search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villagers"

    • சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் அதிகாலையில் மீன்பிடி உபகரணங்களோடு குவிந்தனர்.
    • பிடித்த மீன்களை மகிழ்ச்சியோடு வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி, மதம் பாராமல் அனைத்து மக்களும் கலந்து கொள்ளக்கூடியது மீன்பிடித் திருவிழா கடந்த ஆண்டுகளைப் போன்று நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் தினசரி மீன்பிடித் திருவிழா கோலாகலமாக தொடங்கி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி கிராமத்தில் கொப்பான் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் அதிகாலையில் மீன்பிடி உபகரணங்களோடு குவிந்தனர்.

    பின்னர் ஊர் முக்கியஸ்தர்களால் நடு மடையில் உள்ள மடை கருப்பரை வழிபாடு செய்த பின்னர் வெள்ளை வீசி போட்டியை தொடங்கி வைத்தனர். ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர். அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, விரால், அயிரை ஆகிய மீன்கள் கிடைத்தன. பிடித்த மீன்களை மகிழ்ச்சியோடு வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

    • சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையை பிடிக்க 'பொறி' வைக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம்  சித்தார்த் நகர் கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்தது. ஊருக்குள் சிறுத்தை புகுந்த தகவல் பரவியதால் மக்கள் பீதியடைந்தனர்.

    இந்நிலையில் அந்த சிறுத்தை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்தது. அப்போது சிறுத்தை வேகமாக கிராம மக்களை நோக்கி சென்று தாக்கியது. உடனடியாக அப்பகுதி மக்கள் சிறுத்தையை கட்டைகளால் தாக்கினர். அப்போது சிறுத்தை வேகமாக ஓடி தப்பி சென்றது.




    இது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தைப்புலி கிராமத்திற்குள் புகுந்த தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    இதில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தவர்களை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையை பிடிக்க அங்கு 'பொறி' வைக்கப்பட்டுள்ளது.  

    இந்நிலையில் அந்த சிறுத்தை கிராம மக்களை தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சி தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது கிராமத்தில் உள்ள பொது மக்களின் அன்பையும் பெற்றார்.
    • உசிலம்பட்டியில் நடந்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்குறவடி கிராமத்தில் அமைந்துள்ளது அரசு தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியையாக வடுகப் பட்டியைச் சேர்ந்த செல்வ சிரோன்மணி என்பவர் பணியாற்றி வந்தார். அரசு தொடக்கப்பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏழை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    5-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தலைமை ஆசிரியை செல்வ சிரோன்மணி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். மேலும் மாணவர்களை பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து அவர் களின் தனித்திறமைகளையும் ஊக்குவித்தார். ஒவ்வொரு மாணவ-மாணவிகளின் கல்வித்திறன் செயல்பாடுகளை கண்காணித்து தகுந்த முறையில் அவர்கள் கல்வி கற்க தலைமை ஆசிரியை நடவடிக்கை எடுத்தார். இதனால் அப்பகுதி மக்களின் நன்மதிப்பையும் செல்வ சிரோன்மணி பெற்றார்.

    இந்த அரசு பள்ளியில் பயின்ற மாணவ-மாணவிகள் இன்று மருத்துவர்களாகவும், பொறியாளர்கள், அரசு பணிகள் உள்ளிட்ட பல்வேறு உயர் பணிகளில் உள்ளனர். மேலும் இங்கு படித்துவிட்டு உயர்கல்விக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கும் பல்வேறு வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியை வழங்கி வந்தார்.

    இதனால் மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது கிராமத்தில் உள்ள பொது மக்களின் அன்பையும் பெற்றார். பள்ளிக் கட்டிட வளர்ச்சி, பள்ளிக்கான உபகரணங்களின் வளர்ச்சிகள் என பலவற்றையும் தன் முயற்சியால் பெற்று கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய தலைமையாசிரியை செல்வ சிரோன்மணி பணி நிறைவு பெற்றார். இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் மாலை, கிரீடம் அணிவித்தும், தாய்வீட்டு சீதனமாக சீர் செய்வதை போன்று பல்வேறு பரிசுகளை கிராமத்தின் சார்பாக ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கினர்.

    தொடர்ந்து மேள தாளத்துடன் கிராமத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு அழைத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்து, அவரது நினைவாக மரக் கன்றுகளையும் நடவைத்து தலைமை ஆசிரியைக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பினர்.

    உசிலம்பட்டியில் நடந்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வேட்டையாடி, கறியை சமைத்து சாப்பிட முயற்சிப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
    • கைது செய்யப்பட்ட 8 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அறுநூற்றுமலை பெலாப்பாடி கிராமத்துக்கு, வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை நாய்கள் துரத்தியுள்ளது. களைத்துப்போன இந்த மானை அதே பகுதியைச் சார்ந்த 8 பேர் கொண்ட கும்பல் வேட்டையாடி, கறியை சமைத்து சாப்பிட முயற்சிப்பதாக சேலம் மண்டல வன பாதுகாவலர் ராகுல், ஆத்தூர் கோட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து தும்பல் வனச்சரகர் விமல்ராஜ் தலைமையிலான வனத்துறையினர், பெலாப்பாடி கிராமத்திற்கு சென்று மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட முயற்சித்த அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, மாயவன், பாஸ்கரன், சண்முகம், கிருஷ்ணன், சரவணன், சிதம்பரம், ராஜேந்திரன் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் புள்ளிமானை வேட்டையாடிய குற்றத்திற்காக ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து வசூலித்து, கைது செய்யப்பட்ட 8 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தனர்.

    அருநூற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராமங்களிலும் வனவிலங்குகளை வேட்டையாட மாட்டோம் என வனத்துறையினர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றி கிராம மக்கள் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கதாகும். 

    • பசுமாட்டு பாலை குப்புசாமி குடும்பத்தினர் விற்பனை செய்ததில்லை.
    • முதலாவதாக பிறந்த கன்று குட்டியையும் பெருமாள் கோவிலுக்கு கொடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல்:

    குஜிலியம்பாறை அருகே கரிக்காலி கோமுட்டிபட்டியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது51). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு கண்ணன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. கண்ணன் நீண்ட நாட்களாக வாய் பேச முடியாமல் இருந்துள்ளார்.

    இதற்காக வழிபாடு நடத்திய குப்புசாமி கரூர் தாந்தோன்றி மலை பெருமாள் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக பசு மாட்டை வளர்த்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும் பெருமாள் கோவிலுக்கு குடும்பத்துடன் பசுமாட்டை அழைத்து சென்று வழிபாடு செய்துள்ளார்.

    இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணன் வாய் பேச தொடங்கி உள்ளார். இதனால் குப்புசாமி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் அப்பகுதி கிராம மக்கள் பசுமாட்டை கோவில் மாடாக நினைத்து வணங்கி வந்தனர். இந்த நிலையில் அந்த பசு திடீரென உயிரிழந்தது கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குப்புசாமி வீட்டு முன்பு ஏராளமான மக்கள் ஒன்று திரண்டு பசுமாட்டை குளிப்பாட்டி அலங்காரம் செய்து பூமாலையிட்டு இறுதிச்சடங்குகள் செய்தனர்.

    முன்னதாக தாந்தோன்றி மலை பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பல்வேறு அர்ச்சனைக்கு பின்னர் தோட்டத்து நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்த பசுமாடு இதுவரை 10 கன்றுகளை ஈன்றுள்ளது. இந்த பசுமாட்டு பாலை குப்புசாமி குடும்பத்தினர் விற்பனை செய்ததில்லை.

    கன்று குட்டிகளுக்கே கொடுத்து விடுவார். மேலும் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு பசுமாட்டு பாலை இலவசமாக கொடுத்து வந்துள்ளார். முதலாவதாக பிறந்த கன்று குட்டியையும் பெருமாள் கோவிலுக்கு கொடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பசுமாடு இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    • மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார்.
    • சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி ஊராட்சியில் உள்ள கொட்டாரம் போத்திரமங்கலத்தில் உள்ள பொது மக்களின் குறைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் கேட்டறிந்தார்.

    அப்போது கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியால் தனது வீடு பாதிக்கப்படுவதாக கொளஞ்சி என்ற மூதாட்டி அமைச்சரிடம் அழுத படி முறையிட்டார். அவரை அழைத்து கண்களை துடைத்து விட்டு, அழ வேண்டாமென கூறிய அமைச்சர், அதிகாரிகளை அழைத்து இந்த இடத்தை முறையான அளவீடு செய்து, பின்னர் கழிவுநீர் வாய்க்கால் கட்டுமாறு உத்தரவிட்டார்.

    மேலும் அதே பகுதியில் வைரம் என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு முற்றிலும் சேதமானதை கண்ட அமைச்சர், உடனடியாக ரூ.50 ஆயிரம் பணத்தை மூதாட்டியிடம் கொடுத்து வீட்டை சரி செய்து கொள்ளுமாறும், அரிசி உள்ளிட்ட மளிகை ஜாமான்களை வாங்கி கொள்ளுமாறும் கூறினார். பொதுமக்கள் கூறிய புகார்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சம்பவ இடத்திற்கு வராத கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய திட்டக்குடி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் பட்டூர் அமரலிங்கம், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஊருக்குள் வந்த சிறுத்தை எங்கு சென்றது என்று தெரியவில்லை
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் புலி, சிறுத்தை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரியப்பம்பாளையம் பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் டீக்கடையின் முன்பு ஒருவர் நின்று கொண்டிருந்தார். தற்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்த ஒரு சிறுத்தை அந்த நபர் கண்முன்னே பாய்ந்து ஓடியதை நேரில் பார்த்தார்.


    இதை பார்த்து அந்த நபர் அலறி கூச்சலிட்டார். இதையடுத்து அப்பகுதியில் மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது சிறுத்தை சென்ற கால் தடம் அங்கு பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். அது சிறுத்தை கால் தடம் தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

    ஆனால் நேற்று இரவு ஊருக்குள் வந்த சிறுத்தை எங்கு சென்றது என்று தெரியவில்லை. இதனையடுத்து அரியப்பம்பாளையம் பகுதி பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும் இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.
    • ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே தாட்டான்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்திலும், பெண்கள் பீடி சுற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளிலும் வாலிபர்கள் சேவை புரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் தாட்டான்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும் எப்படியாவது ஒரு முறையாவது விமானத்தில் நாமும் பறந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆனால் அந்த ஆசை நீண்ட ஆண்டுகளாக கனவாகவே இருந்துள்ளது. அந்த கனவை நிறைவேற்றும் விதமாக ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.

    அதன்படி கனவு நிறைவேறும் விதமாக பணத்தை சேமித்து வந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு புனித சுற்றுலாவாக விமானம் மூலமாக கோவா புறப்பட்டனர். தொடர்ந்து அங்குள்ள சவேரியாரை இன்று காலை பார்வையிட்டனர். இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 134 பேர் விமானத்தில் பறந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் அருள்பால்துரை, அருளானந்தம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    முன்னதாக அவர்கள் ஊரில் இருந்து புறப்பட்டபோது, அங்குள்ள புனித அருளானந்தர் ஆலயம் முன்பு அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் கிராம மக்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அனைவருக்கும் தனியாக அடையாள அட்டை, உடைமைகள் தொலைந்து விடாமல் இருக்க அனைவரது உடைகளிலும் சிவப்பு நிற துணி உள்ளிட்டவை அடையாளமாக வைத்து பல்வேறு திட்டமிடுதலுடன் சென்றனர்.

    இதுகுறித்து பங்கு தந்தை எட்வர்ட் ராயன் கூறுகையில், சிறு சிறு சேமிப்பு மூலமாக புனித பயணமாக சவேரியாரை தரிசனம் செய்ய உள்ளோம். எங்கள் கிராமத்தினர் நீண்ட ஆண்டுகளாக விமானத்தில் செல்ல வேண்டும் என கூறினர். அதனால் இந்த புனித சுற்றுலாவிற்கு விமானத்தில் சென்றுவிட்டு, ரெயிலில் ஊருக்கு திரும்ப உள்ளோம். சுமார் 10 ஆண்டுகளாக சிறு சிறு சேமிப்பு மூலமாக எங்கள் பணத்தில் செல்கிறோம். இதனால் எங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது. இன்றும், நாளையும் என 2 நாட்கள் கோவாவில் தங்கி புனித சவேரியார் ஆலயத்தை சுற்றி பார்க்க உள்ளோம் என்றார்.

    • ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கை மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை.
    • கோவிலுக்கு சொந்தமானது என்பதை குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்று குறிகள் காணப்படுகிறது.

    குடிமங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் உருமி இசைக்கேற்ப ஆடும் வகையில் மார்கழி மாதம் முழுவதும் மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகை மாடுகள் சலங்கை மாடுகள் என்று அழைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கை மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை. கோவிலுக்கு சொந்தமானது என்பதை குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்று குறிகள் காணப்படுகிறது.

    மாட்டுப்பொங்கலன்று பயிற்சி அளிக்கப்பட்ட சலங்கை மாடுகளுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரண்டு குச்சிகளை கையில் வைத்து சலங்கை மாடுகளுடன் ஆல்கொண்டமால் கோவிலுக்கு கொண்டு வந்து உருமி இசைக்கேற்ப ஆடுகின்றனர்.

    பின்னர் சலங்கை மாடுகளை தங்களது ஊர்களுக்கு கொண்டு சென்று ஊரின் பொதுவான இடத்திலோ அல்லது கோவிலில் வைத்து பால், பழம் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். கிராம மக்கள் சாமி பாடல்களை தொடர்ந்து பாடும் போது சலங்கை மாடுகள் தானாகவே சென்று பால், பழம், பொங்கல்களை சாப்பிடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இவ்வழக்கம் பாரம்பரியமாக தொடர்ந்து கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் குடிமங்கலம் அருகே பண்ணைகிணரில் கிராமமக்கள் பொது இடத்தில் பால், பழம், பொங்கல் வைத்து சலங்கை மாடுகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் மூழ்கி விடுகிறது.
    • ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    பொன்னேரி,ஜன.5-

    மீஞ்சூரை அடுத்த வெள்ளி வாயல் சாவடி பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் கரைகளை ஒட்டி உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள், செங்கல் சூளை மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

    வெள்ளிவாயல் வரை செல்வதற்கு பயன்படுத்தும் பாதை ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால் அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    வெள்ளிவாயல்சாவடி கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும்போது எதிரே உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும் அருகில் உள்ள வெள்ளிவாயல், சுப்பாரெட்டிபாளையம், விச்சூர் உள்ளிட்ட கிராமமக்கள் 10 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் நிலை உள்ளது.

    எனவே கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று சுற்றி உள்ள 10 கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ள னர். மேலும் மேம்பாலம் அமைத்து தர கோரி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று கிராமமக்கள் தெரிவித்து உள்ளனர்.

    • சென்னையில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
    • சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னையை அடுத்த மணலி புதுநகர் அருகே விச்சூர் மற்றும் வெள்ளிவாயல் கிராம பகுதிகள் உள்ளன. இதை சுற்றியுள்ள 15 கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயணம் செய்வதற்காக மாநகர பஸ் வசதியில்லை.

    இதனால், இந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள், மாணவ-மாணவிகள் என அனைவருமே விச்சூரில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டுமென்றால், 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து மணலி புதுநகருக்கு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து தான் மாநகர பஸ்சில் ஏறி பயணம் செய்யும் நிலை உள்ளது.

    அதேபோல், சோழவரம் செல்ல வேண்டுமென்றால் 9 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. விச்சூர் பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு மாநகர பஸ்களை இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னையில் உள்ள பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    மேலும் இளம்பெண்கள் மற்றும் மாணவிகள், பொன்னேரி நெடுஞ்சாலையில் இறங்கி, விச்சூர் அல்லது வெள்ளிவாயல் பகுதிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.

    இந்த பகுதிகளுக்கு மாநகர பஸ் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மாநகர போக்குவரத்து கழக தலைமை அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சோழவரத்தில் இருந்து வெள்ளிவாயல், விச்சூர் ஆகிய பகுதிகள் வழியாக சென்னைக்கு மாநகர பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு, இதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டது. ஆனால் ஒத்திகைக்கு பிறகு இந்த வழித்தடத்தில் இதுவரை மாநகர பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    நாங்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றே பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக முதியோர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, அதிகாரிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்த வழித்தடத்தில் மாநகர பஸ்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.
    • விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த காங்கேயநத்தம் கிராமத்தில் ரெங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 4 தலைமுறைகளாக பலருக்கு குல தெய்வ கோவிலாக இருந்து வருவது வீரம்மாள் கோவில். அந்த வகையில் விஜயகாந்த் தனது தந்தை வழியில் வீரம்மாள் கோவிலுக்கு வரத்தவறியதில்லை.

    இந்த கோவில் திருப்பணிகளுக்காக ஏராளமான நன்கொடைகளை வாரி வழங்கிய வள்ளலாக திகழ்ந்த விஜயகாந்த், தன்னால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையிலும் தனது மனைவி, மகன்களை அனுப்பி வைத்து உதவிகள் செய்து வந்துள்ளார். கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.

    சுப நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அதனை தொடங்கும் முன்பு வீரம்மாள் கோவிலுக்கு விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்திருந்து பூஜைகளில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். குறிப்பாக மகா சிவராத்திரி தினத்தன்று மனைவி, மகன்களுடன் வந்து இரவில் கோவிலில் தங்கி படையலிட்டு, 6 கால பூஜையிலும் பங்கேற்று வழிபாடு நடத்தியுள்ளார்.

    பின்னர் கோவிலில் இருந்து புறப்படும் முன்பாக அங்கு வரும் பங்காளி முறை கொண்ட அனைவரையும் அழைத்து நலம் விசாரிப்பதோடு, அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகளின் கல்வி குறித்தும் கேட்டறிந்து மன நிறைவு பெறுவார்.

    அதிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் கஷ்டப்படுவர்களிடம் அவர்களின் தேவை குறித்து கேட்டறிந்து உதவிகள் பல செய்துள்ளார். இருந்தபோதிலும் அதனை வெட்ட வெளிச்சமாக காண்பித்ததில்லை. நீங்கள் நன்றாக இருந்தால்தான் உங்களின் குழந்தைகளின், அவர்களின் எதிர்காலமும் நன்றாக இருக்கும் என்பதில் எப்போதும் நம்பிக்கை கொண்டவன் என்பதில் உறுதியாக இருந்த கேப்டன் விஜயகாந்த், பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

    தலைமுறைகள் பல கடந்தாலும், குலதெய்வ கோவிலுக்கும், அங்கு வரும் பலரது குடும்பத்தாருக்கும் யாரும் அறியா வண்ணம் உதவிகள் செய்துவந்துள்ள விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.

    காங்கேயநத்தம் கிராமத்தில் வீரம்மாள் கோவில் பலருக்கு குலதெய்வமாக இருந்தபோதிலும், கண்கண்ட தெய்வமாக விஜயகாந்த் இருந்துள்ளார் என்பது வெளியில் தெரியாத உண்மை.

    ×