என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக அரசு"
- மக்களின் பயணத்தை 'சென்னை ஒன்' செயலி மிக எளிமையாக, சிக்கனமாக வடிவமைத்து கொடுத்து விடுகிறது.
- 'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள சில்வர் மற்றும் கோல்ட் வகை மாதாந்திர பயண அட்டைகளை பெற முடியும்.
சென்னையில் உள்ள மக்கள்தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் பொது போக்குவரத்தை தான் அன்றாடம் பயன்படுத்துகின்றனர். அதன்படி தினமும் அரசு மாநகர பஸ்களில் 35 லட்சம் பேரும், மின்சார ரெயில்களில் 12 லட்சம் பேரும், மெட்ரோ ரெயிலில் 3 லட்சம் பேரும் பயணிக்கின்றனர்.
மக்களின், இந்த பயணத்தை எளிதாக்க அரசு பல்வேறு வழிகளில் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. உதாரணமாக அரசின் சிங்கார சென்னை அட்டை மூலம் மாநகர பஸ் மற்றும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். அதேபோல மின்சார ரெயில் பயணத்தை சீசன் அட்டை, யுடிஎஸ் மற்றும் ரெயில் ஒன் செயலிகள் மூலம் டிக்கெட எடுத்து கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு போக்குவரத்துக்கும் தனித்தனியாக டிக்கெட் வேண்டும்.
ஆனால் இந்த நிலையை மாற்றி, அனைத்து பொது போக்குவரத்துக்கும் ஒரே செயலியில் டிக்கெட் பெறும் வசதியை தமிழக அரசின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பான கும்டா தொடங்கி உள்ளது. அதற்காக வடிவமைக்கப்பட்ட `சென்னை ஒன்' (chennai one) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி தொடங்கி வைத்தார்.

இந்த செயலி, பொது போக்குவரத்துக்கு வெறும் டிக்கெட் எடுப்பதற்காக மட்டுமல்லாமல் மக்களின் பயணத்தை எளிதாக வகுத்து கொடுத்து இருக்கிறது. இந்த பயணத்தில் ஆட்டோ, கார் தேவை என்றாலும் அதற்கும் அதில் புக் செய்து விடலாம்.
உதாரணமாக நீங்கள் நந்தனத்தில் இருந்து காசிமேடு மீன் மார்க்கெட் செல்ல வேண்டும் என்று வைத்து கொள்வோம். `சென்னை ஒன்' செயலில், நீங்கள் நந்தனத்தில் இருந்து மெட்ரோ மூலம் எழும்பூர் வரையும், அங்கிருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை மின்சார ரெயிலிலும், அங்கிருந்து ராயபுரம் வரை மாநகர போக்குவரத்து பஸ்சிலும், பின் அங்கிருந்து ஆட்டோ அல்லது கார் மூலம் காசிமேடு மீன் மார்க்கெட் செல்வதற்கும் மொத்தமாக பதிவு செய்து கொள்ளலாம்.
ஆனால் அதில் ஆட்டோ மற்றும் கார் கட்டணத்தை மட்டும் டிரைவர்களிடம் செலுத்த வேண்டும். மற்ற மெட்ரோ, ரெயில், பஸ் ஆகியவற்றுக்கு பணம் செலுத்தி கியூ ஆர்கோடு டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அதில் சிறப்பு என்னவென்றால் மெட்ரோ, ரெயில், பஸ் எப்போது எந்த நேரத்தில் வரும், நீங்கள் எதில் செல்ல வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வதுடன் நீங்கள் பஸ் நிலையத்தில் இறங்கியவுடன் உங்களுக்கான ஆட்டோ, கார் தயாராக இருக்கும்.
அதாவது, மக்களின் பயணத்தை இந்த செயலி மிக எளிமையாக, சிக்கனமாக வடிவமைத்து கொடுத்து விடுகிறது. அதேபோல ஒவ்வொரு இடங்களிலும் நேரடியாக சென்று டிக்கெட் எடுக்க தேவையில்லை. அதே போல, தனித்தனி செயலிக்கு சென்று டிக்கெட் பதிவு செய்யவேண்டியதும் இல்லை.
இந்த செயலியில் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளிலும் பயன்படுத்த முடியும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம்.
அதே போல் டிக்கெட்டிற்கு பணம் செலுத்த வசதியாக கும்டா யு.பி.ஐ. வசதியும் இருக்கிறது. அதனால் மற்ற யு.பி.ஐ. செயலிகள் தேவையில்லை. `சென்னை ஒன்' செயலியில், பல மேம்பட்ட அம்சங்கள் இருந்தாலும் இன்னும் சிலவற்றை மேம்படுத்த வேண்டி உள்ளது. நீங்கள் மெட்ரோ, ரெயில் மற்றும் பஸ்சையும் இணைந்து டிக்கெட் எடுத்துவிட்டால், அதில் ஒன்றை நீங்கள் ரத்து செய்ய முடியாது. பதிவு (புக்கிங்) செய்து விட்டால் ரத்து செய்ய முடியாது.

மெட்ரோ ரெயில் சி.எம்.ஆர்.எல். செயலில் மை பாஸ் என்ற வசதி உள்ளது. அதில் நாம் பணம் செலுத்திவிட்டால், நாம் மெட்ரோவில் செல்லும் பயணங்களுக்கு மட்டும் பணம் செலுத்திக் கொள்ளலாம். அதேபோல் இந்த `சென்னை ஒன்' செயலியிலும் செல்லும் பயணத்துக்கு பணம் எடுத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
இத்திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே 1 லட்சம் பேர் `சென்னை ஒன்' செயலியை பதிவிறக்கம் செய்தனர்.
'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள சில்வர் மற்றும் கோல்ட் வகை மாதாந்திர பயண அட்டைகளை பெற முடியும். பயண தேவைகளுக்கு ஏற்ப அட்டையை தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.
செயலி வழியாக மாதாந்திர அட்டைகள் வாங்கும் பயணிகளுக்கு அட்டை ஒன்றுக்கு ரூ.50 சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை உடனடி தள்ளுபடியாகவோ அல்லது கேஷ்பேக் முறையிலோ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் 'சென்னை ஒன்' செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
மொபைல் எண்ணை பயன்படுத்தி, ஓடிபியை பதிவிட்டு உள்நுழைந்து வேண்டும்.
மாநகரப் பேருந்து, சென்னை மெட்ரோ ரெயில் மற்றும் சென்னை புறநகர் ரெயில்சேவைகளுக்கு தனித்தனியாக பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வசதி முகப்பிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புறப்படும் இடம் மற்றும் சென்று சேரும் இடத்தை பதிவிட்டு பயண வழித்தடத்தை பார்க்க முடியும். உதாரணத்திற்கு, தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் செல்வதற்கான போக்குவரத்து வழித்தடத்தை பதிவிட்டால் அனைத்துவிட சேவைகளும் காண்பிக்கப்படும்.
இதே வழித்தடத்தில் புறநகர் ரெயில் சேவையை பயன்படுத்துவோர் அதற்கான பயணச்சீட்டை பெறலாம்.
பொது போக்குவரத்து இல்லாத பகுதிகளுக்கு செல்ல வாடகை கார் மற்றும் ஆட்டோக்களும் இந்த செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
பல செயலிகளைப் பயன்படுத்தும் சிரமத்தைத் தவிர்த்து, ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறுவதால் பயணிகள் இதனைப் பாராட்டுகின்றனர்.
சென்னை ஒன் செயலி, சென்னையின் பொதுப் போக்குவரத்தை எளிமையாகவும், விரைவாகவும், திறமையாகவும் பயன்படுத்த உதவும் ஒரு புரட்சிகரமான செயலியாகும். இது 'One City, One App, One Ticket' என்ற கொள்கையுடன் செயல்படுகிறது.
- இதில் இரண்டு ஓடுபாதைகள், ஒரு சிறப்பு சரக்கு முனையம் மற்றும் நவீன வசதிகள் இருக்கும்.
- சென்னை மெட்ரோவின் 4வது கட்டத்தை பரந்தூர் விமான நிலையத் தளம் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இட நெருக்கடி அதிகரித்து விட்டது. பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை கையாள்வது, பயணிகளை வருகையை சமாளிப்பது, புதிய வழித்தடங்கள் மற்றும் விமான நிறுவனங்களை வரவேற்பது போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமின்றி சென்னை மாநகர் படிப்படியாக விரிவடைந்து கொண்டே செல்கிறது.
இதுபோன்ற காரணங்களால் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதையொட்டி பரந்தூர் பகுதியில் பல்வேறு கிராமங்களில் இருந்து நிலத்தை கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள 5,747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி மிகவும் பிரம்மாண்டமான பசுமைவெளி சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்திற்குத் தேவையான மொத்த நிலத்தில் 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு ரூ.400 கோடிக்கும் அதிகமான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் இதற்கு ஏகனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் தங்களின் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பூர்வீக நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் வரும் என வேதனை தெரிவிக்கின்றனர். இதை சுட்டிக் காட்டி பல மாதங்களாக தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். நீதிமன்ற வழக்குகள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு என பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்ந்து இழுபறியாக சென்று கொண்டிருக்கிறது.
இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதல் கட்டப் பணிகள் 2029 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2030 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத் திட்டமும் நான்கு கட்டங்களாக, 2046 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ.29,150 கோடி ஆகும்.

இந்த விமான நிலையம் தனது முழுத் திறனை எட்டும்போது ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இதில் இரண்டு ஓடுபாதைகள், ஒரு சிறப்பு சரக்கு முனையம் மற்றும் நவீன வசதிகள் இருக்கும்.
தற்போதுள்ள சென்னை விமான நிலையத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த புதிய இடம், வரவிருக்கும் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலைக்கு அருகில் உள்ளது. மேலும், சென்னை மெட்ரோவின் 4வது கட்டத்தை பரந்தூர் விமான நிலையத் தளம் வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடன் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் ரூ.29,150 கோடி செலவில் புதிய விமான நிலையம் தேவை தானா அதுவும் விளைநிலங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் தேவை என்ன என்பவை முடிவில்லா முகவரியாகுமோ என்ற அச்சம் கலந்த கேள்வியை கேட்க தவறவில்லை!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து பேசினார்.
- பொதுமக்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சென்னை:
சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.6.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள அமுதம் அங்காடியின் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து பேசினார். பொதுமக்கள் வழிநெடுகிலும் நின்று முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பொதுமக்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து, பெரியார் நகரில் அமைய உள்ள அமுதம் அங்காடி கட்டும் பணிக்கும், ரூ.17.47 கோடி செலவில் கட்டப்பட உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும்.
- இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை:
சமீபகாலமாக டிஜிட்டல் மோசடி குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடிக்காரர்கள் வங்கி அதிகாரிகள் போல் பேசி, கடவு சொற்களை பெறுவதும், சிறிது நேரத்திலேயே கணக்கில் இருந்த பணத்தை சூறையாடுவதும் தொடர்கதையாகி விட்டது. இதை தடுக்க 'சைபர்' கிரைம் போலீசாரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஆனாலும், திரை மறைவில் கொள்ளையர்கள் இருந்துகொண்டு செல்போனுக்கு போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். அந்த லிங்கை தொட்ட சில கணங்களில் அவர்களது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் முற்றிலும் துடைத்து எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், "மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். எனவே தயவுசெய்து கீழே உள்ள லிங்கை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது" என்ற வாசகங்களுடன் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனை பலரும் பகிர்ந்து வருவதோடு, உதவிதொகை பெற விண்ணப்பிக்குமாறு தங்கள் குடும்பத்தினரையும் வற்புறுத்துகிறார்கள். இது தூண்டில் போட்டு மீனை பிடிப்பதுபோல, வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை லாவகமாக எடுக்க கையாளப்படும் முயற்சியாகும் என சிலர் லிங்கை தொடுவதை தவிர்த்து வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இது போலியானச் செய்தி. வதந்தியைப் பரப்பாதீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
- தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது.
- ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பாராளுமன்றத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதில் உங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது? கருத்து என்ன? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு கமல்ஹாசன், இதில் கருத்து தான் சொல்ல முடியும். காந்தியார் அவர்களின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது. ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது. அதை மீட்கவும், காக்கவும் தான் முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு வேறு இடத்தில் விளையாட கூடாது என்று தான் என்னுடைய தாழ்மையான கருத்து என்றார்.
தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலையொட்டி பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் வருகை தர உள்ளனர். இது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அதை நான் எப்படி சொல்லமுடியும்? மக்கள்தான் சொல்லமுடியும் என்றார்.
2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக உண்டு என்று கூறினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
- புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
நெல்லை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் வருகிற 20, 21-ந்தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக 20-ந்தேதி பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் நெல்லைக்கு வருகிறார்.
அவருக்கு மாவட்ட எல்லையான பாளை கே.டி.சி.நகர் பகுதியில் பாலம் அருகே நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் நெல்லை மேற்கு ஆவுடையப்பன், மத்தி அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு கிரகாம்பெல் மற்றும் நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதில் 2-வது நாளான 21-ந்தேதி பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த பின்னர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைத்து அரசு சார்பில் நடைபெறும் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சபாநாயகர் அப்பாவு தலைமையில், கலெக்டர் சுகுமார், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல், மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என். நேரு நேற்று ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அன்று இரவு வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். மறுநாள் 21-ந்தேதி காலை ரெட்டியார்பட்டியில் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ரூ.72.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
அங்கு புதிய அரசு பஸ் வழித்தடங்களை தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்களை வழங்குகிறார். தொடர்ந்து நடைபெறும் விழாவில் ரூ.181.89 கோடியில் முடிவடைந்த 31 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.356.59 கோடி மதிப்பில் 11 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இவ்வாறாக மொத்தம் ரூ.538.48 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
மேலும் ரூ.100 கோடியே 95 லட்சம் மதிப்பில் 44 ஆயிரத்து 924 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். மொத்தம் ரூ.639 கோடி மதிப்பிலான திட்டங்களை நெல்லை மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணிக்கிறார் என்றார்.
தொடர்ந்து பொருநை அருங்காட்சியகத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். அதன் பின்னர் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ள தரிசன பூமி மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும்.
- கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கூறியுள்ளார்.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ம் தேதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப் பிள்ளையார் கோவிலில் கார்த்திகை திருநாள் (3-ந் தேதி) அன்று தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதி கடந்த 4-ம் தேதி அன்று மீண்டும் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு இடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கும், இது தொடர்பான அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை ஆஜராகும் படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
கடந்தமுறை விசாரணையின் போது மதுரை மாவட்ட கலெக்டர் சார்பிலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் சார்பிலும் ஆஜரான அரசு வக்கீல்கள் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற கோரும் கல் தீபத்தூண் அல்ல நில அளவைகல் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கை தனி நீதிபதி பொதுநல வழக்கை போல விசாரித்து உத்தரவு பிறப்பித்தது ஏற்புடையதல்ல என்று வாதாடினார்கள்.
அதற்கு நீதிபதிகள் மனுதாரர்கள் கூறும் பகுதியில் ஏன் தீபம் ஏற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வக்கீல் பல ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கூறியுள்ளார். இதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மலைமீது விளக்கு ஏற்றுவது வேறு, வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது வேறு. தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோவில் நிர்வாகத்தை கட்டாயப்படுத்த முடியாது. கோவிலின் பராமரிப்பு அடிப்படை திட்டங்களை நிறைவேற்றும் கடமை அரசுக்கும் அறநிலைய துறைக்கும் தான் உள்ளது. கடைசியாக நூறு ஆண்டுகளுக்கும் மேல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை ஆகம விதிப்படிதான் நடந்து வருகிறது.
இந்த நடைமுறையை பாரம்பரிய நடை மற்றும் வழக்கமான நடைமுறையாகும். தனி நீதிபதி இந்த விவகாரத்தில் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து உள்ளார். கோவில் நிர்வாகத்தில் உயர் நீதிமன்றங்கள் நேரடியாக தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கடந்த 2021 ஆம் ஆண்டு தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது.
இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும். திருப்பதி தேவஸ்தானத்தில் கூட ஆகம விதிகளை மீறி எதையும் செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆகம விதிகளை மீறி புதிய பழக்கங்களையும் நடைமுறைகளையும் நிறைவேற்றும் போது பல தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டியது அவசியம். இந்த நடைமுறைகளை எல்லாம் தனி நீதிபதி இந்த வழக்கு விசாரணையின் போது கருத்தில் கொள்ளவில்லை. அர்ச்சனை மற்றும் பூஜையின் போது தனிநபர் தலையீடு இருக்கக்கூடாது அதுபோல தீபம் ஏற்றும் விவகாரத்திலும் ஆகம விதிகள் பொருந்தும் என்று வாதாடினார்கள்.
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் திருப்பரங்குன்றம் கோவிலில் அறங்காவலர் குழு செயல்பாட்டில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அறநிலையத்துறை வக்கீல் ஆஜராகி கோவில் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் மீது பற்று இல்லாதவர்களை போல சித்தரிக்கப்படுகின்றனர் என்றார்.
பின்னர் 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் நாகசுவாமி எழுதிய புத்தகத்தை நீதிபதிகள் முன்பு சமர்ப்பித்தனர்.
அந்தப் புத்தகத்தில் கார்த்திகை தீபம் குறித்து தெளிவாக கூறியுள்ளார். மலையடிவாரத்தில் இருந்து பாதி வழியில் இறங்கி சென்றால் தீபத்தூண் ஒன்று இருப்பதை காணலாம். நாயக்கர் கால தீபத்தூண் அந்த தீபத்தூன் அனுமன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆண்டவனின் தலை மீது உள்ள தூண் என அதை மக்கள் நினைக்கின்றனர். அங்கு விளக்கேற்றினால் நன்மை நடக்கும் என கூறப்படுவதாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்த தூண் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் இருக்கும் தூண் தான் என்றும் அறநிலையத்துறை வக்கீல்கள் வாதாடினர்.
- மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.
- காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. லட்சக்கணக்கான உழவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு திட்டமிட்டு தாமதம் செய்வதும், ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது.
வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன. அதன்பின் நவம்பர் இறுதியில் டிட்வா புயல் காரணமாக பெய்த மழையில் சிக்கி காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 22-ஆம் தேதியும், நவம்பர் 30-ஆம் தேதியும் வெளியிட்ட அறிக்கைகளில் வலியுறுத்தியிருந்தேன். அக்டோபர் மாதத்தில் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக நான் கூறியிருந்த நிலையில், அதே நாளில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர், 16 ஆயிரம் ஹெக்டேரில் ( 40 ஆயிரம் ஏக்கர்) பயிர்கள் பாதிக்கபட்டிருப்பதாகவும், மீதமுள்ள பயிர்களையும் கணக்கிட்டு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால், அதன்பின் சுமார் 2 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படாதது ஏன்?
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அடுத்த 10 நாள்களில் கணக்கிடப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்பிறகு 15 நாள்களுக்கு மேலாகியும் இன்று வரை பாதிக்கப்பட்ட பயிர்கள் முழுமையாக கணக்கிடப்படவில்லை. நாகை மாவட்டத்தில் 50% அளவுக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 55% அளவுக்கும், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 65% அளவுக்கும் மட்டுமே கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயிர்களுக்கான பாதிப்பு எப்போது கணக்கிடப்படும்? எப்போது இழப்பீடு வழங்கப்படும்? என்பது மில்லியன் டாலர் வினாவாக தோன்றுகிறது.
பயிர் பாதிப்புகளை கணக்கிடுவதற்கு போதிய மனிதவளம் இல்லாதது தான் கணக்கெடுப்பு தாமதமாவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உதவி வேளாண் அலுவலர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவரால் அதிகபட்சமாக 3 வருவாய் கிராமங்களில் உள்ள பயிர்களை மட்டுமே கணக்கெடுக்க முடியும். ஆனால், ஒவ்வொரு உதவி வேளாண் அலுவலருக்கும் 14 முதல் 16 வருவாய் கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் அவர்கள் பாதிப்பை கணக்கிடுவதற்கு இன்னும் பல நாள்கள் ஆகும். உழவர்கள் கடன் வாங்கி சாகுபடி செய்திருக்கும் நிலையில், இழப்பீடு வழங்குவதை தாமதித்துக் கொண்டே செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதுமட்டுமின்ன்றி, காவிரி பாசன மாவட்டங்களில் ஒரு ஏக்கர் சம்பா, தாளடி பயிர்களுக்கான சாகுபடி செலவு ரூ.40,000 ஆகும் நிலையில், ஏக்கருக்கு ரூ.8000 மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 2014-ஆம் ஆண்டின் சாகுபடி செலவுகளை கணக்கிட்டு நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தொகையை 11 ஆண்டுகளுக்குப் பிறகும் உழவர்களுக்கு வழங்குவது பெரும் அநீதி.
கடன் வாங்கியும், கடுமையாக உழைத்தும் வளர்த்தெடுத்த பயிர்களை இழந்து விட்டு தவிக்கும் விவசாயிகளுக்கு இனியும் தாமதிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.8,000 என்ற இழப்பீடு போதாது என்பதால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
- ரூ.32.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு நாளை காலை 10 மணிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
- நாளொன்றுக்கு 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில் தமிழ்நாடு ஹஸ் இல்லம் அமைக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னை சர்வதேச விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் நிலத்தில் அமையும் ஹஜ் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
ரூ.32.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு நாளை காலை 10 மணிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
நாளொன்றுக்கு 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில் தமிழ்நாடு ஹஸ் இல்லம் அமைக்கப்பட உள்ளது.
- கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு, விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
- குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்! என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரையில் ஒரு வழித்தடமும், விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
மெட்ரோ ரெயிலால் குறிப்பிட்ட நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க முடிவதால் மெட்ரோ ரெயில் சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
இதனை தொடர்ந்து, சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு, விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த திட்ட அறிக்கையில் மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ. 10,740 கோடியிலும் திட்டங்கள் முன்மொழியப்பட்டன.
ஆனால் மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது. இதனை மறுத்த மத்திய அரசு அதனை ஆய்வு செய்வதாகவும், கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டதாகவும் கூறியுள்ளது. இதனிடையே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இரு நகரங்களிலும் இல்லை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது. இதனால் இவ்விவகாரம் தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, போபால், இந்தூர் போன்ற பிற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா? தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!
அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்! என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
இதனை தொடர்ந்து, கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் கிடைக்காததற்கு தி.மு.க. அரசுதான் காரணம். திட்ட அறிக்கை முறையாக தயாரிக்கப்படாததால் மத்திய அரசு நிராகரித்ததாகவும், 2026ல் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கோவைக்கு மெட்ரோ நிச்சயம் கொண்டுவரப்படும் என்றும் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மக்கள் நலத் திட்டங்களை அரசியல் லாபத்துக்காக பா.ஜ.க. முடக்கி வைப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் வானதி கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
வானதி சீனிவாசன் கூறியதுபோல் 2026-ல் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வராவிட்டால் அதற்கு கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு நிரந்தரமாக மத்திய அரசு அனுமதி மறுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே.
- மக்களிடம் திமுக இளைஞரணி கொள்கை விதையை விதைக்க வேண்டும்.
- திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
பாஜகவிற்கு எதிராக கொள்கை ரீிதியாக திமுக வெற்றி பெற்று வருகிறது. பாஜகவினரால் வெற்றிக்கொள்ள முடியாதது தமிழ்நாட்டில் மட்டும் தான். தமிழ்நாட்டை பார்த்தாலே அமித்ஷாவிற்கு எரிச்சல் வருகிறது. சங்கி படைகளை கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
அன்போது வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம். இந்தயாவிலேயே சித்தாந்த ரீதியாக சண்டை போடும் ஒரே மாநில கட்சி திமுக தான்.
மக்களிடம் திமுக இளைஞரணி கொள்கை விதையை விதைக்க வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அரசியலில் சொகுசு பார்க்க வேண்டாம்; கடுமையாக உழைத்தால் தான் இடம் கிடைக்கும். கடந்த கால ஆட்சியாள்கள் செய்த தவறை திமுக இளைஞரணி கொண்டு சேர்க்க வேண்டும்.
கடந்த கால ஆட்சியர்கள் மீண்டும் ஆட்சி வந்தால் நடக் உள்ள அநீதிகளை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைத்த பாஜக முன்பு இல்லாத அளவிற்கு ஆக்ரோஷத்துடன் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் திராவிட மாடல் 2.O அமைய திமுக இளைஞரணி கடுமையக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்!
- தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை!
* பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல்.
* கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்! சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி!
* 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்! மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி!
* நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் – தமிழ்நாட்டுக்கே சொந்தம்!
* தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி!
* 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி! என்று கூறியுள்ளார்.






