search icon
என் மலர்tooltip icon
    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை.
    • வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 1,403 பேர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்திருந்ததால், மொத்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 1,749 ஆக இருந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

    அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுதாக்கல் செய்தனர்.

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை தொடங்கியது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு, வேட்பாளர்களிடம் விளக்கங்கள் கேட்பு என ஆங்காங்கே பரபரப்பான சம்பவங்கள் நடந்தன.

    வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் இருந்ததால் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்பு அவர் தரப்பு விளக்கங்கள் பெறப்பட்ட பிறகு வேட்புமனு ஏற்கப்பட்டது.

    ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது பெயரிலான 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

    சிதம்பரத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தூத்துக்குடியில் போட்டியிடும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி, கோவையில் களம் இறங்கும் பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, நீலகிரியில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மத்திய இணை மந்திரி எல்.முருகன், கன்னியாகுமரியில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

    தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாளாகும். இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி தினம் என்பதால் அரசு விடுமுறையாகும். இதனால் வேட்பு மனுக்களை இன்று திரும்பப் பெற முடியாது. நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களைத் திரும்ப பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

    அதன் பிறகு சின்னம் பெறாத கட்சிகள், சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நாளை மாலை நிறைவடைந்ததும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியாக உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை. பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பம்பரம் சின்னத்தை ம.தி.மு.க.வும் கேட்டு உள்ளன.

    வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    தமிழகத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 17-ந்தேதி மாலையுடன் நிறைவடைகிறது. வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு மொத்தம் 18 நாட்கள் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தொகுதி வாரியாக வேட்புமனுக்கள் ஏற்பு விவரம்:-

    1. திருவள்ளூர் (தனி)-14

    2. வடசென்னை-49

    3. தென்சென்னை-53

    4. மத்தியசென்னை-32

    5. ஸ்ரீபெரும்புதூர்-32

    6. காஞ்சிபுரம் (தனி)-13

    7. அரக்கோணம்-29

    8. வேலூர்-37

    9. கிருஷ்ணகிரி-34

    10. தர்மபுரி-25

    11. திருவண்ணாமலை-37

    12. ஆரணி-32

    13. விழுப்புரம் (தனி)-18

    14. கள்ளக்குறிச்சி-21

    15. சேலம்-27

    16. நாமக்கல்-48

    17. ஈரோடு-47

    18. திருப்பூர்-16

    19. நீலகிரி (தனி)-16

    20. கோவை-41

    21. பொள்ளாச்சி-18

    22. திண்டுக்கல்-18

    23. கரூர்-56

    24. திருச்சி-38

    25. பெரம்பலூர்-23

    26. கடலூர்-19

    27. சிதம்பரம் (தனி)-18

    28. மயிலாடுதுறை-17

    29. நாகப்பட்டினம் (தனி)-9

    30. தஞ்சாவூர்-13

    31. சிவகங்கை-21

    32. மதுரை-21

    33. தேனி-29

    34. விருதுநகர்-27

    35. ராமநாதபுரம்-27

    36. தூத்துக்குடி-31

    37. தென்காசி (தனி)-26

    38. திருநெல்வேலி-26

    39. கன்னியாகுமரி-27.

    • தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.
    • அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.

    இதில் பங்கேற்பதற்காக அரியலூரில் இருந்து அமைச்சர் சிவசங்கர் காரில் புறப்பட்டு சென்றார். கார் ஜெயங்கொண்டம் அருகே அசினாபுரம் பகுதியில் சென்ற போது அங்கு பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    இந்த வேளையில் அந்த வழியாக வந்த அமைச்சர் சிவசங்கரின் காரையும் பறக்கும் படையினர் நிறுத்துமாறு கூறினர். இதையடுத்து டிரைவர் காரை நிறுத்தினார். அதில் அமைச்சர் சிவசங்கர் இருப்பதை பார்த்த அதிகாரிகள் காரை சோதனையிட வேண்டும் என்றனர்.

    அதற்கு தாராளமாக உங்கள் கடமையை செய்யுங்கள் என்றவாறு காரை விட்டு இறங்கினார். சிறிது நேர சோதனைக்கு பின்னர் காரில் எதுவும் இல்லாததால் அமைச்சரின் காரை அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

    அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு வழிவிட்டு ஒத்துழைப்பு கொடுத்த அமைச்சர் சிவசங்கரை அந்த பகுதியினர் பாராட்டினார்கள்.

    • தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கோவில் விழாக்கள் நடத்திட முறையாக அனுமதி பெற வேண்டும்.
    • திருமண மண்டபங்களில் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது பங்குனி மாதம் என்பதால் அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் நடக்கும் திருவிழாக்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற்று நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    அதேபோல் திருமண மண்டபங்களில் திருமணம், திருமண வரவேற்பு, வளைகாப்பு, காதுகுத்து உள்ளிட்ட எந்த வகையான நிகழ்ச்சிகள் நடத்தினாலும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். இதன் பேரில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் கோவில், சர்ச், மசூதிகளில் விழாக்கள் நடத்திட அனுமதி பெற அதன் நிர்வாகிகள் ஏராளமானோர் விண்ணப்பித்து அனுமதி பெற்று செல்கின்றனர்.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கோவில் விழாக்கள் நடத்திட முறையாக அனுமதி பெற வேண்டும். கோவில் நிர்வாகிகள் அனுமதிகேட்டு விண்ணப்பிக்கும்போது, அதன் உண்மை தன்மை ஆராய்ந்து உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு அனுமதி பெற்று கோவில் விழாக்கள் நடத்தும்போது, அவர்கள் எப்போது போல ஒலி பெருக்கிகள் வைத்து நிகழ்ச்சி நடத்தலாம்.

    ஆனால் அங்கு எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரித்தோ அல்லது வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொள்ளவும் கூடாது. அவ்வாறு செயல்பட்டால் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போல் திருமண மண்டபங்களில் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் இதுவரை சர்ச், ரம்ஜான் பண்டிகையொட்டி மசூதியில் சிறப்பு தொழுகை நடத்துவது, ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் திருவிழா உள்ளிட்ட 80 மத வழிபாட்டு தலங்களில் விழாக்கள் நடத்திட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதில் 80 மத வழிபாட்டு தலங்களிலும் விழாக்கள் நடத்திட தேர்தல் விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் கிரியப்பனவர் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காமராஜ் சாலை கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில், 'நான் வாக்களிப்பேன் , நிச்சயம் வாக்களிப்பேன்' என்ற வார்த்தைகள் பொறி க்கப்பட்ட ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் கிரியப்பனவர் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கிருத்திகா விஜயன் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் 100-க்கும் மேற்பட்ட அரசு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
    • 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் இணைந்து மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த குருப்பநாயக்கன் பாளையம் சினிமா கோட்டை வீதியில் ஒரு வீட்டில் அரசின் மதுபானங்களை உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகத்துக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன் பேரில் மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் 100-க்கும் மேற்பட்ட அரசு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வீட்டில் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போது அவர் அதே பகுதியை சேர்ந்த சந்தானம் (48) என தெரிய வந்தது. சந்தானம் பவானி, சித்தோடு, அம்மாபேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கி அதை வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிகின்றது.

    இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தனத்தை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் இருந்த 100 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

    • நாங்களும் அ.தி.மு.க.வை ஒரு போட்டியாக கருதவில்லை.
    • நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை.

    ஊட்டி:

    நீலகிரி தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான எல்.முருகன், ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் யார் பெரிய கட்சி என்பது ஜூன் 4-ந்தேதி தெரிய வரும். நாங்களும் அ.தி.மு.க.வை ஒரு போட்டியாக கருதவில்லை. பா.ஜ.க.வின் அசுர வளர்ச்சி ஜூன் 4-ந் தேதி தெரிய வரும். அன்று எந்த கட்சி காணாமல் போகிறது என்பதும் தெரியவரும்.

    நீலகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. களத்தில் இல்லை. பா.ஜ.க. வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜ.க. சமூக நீதிக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு போலி சமூக நீதி பேசுபவர் தான் மு.க. ஸ்டாலின். பா.ஜ.க. சார்பில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் துணை முதல்-மந்திரிகளாவும், முதல்-மந்திரிகளாகவும் உள்ளனர். சமூக நீதியை பிரதமர் மோடி நிலைநாட்டி வருகிறார். தி.மு.க.வில் அமைச்சர்களாக உள்ள பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் 3 பேர். கடைசி இடங்களில் உள்ளனர். பெட்ரோல், விவசாய கடன் தள்ளுபடி என எந்த வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. பிரதமர் தர்மத்தின் பக்கமும், ஸ்டாலின் அதர்மத்தின் பக்கமும் இருக்கிறார்கள். நீலகிரியில் இந்த தேர்தலை 2 ஜியா, மோடி ஜியா என்று என்ற கேள்வியுடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்துவின் ஆழமான தியாகத்தை நினைவு கூறுகிறோம்.
    • அது நமக்கு கற்பிக்கும் இரக்கம் மற்றும் மன்னிப்பின் பாடங்களில் ஒவ்வொருவரும் பலம் பெறட்டும் என்று கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    புனித வெள்ளியையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்று புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்துவின் ஆழமான தியாகத்தை நினைவு கூறுகிறோம். அது நமக்கு கற்பிக்கும் இரக்கம் மற்றும் மன்னிப்பின் பாடங்களில் ஒவ்வொருவரும் பலம் பெறட்டும் என்று கூறியுள்ளார்.

    • ஆத்திரம் தீராத மனைவி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் உடல் மீது தூவினார்.
    • சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஹேமந்த் பரிதாபமாக இறந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகரை சேர்ந்தவர் ஹேமந்த் (வயது 39). இவர் அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரோஹிதி. தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக ஹேமந்த் மது போதைக்கு அடிமையாகியதால் வேலையை விட்டு நின்றார். மேலும் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.

    இதனால் கணவரை தீர்த்துக்கட்ட ரோஹிதி முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு ஹேமந்த் மது போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து ரோஹிதி தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களான சாய்கிரன் மற்றும் நவீனுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வழைத்தார்.

    நண்பர்கள் வீட்டிற்கு வந்ததும் கணவரின் ஆடைகளை கழற்றி விட்டு தூணில் கயிற்றால் கட்டினார். பின்னர் வெந்நீரை கொதிக்க வைத்து கணவர் உடல் மீது ஊற்றினார்.

    இதனால் ஹேமந்த் வலியால் அலறி துடித்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத மனைவி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் உடல் மீது தூவினார். பின்னர் கட்டையை எடுத்து வந்து கணவரின் தலை மீது தாக்கினார். இதில் ஹேமந்த் படுகாயம் அடைந்தார்.

    தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. ரோஹிதியின் நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்த ரோஹிதி கணவரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஹேமந்த் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து ரோஹிதி மற்றும் அவரது நண்பர்கள் சாய் கிரண், நவீன் ஆகியவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • கன்னியாகுமரியில் சர்ச் சாலை சந்திப்பில் திறந்தவேனில் நின்றபடி சீமான் பேசினார்.
    • கட்சி சின்னமான மைக்கால் பிரச்சினை ஏற்பட்டது.

    கன்னியாகுமரி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை காண்பித்து தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, குமரி மாவட்டத்தில் நேற்று பிரசாரம் செய்தார். அவர் குமரி மாவட்டத்தில் அருமனை, திங்கள்சந்தை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மைக் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.

    கன்னியாகுமரியில் சர்ச் சாலை சந்திப்பில் திறந்தவேனில் நின்றபடி சீமான் பேசினார். அப்போது பேசத்தொடங்கியதில் இருந்தே, அவர் பேசிய கார்டுலெஸ் மைக்கில் கோளாறு ஏற்பட்டது. பேசிக்கொண்டிருந்தபோது அடிக்கடி கோளாறு ஏற்பட்டபடி இருந்ததால் சீமானால் தொடர்ந்து பேச முடியவில்லை.

    அவர் வேனில் நின்றபடி சவுண்ட் ஆபரேட் செய்தவரை திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தார். ஆனால் அவர் பேசிய மைக் 3 முறைக்கு மேல் கோளாறு ஆனது. இதையடுத்து வயர் இணைப்புடன் பயன்படுத்தும் மைக் சீமானிடம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு சீமான் தொடர்ந்து பேசினார்.

    கட்சி சின்னமான மைக்கால் பிரச்சினை ஏற்பட்டது சீமானின் பிரசாரத்தில் சிறிதுநேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

    • பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான கொடூரங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
    • தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகளை விட எல்லாம் அதிகமாக நிதி பெற்ற கட்சி என்றால் அது பா.ஜ.க. தான்.

    கோவை:

    கோவையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து இன்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிரசாரம் செய்தார். துடியலூர் சந்தைக்கடை பகுதியில் அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    பா.ஜ.க.வினர் பொய் செய்திகளை பரப்புவதற்கு என்றே ஒரு குழு வைத்துள்ளனர். அந்த குழுவினர் மூலம் பொய் செய்திகளை பரப்பி மக்களிடத்தில் மத ரீதியிலான பிரச்சனைகளை பா.ஜ.க. ஏற்படுத்தி வருகிறது. பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில், மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை தான் உள்ளது. குறிப்பாக மணிப்பூரில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகள் உயிரோடு இருந்தாலே போதும் என்று தான் நினைக்கின்றனர். அந்தளவுக்கு பா.ஜ.க. ஆட்சி உள்ளது. கலவரம் நடந்த மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஏன் இதுவரை செல்லவில்லை?.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான கொடூரங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது. பா.ஜ.க. எம்.பி.க்களில் 44 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பா.ஜ.க. தேர்தல் பத்திரம் ஒன்றை கண்டுபிடித்து, அதனை கொண்டு வந்தது. அந்த தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகளை விட எல்லாம் அதிகமாக நிதி பெற்ற கட்சி என்றால் அது பா.ஜ.க. தான்.

    விசாரணை அமைப்புகளை அனுப்பி, ரெய்டு நடத்தி அவர்களிடம் இருந்து தேர்தல் பத்திரத்தை பயன்படுத்தி நிதி பெற்றுள்ளனர். தேர்தல் பத்திரத்தில் பா.ஜ.க. ஊழல் செய்துள்ளது. இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாட்டில் நடைபெறுகிற கடைசி தேர்தல் இதுவாக தான் இருக்கும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாமல் போகலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் பொது எதிரியாக பார்க்கப்படுவது பா.ஜனதாதான்.
    • வேட்பாளர் தேர்வு, பிரசாரம் எல்லாவற்றையுமே திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    தேர்தல் களம் இப்போது தான் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. இதற்கிடையில் கள நிலவரங்களை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

    மூன்று அணிகள் களத்தில் மோதினாலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் பொது எதிரியாக பார்க்கப்படுவது பா.ஜனதாதான்.

    4 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டமன்ற கணக்கை தொடங்கி இருக்கும் பா.ஜனதா இந்த பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் சில தொகுதிகளை கைப்பற்றி பாராளுமன்ற கணக்கையும் தொடங்கியாக வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

    அதற்கான செயல் திட்டங்களை ஒரு ஆண்டுக்கு முன்பே டெல்லி மேலிடம் தொடங்கி விட்டது.


    வேட்பாளர் தேர்வு, பிரசாரம் எல்லாவற்றையுமே திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர். 39 தொகுதிகளிலும் பரவலாக கவனம் செலுத்துவதைவிட வெற்றி வாய்ப்புள்ள 10 தொகுதிகளை தேர்வு செய்து அந்த தொகுதிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையிலேயே பிரதமர் மோடியின் சுற்றுப் பயண திட்டமும் வகுக்கப்பட்டது.

    பலம் வாய்ந்த, பிரபலமான வேட்பாளர்களை களம் இறக்கி மோத வைத்துள்ளது. கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து டாக்டர் தமிழிசையை தென்சென்னை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இது தவிர அண்ணாமலை, ராதிகா சரத்குமார், பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரி எல்.முருகன், நயினார் நாகேந்திரன் என்று பல பிரபலங்களை பல தொகுதியில் போட்டியிட வைத்து உள்ளது.

    மக்களிடம் அறிமுகமான முகங்களை போட்டியிட வைப்பதன் மூலம்தான் அந்த தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற கணிப்புடன் வேட்பாளர்களை தேர்வு செய்திருந்தது.

    களத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால் அந்த வியூகத்தையும் அமைத்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் 10 முதல் 15 தொகுதிகளில் பா.ஜனதா 2-வது இடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.


    இந்த தகவலை திமு.க.வுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பென் நிறுவனம் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பி இருக்கிறது.

    அந்த அறிக்கையை பார்த்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து விட்டு 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். எந்த தொகுதியிலும் 2-ம் இடத்தை பா.ஜனதா பிடித்து விடக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இதே போன்ற தகவல் சென்றுள்ளது.

    அவரும் அசந்து போனது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட மாவட்ட செயலளர்களை தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிலரிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் பிரிந்து நிற்பதால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என்ற மிதப்பில் தி.மு.க.வினரிடம் தேர்தல் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது என்பது உண்மை. இதனால் கூட தலைவர் இப்படி உசுப்பி விட்டிருக்கலாம் என்றார்கள்.

    • நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்திய அரசு பிரதமருடன் ஒத்த கருத்துடன் இருப்பார்.
    • உங்கள் பிரச்சனையை தீர்க்கும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து லாஸ்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுச்சேரியில் காமராஜர் எண்ணங்களை பிரதிபலிக்கும் முதலமைச்சராக ரங்கசாமி திகழ்கிறார். மாணவர்கள் படிப்படியாக உயர்ந்து, நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதற்காக, மத்திய அரசுடன் இணைந்து புதுச்சேரி அரசு செயலாற்றி வருகிறது. கொரோனாவில் இருந்து இந்தியாவை மீட்டவர் பிரதமர் மோடி.

    கொரோனா காலத்தில் அண்டை நாடுகள் பசி பட்டினியால் தவித்தபோது, இந்தியாவில் பசி பட்டினி கிடையாது. நாட்டின் பொருளாதாரத்தையும் மிக சிறப்பாக கையாண்டார். உள்நாட்டிலே கொரோனா தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு வழங்கினார்.

    நமச்சிவாயம் மண்ணின் மைந்தர். காங்கிரசில் பணியாற்றிய அவருக்கு முறையான அங்கீகாரம் இல்லாததால், பா.ஜனதா அவரை அடையாளம் கண்டு அமைச்சராக்கியது. தற்போது அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்திய அரசு பிரதமருடன் ஒத்த கருத்துடன் இருப்பார். காங்கிரஸ் வெற்றி பெற்றால் மத்திய பா.ஜனதாவுடனும், மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசுடனும் ஒத்தகருத்து இருக்காது.

    அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும் இதே நிலை தான். அதனால் உங்கள் ஓட்டுக்களை வீணாக்காதீர்கள். எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு குப்பை தொட்டியில் போடுவதிற்கு சமம்.

    உங்கள் ஓட்டுக்கு உரிமை, மரியாதை உள்ளது. அதை நிலைநாட்ட, உங்கள் பிரச்சனையை தீர்க்கும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி உட்பட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

    ×