search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்"

    • சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைய பெற்று உள்ள கோவில் ஆகும்.
    • கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    பவானி:

    பவானி நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் ஆகிய சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைய பெற்று உள்ள கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவேரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கோவிலுக்கு தினசரி உள்ளூர் வெளியூர் வெளிமாநில பக்தர்கள் என பல வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், திருமண தடை தோஷம் நீக்குதல், செவ்வாய் தோஷம் நீக்குதல், ராகு கேது பரிகார தோஷம் நீக்குதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து சாமி வழிபாடு மேற்கொண்டு சென்று வருகின்றனர்.

    அதேபோல் பரிகார பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தாங்கள் அணிந்து கொண்ட பழைய துணிகளை காவிரி ஆற்றில் கழற்றி விட்டு செல்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த துணிகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு ஏலதாரர்கள் அதை சுத்தம் செய்வது வழக்கமாக உள்ளது.


    தற்போது காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் தினசரி 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் காவிரி ஆறு பார்க்கும் இடமெல்லாம் பாறைகளாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் விடும் துணிகள் ஆங்காங்கே காவிரி ஆற்றின் பாறைகள் உட்பட படித்துறைகள் என பல்வேறு இடங்களில் கிடப்பதை நாம் பார்க்க முடிகிறது.

    துணிகளை அப்புறபடுத்த ஏலம் எடுத்தவர்கள் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அந்த துணிகளை மட்டும் எடுத்துக் கொள்வதாகவும், மீதமுள்ள துணிகளை ஆங்காங்கே விட்டு விடுவதாகவும் பக்தர்கள் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

    இதனால் பார்க்கும் இடமெல்லாம் பழைய துணிகளாகவும், குவிந்து கிடக்கும் குப்பைகளும், பார்க்கவே முகம் சுளிக்கும் வகையில் கூடுதுறை கோவில் பின்பகுதி அமைந்துள்ளது என பக்தர்கள் பலரும் வேதனையுடன் தெரிவித்து கொண்டனர்.

    இதனால் சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் பக்தர்கள் அந்த துணிகளை ஆற்றில் விடுவதை தடுத்தோ அல்லது துணிகள் தண்ணீர் ஓடும் இடங்களில் போட வலியுறுத்தி பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி காவிரி ஆற்றையும், சங்கமேஸ்வரர் கோவில் படித்துறை பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது.
    • பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் ஸ்ரீரங்கம் கோவில் விமானம்.

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. 108 திருப்பதிகளில் தானாய் தோன்றிய (சுயம்பு) திருப்பதிகள் 8 தான். அதிலும் முதல் திருப்பதி ஸ்ரீரங்கம் தான். வைகுண்டத்தின் தத்துவத்தை பூலோகத்தில் உள்ள மக்கள் கண்டு அனுபவிக்கும் வகையில் அமைந்துள்ளதால் இது பூலோக வைகுண்டம் எனப்படுகிறது.

    ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது, தெய்வீகமானது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்ரீராமரின் குலதெய்வம் ஆவார். மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே குலதெய்வம் என்று உள்ளது. அதேபோல மகாவிஷ்ணு மனிதராக ஸ்ரீராமராக அவதாரம் எடுத்தவர்.

    அயோத்தியில் அவர் வணங்கிய குல தெய்வம்தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் போது ராமரின் குலதெய்வ கோவிலான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திரங்கள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மண் அனுப்பி வைக்கப்பட்டது.

    பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் ஸ்ரீரங்கம் கோவில் விமானம். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்தவர் ஸ்ரீரங்கநாதர். ரெங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய பிரம்மா சூரியனை நியமித்தார்.

    பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு கொண்டு சென்று வழிபட்டார். "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்" ராமரின் வம்சமாகிய ரகுவம்சத்தின் குல தேய்வம். காலம்காலமாக அவர்கள் ரெங்கநாதரை வழிபட்டு வந்தனர். சூரிய வம்சத்தில் தசரதருக்கு மகனாக அவதரித்த ராமபிரான் தன் முன்னோர்கள் வழியில் ரெங்கநாதரை வணங்கி வந்தார். 67 தலைமுறைகளுக்கு முன்பு இருந்தே அஜன், திலீபன், தசரதன் என ராமபிரானின் முன்னோர்களால் வழிபட்டு வந்தவர் ரெங்கநாதர். அயோத்தியில் ராமர் தனது கரங்களால் ரங்கநாதருக்கு பூஜை செய்து வந்தார்.

    இந்த சூழலில் ராமர் வனவாசம் முடிந்து அயோத்தியில் மீண்டும் அரசாட்சி புரிந்தார். அவர் முடி சூட்டிக்கொண்ட பிறகு விபீஷணனுக்கு அவன் செய்த உதவிக்காக `ரங்க விமானம்' தருகிறார் ராமர். அதை விபீஷணன் இலங்கை போகும் வழியில் சந்திரபுஷ்கரினி என்னும் தடாகம் பகுதியில் வந்தபோது சிலையை கீழே இறக்கி வைக்க வேண்டாம் என்று கருதி, அங்கு வந்த சிறுவனிடம் கொடுத்துள்ளான்.

    ஆனால் காவிரியில் நீராடி விட்டு திரும்பி வருவதற்கு அந்த சிலையை சிறுவன் கீழே வைத்துவிட்டான். அதன்பிறகு சிலையை எடுக்க முடியவில்லை. கோபத்தில் விபீசணன் அந்த சிறுவனை தேடியபோது அவன் திருச்சி மலைக்கோட்டை உச்சியில் சென்று அமர்ந்து கொண்டான். சிறுவன் வடிவில் வந்தது உச்சிப்பிள்ளையார் என்றும், ரங்கநாதரை காவிரியில் அமர வைக்கவே அவர் இந்த திருவிளையாடலில் ஈடுபட்டுள்ளார். தர்மவர்மா என்ற அந்தப் பகுதி மன்னனின் பக்தியால் உருகி பெருமாள் அந்தத் தீவிலேயே தங்கி விடுகிறார். தர்மவர்மா ஆலயம் எழுப்பினான்.

    பள்ளிகொண்ட நிலையில் பெருமாள் இங்கு அருள்கிறார். இதனை `சயனக் கோலம்' என்பார்கள். திருச்சியில் காவிரியும் கொள்ளிடமும் உருவாக்கிய மணல் தீவு முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை உள்ளது. `அரங்கம்' என்றால் ஆற்றிடைக்குறை என்று பொருள்படும். ஸ்ரீரங்கம் பெரியகோவில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது 156 ஏக்கர். கோயில் சுவர்களின் மொத்த நீளம் 32,592 அடி. பெரியகோவில் 7 திருச்சுற்றுக்களோடு அமைந்துள்ளது. இந்தியாவிலேயே 7 சுற்றுக்களைக் கொண்ட கோவில் இதுமட்டுமே. பெருமாள் தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். விபீஷணனுக்காக "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளி கொண்டுள்ளார் பெருமாள்.

    கருவறை விமானத்தில் 4 கலசங்கள் உள்ளன. இவை 4 வேதங்களைக் குறிக்கின்றன. சுந்தரபாண்டியன் விமானத்துக்குத் தங்கம் பதித்தான். அதனால் பொன்மேய்ந்த பெருமாள் என அழைத்தனர். பொன்னால் வேயப்பட்ட இந்த விமானம் ஓம் என்ற பிரணவ வடிவில் எழுந்தருளி உள்ளது. ரெங்கநா தனின் திருக்கண்கள் விபீஷணனால் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

    மூவேந்தர்கள் தொடங்கி விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் எல்லோருமே ரெங்கநாதரை வணங்கி கோவிலை வளர்த்தனர்.

    கம்பர் தனது ராமகாதையை கி.பி.885-ல் இங்குதான் அரங்கேற்றம் செய்தார். வால்மீகி ராமாயணத்தில் இல்லாத `இரண்ய வதைப்படலம்' எனும்பகுதியை கம்பர் தனது காவியத்தில் எழுதியதை சிலர் ஏற்க மறுத்தனர். ஆனால் மேட்டழகிய சிங்கர் என்ற நரசிம்மர் கர்ஜித்து ஏற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

    தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ள நான்குகால் மண்டபத்தில்தான் கம்பராமாயணம் அரங்கேறியதாம். இதன் சாட்சியாக திருவந்திக்காப்பு மண்டபத் தூணில் கம்பர் கைகூப்பி வணங்கும் சிற்பம் உள்ளது.

    பழைமையான தமிழ் வழிபாட்டு முறைகளில் ஒன்றான பெருமாள் வழிபாட்டில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பது ஸ்ரீரங்கம். ஒரு நாட்டின் மன்னனுக்கு நடப்பதுபோன்று பெருமாளுக்கு விழாக்கள் நடக்கின்றன. இதனால்தான், "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே" என்று கூறுகிறார்கள்.

    ஆசியா - பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளிலிருந்து கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனெஸ்கோ அமைப்பு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017-ம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த கோவிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிசேகம் காணப்படும் இந்த சூழலில் ராமபிரானின் குல தெய்வமான ஸ்ரீரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ள ஸ்ரீரங்கமும் முக்கியத்துவம் பெறுகிறது. ராமரின் குலதெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு, அதன்பிறகு அயோத்தியில் ராமரின் கோவிலை திறந்து வைப்பதே சரி என கருதி பிரதமர் மோடியின் ஸ்ரீரங்கம் வருகை இதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகமாக்கி உள்ளது.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தை மாத பூபதி திருநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 19-ந்தேதி 4-ம் திருநாள் கருடசேவை தரிசனம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஸ்ரீரங்கம் வருவது மேலும் சிறப்பாகும்.

    • சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவிலில் குவிந்தனர்.
    • கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் மால கோவில் என அழைக்கப்படும் ஆல் கொண்டமால் (கிருஷ்ணன்) கோவில் உள்ளது. பொங்கல் திருநாளை ஒட்டி இந்த கோவிலில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 3 நாள் தமிழர் திருவிழா கொண்டாடப்படும்.

    கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும் செல்வம் பெருகவும் கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

    நேற்று முன்தினம் கோவிலில் பொங்கல் திருவிழா துவங்கியது. இதில் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவிலில் குவிந்தனர். நேற்று காலை கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம், பாலாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். நேர்த்திக்கடனாக கால்நடைகளின் உருவார பொம்மைகளை காணிக்கையாக செலுத்தினர். இதனால் கோவிலில் உள்ள நந்தி சிலை முன்பு உருவார பொம்மைகள் மலை போல் குவிந்தன. மேலும் சில விவசாயிகள் ஆடு, மாடுகளை கோவிலுக்கு தானமாக வழங்கினர். சலகருது ஆட்டம், தேவராட்டம் நடந்தது.

    விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அமரநாதன், செயல் அலுவலர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
    • கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

    சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமான மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.

    முன்னதாக, பரம்பரை முறைப்படி நடைபெறும் இந்த மஞ்சு விரட்டு திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து, இன்று காலை சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கூடியிருந்தனர்.

    இந்த நிலையில், மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காளை முட்டியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் மஞ்சு விரட்டில் 75 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    மஞ்சு விரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வலையபட்டியை சேர்ந்த 12 வயது சிறுவன் மற்றும் அடையாளம் தெரியாத வாலிபர் காளை முட்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பொதுமக்களிடையே ஆன்மீகம் அதிகரித்தால் நாடு நன்றாக இருக்கும்.
    • வெளிநாட்டில் இருந்து சாமி சிலைகள் கொண்டு வரவேண்டும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- ஆன்மீகம் அதிகமானால் குற்றம் களையும். வீடுகளில் அமைதி ஏற்படும். தமிழகத்தில் உள்ள சைவ வைணவ கோவில்களின் பழங்கால சொத்துகள் மூலம் ரூ.28 கோடி வருமானம் வருகிறது. இதில் ஒரு கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை திருப்பி கோவிலுக்கு வழங்க வேண்டும்.

    12 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை. 22 ஆயிரத்து 600 ஏக்கர் காலி இடத்தில் கடந்த 8 மாதத்தில் மட்டும் வாடகை பாக்கி ரூ.151 கோடி உள்ளது. பழமையான தொன்மையான 5 ஆயிரம் கோவில்களை புதுப்பிப்பதாக திருப்பணி செய்ததாக கூறுகின்றனர். இதில் கமிஷன் அடிக்கிறார்கள்.

    திருப்பணி என்ற பெயரில் பழமையான கல்வெட்டுகள் அழிந்து விட்டது. பழனியில் 16-ம் நூற்றாண்டிற்கு முன்பான கல்வெட்டுகளை அழிந்து விட்டது. திருப்பணி என்ற பெயரில் தொன்மையை அழித்துக்கொண்டு வருகின்றனர்.

    திருப்பணியை இந்து சமய அறநிலையத்துறை செய்ய தகுதி இல்லை. கோவில் புதுப்பிக்கும் பணியை மாநில ஆர்க்காலஜி துறை தான் செய்யவேண்டும். கோவில்களில் அனைத்தையும் செய்பவர்கள் அர்ச்சகர்கள். இவர்களை காப்பாற்றவில்லை என்றால் கோவில்கள் காலியாகிவிடும்.

    இன்னும் 15 வருடத்தில் 26 ஆயிரம் கோலில்களில் அர்ச்சகர்கள் இருக்க மாட்டார்கள். அர்ச்சகர்களை காப்பாற்ற சம்பளம் கொடுக்க வேண்டும். வசதி இல்லாத 1500 ஆண்டுகளுக்கு முன்பான 10 ஆயிரத்து 652 தொன்மையான கோவில்கள் அனைத்தும் கேட்பாரற்று இருக்கிறது.

    பொதுமக்களிடையே ஆன்மீகம் அதிகரித்தால் நாடு நன்றாக இருக்கும். இல்லையென்றால் சீரழியும். சைவ வைணவர்களின் ஒன்றுமை உடைந்து நொறுக்கி உள்ளது. 2012-ம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில் இருந்து 2 ஆயிர்து 622 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் 2012-ம் ஆண்டு முன்பு ஏன் இந்தளவு சிலைகள் மீட்க முடியவில்லை. அமெரிக்க போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசுடன் பேசி மீதமுள்ள சிலைகளை மீட்க வேண்டும்.

    உச்சக்கட்ட நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்த வேண்டிய துறையாக உள்ளது. ஆர்வம் குறைவான அதிகாரிகளை உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்டதால் 2020 ல் இருந்து பல முக்கிய வேலைகளை செய்யவில்லை.

    கடந்த மாதம் கோவில்களில் இருந்து ரூ.28.49 கோடி எடுத்துள்ளனர். விளம்பரத்திற்கு நான் அடிமை கிடையாது. வெளிநாட்டில் இருந்து சாமி சிலைகள் கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்தர்கள் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வரிசையாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • குன்றத்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    சென்னை:

    சென்னையில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பல கோவில்களில் 1-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் புத்தாண்டையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வரிசையாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் புத்தாண்டு தரிசனத்துக்காக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சிறப்பு அபிஷேகத்துக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சென்னை தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    வடபழனி முருகன் கோவில் புத்தாண்டையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முருக பெருமான் தங்க நாணய அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது.

    பின்னர் பகல் 12 மணிக்கு தங்க கவச அலங்காரமும், மாலையில் ராஜ அலங்காரமும் நடக்கிறது. புத்தாண்டை முன்னிட்டு இரவு 9 மணிக்கு கோவில் நடை மூடப்படாது என்றும் இரவிலும் பக்தர்கள் உள்ள வரை சாமியை தரிசனம் செய்து செல்லலாம் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வெளியே சிறப்பு தரிசன டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி சாமியை தரிசனம் செய்து செல்லும் வகையில் கோபுர வாசல் முதல் 150 அடிக்கு நிழற்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பூங்காநகர் ராசப்பா தெருவில் கந்தகோட்டம் முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் தொடங்கப்பட்ட நாள் டிசம்பர் 31-ந் தேதி ஆகும். இதை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். இதைத்தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சாமி ஊர்வலம் நடைபெறும். மேலும் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பொது மக்களுக்கு சாமி தரிசனம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    திருவொற்றியூர் தேரடியில் அமைந்துள்ள வடிவுடையம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி 1-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. பின்னர் சாமி தரிசனம் தொடர்ந்து நடைபெறும். மாலை 5 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். பின்னர் 6.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை சாமி தரிசனம் நடை பெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    தி.நகரில் உள்ள பத்மாவதி தாயார் சன்னிதானத்தில் புத்தாண்டையொட்டி 1-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சாமிக்கு விசேஷ அலங்காரங்கள், தீபதூப ஆராதனைகள் நடைபெறுகிறது. பின்னர் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்

    திருமுல்லைவாயலில் உள்ள பச்சையம்மன் மன்னாதி ஈஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரம்ம முகூர்த்த நேரமான 4.30 மணி முதல் 6 மணிக்குள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பூப்பந்தல் அமைத்து சாத்துப்படி அலங்காரம் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    குரு தலமான பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவல்லீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டிற்கு வருகை தருவார்கள். டிசம்பர் 31 இரவு முதல் பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வருவார்கள். எனவே பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட்டுள்ளன. சென்னையின் பிற பகுதிகளிலிருந்து திருவேற்காடு வந்து செல்ல மாநகர பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக சிறப்பு வரிசை ஏற்படுத்தப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோபூஜை, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 1-ந்தேதி இரவு 10 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் புத்தாண்டை யொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பின்னர் பக்தர்கள் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு வழங்குவதற்காக 25 ஆயிரம் லட்டுகளும் தயார் செய்யப்படுகிறது. குன்றத்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் புத்தாண்டு முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜையுடன் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு உற்சவர் பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.
    • விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த காங்கேயநத்தம் கிராமத்தில் ரெங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 4 தலைமுறைகளாக பலருக்கு குல தெய்வ கோவிலாக இருந்து வருவது வீரம்மாள் கோவில். அந்த வகையில் விஜயகாந்த் தனது தந்தை வழியில் வீரம்மாள் கோவிலுக்கு வரத்தவறியதில்லை.

    இந்த கோவில் திருப்பணிகளுக்காக ஏராளமான நன்கொடைகளை வாரி வழங்கிய வள்ளலாக திகழ்ந்த விஜயகாந்த், தன்னால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையிலும் தனது மனைவி, மகன்களை அனுப்பி வைத்து உதவிகள் செய்து வந்துள்ளார். கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.

    சுப நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அதனை தொடங்கும் முன்பு வீரம்மாள் கோவிலுக்கு விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்திருந்து பூஜைகளில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். குறிப்பாக மகா சிவராத்திரி தினத்தன்று மனைவி, மகன்களுடன் வந்து இரவில் கோவிலில் தங்கி படையலிட்டு, 6 கால பூஜையிலும் பங்கேற்று வழிபாடு நடத்தியுள்ளார்.

    பின்னர் கோவிலில் இருந்து புறப்படும் முன்பாக அங்கு வரும் பங்காளி முறை கொண்ட அனைவரையும் அழைத்து நலம் விசாரிப்பதோடு, அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகளின் கல்வி குறித்தும் கேட்டறிந்து மன நிறைவு பெறுவார்.

    அதிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் கஷ்டப்படுவர்களிடம் அவர்களின் தேவை குறித்து கேட்டறிந்து உதவிகள் பல செய்துள்ளார். இருந்தபோதிலும் அதனை வெட்ட வெளிச்சமாக காண்பித்ததில்லை. நீங்கள் நன்றாக இருந்தால்தான் உங்களின் குழந்தைகளின், அவர்களின் எதிர்காலமும் நன்றாக இருக்கும் என்பதில் எப்போதும் நம்பிக்கை கொண்டவன் என்பதில் உறுதியாக இருந்த கேப்டன் விஜயகாந்த், பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

    தலைமுறைகள் பல கடந்தாலும், குலதெய்வ கோவிலுக்கும், அங்கு வரும் பலரது குடும்பத்தாருக்கும் யாரும் அறியா வண்ணம் உதவிகள் செய்துவந்துள்ள விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.

    காங்கேயநத்தம் கிராமத்தில் வீரம்மாள் கோவில் பலருக்கு குலதெய்வமாக இருந்தபோதிலும், கண்கண்ட தெய்வமாக விஜயகாந்த் இருந்துள்ளார் என்பது வெளியில் தெரியாத உண்மை.

    • மாவட்ட நிர்வாகம் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதிமொழி அளித்தனர்.
    • தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா மைவாடி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தில் கடந்த 5-ந்தேதி பட்டியல் இன நபர் மீது வன்கொடுமை தாக்குதல் நடைபெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது.

    அப்போது ராஜாவூர் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பொது வீதிகளில் கால்களில் செருப்பு அணிந்து செல்ல முடியாது, அப்பகுதியில் உள்ள டீ கடையில் இரட்டை டம்ளர் முறை இருப்பதையும் மற்றும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ராஜகாளியம்மன் கோவிலில் பட்டியல் இன மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு உள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த மக்களின் உரிமைக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 -ந்தேதி உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம், வன்கொடுமை நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும், மேலும் பொது இடங்களில் பட்டியல் இன மக்களுக்கு சட்ட உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 18 -ந் தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.


    மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் 24-ந்தேதி உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

    இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதிமொழி அளித்தனர். இதையடுத்து ராஜாவூர் கிராமத்தில் உள்ள கோவிலில் வழிபடவும், பொது பாதையில் காலில் செருப்பு அணிந்து நடக்கவும் முடிவு செய்ததுடன், அதை உறுதி செய்யும் வகையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் மாநில தலைவர் செல்லக்கண்னு முன்னிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ராஜாவூர் கிராமத்தில் பேரணியாக பொது பாதையில் காலில் செருப்பு அணித்து சென்றனர். பின்னர் அங்குள்ள ராஜ காளியம்மன் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர்.

    முன்னதாக இந்த சமூக மாற்ற நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் பஞ்சலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் வடிவேல், சிஐடியு., நிர்வாகி பன்னீர்செல்வம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம், இந்திய தொழிற்சங்க மையம், ஆதிதமிழர் சன நாயக பேரவை, திராவிடர் தமிழர் கட்சி, ஆதிதமிழர் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், ஆதிதமிழர் முன்னோர் கழகம், ஆதி தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் சென்று வழிபட்டதன் மூலமாக பட்டியல் இன மக்களின் வழிபாட்டு உரிமை போராட்டம் வெற்றி பெற்று ள்ளது என்றனர். மேலும் கோவிலில் வழிபட தடை நீங்கியதால் ராஜாவூர் பகுதி பட்டியல் இன மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது.

    உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இங்கு பல்லவ மன்னர்கள் உருவாக்கிய சிற்பங்களை பார்க்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் பாறைகளை குடைந்து அழகாக உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள் கேமரா, டிரோன் ஆகியவை மூலம் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுக்கிறார்கள்.புதிதாக திருமணமான தம்பதிகள், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் கடற்கரை கோவில் வளாகத்தில் போட்டோ ஷூட் நடத்துகிறார்கள். மேலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் வாகனங்களில் கூட்டமாக வந்து புல்தரைகளில் அமர்ந்து அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது.

    சில காதல் ஜோடிகள் கடற்கரை கோவிலில் அத்துமீறி ஏறி, தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை எழுதி அலங்கோலப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

    இதையடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் வணிக நோக்கங்களுக்காக புகைப்படம் எடுத்தல், திருமணத்துக்கு முன் போட்டோ ஷூட் எடுத்தல், விஐபி, விவிஐபி வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

    மேலும் வியாபாரிகள் வியாபாரம் செய்வது, காதலர்கள் சிற்பங்களின் மீது ஏறுவது, பிடித்தவர்களின் பெயர்களை எழுதுவது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது, பொதுக்கூட்டம் நடத்துவது, பொது விளம்பரம் செய்வது ஆகிய செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரோன் கேமரா பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான நோட்டீஸ் கடற்கரை கோவில் நுழைவு தூணில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    • பல ஆண்டுகளாக கோவில் குளத்தில் நீரின்றி தரை மட்டம் தெரியும் அளவிற்கு இருந்தது.
    • பக்தர்கள் முன்னாள் கவுன்சிலர் வே.வாசுவுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

    வில்லிவாக்கம்,டிச.13-

    அயனாவரம் சயானி பஸ் நிறுத்தம் அருகே உள்ளது அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் கோவில் எதிர் திசையில் சுற்றிலும் குடி யிருப்புகளுக்கு மத்தியில் பரந்து விரிந்து உள்ளது. பல ஆண்டுகளாக கோவில் குளத்தில் நீரின்றி தரை மட்டம் தெரியும் அளவிற்கு இருந்து முற்றிலும் நீர்வரத் தும் குறைந்து இருந்தது. இது குறித்து அயனாவரம் பகுதியில் உள்ள பல்வேறு திருக்கோவில் குளங்களை பராமரித்து வரும் தி. மு.க. பகுதி செயலாளரும் மலர் டிரஸ்ட் நிறுவனரும் முன்னாள் கவுன்சிலருமான வே.வாசுவின் கவனத்துக்கு பக்தர்கள் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து தனது சொந்த நிதியிலிருந்து சென்னை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூபாய் 11, 45,970 (11லட்சத்து 45 ஆயிரத்து 970 ரூபாய்) மதிப்பில் சாலையின் மேற்குப் பகுதியில் இருந்து 150 மீட்டர் நீளத்திற்கு 3 அடி அகலம் 3 அடி ஆழத் திற்கு சொந்த பணத்தில் மழைநீர் கால்வாய் அமைத்து சாலையோரம் ஓடும் மழை நீரினை குளத்திற்கு பைப் மூலம் கொண்டு செல்லும் வகையில் பணியினை நடத்தி முடித்தார். இதன் காரணமாக கடந்த வாரம் மிக்ஜாம் புயலின் தாக்கத் தால் பெய்த கனமழையால் சாலை ஓரத்தில் இருந்த மழை நீர் அனைத்தும் குளத்திற்கு சென்றது. இதையடுத்து சுமார் 30 அடி ஆழத்திற்கு குளம் முழுவதும் மழை நீர் நிரம்பி சுற்றி மழை நீரால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதன் மூலம் அந்த பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் நிலத்தடி நீர் உயரும். இதனை தொடர்ந்து

    75 ஆண்டுகளுக்கு பிறகு காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் மழை நீரை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் முன்னாள் கவுன்சிலர் வே.வாசுவுக்கு பாராட்டுகளையும் நன்றி களையும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தி.மு.க. வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளரும் மலர் டிரஸ்ட் நிறுவனருமான வே.வாசு கூறியதாவது:-

    பல ஆண்டுகளாக நீர் இல்லாமல் இருந்த இந்த கோவில்குளத்தை நாங்கள் சரி செய்ததால் தற்சமயம் பெய்த பலத்த மழையால் 30 அடிக்கு மேல் மழை நீர் தேங்கி உள்ளது. இதனை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் குளத்தில் மழை நீர் தேங்கும் வகையில் கிழக்குப் பகுதியில் இருந்து 250 மீட்டர் அளவிற்கு மழைநீர் வடிகால் அமைத்து கிழக்குப் பகுதியில் தேங்கும் மழை நீரை குளத்திற்குள் விடும் பணிகள் விரைவில் தொடங்கும். காசி விசுவநாதர் கோவில் நிர்வாகத்தின் கீழ் வரும் இந்த குளத்தினை நாங்கள் சீர் செய்து விட்டோம். ஆனால் கோவில் நிர்வாகத்தினர் கோவில் குளத்தினை முறையாக பராமரிக்காத காரணத்தினால் சுற்றி உள்ள மரத்தில் உள்ள கழிவுகள் அனைத்தும் குளத்தில் மிதிக்கிறது. இதனை சீர் செய்ய எங்கள் பங்களிப்பை நாங்கள் தருவதற்கு தயாராக இருக்கி றோம். கோவில் நிர்வாகம் இந்த கோவில் குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது எனது தாழ்வான கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
    • தாலியை திருடிவிட்டு காரில் ஏறி சென்றதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த திருவிழாவின் போது இரண்டு தேர்களை பக்தர்கள் தோளிலும், தலையிலும் சுமந்து கொண்டு வீதி உலா வருவர்.

    மதுரை காளியம்மன் தினமும் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அப்போது அம்மனின் கழுத்தில் தாலி பொட்டு, கருகமணி, தாலி குண்டு, மாங்கல்யம், தங்க தாலி சங்கிலி உள்ளிட்டவை அணிவிக்கப்படும்.

    அதன்படி நேற்று கோவில் பூசாரி மருதை அம்மனுகு சிறப்பு அலங்காரம் செய்து நகைகளை அணிவித்தார். பின்னர் அவர் பூஜைகள் செய்தார்.

    இந்த நிலையில் ஒரு குடும்பத்தினர் அம்மன் முன் அமர்ந்து வழிபாடு நடத்தினர். இதை தொடர்ந்து கோவில் பூசாரி மருதை மடப்பள்ளிக்கு சென்று பொங்கல் வைத்துவிட்டு அம்மனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார்.

    அப்போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 15 பவுன் தாலி சங்கிலி திருட்டு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தார்.

    அறங்காவலர் குழுத்தலைவர் விஜய் ஆனந்த், தொட்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தத்தில் ஒரு தம்பதி குழந்தையுடன் வந்து தரிசனம் செய்துவிட்டு சென்ற பிறகு தான் தாலி திருடப்பட்டது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் தாலியை திருடிவிட்டு காரில் ஏறி சென்றதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்பத்துடன் வந்து அம்மன் தாலி சங்கிலியை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடிவருகின்றனர்.

    இந்த திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் அமைக்கப்பட்ட 3 தனிப்படைகள் தீவிரமாக கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பர்கத்பாஷா(25). நேற்று மதியம் அவர் கூடுவாஞ்சேரியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் முன்பு இருந்தார். அப்போது கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.

    அந்த நேரத்தில் 4 பேர் கும்பல் திடீரென பர்கத்பாஷாவிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் பர்கத்பாஷாவின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இதனை கண்டு கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பலத்த காயம் அடைந்த பர்கத்பாஷா ரத்தம் சொட்ட, சொட்ட அங்கிருந்து நடந்து சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×