search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala HC"

    • ஐகோர்ட்டு உத்தரவுப்படி பக்தர்கள் தரிசன முறையில் பல்வேறு மாற்றங்களை தேவசம்போர்டு எடுத்தது.
    • பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு போலீசாரும் நடவடிக்கை எடுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே ஐயப்ப பக்தர்களின் வருகை மிகவும் அதிகமாகவே உள்ளது. தினமும் 70ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தபடி இருந்ததால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்த நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமானது. மெய்நிகர் வரிசை முன்பதிவு மட்டுமின்றி, உடனடி முன்பதிவு செய்தும் ஏராளமானோர் சபரிமலைக்கு வந்ததால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

    இதன் காரணமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் 10 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பம்பை, மரக்கூட்டம், சன்னிதான நடைப்பந்தல் உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தே சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

    இதனால் குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என பக்தர்கள் அனைவருமே கடும் அவதிக்குள்ளாகினர். தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதன் காரணமாகவும், பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் செய்ய வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவும் நிலக்கல் மற்றும் பம்பையில் பிரச்சனை ஏற்பட்டது. அவதிக்குள்ளான பக்தர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான நிலை நிலவியது.

    இந்த விவகாரத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உடனடியாக தலையிட்டு, சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் கேரள ஐகோர்ட்டும் ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்கவும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடைமுறைகளையும் ஐகோர்ட்டு தெரிவித்தது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி பக்தர்கள் தரிசன முறையில் பல்வேறு மாற்றங்களை தேவசம்போர்டு எடுத்தது. பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு போலீசாரும் நடவடிக்கை எடுத்தனர்.

    கேரள ஐகோர்ட்டு நேற்று முன்தினம் பல்வேறு வழிமுறைகளை அறிவித்திருந்த நிலையில், மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க கேரள மாநில டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது. நீதிபதிகள் அனில் நரேந்திரன், கிரிஷ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம் வருமாறு:-

    சபரிமலையில் நிலவும் கூட்ட நெரிசலை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை நாள் ஒன்றுக்கு 90 ஆயிரமாக குறைக்க வேண்டும். மெய்நிகர் வரிசை முன்பதிவு மூலம் 80 ஆயிரம் பேருக்கும், உடனடி புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.

    முன்பதிவு இல்லாதவர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை செல்ல அனுமதிக்கப்படாமல் இருப்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். சன்னிதானம் மற்றும் பம்பையில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டால், எரிமேலி மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் அறிவிக்க வேண்டும்.

    சபரிமலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். உடனடி புக்கிங் மற்றும் மெய்நிகர் வரிசை முன்பதிவு ஆகியவை தினமும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.

    மெய்நிகர் வரிசை முன்பதிவுகளில் குறைப்பு ஏற்பட்டால் அதிகமான பக்தர்களை உடனடி புக்கிங் மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம். தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களை பம்பையில் இருந்து அனுப்ப வேண்டும். இதற்காக நிலக்கல்லில் இருந்து காலியாக உள்ள பஸ்களை பம்பைக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு தனது உத்தரவில் கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

    இந்தநிலையில் நிலக்கல் மற்றும் பம்பை இடையே கூடுதல் பஸ்கள் இயக்கம், பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் நிறுத்தி அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக சபரிமலையில் நிலவி வந்த கூட்ட நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது.

    இந்த பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுகின்றனர். இதனால் பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சபரிமலைக்கு செல்கின்றனர். பக்தர்கள் காத்திருக்கும் இடங்களில், அவர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்படுகிறது.

    • சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
    • கேரள மாநில சுகாதாரத்துறை செயலருக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(17-ந்தேதி) திறக்கப்படுகிறது. அப்போது சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

    இந்நிலையில் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    அது தொடர்பாக தேவசம்போர்டு கமிஷனருடன் கலந்தாலோசித்து தேவையான முடிவை எடுக்குமாறு கேரள மாநில சுகாதாரத்துறை செயலருக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • குற்றம்சாட்டப்பட்டவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்து இருந்தார்.
    • ஒருவர் தனது தனிப்பட்ட நேரத்தில் ஆபாச படம் பார்ப்பது குற்றம் இல்லை.

    தனிமையில் இருக்கும் போது, மற்றவர்களுக்கு காண்பிக்காமல் ஆபாச படம் பார்ப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால், அதில் எந்த தவறும் இல்லை என்று கேரளா உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

    இதுபோன்ற விஷயத்தை குற்றமாக அறிவிப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதாகவும், தனிப்பட்ட விருப்பதில் தலையிடுவதாக இருக்கும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

    2016-ம் ஆண்டு காவல் துறையினர் 33 வயதான நபர் ஒருவர் சாலையின் ஓரத்தில் நின்றுக் கொண்டு தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த போது கைது செய்து, அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 292-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

    வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்து இருந்தார். இது தொடர்பான விசாரணையின் போது, ஆபாச படங்கள் காலம்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அதனை குழந்தைகள் உட்பட அனைவராலும் இயக்க முடிகிறது என்று நீதிபதி தெரிவித்து இருக்கிறார்.

    • கேரளாவின் மலபார் பகுதியில் உள்ள கோவில்களில் தீ சாமுண்டி என்ற பெயரில் சிறுவர்கள் தீயில் குதிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
    • சிறுவர்கள் உடலில் இலை, தழைகளை கட்டிக்கொண்டு தீயில் குதிப்பார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் மலபார் பகுதிகளில் உள்ள கோவில்களில் நடக்கும் விழாவில் சிறுவர்கள் தீயில் குதிக்கும் சடங்கு நடை பெறும்.

    இந்த சடங்கு இந்து புராண கதைகளின்படி மலபார் கோவில்களில் நடத்தப்படும். அதாவது அரக்கர் குலத்தை சேர்ந்த இரண்யகசிபுவின் மகன் பிரகலாதன், விஷ்ணு பக்தனாக இருப்பார். இதை விரும்பாததால் அவரை எரியும் தீயில் வீசுவார்கள். 101 முறை பிரகலாதனை தீயில் வீசிய பின்பும் அவர் ஒவ்வொரு முறையும் தீயில் இருந்து உயிருடன் எழுந்து வருவார்.

    இதனை சித்தரிக்கும் வகையில் கேரளாவின் மலபார் பகுதியில் உள்ள கோவில்களில் தீ சாமுண்டி என்ற பெயரில் சிறுவர்கள் தீயில் குதிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இன்றும் இதுபோன்ற சடங்குகள் இங்குள்ள கோவில்களில் நடைபெறும். இதில் சிறுவர்கள் உடலில் இலை, தழைகளை கட்டிக்கொண்டு தீயில் குதிப்பார்கள். இந்த சடங்கில் ஈடுபடும் சிறுவர்களின் உயிருக்கு ஆபத்து என்று மலபார் பகுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மேலும் இது தொடர்பான விசாரணை வருகிற 22-ந்தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

    • மருத்துவ கல்லூரி டாக்டரை தாக்கிய பிவி ஜாம்ஷெட்-டை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர்.
    • மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்ஜாமீன் கோரிய நபருக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பிவி ஜாம்ஷெட்.

    பிவி ஜாம்ஷெட்டின் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் அங்குள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு அவரை பணியில் இருந்த டாக்டர் பரிசோதனை செய்தார். அப்போது பிவி ஜாம்ஷெட்டின் மனைவியின் உடலை தொட்டு பரிசோதனை மேற்கொண்டார்.

    மனைவியின் உடலை டாக்டர் தொட்டு, தொட்டு பரிசோதித்ததை பிவி ஜாம்ஷெட் கண்டித்தார். அதற்கு டாக்டர், இது வழக்கமான நடைமுறை என்று கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த பிவி ஜாம்ஷெட், மனைவியை தொட்டு பரிசோதித்த டாக்டரை சரமாரியாக தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த டாக்டர், இச்சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் பிவி ஜாம்ஷெட் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    மருத்துவ கல்லூரி டாக்டரை தாக்கிய பிவி ஜாம்ஷெட்-டை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். இதனை அறிந்த பிவி ஜாம்ஷெட் இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தார்.

    இந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்ஜாமீன் கோரிய நபருக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை பரிசோதனை செய்யும் டாக்டர்கள், அவர்களின் உடலை தொட்டு பரிசோதிப்பது வழக்கமான நடைமுறை. அதனை கண்டித்து, டாக்டர்களை தாக்குவதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பிவிஜாம்ஷெட் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அறிவித்தது.

    • கடந்த 2016-ம் ஆண்டு கேரள அரசு மோகன்லால் யானை தந்தம் வைத்திருக்க அனுமதி வழங்கியது.
    • பெரும்பாவூர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கேரள அரசு சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால்.

    நடிகர் மோகன்லாலுக்கு சென்னை, கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மோகன்லால் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது கொச்சியில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் 2 ஜோடி யானை தந்தங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மோகன்லாலிடம் யானை தந்தம் வைத்திருக்க உரிய லைசன்ஸ் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு கொச்சி பெரும்பாவூர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு கேரள அரசு மோகன்லால் யானை தந்தம் வைத்திருக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து பெரும்பாவூர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கேரள அரசு சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை எதிர்த்து வனவிலங்கு ஆர்வலர்கள் 2 பேர் பெரும்பாவூர் கோர்ட்டில் மனு செய்தனர். அதில் மோகன்லால் மீதான வழக்கை வாபஸ்பெற கூடாது என்று கூறியிருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, மோகன்லால் மீதான வழக்கை வாபஸ் பெற மறுத்து அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

    இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் கேரள அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பெரும்பாவூர் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

    மேலும் மோகன்லால் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரிய மனுவை விசாரித்து 6 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாவூர் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

    • வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது.
    • கடந்த ஆண்டு நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது அதில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 மற்றும் 29-ந்தேதிகளில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் பென்ச் இந்த மனுவை விசாரித்தது.

    அப்போது நீதிபதிகள், கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    அரசு ஊழியர்கள் அவர்களின் நடத்தை விதிகள், அரசாங்க சுற்றிக்கைகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் அறிவிப்புகளை மீறி வேலை நிறுத்தம் செய்ய சட்டப்பூர்வ உரிமை இல்லை.

    இதனை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது. கடந்த ஆண்டு நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது அதில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி உள்ளது. இது அவர்களை ஊக்குவிப்பது போல அமையும். எனவே இனி இதுபோன்ற விவகாரங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    • கேரளாவில் தற்போது வெப் சீரியல் எடுப்பதாக கூறி பாலியல் தொழில் நடக்கிறது.
    • பல ரிசார்ட்டுகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கிறது. இதில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் தொடர்பு இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வெப் சீரியலில் கதாநாயகன் வாய்ப்பு தருவதாக கூறி வாலிபர் ஒருவரை ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக திருவனந்தபுரம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இந்த புகார் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அந்த வாலிபர் கேரள ஐகோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் சில டெலிவிஷன் தொடர்களில் நடித்து வந்தேன். பெண் இயக்குனர் ஒருவர் வெப் சீரியலில் எனக்கு கதாநாயகன் வாய்ப்பு தருவதாக கூறினார். அதனை நம்பி நானும் நடிக்க வந்தேன்.

    கேரளாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் 3 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின்பு என்னிடம் படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினர்.

    ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிய பின்னர் என்னை ஆபாச காட்சிகளில் நடிக்க வைத்தனர். தொடர்ந்து அதுபோன்ற காட்சிகளில் நடிக்க கூறியதால் நான் மறுத்தேன்.

    உடனே படக்குழுவினர் நான் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை காட்டி மிரட்டினர். மேலும் படத்தில் தொடர்ந்து நடிக்காவிட்டால் ரூ.5 லட்சம் நஷ்டஈடாக தரவேண்டும் எனக்கூறினர். இதனால் வேறுவழியின்றி அந்த படத்தில் நடித்தேன்.

    இப்போது அந்த படம் தீபாவளிக்கு வெளியாகிவிட்டது. இதனை பார்த்த என் குடும்பத்தினர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.

    கேரளாவில் தற்போது வெப் சீரியல் எடுப்பதாக கூறி பாலியல் தொழில் நடக்கிறது. பல ரிசார்ட்டுகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கிறது. இதில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் தொடர்பு இருக்கிறது.

    இதனால் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. நான் அளித்த புகார் தொடர்பாகவும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோர்ட்டு இதில் தலையிட்டு வெப் தளத்தில் வெளியான படத்தை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

    வெப் தொடர் தொடர்பாக வாலிபர் கோர்ட்டில் புகார் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கனகதுர்காவை வீட்டில் அனுமதிக்க வேண்டும் என்று அவரது கணவர் கிருஷ்ணன் உண்ணிக்கு பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது. #Sabarimala #KanakaDurga
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதை கண்டித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.

    இதனால் கனகதுர்காவும், பிந்துவும் உயிருக்கு பயந்து போலீஸ் பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு நிலைமை சற்று சகஜமானதை தொடர்ந்து கனகதுர்கா கோழிக்கோட்டில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது கனகதுர்கா சபரிமலை ஆச்சாரத்தை மீறி சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மாமியார் அவரை தாக்கினார். இதில் காயம் அடைந்த கனகதுர்கா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அதன்பிறகு தன்னை கணவர் வீட்டில் வசிக்கவும், குழந்தைகளை பராமரிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு கனகதுர்கா பெரிந்தல்மன்னா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு புலாமந்தோல் கிராம கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

    நீதிபதி இந்த வழக்கை விசாரித்து கனகதுர்காவை வீட்டில் அனுமதிக்க வேண்டும் என்று அவரது கணவர் கிருஷ்ணன் உண்ணிக்கு உத்தரவிட்டார். குழந்தைகளை பராமரிப்பது பற்றி பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார். மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையில் கனகதுர்காவின் கணவர் கிருஷ்ணன் உண்ணி இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். #Sabarimala #KanakaDurga
    கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த பா.ஜனதா பெண் நிர்வாகி ஷோபா சுரேந்திரனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். #BJP #ShobhaSurendran
    திருவனந்தபுரம்:

    கேரள பா.ஜனதா பொதுச் செயலாளராக இருப்பவர் ஷோபா சுரேந்திரன். இவர் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார்.

    அதில் சபரிமலையில் மத்திய மந்திரி மற்றும் ஐகோர்ட்டு நிதிபதி ஆகியோரை போலீசார் அவமதித்ததாகவும், பக்தர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைப்பதாகவும், அத்துமீறி செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது தனிப்பட்ட விளம்பரத்திற்காக இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து கோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று ஷோபா சுரேந்திரனை நீதிபதி கண்டித்தார். மேலும் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    கோர்ட்டு விதித்த அபராதத்தை 2 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அபராத தொகை இரட்டிப்பாக்கப்படும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ஷோபா சுரேந்திரன் கோர்ட்டில் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.  #BJP #ShobhaSurendran


    மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்து வெற்றிபெற்ற முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.வை தகுதிநீக்கம் செய்து கேரளா ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. #KeralaHC #IUMLMLAdisqualified
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆழிக்கோடு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் கே.எம்.ஷாஜி. தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி கூட்டணி வேட்பாளரான நிக்கேஷ் குமாரைவிட கூடுதலாக  2,287 வாக்குகள் வாங்கி ஷாஜி வெற்றி பெற்றார்.



    அவரது வெற்றியை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் நிக்கேஷ் குமார் வழக்கு தொடர்ந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறிய வகையில், ‘முஸ்லிமல்லாத வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என துண்டு பிரசுரங்களை வெளியிட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்திய ஷாஜியை சட்டசபையில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கை தொடர்பாக ஐகோர்ட் விசாரித்து வந்தது.

    இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பி.டி.ராஜன் ஷாஜியை ஆறாண்டுகளுக்கு தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பான உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு  கேரள சட்டசபை சபாநாயகர் மற்றும் அம்மாநில தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் லீக் கட்சி மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. #KeralaHC #IUMLMLAdisqualified
    சபரிமலையில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் வகையில், பிளாஸ்டிக் மீது ஐகோர்ட் முழுமையான தடை விதித்ததுடன், பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. #Sabarimala #AyyappanTemple #PlasticBan #KeralaHighCourt
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலையின் புனிதத்தையும், தூய்மையையும் பராமரிக்க அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அதன்படி சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்க ஐகோர்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது.

    இந்நிலையில், சபரிமலை சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், சபரிமலையில் பிளாஸ்டிக் மீது முழுமையான தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது. பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. 

    அதாவது, சபரிமலையில் இந்த வருட மண்டல கால பூஜையின்போது பக்தர்கள் இருமுடியில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் என சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவகை பிளாஸ்டிக் பொருட்களையும் கொண்டு வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தந்திரி பரிந்துரை செய்யும் பொருட்களை மட்டுமே கொண்டு வர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சபரிமலையில் பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டபோதும், பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடர்ந்து  புகார் எழுந்தது. இதையடுத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சபரிமலை சிறப்பு ஆணையர் ஆய்வு நடத்தி பரிந்துரைகளை அளித்தார். அதன் அடிப்படையில் இன்று ஐகோர்ட் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. #Sabarimala #AyyappanTemple #PlasticBan #KeralaHighCourt
    ×