search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alcohol Addiction"

    • ஆத்திரம் தீராத மனைவி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் உடல் மீது தூவினார்.
    • சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஹேமந்த் பரிதாபமாக இறந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகரை சேர்ந்தவர் ஹேமந்த் (வயது 39). இவர் அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரோஹிதி. தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக ஹேமந்த் மது போதைக்கு அடிமையாகியதால் வேலையை விட்டு நின்றார். மேலும் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.

    இதனால் கணவரை தீர்த்துக்கட்ட ரோஹிதி முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு ஹேமந்த் மது போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து ரோஹிதி தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களான சாய்கிரன் மற்றும் நவீனுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வழைத்தார்.

    நண்பர்கள் வீட்டிற்கு வந்ததும் கணவரின் ஆடைகளை கழற்றி விட்டு தூணில் கயிற்றால் கட்டினார். பின்னர் வெந்நீரை கொதிக்க வைத்து கணவர் உடல் மீது ஊற்றினார்.

    இதனால் ஹேமந்த் வலியால் அலறி துடித்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத மனைவி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் உடல் மீது தூவினார். பின்னர் கட்டையை எடுத்து வந்து கணவரின் தலை மீது தாக்கினார். இதில் ஹேமந்த் படுகாயம் அடைந்தார்.

    தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. ரோஹிதியின் நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்த ரோஹிதி கணவரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஹேமந்த் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து ரோஹிதி மற்றும் அவரது நண்பர்கள் சாய் கிரண், நவீன் ஆகியவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது.
    • மது போதையில் ஆற்றில் தவறி ஆற்றில் விழுந்தது தெரிய வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சுற்றுலா மாளிகை அருகே ஓடும் புது ஆற்றங்கரையோரம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் இறந்து கிடந்தவர் தஞ்சை வண்டிக்கார தெருவை சேர்ந்த மணவாளன் (வயது 45 ) என்பதும் , கோவையில் வெல்டராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் தீபாவளி பண்டிகைக்காக மணவாளன் தஞ்சாவூருக்கு வந்திருந்தார்.

    அப்போது படித்துறையில் இருந்து மது அருந்தி உள்ளார். போதை அதிகமாகவே தவறி ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்தது தெரியவந்தது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலை குப்புற கவிழ்ந்தது.
    • அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு நோயாளி மற்றும் அவரது உறவினரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் சென்றது. இதனை செந்தில் (38) என்பவர் ஓட்டி சென்றார். இவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காரைக்கால் அருகே மேலகாசாக்குடி சாலை வளைவில் ஆம்புலன்ஸை திருப்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலை குப்புற கவிழ்ந்தது. மது போதையில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில் அங்கிருந்து ஓடிவிட்டார்.

    அவ்வழியே சென்றவர்கள் ஆம்புலன்ஸ் உள்ளே இருந்த நோயாளியையும், அவரது உறவினரையும் மீட்டு, வேறொரு வாகனத்தில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காரகை்கால் நகர போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர் செந்திலை தேடி வருகின்றனர்.

    • மணிகண்டன் மது குடிக்கும் பழக்கம் உடையவர்.
    • மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே சுத்தமலையை சேர்ந்த முனுசாமி மகன் மணிகண்டன் (வயது 24) மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மது பழக்கத்தை நிறுத்துமாறு அவரது பெற்றோர் கூறியதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • மது அருந்தியபோது ஆல்பர்ட் எஸ்லின், சந்தனக்குமார் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
    • படுகாயம் அடைந்த ஆல்பர்ட் எஸ்லின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    பணகுடி:

    கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் எஸ்லின் (வயது24). டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சந்தனக்குமார் (23) என்பவரும் நண்பர்கள் ஆவர்.

    கடந்த 30-ந்தேதி இருவரும் அப்பகுதியில் வைத்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தனக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தி யால் ஆல்பர்ட் எஸ்லின் வயிற்றில் குத்தினார்.

    இதில் படுகாயம் அடைந்த ஆல்பர்ட் எஸ்லின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே கூடங்குளம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சந்தனக்குமாரை கைது செய்து இருந்தனர். தற்போது ஆல்பர்ட் எஸ்லின் இறந்ததை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மது போதை அதிக மானதால் தனது சொந்த காரையே மறந்து மர்ம நபரிடம் பறிகொடுத்தார்.
    • வீட்டுக்கு வந்ததும் போதையில் அப்படியே படுத்து தூங்கிவிட்டார்.

    புதுடெல்லி:

    மது போதை அதிக மானதால் தனது சொந்த காரையே மறந்து மர்ம நபரிடம் பறிகொடுத்தார். போதை ஏறிப்போச்சு...புத்தி மாறிப்போச்சு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடைபெற்ற இந்த ருசிகர சம்பவம் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

    டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்தவர் அமித்பிரகாஷ்(வயது30). இவர் தனியார் துறையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலையை முடித்துவிட்டு கோல்ப் கோர்ஸ் சாலையில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். அங்கு பாரில் அமர்ந்து மது குடித்தார்.

    அப்போது ரூ.2 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.20 ஆயிரத்தை அள்ளி கொடுத்தார். உடனே மதுக்கடை உரிமையாளர் சுதாரித்துக்கொண்டு ரூ.2 ஆயிரம் போக மீத 18 ஆயிரம் ரூபாயை அவரிடம் திருப்பி கொடுத்தார்.

    பின்பு கூடுதல் மது வாங்கிகொண்டு வந்த அமித்பிரகாஷ் வெளியில் வந்ததும் தனது காரில் இருந்தபடி மது குடித்தார். சற்று அளவுக்கு அதிகமாக அவர் மது குடித்ததால் போதை அதிகமானது.

    இந்த வேளையில் அங்கு வந்த மர்ம நபர் அமித் பிரகாசிடம் வந்து நானும் சேர்ந்து மது குடிக்கலாமா என்றார்.

    உச்ச போதையில் இருந்த அமித்பிரகாஷ் சரி என தலை ஆட்டியதோடு மதுவை ஊற்றியும் கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த நபர் அமித்பிரகாசிடம் 'டேய் என்னுடைய காரில் இருந்து மது குடிக்கிறாயா...இறங்குடா' என்று கூறியுள்ளார்.

    அதிக போதையில் இருந்த அமித்பிரகாஷ் அது தனது கார் என்பதை மறந்து போதையில் மயங்கி இருந்தார். இந்த வேளையில் மர்ம நபர் கூறியதால் காரை விட்டு இறங்கிய அவர் வாடகை கார் பிடித்து வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் போதையில் அப்படியே படுத்து தூங்கிவிட்டார்.

    மறுநாள் அதிகாலையில் விழித்ததும் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவந்தது. உச்ச போதையில் தனது காரை இழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.அந்த காரில் அமித்பிரகாசுக்கு சொந்தமான லேப் டாப், பர்சில் ரூ.18 ஆயிரம், மொபைல் போன் போன்றவையும் இருந்தன.

    காருடன் அவற்றை மர்ம நபர் ஓட்டி சென்றுவிட்டார். அதிக போதையில் காரையும் உடமைகளையும் பறிகொடுத்த அமித்பிரகாஷ் போதை தெளிந்த நிலையில் தான் வசமாக ஏமாந்து போனதை உணர்ந்த பிரகாஷ் போலீஸ் நிலையத்திற்குச் சென்று இது குறித்து புகார் அளித்தார்.

    அதன்படி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபரைத் தேடி வருகின்றனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து போலீசார் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

    • நாகப்பட்டினம் மாவட்டம் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • காயம் அடைந்த தர்மராஜை, அவரது நண்பர்கள் காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    புதுச்சோ

    காரைக்கால் அருகே விழிதியூர் மதுபாரில், மது போதையில் லாரி டிரைவரை அடித்து உதைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ்(வயது43). இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வேலைகளை முடித்துவிட்டு, நண்பர்களுடன் காரைக்கால் அருகே உள்ள விழிதியூரில் உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு வெளியே சென்றபோது, அதே ஊர் தெற்குத்தெருவைச்சேர்ந்த சந்தோஷ்(24), முருகானந்தம்(23) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளில் தர்மராஜ் மீது மோதுவது போல் வந்துள்ளனர். இதை தட்டிகேட்ட தர்மராஜை, 2 பேரும் ஆபசமாக திட்டி, அடித்து, உதைத்துள்ளனர். இதில் காயம் அடைந்த தர்மராஜை, அவரது நண்பர்கள் காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் கொடுத்த புகாரின் பேரில், நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • சாலை விதிகளை மதிப்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது.

    திருவாரூர்:

    திருவாரூர் வலங்கைமான் பகுதியில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    ஊர்வலத்தை நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இ்ந்த ஊர்வலம் வலங்கைமான் கடைத்தெரு, கும்பகோணம் ரோடு, மகா மாரியம்மன் கோவில், வடக்கு அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று போலீஸ் நிலையம் முன்பு முடிவடைந்தது.

    இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது,

    சாலை விதிகளை மதிப்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை டிரைவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, பொதுமக்களுக்கு போலீசார் வழங்கினர்.

    இதில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் வலங்கைமான், குடவாசல் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • மது போதையில் இருந்த ராணுவ வீரரிடம் நகை திருடிய தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் தொப்பம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் பாண்டி (வயது28). இவர் மேகலாயாவில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் திருவண்ணாமலையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் மாவட்டம் மடவிளாகத்திற்கு கடந்த 7-ந் தேதி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். அப்போது தன்னியாபுரம் பகுதியை சேர்ந்த மணிஅச்சன் (43) என்பவரும் மது குடித்துள்ளார்.

    அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இதற்கிடையே ரமேஷ் பாண்டி அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். இதனால் அவர் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடனே அவர் திருவண்ணாமலையில் உள்ள தனது மாமனாருக்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லும்படி கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து அவரது மாமனார் சம்பவ இடத்திற்கு வந்து ரமேஷ் பாண்டியை திருவண்ணாமலைக்கு அழைத்து சென்றார். ரமேஷ் பாண்டி போதை தெளிந்த தும் அவர் அணிந்திருந்த 1 ½ பவுன் கை செயின், 1 பவுன் மோதிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இதுபற்றி அவர் கடந்த 9-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில் தனது நண்பர் மணிஅச்சன் நகையை திருடி இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் நேற்று போலீசார் மணி அச்சனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் ரமேஷ் பாண்டியிடம் இருந்து கைசெயினை மட்டும் திருடியதாக கூறினார். இருந்த போதிலும் மோதிரத்தையும் அவர் தான் திருடியிருக்க வேண்டும் என்று ரமேஷ் பாண்டி கூறியதால் அவரை போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற மணிஅச்சன் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கி இறந்தவரை மீட்டனர்.
    • சித்திரைகுமார் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் திரவியநகர் கிராமத்தில் உள்ள சம்பன்குளத்தில் இறந்த நிலையில் தொழிலாளி ஒருவரின் சடலம் மிதப்பதாக பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் தென்காசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தென்காசி தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கி இறந்தவரை மீட்டனர். பாவூர்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா சின்னபள்ளிவாசல் தெருவை சேர்ந்த சித்திரைகுமார் (வயது 48) என்பதும், அவர் திரவியநகர் பகுதியில் தங்கியிருந்து கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் என்றும், மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்றும் தெரியவந்தது. மது போதையில் தான் அவர் குளிக்க சென்று தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • தஞ்சையில் பள்ளத்தில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
    • மது போதையில் அவர் தள்ளாடியபடி நடந்து சென்றுள்ளார்.

    தஞ்சாவூர்:தஞ்சையில் பள்ளத்தில் தவறி விழுந்து வாலிபர் பலியானார். 

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை தோப்புக்குளம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 34) தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள கோவில் அருகே நின்று மது அருந்தினார்.

    பின்னர் தள்ளாடியபடியே வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கிருந்து ஒரு பள்ளத்தில் தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே கோபிநாத் இறந்தார்.

    இதற்கிடையே கோபிநாத்தை காணாதது கண்டு குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர்.

    அப்போது பள்ளத்தில் கோபிநாத் பிணமாக கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோபிநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆத்திரமடைந்த மணிவண்ணன் உள்பட 4 பேர் சிவகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • சிவகுமார் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43). கூலி தொழிலாளி இவரும் அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன், சிவராஜ் உட்பட 4 பேர் பொட்டகுளம் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது சிவகுமாருக்கும், மணிவண்ணன் தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணிவண்ணன் உள்பட 4 பேர் சிவகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த சிவகுமார் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் மணிவண்ணன், சிவராஜ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மணிவண்ணன், சிவராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

    ×