என் மலர்
நீங்கள் தேடியது "govt. employees"
- நிர்வாகச் செயலர்கள், துறைத் தலைவர்கள் இந்த அறிவுறுத்தல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
- தவறினால் அது தீவிரமாகக் கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சியாளர்கள் அவரவர் விருப்பப்பட்ட அரசு ஊழியர்களை சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் சொந்த பணிக்கு அழைத்துக் கொள்வது வழக்கமானது.
இதனால் அனைத்து துறைகளிலும் மற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது. இது தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதனுக்கு புகார் சென்றது.
இதை தொடர்ந்து இந்த சர்வீஸ் பிளேஸ்மென்டை அதிரடியாக ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து நிர்வாக சீர்த்திருத்தத்துறை அனைத்து துறைகளுக்கு அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய வெளிப் பிராந்தியங்களில் நியமிக்கப்பட்ட அமைச்சகப் பணியாளர்கள், புதுச்சேரி பிராந்தியத்திற்கு சேவை இடமாற்றம் எனும் சர்வீஸ் பிளேஸ்மென்ட் செய்வதை கட்டுப்படுத்த கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பிராந்தியங்களைச் சேர்ந்த அமைச்சகப் பணியாளர்கள் எவரேனும் புதுச்சேரிக்கு சேவை இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால், அந்த இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து, அவர்களை மீண்டும் அந்தந்த அலுவலகங்களிலேயே பணியமர்த்த வேண்டும்.
அவசரத் தேவையின் காரணமாக சேவை இட மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால், அதற்கு கவர்னரின் கட்டாய அனுமதி பெறப்பட வேண்டும். நிர்வாகச் செயலர்கள், துறைத் தலைவர்கள் இந்த அறிவுறுத்தல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். தவறினால் அது தீவிரமாகக் கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
- கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
- பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, ஊழல் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில்,
சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்றக் கோரி, ஐந்து ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்தது திமுக அரசு. வேறு வழியின்றி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். அவர்களை இப்படி சாலைக்கு வர வைத்தது திமுக அரசின் திட்டமிட்ட அலட்சிய மனப்பான்மை மட்டுமே.
தற்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஜனவரி மாத ஊதியத்தை வழங்காமல், மேலும் அவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது திமுக அரசு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் நிர்வாகத் தவறுகளுக்காக, ஆசிரியப் பெருமக்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு.
தமிழகத்தில், குற்றவாளிகள் எந்த பயமுமின்றி கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, ஊழல் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக, ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாத ஊதியத்தை முழுமையாக வழங்குவதோடு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- ஓய்வூதியத் திட்டம் என்பது முழுக்க முழுக்க அரசின் நிதியைக் கொண்டே செயல்படுத்தப்பட வேண்டும்.
- புதிய ஓய்வூதியத் திட்டமும் கிட்டத்தட்ட இதே முறையில் தான் செயல்படுத்தப்படுகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அரசு அறிவித்திருந்த நிலையில், ஜனவரி மாதத்துடன் ஓய்வு பெற்ற சுமார் 5000 அரசு ஊழியர்களில், புதிய திட்டத்தின்படி ஓய்வூதியம் பெறத் தகுதியானவர்களுக்கு அதற்கான ஆணை எதுவும் வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தி.மு.க. அரசு திட்டமிட்டு ஏமாற்றி வருகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறி வந்த குற்றச்சாட்டை இது உறுதி செய்துள்ளது.
ஓய்வூதியத் திட்டம் என்பது முழுக்க முழுக்க அரசின் நிதியைக் கொண்டே செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்பது அத்தகையது அல்ல. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்து அந்தத் தொகையைக் கொண்டு தான் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய ஓய்வூதியத் திட்டமும் கிட்டத்தட்ட இதே முறையில் தான் செயல்படுத்தப்படுகிறது.
ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது தி.மு.க. அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் வாயிலாகக் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவு ஆகும்.
ஆனால், இந்தத் திட்டத்தைக்கூட செயல்படுத்தாமல் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தி.மு.க. அரசு எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதிலிருந்தே அதன் மோசடித்தனத்தை அளவிட முடியும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை திட்டமிட்டு ஏமாற்றிய தி.மு.க. அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.
- 6-வது ஊதியக் குழு சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
- அகவிலைப்படி 01.07.2025 முதல் 252 சதவீதத்தில் இருந்து 257 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் 01.07.2016-ம் ஆண்டு 7-வது ஊதிய குழு பரிந்துரை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் சில அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை சம்பளம் வேண்டாம் என்று கூறி 6-வது ஊதியக் குழுவின் சம்பளத்தை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக தன்னாட்சி, கூட்டுறவு நிறுவனங்களில் 6-வது ஊதிய குழு சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இந்நிலையில் இவர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அண்மையில் மத்திய நிதி அமைச்சகம், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு தன்னாட்சி நிறுனங்களில் 6-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் பெற்று வரும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
அதனடிப்படையில், புதுச்சேரியில் அரசு கூட்டுறவு நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 6-வது ஊதியக் குழு சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
இந்த அகவிலைப்படி 01.07.2025 முதல் 252 சதவீதத்தில் இருந்து 257 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
இந்த 5 சதவீத அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வினால், அரசுக்கு ஆண்டிற்கு ரூ.6 கோடி கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
- தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தில் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்ட நிலையில், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகா, இமாச்சல பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை விட மிகவும் மோசமான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் தான். தமிழக அரசுக்கு மனமிருந்தால், அங்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஒரு வாரத்தில் அறிந்து தமிழகத்திலும் செயல்படுத்த முடியும்.
ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களை இனியும் ஏமாற்றிக் கொண்டிருக்கக்கூடாது. ஆனால், தொடர்ந்து ஏமாற்றி வரும் தி.மு.க.வை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும், மக்களும் ஏமாற்றுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும் வங்கிகள் வழங்கிடும் எனத் தெரிவித்தார்.
- அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.
சென்னை:
அரசு ஊழியர்கள் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு போன்றவற்றிற்கு பெரும் தொகையைச் செலவழிப்பதைத் தவிர்த்து காப்பீடுகளை கட்டணமின்றிப் பெறும் வகையில் செய்திட அரசு உத்தேசித்ததன் அடிப்படையில் முன்னோடி வங்கிகளிடம் இதுகுறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக பல சலுகைகளை வங்கிகள் தர முன்வந்துள்ளன.
மேலும், இதுகுறித்து நிதி அமைச்சர் தற்போது நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினை வழங்க வேண்டும்.
விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம், இரண்டு மகள்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும், விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர் கல்வி பயின்றிடும் மகளின் உயர்கல்விக்கான உதவித் தொகையாக 10 லட்சம் ரூபாய் வரையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும் வங்கிகள் வழங்கிடும் எனத் தெரிவித்தார்.
இச்சலுகைகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகள் அரசு ஊழியர்கள் தங்களது ஊதியக்கணக்கினைப் பராமரித்து வரும் பட்சத்தில் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கிட முன்வந்துள்ளன. மேலும், இச்சலுகைகள் மட்டுமின்றி தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.
இந்த சலுகைகளை வங்கிகள் அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், அரசு சார்பில் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் மற்றும் முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடப்பட்டன.
இந்நிகழ்வில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளர் (செலவுகள்) எஸ்.நாகராஜன், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் தி.சாருஸ்ரீ, வங்கிகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது.
- காளிப்பிரியன் ஊழல் செய்திருந்ததாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம்.
அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
மேலும், பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் கோரி இருந்தார்.
மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் ஆர்.ப்ரியக்குமார், விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
காளிப்பிரியன் ஊழல் செய்திருந்ததாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம் என்றும் மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார்.
- அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1-ந்தேதி அன்று அவரவர்களின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும்.
- வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1-ந்தேதி அன்று அவரவர்களின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும். இந்த நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் 2-ந்தேதி தான் ஊதியம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 7.05 லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் /குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
- வேலை நிறுத்த நாளில் சாதாரண விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புக்கான விண்ணப்பம் அனுமதிக்கப்படாது.
- இன்று யாரேனும் பணிக்கு வராமல் விதிகளை மீறி இருந்தால் அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவு காணும் வகையில் அமைச்சர்கள் அடங்கிய குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து இருந்தார். இந்த குழுவினர் ஏற்கனவே அரசு ஊழியர்கள் சங்கங்களை அழைத்து ஆலோசனை நடத்தி இருந்தனர்.
ஆனாலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும், சரண்டர் விடுப்பை இந்த ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த ஆலோசித்து உள்ளனர். இதில் குறிப்பிட்ட சில சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு இப்போது எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் நாளை (இன்று) எடுக்க கூடாது என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஒவ்வொரு துறை செயலாளர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் சில, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் (19-ந்தேதி) வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.
இது சம்பந்தமாக மேற்கோள் காட்டப்பட்டு உள்ள குறிப்பில், அரசு முன் வைத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு உங்கள் கவனத்தை செலுத்தி வேலை நிறுத்த அச்சுறுத்தல் அல்லது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் அல்லது வேறு எந்த வகையான போராட்டங்களிலும் பங்கேற்பது அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கும். விதிகளை மீறுவதாகும்.
எனவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் விதிகளை மீறி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு உங்கள் துறையின் அரசு பணியாளர்களின் வருகையை இன்று கவனமாக பதிவிட வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சேவை சங்கங்களால் நடத்தப்படும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதின் விளைவாக அரசு ஊழியர்கள் எவரேனும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் பணிக்கு வரவில்லை என்று கருதப்பட வேண்டும்.
பகுதி நேர பணியாளர்கள், தினசரி ஊதியம் பெறுவோர் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியத்தில் இருப்பவர்கள் இந்த 'ஸ்டிரைக்'கில் பங்கேற்றாலும் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும். பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
எனவே தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதியை எந்த அரசு ஊழியரும் மீறுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
விதிகள் 1973-ன்படி ஊழியர்களால் அங்கீகரிக்கப்படாமல், பணியில் இல்லாமல் இருந்தால் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வேலை நிறுத்த நாளில் சாதாரண விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புக்கான விண்ணப்பம் அனுமதிக்கப்படாது.
எனவே இன்று யாரேனும் பணிக்கு வராமல் விதிகளை மீறி இருந்தால் அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பணிபுரியும் ஊழியர்களின் வருகை நிலை குறித்த அறிக்கையை காலை 10.15 மணிக்குள் எடுத்து இ.மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்கான கருவிகள் பொருத்தும் பணி நடந்தது.
- பயோமெட்ரிக் வருகை பதிவு குறித்த தகவல்களை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதாகவும், பணி நேரம் முடியும் முன்பே அலுவலகத்தை விட்டு சென்று விடுவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வந்தது.
இதையடுத்து கேரள அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த கேரள தலைமை செயலாளர் ஜாய் ஏற்பாடு செய்தார். இதற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு, முதல் வேலை நாளில் கேரளாவின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என கடந்த வாரமே தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன் படி இன்று முதல் கேரளா அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்கான கருவிகள் பொருத்தும் பணி நடந்தது.
மேலும் பயோமெட்ரிக் வருகை பதிவு குறித்த தகவல்களை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு நாளும் இதனை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மேலும் இந்த வருகை பதிவு முறை நிதித்துறையின் சம்பள பதிவேடுகளிலும் பதிவாகும் முறையில் மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதுபோல அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வரவும், வெளியேறவும் அவர்களின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்தால் மட்டுமே முடியும். இதனால் இனி அலுவலகங்களுக்கு தாமதமாக வந்தாலோ, அல்லது அலுவலகத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேறவோ வாய்ப்பு இல்லை.
அவ்வாறு வெளியேறினால் அந்த ஊழியரின் விபரங்கள் அவர்களின் சம்பள பட்டியலில் பதிவாகும். இதன்மூலம் ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிலை உருவாகும்.
தற்போது கேரள அரசின் தலைமை செயலகத்தில் செயல்பட்டு வந்த இந்த முறை இப்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதே நேரம் குறைவான ஊழியர்களை கொண்டு இயங்கும் அலுவலகங்களில் இந்த முறை அமலுக்கு வரவில்லை.
மேலும் போலீஸ் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தவில்லை. விரைவில் அங்கும் இம்முறையை கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
- வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது.
- கடந்த ஆண்டு நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது அதில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 மற்றும் 29-ந்தேதிகளில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் பென்ச் இந்த மனுவை விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அரசு ஊழியர்கள் அவர்களின் நடத்தை விதிகள், அரசாங்க சுற்றிக்கைகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் அறிவிப்புகளை மீறி வேலை நிறுத்தம் செய்ய சட்டப்பூர்வ உரிமை இல்லை.
இதனை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது. கடந்த ஆண்டு நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது அதில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி உள்ளது. இது அவர்களை ஊக்குவிப்பது போல அமையும். எனவே இனி இதுபோன்ற விவகாரங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
- தற்போது அறிவித்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
- அகவிலைப்படி உயர்வு ஆணையில் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு ஆணை மேற்கோள் காட்டப்பட வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வை ஆறு மாதம் காலந்தாழ்த்தி வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.
இந்தச் சூழ்நிலையில், 1.1.2023 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் வழங்க வேண்டும்.
ஆனால், இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு 1.4.2023 முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மூன்று அகவிலைப்படி உயர்வுகளை ஆறு மாதத்திற்கு தள்ளிப்போட்ட தி.மு.க. அரசு, நான்காவது அகவிலைப்படி உயர்வை மூன்று மாதத்திற்கு தள்ளிப்போட்டு இருக்கிறது. அகவிலைப்படி உயர்வு என்பது விலைவாசிக்கு ஏற்ப வழங்கப்படும் உயர்வு ஆகும். இதனைக் காலந்தாழ்த்தி வழங்குவது என்பது ஏற்புடையதல்ல.
இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி விட்டு, 'நிதிப் பற்றாக்குறை' குறைக்கப்பட்டுவிட்டது, 'வருவாய்ப் பற்றாக்குறை' குறைந்து விட்டது என்று கூறுவது நிர்வாகத் திறமையின்மையின் வெளிப்பாடு. இது கடும் கண்டனத்திற்குரியது.
அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், எதிர்வரும் காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தமுறை மத்திய அரசு அறிவித்த தேதியில் இருந்து அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே நிலவுகிறது.
இதனை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது அறிவித்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
அகவிலைப்படி உயர்வு ஆணையில் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு ஆணை மேற்கோள் காட்டப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






