search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமல்லபுரம்"

    • 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பூதத்தாழ்வார், நரசிம்மர், ராமன், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், கருடன் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 16ந் தேதி பங்குனி உத்திர உற்சவம் வெகு விமரிசையாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், கோவில் உள் பிரகாரத்தில் நிலமங்கை தாயார் சுற்றி வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், பங்குனி உத்திரம் நிறைவு நாளான நேற்று காலை பட்டாச்சாரியார்கள் மூலம் யாகம் வளர்த்து பெருமாள், தாயார், பூதத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் செய்யப்பட்டது., இதையடுத்து, மாலை 6 மணிக்கு நான்கு ராஜவீதிகள் வழியாக ஸ்ரீதேவி, பூ தேவியுடன், திருவீதி உலாவந்து தலசயன பெருமாள், நிலமங்கை தாயாருக்கு மாலை மாற்றிய திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மாமல்லபுரத்தில் இன்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது.
    • காணும் பொங்கலையொட்டி சென்னை பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று காணும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காணும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர்.

    சென்னை மெரினா கடற்கரைக்கு காணும் பொங்கலையொட்டி இன்று காலை 11 மணியில் இருந்தே பொதுமக்கள் வரத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்தனர். பிற்பகலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர்.


    அவர்கள் கடற்கரை மணலில் ஒன்றாக அமர்ந்து பொழுதை போக்கினார்கள். குழந்தைகள் கடற்கரை மணலில் உற்சாகமாக விளையாடினார்கள். தொடர்ந்து பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதன் காரணமாக மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

    மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும், பெண்களிடம் அத்துமீறுபவர்களை கட்டுப்படுத்தவும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜன் மேற்பார்வையில் மெரினா கடற்கரை முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு 13 கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி 3 போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்தனர்.


    மெரினாவில் இன்று கடலில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட நீச்சல் பயிற்சி பெற்ற போலீசார் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குதிரைப்படையினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய 3 வாகனங்கள் மூலமாகவும் ரோந்து சென்றுபோலீசார் கண்காணித்தனர். மேலும் டிரோன் கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரைக்கு வந்த மக்கள் அங்கிருந்து அருகில் உள்ள தீவுத்திடலுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியையும் கண்டுகளித்தனர். அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டனர். தனியார் அரங்குகளையும் சுற்றிப்பார்த்தனர். மேலும் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும் விளையாடி மகிழ்ந்தனர். அங்குள்ள உணவகங்களில் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளையும் உண்டனர்.

    மாமல்லபுரத்தில் இன்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது. உள்நாட்டு பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அங்குள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கடற்கரை கோவில், ஐந்து ரதம், புலிக்குகை பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அனைத்து வாகனங்களையும் கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்தனர். மாமல்லபுரம் நகருக்குள் மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் 3 கி.மீ தூரம் நடந்து சென்றே புராதன சின்னங்களை பார்க்க வேண்டியது இருப்பதால், அனுமதி பெற்ற உள்ளூர் ஆட்டோக்கள் சிலவற்றை நகருக்குள் இயக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். மாமல்லபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவோர், போதை ஆசாமிகளை கண்காணிக்க சாதாரண உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை, திருவிடந்தை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 2 நாட்களில் 37 ஆயிரம் பேர் வருகை தந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்துள்ளனர்.

    இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி இன்று காலையில் இருந்தே வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள விலங்குகள், பறவைகளை பார்வையிட்டனர். சிங்கம், புலி, வெள்ளைப்புலி, யானை, காண்டாமிருகம், மனித குரங்கு, ஒட்டகச்ச்சிவிங்கி, குதிரைகள், பறவைகள், பாம்புகள் ஆகியவற்றை பார்த்தனர். உயிரியல் பூங்காவில் புதிதாக வந்துள்ள உயிரினங்களான இருவாச்சி பறவை, மலேயன் ராட்சத அணில், ஜம்முவிலிருத்து கொண்டு வரப்பட்ட இமாலயன் கருப்பு கரடி, சிவப்பு மார்பக கிளி ஆகியவற்றையும் கண்டுகளித்தனர்.

    காணும் பொங்கலையொட்டி சென்னை பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வந்தனர். அவர்கள் பழவேற்காடு கடற்கரையை சுற்றி பார்ப்பதற்காக உறவினர்கள், நண்பர்களுடன் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். பழவேற்காட்டில் டச்சு கல்லறை, நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோயில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பழவேற்காடு பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவைகளை கண்டு கழித்தனர். குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் சமைத்து கொண்டு வந்த உணவுகளை கடற்கரையில் அமர்ந்து உண்டனர். சிலர் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். பழவேற்காடு கடலில் குளிப்பதற்கும், படகு சவாரிக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • புலிக்குகை உள்ளிட்ட கலைச் சிற்பங்களை, மத்திய தொல்லியல்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது.
    • புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன்தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை உள்ளிட்ட கலைச் சிற்பங்களை, மத்திய தொல்லியல்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது.இதை அருகில் சென்று தொட்டு பார்த்து ரசிப்பதற்கு வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600, இந்தியருக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் பள்ளிக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இதில் கடந்த ஒருவாரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையால் தொல்லியல் துறைக்கு ரூ.8லட்சம் வரை வருவாய் கிடைத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • சுற்றுலா பயணிகள் இரவு 9 மணி வரை புராதன சின்னங்களை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
    • கடற்கரைகோவில் சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடைய செய்து உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட புராதன சிற்பங்களை பார்த்து ரசித்து செல்கிறார்கள். இதனை இரவிலும் கண்டுகளிக்கும் வகையில், ஒளி அலங்கார மின் விளக்குகள் கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் வந்தபோது அமைக்கபட்டது., பின்னர் சுற்றுலா பயணிகள் இரவு 9 மணி வரை புராதன சின்னங்களை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து நாளடைவில், மின் விளக்குகள் பழுதடைந்ததால் ஒளிக்காட்சி நிறுத்தப்பட்டது. கடந்த ஜூலை மாதம் முதல் அனைத்து விளக்குகளும் சரி செய்யப்பட்டது. தற்போது கடற்கரைகோவிலில் மட்டும் சுற்றுலா பயணிகள் இரவு 9 மணிவரை அனுமதிக்கப் படுகின்றனர்.

    ஆனால் கடற்கரை கோவில் வளாகத்தில் இருந்த நடைபாதை விளக்குகள் மீண்டும் பழுதடைந்து இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. தற்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை, நாட்டியவிழா, மார்கழி மாத செவ்வாடை பக்தர்கள் வருகை என சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து உள்ள நிலையில் இந்த இருள் சூழ்ந்த கடற்கரைகோவில் சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடைய செய்து உள்ளது.

    கடற்கரை கோவிலை இரவில் நடந்து சென்று பார்க்க விரும்பும் சுற்றுலாபயணிகள் மின் விளக்குகள் இல்லாததால் கோவிலின் கரடு முரடான கருங்கல் நடைபாதையில் தடுமாறுகின்றனர். மேலும் முதியோர், பெண்கள், குழந்தைகள் அடிக்கடி விழுந்து காயமடைகின்றனர். எனவே கடற்கரை கோவில் உள்ள பகுதியில் பிரகாசமான விளக்குகளை உடனடியாக அமைக்க தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கிராமிய கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • வெளிநாட்டு பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் இந்திய நாட்டிய விழாவின் 2-ம் நாளான நேற்று கிராமிய கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.

    மேடையில் ஆடிக்கொண்டு இருந்த கரகாட்ட, மயிலாட்ட கலைஞர்கள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக மேடையில் இருந்து இறங்கி வந்து ஆடினர். அப்போது முன்வரிசையில் அமர்ந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் ஆர்வத்துடன் கரகத்தை வாங்கி தலையில் வைத்து நாதஸ்வர மேளத்திற்கு ஏற்றபடி கரகாட்டம் ஆடினார். இது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் கவர்ந்தது.

    • சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நகருக்குள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் ஒருவழி பாதையாக மாற்றி இருந்தனர்.
    • பல இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கும் இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டது.

    மாமல்லபுரம்:

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நகருக்குள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் ஒருவழி பாதையாக மாற்றி இருந்தனர். எனினும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் காரணமாக மாமல்லபுரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக கோவளம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை இருவழி நுழைவு வாயில்களில் நுழைவு கட்டணம் வசூலி க்கும் ஒப்பந்ததார ஊழியர்கள் சிலர், நகருக்குள் நுழைந்த வாகனங்களை வழி மறித்து நுழைவு கட்டணம் வசூல் செய்தது காரணமாக கூறப்படுகிறது.

    இதனால் பல இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கும் இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டது.

    ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், வாகனங்களில் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் இரண்டு இடங்களில் மட்டுமே நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும், ரசீது வாங்கிய வாகனத்தில் அடையாள ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், ஊழியர்கள் சீருடை மற்றும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இந்த நடைமுறைகள் இதுவரை கடைபிடிக்கவில்லை என்று தெரிகிறது.

    • 2 மாத விடுமுறை எடுத்துள்ள செலஞ்சீவ் தன்னுடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கேரளாவுக்கு சுற்றுலா வந்தார்.
    • மனைவியும் மற்றொரு மகனும் தனித்தனி சைக்கிளை ஓட்டுகின்றனர்.

    மாமல்லபுரம்:

    இத்தாலி நாட்டை சேர்ந்தவர் செலஞ்சீவ் (வயது 47). இவரது மனைவி பெடரிகா பிரைட் (38). இவர்களுக்கு டைஷானோ (7) என்ற மகனும், காஸ்டைன் என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளனர். செலஞ்சீவ் இத்தாலி நாட்டில் ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் 2 மாத விடுமுறை எடுத்துள்ள செலஞ்சீவ் தன்னுடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கேரளாவுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்கு இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்தார். அவர் தங்கள் நாட்டில் இருந்து கொண்டு வந்த சைக்கிள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளை கடந்து மாமல்லபுரம் வருகை தந்தார். செலஞ்சீவ் தன்னுடைய ஒரு வயது குழந்தையுடன் சைக்கிளில் தொட்டில் இணைத்து ஓட்டி வருகிறார்.

    மனைவியும் மற்றொரு மகனும் தனித்தனி சைக்கிளை ஓட்டுகின்றனர். உடல் ஆரோக்கியத்திற்காக தாங்கள் சொகுசு வாகனங்களில் பயணம் செய்ய விரும்புவதில்லை என்று தெரிவித்தனர்.

    மேலும் டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சைக்கிள் மூலமாகவே நாங்கள் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக இத்தாலி என்ஜினீயர் செலஞ்சீவ் தெரிவித்தார்.

    மாமல்லபுரத்தில் சுற்றுலாவை முடித்து விட்டு அவர்கள் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றனர்.

    • வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது.

    உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இங்கு பல்லவ மன்னர்கள் உருவாக்கிய சிற்பங்களை பார்க்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் பாறைகளை குடைந்து அழகாக உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள் கேமரா, டிரோன் ஆகியவை மூலம் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுக்கிறார்கள்.புதிதாக திருமணமான தம்பதிகள், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் கடற்கரை கோவில் வளாகத்தில் போட்டோ ஷூட் நடத்துகிறார்கள். மேலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் வாகனங்களில் கூட்டமாக வந்து புல்தரைகளில் அமர்ந்து அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது.

    சில காதல் ஜோடிகள் கடற்கரை கோவிலில் அத்துமீறி ஏறி, தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை எழுதி அலங்கோலப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

    இதையடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் வணிக நோக்கங்களுக்காக புகைப்படம் எடுத்தல், திருமணத்துக்கு முன் போட்டோ ஷூட் எடுத்தல், விஐபி, விவிஐபி வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

    மேலும் வியாபாரிகள் வியாபாரம் செய்வது, காதலர்கள் சிற்பங்களின் மீது ஏறுவது, பிடித்தவர்களின் பெயர்களை எழுதுவது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது, பொதுக்கூட்டம் நடத்துவது, பொது விளம்பரம் செய்வது ஆகிய செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரோன் கேமரா பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான நோட்டீஸ் கடற்கரை கோவில் நுழைவு தூணில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    • சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
    • ஐந்துரதம் மற்றும் அர்ஜூனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் பகுதியில் ஒளி அலங்காரம் அமைக்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மத்திய அரசின் கலாசார அமைச்சகம் சார்பில், 75-வது சுதந்திர தினவிழாவின் ஒரு பகுதியாக, புராதன சின்னங்களை பாதுகாக்கும் வகையில் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டு அதை இந்தியா முழுவதும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள 75 புராதன சின்னங்களில் டிஜிட்டல் முறையில் புரொஜக்டர் மூலம் சிற்பங்களில் ஒளி அமைக்கப்பட்டு வருகிறது.

    மாமல்லபுரத்தில் நேற்று இரவு வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, கடற்கரை கோவில் பகுதியில் பகுதியில் இரவு 9 மணி வரை, ஓளி அலங்காரத்துடன் டிஜிட்டல் லோகோ ஒளி அமைக்கப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், வரும் நாட்களில் கடற்கரை கோவில், ஐந்துரதம் மற்றும் அர்ஜூனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் பகுதியில் ஒளி அலங்காரம் அமைக்கப்படுகிறது

    • புயல் தாக்கத்தால் மாமல்லபுரத்தில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது
    • அனைத்து வழித்தடங்களில் இருந்தும் பஸ்கள் இயங்கி வருவதால் இயல்பு நிலை திரும்பி சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர்.

    "மிச்சாங்" புயல் தாக்கத்தால் மாமல்லபுரத்தில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    தற்போது அனைத்து வழித்தடங்களில் இருந்தும் பஸ்கள் இயங்கி வருவதால் இயல்பு நிலை திரும்பி சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். அதனால் கடற்கரை கோவில் சாலை, ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வைத்திருந்த சாலையோர கடைகள் திறக்கப்பட்டது.

    கடைகளின் உள்ளே மழையால் ஈரமான தொப்பி, பொம்மைகளை வியாபாரிகள் வெயிலில் காயவைத்து வருகின்றனர். பக்கிங்காம் கால்வாயில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கால்வாய் கரையோர தெருக்கள் மற்றும் அப்பகுதி கட்டிடங்கள் இன்னும் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.

    • தொல்லியல்துறை ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
    • மழை இல்லாததால் வெள்ளம் வெளியேறி வருகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் புராதன சின்னங்களான, கடற்கரை கோவில், அர்ச்சுனன்தபசு, ஐந்துரதம், கிருஷ்ணர் மண்டபம், முற்றுப்பெறாத பெரிய சிற்பக்காட்சி பாறை, புலிக்குகை உள்ளிட்ட பகுதிகள் மழைநீர் தேங்கியது. தொல்லியல்துறை ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

    கிழக்கு கடற்கரை சாலையோர பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அருகில் உள்ள சிற்பக்கூடங்கள் நீரில் மூழ்கியது. அங்குள்ள இறால் பண்ணைகளும் மூழ்கி உள்ளன. தற்போது மழை இல்லாததால் வெள்ளம் வெளியேறி வருகிறது.

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரைசாலையில் சமீபத்தில் நான்கு வழி சாலைக்காக போடப்பட்ட புதிய சாலை சேதமடைந்தது. இதனால் அவ்வழியே கல்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி செல்லும் அரசு பஸ்களும், தனியார் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன. போர்க்கால அடிப்படையில் சாலைகள் சீரமைக்கபட்டு இன்று காலையில் இருந்து அவ்வழியே வாகனங்கள் சென்று வருகிறது.

    மாமல்லபுரத்தில் மூன்று நாட்களுக்கு பிறகு இன்று இயல்பு நிலை திரும்பி வருவதால் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல வரும் நிலை உருவாகி உள்ளது.

    • சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
    • சிலர் ஆர்வமாக அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    மாமல்லபுரம்:

    ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மாகாணத்தின் சபாநாயகர் நகமோட்டா டகாஷி, சபை செயலாளர் ஒகாவா மோடோஷி மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்ட 9பேர் கொண்ட குழுவினர், தமிழக அரசுடன் தொழில் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்காக சென்னை வந்தனர். பின்னர் அவர்கள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர்.

    அவர்களுக்கு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் கழுத்தில் மாலை அணிவித்து தமிழ் பாராம்பரிய முறைப்படி மேள தாளத்துடன், புலியாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் என கலை நிகழ்ச்சியுடன் கடற்கரை கோவிலுக்கு அழைத்து சென்றனர். இந்த கலை நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்த்து ரசித்து அவர்களிடம் நடனமாடும் முறையை பற்றி கேட்டறிந்தனர். பின்னர் உற்சாகத்துடன் கலைஞர்களிடம் இருந்த கரகத்தை வாங்கி தலையில் வைத்து மேளதாளம் வாசிக்க கரகாட்டம் ஆடி மகிழ்ந்தனர். சில எம்.பி.க்கள் குத்தாட்டமும் போட்டனர்.

    இதை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். சிலர் ஆர்வமாக அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    ×