என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helmet"

    • பைக்கின் பின் சீட்டில் உட்கார்ந்து வருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
    • ஹெல்மெட் அணியவில்லை என்றால் சிசிடிவி கேமரா அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும்.

    சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர் மட்டுமில்லாமல் பின்னாடி உட்கார்ந்து வருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

    பின்னாடி உட்காருபவர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் சிசிடிவி கேமரா அடிப்படையில் தன்னிசையாக அபராதம் விதிக்கப்படும்.

    இந்நிலையில், பெங்களூரு நகரில் போக்குவரத்து அபராதத்தில் இருந்து தப்பிக்க ஹெல்மெட்டுக்கு பதில் பாத்திரத்தால் தலையை மூடிய இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • ஹெல்மெட் ISI மற்றும் DOT பாதுகாப்பு சான்றிதழ்களை பெற்றிருக்கிறது.
    • ஒவ்வொரு ஹெல்மெட்டிலும் டஸ்ட் ப்ரூஃப் கேரி பேக் மற்றும் EPP தொழில்நுட்பத்தைக் காண்பிக்கும் ஒரு மினியேச்சர் மாடல் வருகிறது.

    ஸ்டீல்பேர்ட் (Steelbird) ஹை-டெக் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இக்னைட் (IGNYTE) ஹெல்மெட், ரெட்ரோ ஸ்டைலிங் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை இணைக்கும் IGN-58 திறந்த முக ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில், எக்ஸ்பான்டெட் பாலிப்ரொப்பிலீன் (EPP) லைனர் தொழில்நுட்பத்துடன் வரும் மிகவும் மலிவு மாடல்களில் இந்த ஹெல்மெட் ஒன்றாகும்.

    IGN-58 இன் EPP லைனர் மீண்டும் மீண்டும் ஏற்படும் அதிர்ச்சிகளை உறிஞ்சி, வடிவத்தை மீண்டும் பெறவும், தண்ணீர் மற்றும் ரசாயனங்களின் வெளிப்பாட்டைத் தாங்கவும் முடியும். இது அதன் நீண்டகால பயன்பாட்டிற்கு அதிக ஆயுள் மற்றும் நம்பகத்தன்மையை அளிக்கிறது. ஹெல்மெட் ISI மற்றும் DOT பாதுகாப்பு சான்றிதழ்களை பெற்றிருக்கிறது.



    அதன் வடிவமைப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ABS ஷெல், UV மற்றும் ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் உடன் கூடிய பபிள் வைசர் மற்றும் பாதுகாப்பான கட்டுதலுக்கான டபுள் டி-ரிங் பக்கிள் அமைப்பு ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. கூடுதல் வசதிக்காக, ஹெல்மெட் ஒவ்வாமை எதிர்ப்பு பேட், சுவாசிக்கக்கூடிய மெஷ் பேனல்கள் மற்றும் நீக்கக்கூடிய சீக் பேட்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஹெல்மெட்டிலும் டஸ்ட் ப்ரூஃப் கேரி பேக் மற்றும் EPP தொழில்நுட்பத்தைக் காண்பிக்கும் ஒரு மினியேச்சர் மாடல் வருகிறது.

    IGN-58 540மிமீ முதல் 620மிமீ வரையிலான அளவுகளில் வைட், டெசர்ட் ஸ்டார்ம், அத்தெனா கிரே, பேட்டில் கிரீன், செஸ்ட்நட் ரெட், பிளாக், ஸ்குவாட்ரான் புளூ, டல் ஸ்லேட், டீப் கிரீன், அர்மடா புளூ மற்றும் ரெடிட்ச் புளூ போன்ற வண்ணங்களில் விற்பனை செய்யப்படும். ரைடர்கள் தங்கள் தோற்றத்தைத் தனிப்பயனாக்க ஐந்து ஈகிள் தீம் டெக்கால் செட்களில் இருந்தும் தேர்வு செய்யலாம். இந்திய சந்தையில் இந்த ஹெல்மெட்டின் விலை ரூ. 2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • சதீஷ் சவுகான் என்பவருக்கு பக்கத்து வீட்டுக்காரருடன் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.
    • நெட்டிசன்கள் அவரை ஹெல்மெட் மேன் என்று அழைக்க தொடங்கியுள்ளனர்.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கேமரா பொருத்திய ஹெல்மெட் உடன் பயணிக்கும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    சதீஷ் சவுகான் என்பவர் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட சொத்து தகராறால் உயிருக்கு பயந்து, கேமரா பொருத்திய ஹெல்மெட் உடன் பயணிக்கும் நபரின் வீடியோ வைரலானதால் நெட்டிசன்கள் அவரை ஹெல்மெட் மேன் என்று அழைக்க தொடங்கியுள்ளனர்.

    பக்கத்து வீட்டுக்காரரருடன் ஏற்பட்ட தகராறில் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர் என்று சதீஷ் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கேமரா பொருந்திய ஹெல்மெட் உடன் அவர் பயணித்து வருகிறார்.

    இது தொடர்பாக பேசிய சதீஷ், "எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ ஏதாவது நடந்தால், குறைந்தபட்சம் வீடியோ ஆதாரமாவது இருக்கும்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய போலீசார், "நாங்கள் 2 தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயற்சித்தோம். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது" என்று தெரிவித்தனர்.

    • இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
    • பேருந்தை இயக்கும் ஷிபு தாமஸ் என்பவர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டுள்ளார்.

    மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்று வரும் பொது வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை சார்ந்த ஓட்டுநர்கள் வராத நிலையில், தற்காலிக பணியாளர்கள் கொண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், அரசு பேருந்நு ஓட்டும் ஓட்டுநர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேருந்தை இயக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கேரள மாநிலம் பத்தனம்திட்டாவிலிருந்து கொல்லம் செல்லும் பாதையில் பேருந்து சென்று கொண்டிருக்கிறது. அப்போது பேருந்தை இயக்கும் ஷிபு தாமஸ் என்பவர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தாக்குதலின்போது ஏற்படும் காயங்களில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்திருப்பதாக கூறுகிறார்.



    • ஹெல்மெட்கள் இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) தரநிலைகளுக்கு இணங்கி இருக்க வேண்டும்.
    • ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) பொருத்வதை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், புதிய வாகனங்களை விற்கும் போது இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

    மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இல் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களின் இந்த புதிய விதி சேர்க்கப்பட உள்ளது.

    அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட மூன்று மாதங்களுக்குள் இந்த விதி நடைமுறைக்கு வரும். ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிக்கும் இருவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது இதன் நோக்கம்.

    வழங்கப்படும் ஹெல்மெட்கள் இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) தரநிலைகளுக்கு இணங்கி இருக்க வேண்டும். இருப்பினும், மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 129 இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

    ஹெல்மெட் விதியுடன் கூடுதலாக, ஜனவரி 1, 2026 முதல், 50 சிசி-க்கு மேல் எஞ்சின் திறன் அல்லது 50 கி.மீ/மணிக்கு மேல் அதிகபட்ச வேகம் கொண்ட மோட்டார் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் உட்பட அனைத்து புதிய L2 வகை இருசக்கர வாகனங்களுக்கும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) பொருத்வதை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்த ABS திடீர் பிரேக்கிங்கின் போது வாகனத்தின் கட்டுப்பாட்டை மேம்படுத்தி சறுக்குவதைத் தடுக்கும்.

    இந்த முன்மொழியப்பட்ட விதிகள் குறித்து தற்போது பொதுமக்கள் கருத்துக்கள் வரவேரிக்கப்டுகின்றன. பொதுமக்கள் கருத்துக்களையும் ஆட்சேபனைகளையும் comments-morth@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 

    • ஹெல்டன் கிளாஸ் மற்றும் மேட் மோனோடோன் பிளாக் உள்பட ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
    • மைக்ரோமெட்ரிக் சின்ஸ்ட்ராப் சரிசெய்யக்கூடிய தன்மையை உறுதி செய்கிறது.

    ரைஸ் மோட்டோ அதன் சமீபத்திய ஹெல்டன் ஹெல்மெட் சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஹெல்டன் சீரிஸ் ஹெல்மெட் விலை ரூ.3,499 ஆகும். ஹெல்டன் ISI, DOT மற்றும் ECE தரநிலைகளுக்கு இணங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஹெல்மெட் மூன்று விதமான அளவுகளில் கிடைக்கிறது.

    ரைஸ் ஹெல்டன் சீரிஸ் மாடல் மேம்பட்ட பாலிகார்பனேட் மற்றும் ஷெல் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் எடை 1,500 கிராம். இந்த ஹெல்மெட் அதிக வேகத்தில் இழுவையைக் குறைக்கும் ஏரோடைனமிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த முன்புற வென்ட்கள் ஹெல்மெட்டுக்குள் காற்றைச் செலுத்துகின்றன, அதே நேரத்தில் பின்புற எக்ஸாஸ்ட் வென்ட்கள் வெப்பத்தை வெளியேற்றி, உங்களை குளிர்ச்சியாகவும் கவனம் சிதறாமலும் வைத்திருக்கின்றன.

    இதில் இரட்டை டி-ரிங் லாக் வழங்கப்படவில்லை. ஆனால் மைக்ரோமெட்ரிக் சின்ஸ்ட்ராப் சரிசெய்யக்கூடிய தன்மையை உறுதி செய்கிறது. இதில் ஃபேக்டரி ஃபிட் செய்யப்பட்ட, ஆன்டி ஃபாகிங் பின்காக் இல்லை, ஆனாலும் இதன் விசர் 108 டிகிரி கோணக் காட்சியை வழங்குகிறது.

    ரைஸ் ஹெல்டன் ஒரு பிரத்யேக ப்ளூடூத் இண்டர்காம் ஸ்பீக்கர் பாக்கெட்டைப் பெறுகிறது. இது தொடர்பு சாதனங்களை தடையின்றி ஒருங்கிணைக்க அனுமதிக்கிறது. லைனர்களை ஹெல்மெட்டிலிருந்து எடுக்கலாம் மற்றும் துவைக்கக் கூடியவை. ஹெல்டன் கிளாஸ் மற்றும் மேட் மோனோடோன் பிளாக் உள்பட ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    ரைஸ் ஹெல்டன் ஒரு வருட நிறுவன உத்தரவாதத்துடன் வருகிறது. மேலும் இதை நிறுவனத்தின் வலைத்தளம் அல்லது சில்லறை விற்பனைக் கடையில் வாங்கலாம்.

    • இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைப்பதற்காக நடவடிக்கை.
    • தற்போது 40 சதவீத வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை என தகவல்.

    வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் புதிதாக வாங்கப்படும் அனைத்து இருசக்கர வாகனங்களுடன் இரண்டு BIS (Bureau of Indian Standards) சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவு சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைப்பதற்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது 40 சதவீத வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறைகள் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பொருந்தும், இதன்மூலம் ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கை பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    • காயங்களுடன் ஜெயாநகர் அப்பலோ மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக அவருக்கு சிகிச்சை பெற்றார்.
    • குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகையும் அறிவித்துள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மரத்தின் கிளை உடைந்து தலையில் விழுந்து படுகாயமடைந்த இளைஞர் பரிதமாக உயிரிழந்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் பனசங்காரி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 29 வயது இளைஞர் அக்ஷய் தலையின் மீது மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்தது.

    இதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயங்களுடன் ஜெயாநகர் அப்பலோ மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) மதியம் அவர் உயிர் பிரிந்தது.

    அவர் ஒருவரே வேலை பார்த்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் அவரின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரு மாநகராட்சி அவரின் ரூ.4 லட்சம் மருத்துவ செலவை ஏற்றத்துடன், குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகையும் அறிவித்துள்ளது.

    மரங்களை பராமரிக்காத மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

    விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில், ஒரு வேளை ஹெல்மெட் அணிந்திருந்தால் அக்ஷய் பெரிய காயங்களில் இருந்து தப்பித்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். 

    • அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
    • வரும் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் போட்டு வந்தால் தான் பெட்ரோல் வழங்குவோம் என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகரித்து உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலோனார் முறையாக ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரை பறிகொடுக்கும் நிலை ஏற்படுகிறது.

    இதையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை வலியுறுத்தும் வகையில் போலீசார் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை தீவிரப்படுத்த திருவள்ளூர் மாவட்ட போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    அதன்படி மாவட்ட காவல்துறை மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து, விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வருகிற ஏப். 1-ந்தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் சென்றால் பெட்ரோல் வழங்குவதில்லை என்பதை நடைமுறைப்படுத்த உள்ளனர்.

    இதனை தீவிரமாக செயல்படுத்த பங்க் உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இது தொடர்பாக அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் கூறியதாவது:-

    பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் கலந்தாலோசித்து விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றால் பெட்ரோல் வழங்குவதில்லை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம்.

    முதற்கட்டமாக தற்போது திருவள்ளூர் நகர் பகுதிகளில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் 'நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்' என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு வாசகம் ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் பங்க்குகளுக்கு பெட்ரோல் போட வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வரும் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் போட்டு வந்தால் தான் பெட்ரோல் வழங்குவோம் என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதனை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பலமுறை ஹெல்மெட் அணிவது கட்டாயம், இல்லாவிட்டால் அபராதம் என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
    • மக்களின் எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

    புதுச்சேரி:

    விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க இருசக்கர வாகனங்களை ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

    சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நகர பகுதியில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கினாலும், கிராமப்பகுதியில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க முடியவில்லை.

    ஹெல்மெட் கட்டாயத்தை அமலுக்கு கொண்டுவந்தாலும், பல மாநிலங்களில் அதை தீவிரமாக கண்காணிப்பதில்லை. இந்தநிலையில் புதுவையில் கடந்த சில ஆண்டாக ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    பலமுறை ஹெல்மெட் அணிவது கட்டாயம், இல்லாவிட்டால் அபராதம் என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. ஆனால் மக்களின் எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

    இப்போது மீண்டும் நாளை முதல் (செவ்வாய்க்கிழமை) ஹெல்மெட் அணிவது கட்டாயம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல முறை அறிவிப்புகள் வெளியிட்டாலும், புதுவையில் ஹெல்மெட் கட்டாயம் சாத்தியமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. புதுவை நகரபகுதி சிறிய பகுதி. இங்கு காலையிலும், மாலையிலும் அரசு பணிக்கு செல்வோர், பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச்செல்லும் பெற்றோர் என போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது.

    இதுமட்டுமின்றி விடுமுறை நாட்கள், பண்டிகை காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகையால் நகரம் முழுவதும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. பல நேரங்களில் நகர பகுதியில் அதிகபட்சமாக 40 கி.மீ. வேகத்தில் வாகனங்களை இயக்குவதே கடினமான செயலாக உள்ளது.

    இது மட்டுமின்றி சாலை ஆக்கிரமிப்புகள், குண்டும், குழியுமான சாலைகள் என வாகனங்களை இயக்க பல சிரமங்களும் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கடும் எதிர்ப்புகள் கிளம்புகிறது. நாளை விடுதலை நாள் என்பதால் அரசு விடுமுறை. இதனால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும்.

    நாளை மறுநாள் கல்லறை திருநாள் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை. 3-ந்தேதி முதல் வழக்கமான போக்குவரத்து நகர் முழுவதும் இருக்கும். அரசு பணி, பள்ளிக்கு செல்வோரை மறித்து ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதிக்க நிறுத்துவது பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

    பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், மோதலை ஏற்படுத்தும். ஏற்கனவே அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு சுற்றறிக்கை அனுப்பியும் பயனில்லை. இதனால் இந்த முறையும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு எத்தனை நாள் நீடிக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் விதமாக கடந்த மூன்று மாதமாக கருங்கல்லில் ஹெல்மெட் வடிவமைத்தேன்.
    • ஒரே கருங்கல்லை பயன்படுத்தி அதை நன்கு செதுக்கி 8 கிலோ எடை அளவில் நேர்த்தியான ஹெல்மெட் வடிவமைத்துள்ளார்.

    அவினாசி

    திருப்பூர் மாவட்டம் அவினாசி கால்நடை மருத்துவமனை எதிரில் சிற்ப கலைக்கூடம் நடத்தி வருபவர் சரவணன் (வயது 32). இவர் பல்வேறு சிற்பங்களை செதுக்கியுள்ளார். இந்த நிலையில் ஒரே கருங்கல்லை பயன்படுத்தி அதை நன்கு செதுக்கி 8 கிலோ எடை அளவில் நேர்த்தி    யான ஹெல்மெட் வடிவமைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். ரூ.500 மதிப்புள்ள ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ரூ.1,000 அபராதம் கட்ட நேரிடுகிறது. மேலும் விபத்து ஏற்பட்டு விலைமதிப்பில்லாத உயிரை இழக்க நேரிடுகிறது. எனவே அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் விதமாக கடந்த மூன்று மாதமாக கருங்கல்லில் ஹெல்மெட் வடிவமைத்தேன். கொரோனா காலத்தில் கொரோனா உருவ பொம்மை, முக கவசம், சானி டைசர் பாட்டில் போன்றவற்றை கருங்கல்லால் செதுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தேன். அந்த வகையில் தற்போது ஹெல்மெட் அவசியத்தை வலியுறுத்துவதற்காக கருங்கல்லில் ஹெல்மெட் வடிவமைத்தேன் என்றார்.

    • பொதுமக்களை கட்டாயப்படுத்தி ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற எண்ணம் போலீசாருக்கு இல்லை.
    • பொதுமக்கள் தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள தாங்களாகவே முன்வந்து தலைகவசம் அணிய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் அதிகரிக்கும் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிர் பலியை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து காவல் துறை சார்பில் ஹெல்மெட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

    ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, முதல் நாளான 1-ந்தேதி மழை காரணமாக ஹெல்மெட் அணியாதவர்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை.

    ஆனால் நேற்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு கட்டாயம் அபராதம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, எதிர்கட்சி தலைவர் சிவா முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம் ஹெல்மெட் அணிய கட்டாயப்படுத்தி, அபராதம் விதிக்க கூடாது என கோரிக்கை மனு அளித்தார்.

    இந்த நிலையில், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு, மாறன், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பாராட்டி, அவர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கினர்.

    ஹெல்மெட் அணியாதவர்களுக்கும் இனிப்பு வழங்கி, ஹெல்மெட்டை அவர்களாக முன்வந்து அணியுமாறு அறிவுறுத்தினர். மேலும் ஒலிபெருக்கி மூலமும் ஹெல்மெட் அணியுமாறு வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து நிருபர்களிடம் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறியதாவது:- பொதுமக்களை கட்டாயப்படுத்தி ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற எண்ணம் போலீசாருக்கு இல்லை. பொதுமக்கள் தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள தாங்களாகவே முன்வந்து தலைகவசம் அணிய வேண்டும். போலீசாரின் முயற்சியால் தற்போது 30 சதவிகிதம் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர் இது ஒரு வெற்றியாகும்.

    சாலை விபத்துக்களில் அதிக உயிர்பலி தலைகவசம் அணியாததால் தான் ஏற்படுகிறது. நேரு வீதி இருவழி பார்க்கிங் கைவிடப்பட்டு, மீண்டும் பழைய முறைப்படி ஒருவழி பார்க்கிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் தற்போது சீராகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×