search icon
என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • பொதுமக்கள் பதட்டம் இல்லாமல் வாக்களிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் கொடி அணி வகுப்பு நடத்தினர்.
    • எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததையடுத்து ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் கடந்த 19ந் தேதி நடைபெற்றது. பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தனர்.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக திருப்பூர் மாவ ட்டத்திற்கு 5 கம்பெனியை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வந்திருந்தனர்.இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திருப்பூரில் தங்கியிருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரியுடன் இணைந்து பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதேபோல் பொதுமக்கள் பதட்டம் இல்லாமல் வாக்களிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் கொடி அணி வகுப்பு நடத்தினர். மேலும் பதட்டமான 200க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    திருப்பூரில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததையடுத்து ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

    இதையடுத்து திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்த 300க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நேற்று இரவு முதல் ரெயில்களில் தெலுங்கானா புறப்பட்டு சென்றனர். அங்கு நடை பெறும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் நாளை மறுநாள் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் செல்கிறார்கள்.

    • காசிக்கு நிகரான சிறப்பும் பெற்றது அவினாசிலிங்கேசுவரர் கோவில்.
    • காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    அவினாசி:

    கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி 18-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். 19-ந்தேதி இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் நடந்தது. 20-ந்தேதி காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் தேரில் இருந்து அருள்பாலித்த உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் அதிர்வேட்டுகள் முழங்க காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சிவ... சிவா... என்ற பக்திகோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேர் நிலையிலிருந்து சிறிது தூரம் இழுத்து வடக்கு வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

    மீண்டும் இன்று (திங்கட்கிழமை) காலை 2-வது நாள் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்பு தேர் மாலையில் நிலை வந்து சேர உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) சிறிய அம்மன் தேர் இழுக்கப்படுகிறது.

    • ஒற்றை யானையும் சாலையில் உலா வருகிறது.
    • யானைகள் சாலையை கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் சாலையில் 9/6 சோதனை சாவடியில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள் உள்ளன.

    தற்போது கோடை காலம் என்பதால் வனத்தில் வறட்சி நிலவுகிறது. இதனால் யானைகள் தண்ணீர் தேடி மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றன. ஒற்றை யானையும் சாலையில் உலா வருகிறது. சில நேரம் சாலையிலேயே நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் காத்திருந்து யானைகள் சென்ற பின் செல்கின்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீருக்காக யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உடுமலை-மூணாறு சாலை பகுதிக்கு வருகின்றன. யானைகள் சாலையை கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. அமைதி காத்தால் சிறிது நேரத்தில் தானாகவே யானைகள் காட்டுக்குள் சென்று விடும். பின்னர் வாகன ஓட்டிகள் சென்றுவிடலாம். எனவே வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

    • பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    அவினாசி:

    கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி 18-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். இதில் விநாயகர் பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரி வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளினர்.

     நேற்று முன்தினம் இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் சிகர நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நடைபெற்றது.சிவாச்சார்யர்கள், ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் `அவிநாசியப்பா', `அரோகரா', `நமசிவாயா', சிவ... சிவ... என பக்தி கோஷமிட, சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு வடக்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்படுகிறது. தேரின் 2 பின் சக்கரங்களிலும் ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் சன்னை மிராசுகள் சன்னை போட்டு தேரை நகர்த்தி கொடுத்தனர்.

    நாளை 22-ந் தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 23-ந் தேதி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 24-ந் தேதி மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும் 25-ந் தேதி தெப்ப தேர் உற்சவமும் நடக்கிறது. 26-ந் தேதி மகா தரிசன விழாவும், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.

    அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவில் முகப்பில் உள்ள தேர் நிலையில் தொடங்கி ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. 92 அடி உயரம், 400 டன் எடை கொண்ட இந்த தேர் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்த படியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும். எனவே தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    முக்கிய இடங்களில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் ரத வீதிகளில் ஆங்காங்கே நீர்-மோர் வழங்கப்பட்டது.

    • கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது.
    • திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் உலக நாடுகளை சார்ந்து உள்ளது. ரஷியா-உக்ரைன் போர் சூழல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தது. பணவீக்கம் காரணமாக அமெரிக்க ஏற்றுமதியும் பின்னடைவை சந்தித்தது. புதிய வர்த்தக வாய்ப்புகளும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.

    இந்திய தொழில் முனைவோரின் விடாமுயற்சி காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிகரித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது. 2024 பிப்ரவரி மாதம் ரூ.12 ஆயிரத்து 248 கோடியாக உயர்ந்துள்ளது.

    இதுபோல் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.11 ஆயிரத்து 917 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. 2024 மார்ச் மாதம் ரூ.12 ஆயிரத்து 224 கோடியாக வர்த்தகம் உயர்ந்துள்ளது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிவரும் நாட்களில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என்றும் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
    • திடீரென வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வாக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கே.என்.பி., காலனி பகுதியில் வாக்குச்சாவடி 222ல் வாக்களிக்க மாநகராட்சி மேயரும் திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க. செயலாளருமான தினேஷ் குமார் காலை 6:50 மணிக்கு வந்தார்.

    இந்தநிலையில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் முறையான ஆவணங்களை காண்பித்து கையில் மை வைத்து வாக்குப்பதிவு செலுத்த சென்றார். திடீரென வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வாக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் வரை காத்திருந்த மேயர் தினேஷ்குமார் வாக்குப்பதிவு எந்திரம் சரிபார்க்கப்பட்டு சோதனை செய்த பிறகு மீண்டும் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    • அண்ணாமலை தனது சொந்த ஊரில் வாக்கு செலுத்தி விட்டு கோவை நோக்கி சென்றார்.
    • வாக்களிப்பதற்காக நின்று கொண்டிருந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    பல்லடம்:

    கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில் இன்று 417 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது சொந்த ஊரில் வாக்கு செலுத்தி விட்டு கோவை நோக்கி சென்றார்.

    அப்போது கோவை தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் பகுதியில் உள்ள அவினாசிபாளையம், மாதப்பூர், பனப்பாளையம், கொசவம்பாளையம், காரணம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பூத்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் வாக்களிப்பதற்காக நின்று கொண்டிருந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். வாக்குச்சாவடிகளில் எத்தனை வாக்காளர்கள் உள்ளார்கள்? வாக்குப்பதிவு மையங்கள் முறையாக இயங்குகிறதா என வாக்குச்சாவடி முகவர்களிடம் கேட்டறிந்தார்.

    • கோடை வெயில் காரணமாக பெரும்பாலான வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்தனர்.
    • வாக்குச்சாவடியின் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்து சேமித்து வைக்கப்பட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதி மற்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    இத்தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன், அ.தி.மு.க. சார்பில் அருணாசலம், பா.ஜ.க.சார்பில் ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முதலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 50 மாதிரி வாக்குகள் செலுத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதன்பிறகு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். கோடை வெயில் காரணமாக பெரும்பாலான வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தினர்.

    வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி பெருந்துறையில் 264, பவானியில் 289, அந்தியூரில் 262 கோபிசெட்டிபாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 16 லட்சத்து 8ஆயிரத்து 521 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 13 வகையான அடையாள ஆவணங்களை காண்பித்து வாக்காளர்கள் வாக்களித்தனர்.

    வாக்குப்பதிவுக்காக 2081 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2081 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 30 சதவீதம் கூடுதலாக 2555 விவி.பேட் எந்திரங்கள் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டன. வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி தங்களது வாக்கினை பதிவு செய்து சென்றனர். அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடி அருகே செல்லாமல் இருக்க 100 மீட்டர் தொலைவில் கோடு வரையப்பட்டு இருந்தது. அதனை தாண்டி அவர்கள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    பெருந்துறை தொகுதியில் 10 வாக்குச்சாவடிகள், பவானி தொகுதியில் 23, அந்தியூர் தொகுதியில் 38, கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 45, திருப்பூர் வடக்கு தொகுதியில் 98, திருப்பூர் தெற்கு தொகுதியில் 79 என திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

    வாக்குச்சாவடியின் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்து சேமித்து வைக்கப்பட்டன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளின் நிகழ்வுகளை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர், கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும், சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிகளில் நடக்கும் நிகழ்வுகளை தேர்தல் பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் தகவல் கொடுக்கும் வகையில் நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலெக்டர் கிறிஸ்துராஜ் செயல்பட்டார்.

    ஒரு சட்டசபைக்கு ஒருவர் வீதம் 6 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், 6 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பணியாற்றினர்.

    வாக்குச்சாவடியில் ஒரு தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் 3 பேர் மற்றும் கூடுதல் அலுவலர்கள் இருப்பு என மொத்தம் 8 ஆயிரத்து 700 பேர், நுண்பார்வையாளர்கள், மண்டல அலுவலர்கள் உள்பட மொத்தம் 10 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு சதவீதம் குறித்து 2 மணி நேரத்துக்கு ஒருமுறை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்கு தெரிவிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. அதன் மூலம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்கு சதவீதம் தெரிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடக்கிறது. அதன்பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்ட வாகனத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் பலத்த போலீசார் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட உள்ளது. பின்னர் அங்குள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட உள்ளது.

    • திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • ஒரு நோட்டா உட்பட 14 சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்கும்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு, ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிப்பாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெருந்துறையில் 264 வாக்குச்சாவடிகள், பவானியில் 289, அந்தியூரில் 262, கோபிசெட்டிபாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1745 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 24 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 17 ஆயிரத்து 245 பெண் வாக்காளர்களும், 252 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 பேர் உள்ளனர். நாளை 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகிறவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

    வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு நோட்டா உட்பட 14 சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்கும். இதில் வேட்பாளரை வாக்காளர்கள் தேர்வு செய்வார்கள்.

    வாக்குப்பதிவு நாளை மாலை நிறைவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு ஜிபிஎஸ்., பொருத்தப்பட்ட வாகனத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் பலத்த போலீசார் பாதுகாப்புடன் எடுத்து வரப்படும்.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கிறிஸ்து ராஜ், நேற்று சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தார். திருப்பூர் தொகுதியில் 293 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கூடுதலாக ஈடுபடுவதுடன், அந்த மையங்கள் முழுவதும் சிசிடிவி., கேமரா மூலம் கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பூரில் நீண்ட நாட்களாக வசித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு சொந்த ஊர்களில் வாக்காளராக உள்ளனர்.
    • அவசரமாக அனுப்ப வேண்டிய கோடை கால ஆர்டர்கள் சென்றுவிட்டதால் உற்பத்தியை குறைப்பதில் பிரச்சினை இருக்காது.

    திருப்பூர்:

    திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை போல் தேர்தல்களுக்கும் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சொந்த தொகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தை தினமும் கேட்டறிந்து வந்தனர். திருப்பூரில் நீண்ட நாட்களாக வசித்தாலும் பெரும்பாலா னவர்களுக்கு சொந்த ஊர்களில் வாக்காளராக உள்ளனர்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நேற்று நிறைவு பெற்றதுடன் நாளை ஓட்டு ப்பதிவு நடக்கப்போகிறது. இதையடுத்து சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய ஏதுவாக, திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் இன்று சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். குழந்தைகளுக்கு பள்ளி கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் பயணிக்கின்றனர். சிலர் ஒரு மாதத்துக்கு முன்ன தாகவே, பஸ், ரெயில்களில் புக்கிங் செய்துவிட்டனர். இதனால் நேற்றிரவு மற்றும் இன்று காலை திருப்பூர் ரெயில், பஸ் நிலையங்களில் பனியன் தொழிலாளர்கள், பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    தேர்தல் காரணமாக, தொழிலாளர்கள் வெளியே செல்வதும், வருவதுமாக இருப்பதால் கடந்த சில வாரங்களாக பின்னலாடை உற்பத்தியும், ஜாப் ஒர்க் நிறுவனங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல அடுத்த கட்டமாக வடமாநிலங்களிலும் தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கப்போகிறது.

    திருப்பூரில் மட்டும் 21 மாநிலங்களை சேர்ந்த 2.50 லட்சம் தொழிலாளர் உள்ளனர். இவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க சொந்த மாநிலங்களுக்கு செல்ல உள்ளனர். இதன்காரணமாகவும், பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் வழக்கமான உற்பத்தி மற்றும் பிராசசிங் பணிகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

    வெளிமாவட்ட தொழிலாளர்கள் குடும்பமாக சொந்த ஊர் செல்கின்றனர். ஏற்கனவே சிலர் சென்றுவிட்டனர். பள்ளி கோடை விடுமுறை என்பதால் 10 நாட்களுக்கு பின் திருப்பூர் திரும்புவர். வடமாநில தொழிலாளர்கள் 20ந்தேதிக்கு பின், திருப்பூரில் இருந்து அந்தந்த மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு புறப்படுவார்கள். இதன் காரணமாக பின்னாலடை உற்பத்தி குறையும். அவசரமாக அனுப்ப வேண்டிய கோடை கால ஆர்டர்கள் சென்றுவிட்டதால் உற்பத்தியை குறைப்பதில் பிரச்சினை இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
    • கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் அறை மற்றும் கண்காணிப்பு அறை உள்ளிட்ட அனைத்து அறைகளும் தயாராக உள்ளன.

    திருப்பூர்:

    திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலுக்கு உட்பட்டு திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபி செட்டிபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி செட்டி பாளையம் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இதில் பெருந்துறையில் 264, பவானியில் 289, அந்தியூரில் 262 கோபிசெட்டி பாளையத்தில் 296, திருப்பூர் வடக்கு 385, தெற்கு 248 என மொத்தம் 1744 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    திருப்பூர் வடக்கு தொகுதியில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 605 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 93 ஆயிரத்து 390 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 157 பேரும் என 3 லட்சத்து 90 ஆயிரத்து 152 பேரும், திருப்பூர் தெற்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 461 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 33 ஆயிரத்து 293 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 34 பேர் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 788 பேரும் உள்ளனர்.

    பெருந்துறையில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 629 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 699 பேரும், மூன்றாம் பாலின த்தவர்கள் 10 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 338 வாக்காளர்கள் உள்ளனர். பவானியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 21 ஆயிரத்து 590 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 19 பேர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 909 பேர் உள்ளனர். இதுபோல் அந்தியூர் தொகுதியில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 48 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 57 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் என மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 123 பேர் உள்ளனர்.

    மேலும், கோபிசெட்டி பாளையத்தில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 432 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 32 ஆயிரத்து 689 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 133 பேரும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 1744 வாக்கு ச்சாவடிகள் உள்ளன. 7 லட்சத்து 86 ஆயிரத்து 475 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 11 ஆயிரத்து 718 பெண் வாக்காளர்களும், 250 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 பேர் உள்ளனர்.

    நாளை (வெள்ளி க்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகிறவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

    திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த அருணாச்சலம் இரட்டை இலை சின்னம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் தானியக்கதிர் அரிவாள், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பழனி யானை சின்னம், பா.ஜனதாவை சேர்ந்த ஏ.பி. முருகானந்தம் தாமரை சின்னம், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீதா லட்சுமி ஒலிவாங்கி சின்னம், ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா கட்சியை சேர்ந்த மலர்விழி தொலைக்காட்சி பெட்டி சின்னம், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியை சேர்ந்த ஜனார்த்தனம் வைரம் சின்னம், சுயேச்சை வேட்பாளர்கள் கண்ணன் தென்னந்தோப்பு சின்னம், கார்த்திகேயன் ட்ரக் சின்னம், சதீஷ்குமார் தலைக்கவசம் சின்னம், சுப்பிரமணி வாயு சிலிண்டர் சின்னம், செங்குட்டுவன் ஆட்டோ ரிக்ஷா சின்னம், வேலுச்சாமி கரும்பு விவ சாயி சின்னம் ஆகிய சின்னங்களில் போட்டியிடு கிறார்கள். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு கொண்டு வரப்படுகின்றன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் அறை மற்றும் கண்காணிப்பு அறை உள்ளிட்ட அனைத்து அறைகளும் தயாராக உள்ளன. வடக்கு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    • நாட்டை பாதுகாக்க, இறையாண்மையை பாதுகாக்க 2024ல் பிரதமர் மோடியின் தலைமை மிக அவசியமாக உள்ளது.
    • கடினமான சூழலிலும் 10 ஆண்டுகளில் இந்தியாவை முன்னேறிய நாடாக மோடி உயர்த்தியுள்ளார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அய்யம்பாளையம் பகுதியில் 1972ம் ஆண்டு மின்சார கட்டண உயர்வு போராட்டத்தால் உயிர் நீத்த விவசாயிகள் நினைவிடத்தில் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அய்யம்பாளையத்தில் மிக முக்கியமான ஒரு சின்னம் உள்ளது. அதை அனைவரும் மறந்து விட்டனர். அதை நினைவு படுத்துவது நமது கடமை. இங்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கான காரணம் நமது உரிமையை நாமே ஜனநாயகத்தில் பெற்றெடுக்க வேண்டும். தியாகி சுப்பையன் மகன் ராஜேந்திரன் மற்றும் அவரது மருமகள் கவிதா ஆகியோர் எங்களுடன் இருக்கின்றனர்.

    தியாகிகளின் நினைவிடத்தில் இருந்து இன்றைய பிரசாரத்தை தொடங்குகிறோம். கடந்த ஆண்டு பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் தங்களது தோட்டத்தில் அமர்ந்து மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விச்செலவை பா.ஜ.க. ஏற்றுக்கொண்டது.

    நேற்று நீதிமன்றம் 5 குற்றவாளிகளுக்கும் தீர்ப்பு வழங்கியுள்ளது. 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒரு நபருக்கு 6 ஆண்டு ஆயுள் தண்டனையும் வழங்கி உள்ளது.

    நீதிமன்ற தீர்ப்பு ஒரு விதத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அந்த குடும்பத்தினரின் குழந்தைகள் பா.ஜ.க.வின் பாதுகாப்பில் உள்ளனர். காவல்துறையினர் மிக வேகமாக செயல்பட்டு இந்த வழக்கை முடித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஒரு விதத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும். ரஷியா -உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கு முன்பு சிரியாவில் நடந்த தாக்குதலில் ஈரான் அதிகாரிகள் இறந்தார்கள். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நேரடி போர் சூழல் தொடங்கியுள்ளது. இந்த போர் நேரத்தில் தான் இந்தியாவின் தலைமை இன்னும் வலிமையாக இருக்க வேண்டும்.

    நாட்டை பாதுகாக்க, இறையாண்மையை பாதுகாக்க 2024ல் பிரதமர் மோடியின் தலைமை மிக அவசியமாக உள்ளது. காரணம் கடினமான ஒரு சூழ்நிலைக்குள் உலகம் சென்று கொண்டிருக்கிறது.

    உலகம் முழுவதும் போர்சூழல் நிலவினாலும் மோடி பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. இப்படிப்பட்ட கடினமான சூழலிலும் 10 ஆண்டுகளில் இந்தியாவை முன்னேறிய நாடாக மோடி உயர்த்தியுள்ளார். மூன்றாம் உலக போர் சூழலை தவிர்க்க முடியும் என்றால் அது மோடி அவர்களால் மட்டுமே முடியும். அனைத்து உலக தலைவர்களிடமும் பேச முடியும் என்றால் அது மோடியால் மட்டுமே முடியும். 2029ல் மோடி உலகத்தினுடைய தலைவராக உருவெடுப்பார். உலகத்தின் முன்னணி நாடாக இந்தியா இருக்கும். பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர நாங்கள் எப்போதோ அறிவித்து விட்டோம். ஆனால் மாநில அரசுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநில அரசுக்கு வரும் வருமானம் காணாமல் போகும் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த2 ஆண்டுகளில் 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை பெட்ரோல்- டீசல் விலையை குறைத்துள்ளோம்.

    கியாஸ்க்கு 300 ரூபாய் மானியம் அளித்துள்ளோம். இந்தியாவைப் பொறுத்தவரை வாக்குச்சீட்டில் இருந்து வாக்குப்பதிவு எந்திரத்திற்கு நாம் மாறிவிட்டோம். 2024 ம் ஆண்டு தோல்விக்கு பிறகும் இந்தியா கூட்டணி இது போன்ற காரணங்களை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஓட்டுச்சீட்டு முறை இருந்தபோது கிராம பகுதிகளில் என்னெல்லாம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கள்ள ஓட்டு தடுக்கப்பட்டுள்ளது. இந்தியா தொழில்நுட்பத்தில் வேற லெவலில் உள்ளது. தேர்தல் நடத்தும் முறையில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக உள்ளது. எனவே அமெரிக்காவைப் பார்த்து இந்தியா காப்பி அடிக்க வேண்டாம். இந்தியாவைப் பார்த்துதான் அமெரிக்கா காப்பியடித்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

    ×