search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mamallapuram"

    • குடியிருப்பவர்களை இடத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறி வந்தனர்.
    • 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு குப்பம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள துலுகானத்தம்மன் கோவில் அருகே உள்ள 40 வீடுகள் மற்றும் இறால் பண்ணை ஆகியவை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நெம்மேலி ஆள வந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அங்கு குடியிருப்பவர்களை இடத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறி வந்தனர். ஆனால் மீனவ கிராமமக்கள் இடத்தை காலி செய்ய வில்லை. இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை காஞ்சீபுரம் உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் தலைமையில் செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் சூலேரிக்காடு குப்பம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அவர்களை அப்பகுதி பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.

    மேலும் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தும் அதன் முன்பு அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மீனவ கிராம மக்களின் போராட்டத்தால் வீடுகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்குள்ள இறால் பண்ணைக்கு சென்று இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று மட்டும் போர்டு வைத்து சீல் வைத்தனர்.

    மேலும் அங்கு பூட்டி இருந்த வீடு ஒன்றுக்கும் சீல்வைத்து நோட்டீஸ் ஒட்டினர். அப்பகுதி மக்கள் அங்குள்ள துலுக்கானத்தம் கோவில் வளாகத்தில் திரண்டு உள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ரவி அபிராம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • உயர் அதிகாரிகள் ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர்.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில் மத்திய தொழல் பாதுகாப்பு படையினர் ஷிப்டு முறையில் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இங்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாதுகாப்பு படைவீரர் ரவி கிரண் (வயது37) பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் ரவிகிரண் அணுமின்நிலையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பணி முடிந்து அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் நகரியத்திற்கு செல்ல உடன் பணியாற்றும் மற்ற வீரர்களுடன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அனைவரும் தங்களது துப்பாக்கியை வைத்து இருந்தனர்.

    சதுரங்கபட்டினம் "டச்சு கோட்டை" அருகில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பஸ் குலுங்கியது.

    அந்த நேரத்தில் ரவிகிரண் கையில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கி திடீரென வெடித்தது. இதில் துப்பாக்கி குண்டுகள் ரவிகிரணின் கழுத்தில் பாய்ந்து தலைவழியாக வெளியே வந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரவி கிரண் உயிரிழந்தார். இதனை கண்டு உடன் பயணம் செய்த மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கல்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரவிகிரணின் உடலை கைப்பற்றி கல்பாக்கம் அணுசக்தி துறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ரவிகிரண் வைத்து இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த குண்டுகள் அகற்றப்படாமல் இருந்தது தெரிந்தது.

    வழக்கமாக பாதுகாப்பு பணியின் போது மட்டுமே துப்பாக்கியில் குண்டுகள் லோடு செய்து தயார் நிலையில் வைக்கப்படும். பணி முடிந்ததும் பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை அகற்றி அதனை தங்களது பாதுகாப்பு இடுப்பு பெல்ட்டில் உள்ள சிறிய பையில் வைத்து விடுவார்கள்.

    ஆனால் ரவி கிரணிடம் இருந்த துப்பாக்கியில் குண்டுகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்து உள்ளது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை எதற்காக எடுக்காமல் இருந்தார்? மறந்து விட்டாரா? என்று தெரியவில்லை.

    எனவே வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கிய போது ரவிகிரணிடம் இருந்து துப்பாக்கி தவறுதலாக வெடித்து குண்டு பாய்ந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்வதற்கு திட்டமிட்டு துப்பாக்கியில் இருந்த குண்டை அகற்றாமல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் மற்றும் சதுரங்கபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     இது தொடர்பாக அவருடன் பணியில் இருந்த மற்றும் பஸ்சில் பயணம் செய்த வீரர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரவிகிரணின் நடவடிக்கைகள் எப்படி இருந்தது என்பது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இறந்து போன ரவிகிரண் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் கர்நாடகாவில் இருந்து கல்பாக்கத்திற்கு பணிமாறுதல் ஆகி வந்து உள்ளார். அவருக்கு அனுசா என்ற மனைவியும், ஷாஸ்வினி, ரித்திகா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    அணுமின் நிலைய மத்திய பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுமக்கள் வசதியாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கம்.
    • சிறப்பு பஸ்கள் ஜூன் முதல் வாரம் வரை இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலாலும், இரவு நேரத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் புழுக்கத்தாலும் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    மாலை நேரங்களில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க சென்னை நகர மக்கள் மெரினா, பெசன்ட்நகர், மாமல்லபுரம் கடற்கரைக்கு படையெடுத்து வருகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வண்டலூர் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணி களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. தினந்தோறும் கடற்கரை மற்றும் மாமல்லபுரம், வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதையடுத்து இந்த வழித்தடங்களில் மாநகர பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பயணிகளின் வசதிக்காக மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், மாமல்லபுரம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா, கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர தினமும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த சிறப்பு பஸ்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரம் வரை இயக்கப்பட உள்ளது.

    இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, `கோடை விடுமுறையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கோவளம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வது அதிகரித்து உள்ளது.

    எனவே இந்த வழித்தடங்களில் பொதுமக்கள் சென்று வர வசதியாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஜூன் மாதம் முதல் வாரம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மாநகர பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மண்பானையில் குடிநீர், மோர் ஆகியவை தடையின்றி வழங்கப்படுகிறது. பிராட்வே, தி.நகர், திருவான்மியூர், அடையாறு, திருவொற்றியூர் உள்ளிட்ட 70 இடங்களில் இவை வழங்கப்படுகிறது' என்றார்.

    • 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பூதத்தாழ்வார், நரசிம்மர், ராமன், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், கருடன் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 16ந் தேதி பங்குனி உத்திர உற்சவம் வெகு விமரிசையாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், கோவில் உள் பிரகாரத்தில் நிலமங்கை தாயார் சுற்றி வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், பங்குனி உத்திரம் நிறைவு நாளான நேற்று காலை பட்டாச்சாரியார்கள் மூலம் யாகம் வளர்த்து பெருமாள், தாயார், பூதத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் செய்யப்பட்டது., இதையடுத்து, மாலை 6 மணிக்கு நான்கு ராஜவீதிகள் வழியாக ஸ்ரீதேவி, பூ தேவியுடன், திருவீதி உலாவந்து தலசயன பெருமாள், நிலமங்கை தாயாருக்கு மாலை மாற்றிய திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நகருக்குள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் ஒருவழி பாதையாக மாற்றி இருந்தனர்.
    • பல இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கும் இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டது.

    மாமல்லபுரம்:

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நகருக்குள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் ஒருவழி பாதையாக மாற்றி இருந்தனர். எனினும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் காரணமாக மாமல்லபுரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக கோவளம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை இருவழி நுழைவு வாயில்களில் நுழைவு கட்டணம் வசூலி க்கும் ஒப்பந்ததார ஊழியர்கள் சிலர், நகருக்குள் நுழைந்த வாகனங்களை வழி மறித்து நுழைவு கட்டணம் வசூல் செய்தது காரணமாக கூறப்படுகிறது.

    இதனால் பல இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கும் இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டது.

    ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், வாகனங்களில் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் இரண்டு இடங்களில் மட்டுமே நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும், ரசீது வாங்கிய வாகனத்தில் அடையாள ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், ஊழியர்கள் சீருடை மற்றும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இந்த நடைமுறைகள் இதுவரை கடைபிடிக்கவில்லை என்று தெரிகிறது.

    • 2 மாத விடுமுறை எடுத்துள்ள செலஞ்சீவ் தன்னுடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கேரளாவுக்கு சுற்றுலா வந்தார்.
    • மனைவியும் மற்றொரு மகனும் தனித்தனி சைக்கிளை ஓட்டுகின்றனர்.

    மாமல்லபுரம்:

    இத்தாலி நாட்டை சேர்ந்தவர் செலஞ்சீவ் (வயது 47). இவரது மனைவி பெடரிகா பிரைட் (38). இவர்களுக்கு டைஷானோ (7) என்ற மகனும், காஸ்டைன் என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளனர். செலஞ்சீவ் இத்தாலி நாட்டில் ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் 2 மாத விடுமுறை எடுத்துள்ள செலஞ்சீவ் தன்னுடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கேரளாவுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்கு இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்தார். அவர் தங்கள் நாட்டில் இருந்து கொண்டு வந்த சைக்கிள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளை கடந்து மாமல்லபுரம் வருகை தந்தார். செலஞ்சீவ் தன்னுடைய ஒரு வயது குழந்தையுடன் சைக்கிளில் தொட்டில் இணைத்து ஓட்டி வருகிறார்.

    மனைவியும் மற்றொரு மகனும் தனித்தனி சைக்கிளை ஓட்டுகின்றனர். உடல் ஆரோக்கியத்திற்காக தாங்கள் சொகுசு வாகனங்களில் பயணம் செய்ய விரும்புவதில்லை என்று தெரிவித்தனர்.

    மேலும் டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சைக்கிள் மூலமாகவே நாங்கள் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக இத்தாலி என்ஜினீயர் செலஞ்சீவ் தெரிவித்தார்.

    மாமல்லபுரத்தில் சுற்றுலாவை முடித்து விட்டு அவர்கள் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றனர்.

    • வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது.

    உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இங்கு பல்லவ மன்னர்கள் உருவாக்கிய சிற்பங்களை பார்க்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் பாறைகளை குடைந்து அழகாக உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள் கேமரா, டிரோன் ஆகியவை மூலம் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுக்கிறார்கள்.புதிதாக திருமணமான தம்பதிகள், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் கடற்கரை கோவில் வளாகத்தில் போட்டோ ஷூட் நடத்துகிறார்கள். மேலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் வாகனங்களில் கூட்டமாக வந்து புல்தரைகளில் அமர்ந்து அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது.

    சில காதல் ஜோடிகள் கடற்கரை கோவிலில் அத்துமீறி ஏறி, தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை எழுதி அலங்கோலப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

    இதையடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் வணிக நோக்கங்களுக்காக புகைப்படம் எடுத்தல், திருமணத்துக்கு முன் போட்டோ ஷூட் எடுத்தல், விஐபி, விவிஐபி வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

    மேலும் வியாபாரிகள் வியாபாரம் செய்வது, காதலர்கள் சிற்பங்களின் மீது ஏறுவது, பிடித்தவர்களின் பெயர்களை எழுதுவது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது, பொதுக்கூட்டம் நடத்துவது, பொது விளம்பரம் செய்வது ஆகிய செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரோன் கேமரா பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான நோட்டீஸ் கடற்கரை கோவில் நுழைவு தூணில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    • சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
    • சிலர் ஆர்வமாக அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    மாமல்லபுரம்:

    ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மாகாணத்தின் சபாநாயகர் நகமோட்டா டகாஷி, சபை செயலாளர் ஒகாவா மோடோஷி மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்ட 9பேர் கொண்ட குழுவினர், தமிழக அரசுடன் தொழில் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்காக சென்னை வந்தனர். பின்னர் அவர்கள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர்.

    அவர்களுக்கு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் கழுத்தில் மாலை அணிவித்து தமிழ் பாராம்பரிய முறைப்படி மேள தாளத்துடன், புலியாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் என கலை நிகழ்ச்சியுடன் கடற்கரை கோவிலுக்கு அழைத்து சென்றனர். இந்த கலை நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்த்து ரசித்து அவர்களிடம் நடனமாடும் முறையை பற்றி கேட்டறிந்தனர். பின்னர் உற்சாகத்துடன் கலைஞர்களிடம் இருந்த கரகத்தை வாங்கி தலையில் வைத்து மேளதாளம் வாசிக்க கரகாட்டம் ஆடி மகிழ்ந்தனர். சில எம்.பி.க்கள் குத்தாட்டமும் போட்டனர்.

    இதை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். சிலர் ஆர்வமாக அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    • மாணவர்கள் புதிய அனுபவமாக நினைத்து மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
    • சிற்பங்களை தொட்டுப்பார்த்து பழமையான சிலையின் வடிவமைப்புகளை உணர்ந்தனர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் புதிய "ஏசி வால்வோ" பஸ் சுற்றுலாவை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதில் முதல் பயணமாக சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் அரசு மேல்நிலை பள்ளி, தாம்பரம் காது கேளாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் 80 பேரை, கல்வி சுற்றுலாவாக மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க சுற்றுலாத்துறை அழைத்து வந்தது.

    அவர்களுக்கு மாற்றுத்திறனாளி கல்வி ஆசிரியர்கள் அவர்களது பாடமொழியில் சிற்பங்களை காண்பித்து அதன் சிறப்பு மற்றும் வரலாற்று விபரங்களை எடுத்து கூறினார்கள். மாணவர்கள் புதிய அனுபவமாக நினைத்து மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

    பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் புராதன சின்னம் சிற்பங்கள் இருக்கும் பகுதிக்கு பாறைமேல் நடந்து சென்று அதை உணர்ந்து, சிற்பங்களை தொட்டுப்பார்த்து பழமையான சிலையின் வடிவமைப்புகளை உணர்ந்தனர். இதனை பார்த்து அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    • இந்தியா முழுவதும் மத்திய தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடை பிடிக்கப்படுகிறது.
    • பள்ளி மாணவர்களும் அதிக அளவில் இலவச அனுமதியை பயன்படுத்தி சுற்றுலா வந்த அவர்கள் ஆர்வமுடன் புராதன சின்னங்களை கண்டுகளித்து சென்றனர்.

    மாமல்லபுரம்:

    சர்வதேச நாடுகளில் உள்ள சரித்திர கால பாரம்பரிய கலைச்சின்னங்கள் அந்த பகுதியின் பழமை, கலாசாரம், வாழ்க்கை முறையை உணர்த்துகின்றன. அத்தகைய நினைவு சின்னங்களை வருங்கால தலைமுறையினர் அறியவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.

    அவற்றை பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் மத்திய தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடை பிடிக்கப்படுகிறது. பாரம்பரிய வாரம் நேற்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.

    பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை நேற்று ஒரு நாள் மட்டும் நுழைவுக்கட்டணம் இன்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்து இருந்தது.

    அதன்படி நேற்று காலை 8 மணி முதல் சுற்றுலா வந்த வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் நுழைவு கட்டணம் எடுக்காமல் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். பள்ளி மாணவர்களும் அதிக அளவில் இலவச அனுமதியை பயன்படுத்தி சுற்றுலா வந்த அவர்கள் ஆர்வமுடன் புராதன சின்னங்களை கண்டுகளித்து சென்றனர்.

    குறிப்பாக ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் 50 பேர் நேற்று குழுவாக சுற்றுலா வந்தனர். அவர்கள் தலா ஒருவருக்கு ரூ.600 கட்டணம் செலுத்தாமல் இலவசமாக சுற்றி பார்த்துவிட்டு சென்றனர். இலவச அனுமதியால் அந்த ஜப்பான் நாட்டு குழுவினருக்கு மொத்தம் ரூ.30 ஆயிரம் மிச்சமானது. இலவச அனுமதியால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களை கண்டுகளிக்க உள்நாட்டு பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கதாகும். நேற்று மாலை 6 மணியுடன் இலவச அனுமதி முடிவுற்றது என்றும், இன்று (திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் சுற்றுலா வரும் பயணிகள் ரூ.40 நுழைவு கட்டணம் செலுத்திதான் புராதன சின்னங்களை காண முடியும் என்றும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

    • நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை உலக பாரம்பரிய வாரமாக அறிவித்து ஆண்டுதோறும் தொல்லியல்துறை விழாவாக நடத்தி வருகிறது.
    • மாமல்லபுரத்தில் பாரம்பரிய வாரம் துவக்க நாளான நாளை ஒருநாள் மட்டும், அனைத்து சுற்றுலா பயணிகளும் அங்குள்ள புராதன சின்னங்களை இலவசமாக பார்க்கலாம்.

    மாமல்லபுரம்:

    நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை, உலக பாரம்பரிய வாரமாக அறிவித்து அந்த நாட்களில் புராதன சின்னங்கள் குறித்து கட்டுரை, ஓவியம் போன்ற கலைத்திறன் போட்டிகள் நடத்தி ஆண்டுதோறும் தொல்லியல்துறை விழாவாக நடத்தி வருகிறது.

    மாமல்லபுரத்தில் பாரம்பரிய வாரம் துவக்க நாளான நாளை ஒருநாள் மட்டும், அனைத்து சுற்றுலா பயணிகளும் அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல், புலிக்குகை, ஐந்துரதம் பகுதிகளை இலவசமாக பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

    • பஞ்சபாண்டவர் மண்டபத்தின் மேல்பகுதியில் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது.
    • மண்டபத்தின் மேற்பகுதியில் ஏற்பட்டு உள்ள விரிசலின் அளவு, கல்லின் தன்மை, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களான ஐந்துரதம், கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பகுதி, அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களை பார்க்க தினந்தோறும் வெளிநாட்டினர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

    இதையடுத்து புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளில் சுற்றுலாபயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் புராதன சின்னங்களை மின்விளக்கு ஒளியில் ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அர்ச்சுணன் தபசு பகுதியை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் அதன் அருகே உள்ள பஞ்சபாண்டவர் மண்டபத்தையும் ரசிப்பது வழக்கம். இந்நிலையில் பஞ்சபாண்டவர் மண்டபத்தின் மேல்பகுதியில் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே தொல்லியல்துறையினர் மண்டபத்தின் மேற்பகுதியில் அவ்வப்போது ரசாயன சிமெண்ட் கலவை வைத்து பராமரித்து வந்தனர். தற்போது விரிசல் அதிகமாகி மண்டபத்தின் உள்ளே மழைநீர் ஒழுகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மழை பெய்யும் போது பஞ்சபாண்டவர் மண்டபத்தில் ஒதுங்கி நிற்கும் சுற்றுலா பயணிகள் விரிசல் வழியாக வரும் மழை நீரில் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். சிலர் இணையதளம் வழியாக டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் தலைமை அலுவலகத்திற்கும் புகார் அனுப்பினர்.

    இதையடுத்து சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள மத்திய தொல்லியல்துறை தொல்பொருள் ஆய்வாளர்கள், பழங்கால கட்டிட கட்டமைப்பு பாதுகாப்பு என்ஜினீயர்கள் பஞ்சபாண்டவர் மண்டபத்தில் திடீர் ஆய்வு செய்தனர். மண்டபத்தின் மேற்பகுதியில் ஏற்பட்டு உள்ள விரிசலின் அளவு, கல்லின் தன்மை, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து விரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    ×