

புதுச்சேரி:
புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சியாளர்கள் அவரவர் விருப்பப்பட்ட அரசு ஊழியர்களை சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் சொந்த பணிக்கு அழைத்துக் கொள்வது வழக்கமானது.
இதனால் அனைத்து துறைகளிலும் மற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது. இது தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதனுக்கு புகார் சென்றது.
இதை தொடர்ந்து இந்த சர்வீஸ் பிளேஸ்மென்டை அதிரடியாக ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து நிர்வாக சீர்த்திருத்தத்துறை அனைத்து துறைகளுக்கு அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய வெளிப் பிராந்தியங்களில் நியமிக்கப்பட்ட அமைச்சகப் பணியாளர்கள், புதுச்சேரி பிராந்தியத்திற்கு சேவை இடமாற்றம் எனும் சர்வீஸ் பிளேஸ்மென்ட் செய்வதை கட்டுப்படுத்த கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பிராந்தியங்களைச் சேர்ந்த அமைச்சகப் பணியாளர்கள் எவரேனும் புதுச்சேரிக்கு சேவை இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால், அந்த இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து, அவர்களை மீண்டும் அந்தந்த அலுவலகங்களிலேயே பணியமர்த்த வேண்டும்.
அவசரத் தேவையின் காரணமாக சேவை இட மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால், அதற்கு கவர்னரின் கட்டாய அனுமதி பெறப்பட வேண்டும். நிர்வாகச் செயலர்கள், துறைத் தலைவர்கள் இந்த அறிவுறுத்தல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். தவறினால் அது தீவிரமாகக் கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.