் பாராட்டியுள்ளார். #SwachhataHiSeva #CleanIndia #JaggiVasudev #TNGovt
    கோவை:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் அடுத்த மாதம் 2-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி இன்று முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை ‘தூய்மையே சேவை’ என்னும் விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்து மக்களிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார்.

    தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிரதமர் மோடியின் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிகழ்ச்சி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி சிலை முன்பு நடைபெற்றது. இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, தமிழக உள்ளாட்சி மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை கலெக்டர் ஹரிஹரன், மத்திய நீர் மற்றும் சுகாதாரத் துறை இணை செயலாளர்அருண் பரோகா, கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும், சுற்றுப்புற கிராம மக்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு முன்னதாக சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    உடல், வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்ற பண்பு நம் பாரத கலாச்சாரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. ஹரப்பா, மொகஞ்சதரோ ஆகிய இடங்களில் ஆய்வு செய்த பிரிட்ஷ் தொல்லியல் துறையினர் அங்கு டிரைனேஜ் வசதி இருந்துள்ளதை கண்டு வியந்துள்ளனர். 5000 வருடங்களுக்கு முன்பு இதுபோன்று வேறு எந்த கலாச்சாரத்திலும் இந்த டிரைனேஜ் முறை உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து பல்வேறு படையெடுப்புகள் காரணமாக நமது தேசம் 20, 30 வருடங்களுக்கு ஏழ்மை நிலையில் இருந்தது. இதனால், இந்த பண்பு மறைந்து போனது.

    தற்போதும் நம் தேசத்தில் இருப்பவர்கள் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதில் போதிய கவனம் செலுத்தி வருவதை நீங்கள் கவனிக்கலாம். காலையில் குளித்து முடித்த பிறகு தான் உணவு அருந்துவதோ அல்லது வேறு பணிகளுக்கு செல்கின்றனர். ஆனால், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் பண்பு மறைந்து போயுள்ளது.


    இந்நிலையில், இந்த பண்பை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தால் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

    குறிப்பாக, தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை தூய்மையாக வைத்து கொள்ளவும் புதிய கழிப்பறைகள் கட்டவும் ரூ.60 கோடியை ஒதுக்கி உள்ளது.

    தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் 37 சிறு நகரங்களில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த ஈஷா அறக்கட்டளை சார்பில் சிட்டிசன் கமிட்டிக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வார்டு வாரியாக குழுக்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அடுத்த 10 வருடங்களில் நம் தேசத்தை தூய்மையான தேசமாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு சத்குரு கூறினார்.

    பின்னர் பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துள்ள ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.  #SwachhataHiSeva #CleanIndia  #JaggiVasudev #TNGovt
    தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இதுவரை 8.39 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டிருப்பதாக மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார். #SwachhBharatMission #HouseholdToilets
    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதிவரை சர்வதேச சுகாதார மாநாட்டை மத்திய அரசு நடத்த உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

    இந்த மாநாடு தொடர்பான விளக்கக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலாளர் பரமேஸ்வரன் ஐயர், கிராமப்புற சுகாதார மேம்பாடு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கினார்.

    ‘தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 8.39 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சுமார் 4.4 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா கிராமங்களாக அறிவித்துள்ளன. தூய்மை இந்தியா திட்டம் தொடங்கியதில் இருந்து கிராமப்புற சுகாதார மேம்பாடு அதிகரித்துள்ளது. 2014ல் 550 மில்லியன் மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்திய நிலை இருந்தது. தற்போது அது 150 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது’ என்றார் பரமேஸ்வர ஐயர். #SwachhBharatMission #HouseholdToilets
    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு 15-ந் தேதி (சனிக்கிழமை) புதிய தூய்மை திட்டம் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva
    புதுடெல்லி

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ந் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



    இதன் தொடர்ச்சியாக புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கிவைக்கிறார்.

    இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி பிறந்த 150-வது ஆண்டை அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி நாம் தொடங்குகிறோம். பாபுவின் (காந்தியடிகள்) கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும், வரலாற்று சிறப்பு மிக்க தூய்மை இந்தியா திட்டமும் அன்றைய தினத்தில் 4-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அனைவரையும் நான் வணங்குகிறேன்.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 15-ந் தேதி காலை 9.30 மணியளவில் தூய்மையே உண்மையான சேவை என்ற திட்டத்தை நாம் தொடங்குகிறோம். அன்றைய தினம், தூய்மை இந்தியா திட்டத்தில் அயராது உழைத்து வரும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.

    இந்த திட்டத்தில் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதுவே மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.  #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva 
    மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து ரெயில் பெட்டிகளிலும் தூய்மை இந்தியா சின்னத்துடன், இந்திய தேசிய கொடியை வரைய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது. #MahatmaGandhi #IndianRailway #SwachchBharat
    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் அனைத்து அரசு துறைகளும் கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ள தூதரக அலுவலகங்களிலும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாட கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    அதன்படி இந்திய ரெயில்வே துறை மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாட இருக்கிறது. அந்த வகையில் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் தூய்மை இந்தியா சின்னத்துடன், இந்திய தேசிய கொடியை வரைய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.



    மேலும் டெல்லி, மும்பை, லக்னோ, சூரத், பெங்களூரு உள்ளிட்ட 43 ரெயில் நிலையங்களில் அக்டோபர் முதல் அடுத்த 6 மாதங்களுக்கு ஒவ்வொரு தலைப்பிலும் வாசகங்கள் இடம் பெறவும், பூரி, அமிர்தசரஸ் ஹரித்துவார் உள்ளிட்ட 28 ரெயில் நிலையங்களை மிகவும் தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தி உள்ளது. சுகாதாரம், அமைதி, தன்னார்வ சமூக சேவை, இன ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகிய தலைப்புகளில் வாசகங்கள் 43 ரெயில் நிலைங்களில் இடம் பெற இருக்கின்றன.  #MahatmaGandhi #IndianRailway #SwachchBharat
    மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், கொலை, கற்பழிப்பு, ஊழல் வழக்கு கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. #MahatmaGandhi #PrisonerConvicted
    புதுடெல்லி:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம், அக்டோபர் 2-ந் தேதி தொடங்குகிறது. இதை ஓராண்டு முழுவதும் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதையொட்டி, சில குறிப்பிட்ட பிரிவு கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    எந்தெந்த கைதிகள் விடுதலை பெற தகுதியானவர்கள், யார் யார் விடுதலை பெற தகுதி அற்றவர்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ், வருகிற அக்டோபர் 2-ந் தேதி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி, அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி ஆகிய 3 நாட்களில் கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்யலாம். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    தகுதியான கைதிகள் பட்டியலை ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் தயார் செய்யுமாறும், அப்போதுதான் அக்டோபர் 2-ந் தேதி, முதல்கட்ட கைதிகளை விடுதலை செய்ய முடியும் என்றும் கூறியுள்ளோம்.



    அதன்படி, 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள், 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய திருநங்கை கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள் ஆகியோர் விடுதலை பெற தகுதியானவர்கள்.

    70 சதவீத உடல்குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள், நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட கைதிகள் (மருத்துவ குழு சான்றளிக்க வேண்டும்), தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை அனுபவித்து முடித்தவர்கள் ஆகியோரும் பொது மன்னிப்பு பெற தகுதியானவர்கள் ஆவர்.

    இருப்பினும், கொலை, கற்பழிப்பு, ஊழல் போன்ற வழக்குகளில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.

    மரண தண்டனை விதிக்கத்தக்க குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள், மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்கள் ஆகியோரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.

    பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள், தடா, பொடா, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், வெடிபொருட்கள் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், அரசாங்க ரகசிய சட்டம், கடத்தல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை பெற்ற குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட தகுதி இல்லாதவர்கள் ஆவர்.

    வரதட்சணை மரணத்துக்காக தண்டனை பெற்றவர்கள், கள்ள நோட்டு வழக்கு, ஆள் கடத்தல், போக்சோ சட்டம், விபசார தடுப்பு சட்டம், சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டம், அன்னிய செலாவணி முறைப்படுத்தும் சட்டம் (பெமா), கருப்பு பணம் மற்றும் வரிவிதிப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட தகுதி இல்லாதவர்கள்.

    போதைப்பொருள் தடுப்பு சட்டம், பேரழிவு ஆயுதங்கள் தடுப்பு சட்டம், ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கும், தேசத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கும் பொது மன்னிப்பு கிடையாது.

    மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யக்கூடிய தகுதியான கைதிகள் பட்டியலை தயாரிக்க மாநில அளவிலான கமிட்டியை அமைக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம். அந்த கமிட்டியின் சிபாரிசுகளை மாநில கவர்னரின் ஒப்புதலுக்காக மாநில அரசுகள் முன்வைக்க வேண்டும். அரசியல் சட்டம், தனக்கு வழங்கிய அதிகாரத்தை பயன்படுத்தி, கவர்னர் ஒப்புதல் வழங்குவார்.

    மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படும் விஷயங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். வெளிநாட்டு கைதிகளாக இருந்தால், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் விடுதலை செய்யலாம்.

    இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.  #MahatmaGandhi #PrisonerConvicted  #tamilnews 
    பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி இருந்தும் மகாத்மா காந்திக்கு எந்த பல்கலைக்கழகத்திலும் இருக்கை இல்லை என்ற வேதனையான தகவல் வெளியாகி உள்ளது. #MahatmaGandhi #ChairDespite
    புதுடெல்லி:

    நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேசப்பிதா மகாத்மா காந்திக்கு பல்கலைக்கழகங்கள் இருக்கை அமைக்க பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி இருக்கிறது. ஆனாலும் இதுவரை எந்த பல்கலைக்கழகத்திலும் மகாத்மா காந்தி பெயரால் இருக்கை அமைக்கப்படவில்லை என்ற வேதனையான தகவல் வெளியாகி உள்ளது.

    இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “அமைதி, அகிம்சை, சுதந்திரப் போராட்ட இயக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகிய பொருள்களில் மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு இருக்கைகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி தந்து உள்ளது. இருப்பினும் மகாத்மா காந்தி இருக்கை எந்த பல்கலைக்கழகத்திலும் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக எந்த பல்கலைக்கழகத்திடம் இருந்தும் திட்ட முன்வடிவும் பெறப்படவில்லை” என்று கூறினார்.

    அதே நேரத்தில், காந்திய கொள்கை சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் விருப்பம் கொண்டு இருக்கின்றனர். காந்திய கொள்கை சார்ந்த பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, எம்.பில் ஆய்வு, பி.எச்.டி. ஆய்வு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு உள்ளனர் என தெரிய வந்து உள்ளது.

    இதற்கு 2017-18 கல்வி ஆண்டில் காந்திய கொள்கை தொடர்பாக 78 பேர் பி.எச்.டி. ஆய்வுக்கு பதிவு செய்து உள்ளனர் என்பதே சான்றாக அமைந்து உள்ளது. #MahatmaGandhi #ChairDespite  #Tamilnews

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, பாதி தண்டனை காலத்தை கழித்த மூத்த கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. #MahatmaGandhi #BirthdayAnniversary
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, மூத்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு திட்டம் ஒன்றை கொண்டு வந்து அமல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * ஆண் கைதிகளுக்கு 60 வயதும், பெண் கைதிகளுக்கு 55 வயதும் முடிந்து இருக்க வேண்டும். மொத்த தண்டனை காலத்தில் பாதியளவை அனுபவித்து முடித்து இருக்க வேண்டும்.

    * வரதட்சணை சாவு, கற்பழிப்பு, ஆட்கடத்தல், பொடா, தடா, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம், அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் (பெமா), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள், இந்த பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

    * போதைப்பொருள் தடுப்புச்சட்டம், லஞ்ச ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின்கீழ் தண்டிக்கப்பட்டவர்களுக்கும் இந்த பொது மன்னிப்பு திட்டம் பொருந்தாது. அவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்பு இல்லை.

    * 70 சதவீத உடல் ஊனத்துடன் உள்ள மாற்றுத்திறனாளிகள் பாதி தண்டனைக் காலத்தை கழித்து இருந்தால் விடுதலை செய்யப்படுவார்கள். மீள முடியாத நோய் தாக்கியவர்கள், மூன்றில் ஒரு பங்கு தண்டனையை கழித்திருந்தால் அவர்களும் விடுவிக்கப்படுவார்கள்.

    * மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும், மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களும் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

    * 3 கட்டங்களாக இந்த பொது மன்னிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு மூத்த கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். முதல் கட்டமாக வரும் அக்டோபர் 2-ந் தேதியும், 2-வது கட்டமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதியும் (சம்பரண் சத்தியாகிரக இயக்க நினைவு நாள்), 3-வது கட்டமாக அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதியும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

    * மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய அரசு அறிவுரை கடிதம் அனுப்பி வைக்கும். அவை ஒரு கமிட்டி அமைத்து தகுதியான நபர்களை தேர்வு செய்து, கவர்னருக்கு அனுப்பி அரசியல் சாசனம் பிரிவு 161-ன் கீழ் அவரது ஒப்புதல் பெற்று, கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. #MahatmaGandhi #BirthdayAnniversary #tamilnews 
    6 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள செஷெல்ஸ் அதிபர் டேனி பவுரி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். #Seychelles #SabarmatiAshram #DannyAntoineRollenFaure
    காந்திநகர்:

    இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு செஷல்ஸ் ஆகும். செஷல்ஸ் நாட்டில் உள்ள ஒரு தீவில் கடற்படை தளம் அமைப்பதற்காக இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 6 நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் அதிபர் டேனி பவுரி இன்று இந்தியா வந்தடைந்துள்ளார்.

    இதையடுத்து, இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு செஷல்ஸ் அதிபர் டேனி பவுரி சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக சபர்மதி ஆசிரமத்தின் வருகை பதிவேட்டில் தனது வருகையை பதிவு செய்தார்.



    அந்த பதிவில் ‘வன்முறைக்கு எதிரான அகிம்சை எனும் கொள்கையை நாம் நமது குழந்தைகளுக்கும் இந்த உலகத்துக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்’  என குறிப்பிட்டுள்ளார்.

    வரும் திங்களன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, செஷல்ஸ் அதிபர் டேபி பவுரி சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. #Seychelles #SabarmatiAshram #DannyAntoineRollenFaure
    அமெரிக்காவில் மகாத்மா காந்தி கடந்த 1924-ம் ஆண்டு அன்னி பெசண்ட் அம்மையாருக்கு எழுதிய கடிதம் ஒன்று ரூ.13.73 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. #MahatmaGandhi #GandhisignedPostcard

    வாஷிங்டன்:

    இந்திய விடுதலை போராட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் மகாத்மா காந்தி. இவர் கடந்த 1924-ம் ஆண்டு அன்னி பெசண்ட் அம்மையாருக்கு எழுதிய கடிதம் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏலத்தில் விட்டது.

    அந்த கடிதத்தில், உங்களது கடிதத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என் மகன் தேவதாஸ் இன்றிரவு புறப்படுகிறான். அவரது செலவுகள் பற்றி கவலைப்பட வேண்டாம் என பிரார்த்தனை செய்கிறேன். அவன் உங்கள் விருந்தாளியாக ஒரு கவுரவத்தை பெற்றுள்ளார். நீங்கள் அனுப்பிய கதர் துண்டுகளை ஜம்னதாஸ் என்னிடம் கொடுத்தார். நான் அந்த பரிசை பத்திரமாக வைத்து கொள்வேன்: நூற்பு மிகவும் நன்றாக இருந்தது, என எழுதியிருந்தார்.

    இந்த கடிதத்தில் மகாத்மா காந்தி கையொப்பமிட்டிருந்தார். அந்த கடிதத்திற்கான ஏலம் கடந்த 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இறுதியில் அந்த கடிதத்தை ஒருவர் 20,233 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ. 13,73,112) ஏலத்தில் எடுத்துள்ளார்.  #MahatmaGandhi #GandhisignedPostcard
    காந்தி கண்ட கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #BJP #PonRadhakrishnan
    மதுரை:

    மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி 4 ஆண்டுகள் முடிந்து 5-வது ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் இதை கொண்டாடும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

    மதுரை கோச்சடையில் நடைபெற்ற தூய்மை பணியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-வது ஆண்டு தொடக்கம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

    இந்தியாவை உலக அளவில் முதல்நிலை நாடாக மாற்றுவதற்கு பிரதமர் மோடி மிகப்பெரிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தூய்மை நிறைந்த இந்தியாவை உருவாக்கும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டுவந்தது மட்டுமின்றி, பிரதமர் மோடி தனது கையிலே துடப்பத்தை எடுத்து சுத்தம் செய்தார்.

    தூய்மை இந்தியா திட்டத்தினால் உலக அளவில் இந்தியாவிற்கு பல மடங்கு பெருமை அதிகரித்துள்ளது. இன்று நாடு முழுவதும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, உறுப்பினர்கள், பாரதிய ஜனதா ஆளும் 21 மாநில முதல்-அமைச்சர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற, மேலவை உறுப்பினர்கள், பாரதிய ஜனதா தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.


    சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று காந்தி கனவு கண்டாரோ அந்த கனவுகளை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பல மடங்கு பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இன்றைக்கு தூய்மைப்படுத்தப்பட்டுள்ள மதுரை கோச்சடை பகுதி ஒரு ஆண்டாக குப்பைகளை அகற்றாத பகுதியாகும். இதேபோன்று எல்லா இடங்களிலும் தூய்மை பணியை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan
    ×