என் மலர்
புதுச்சேரி

ஹெல்மெட் அணிந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு- பூங்கொத்து: போக்குவரத்து போலீசார் வழங்கினர்
- பொதுமக்களை கட்டாயப்படுத்தி ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற எண்ணம் போலீசாருக்கு இல்லை.
- பொதுமக்கள் தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள தாங்களாகவே முன்வந்து தலைகவசம் அணிய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவையில் அதிகரிக்கும் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிர் பலியை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து காவல் துறை சார்பில் ஹெல்மெட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, முதல் நாளான 1-ந்தேதி மழை காரணமாக ஹெல்மெட் அணியாதவர்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் நேற்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு கட்டாயம் அபராதம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, எதிர்கட்சி தலைவர் சிவா முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம் ஹெல்மெட் அணிய கட்டாயப்படுத்தி, அபராதம் விதிக்க கூடாது என கோரிக்கை மனு அளித்தார்.
இந்த நிலையில், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு, மாறன், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பாராட்டி, அவர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கினர்.
ஹெல்மெட் அணியாதவர்களுக்கும் இனிப்பு வழங்கி, ஹெல்மெட்டை அவர்களாக முன்வந்து அணியுமாறு அறிவுறுத்தினர். மேலும் ஒலிபெருக்கி மூலமும் ஹெல்மெட் அணியுமாறு வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறியதாவது:- பொதுமக்களை கட்டாயப்படுத்தி ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற எண்ணம் போலீசாருக்கு இல்லை. பொதுமக்கள் தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள தாங்களாகவே முன்வந்து தலைகவசம் அணிய வேண்டும். போலீசாரின் முயற்சியால் தற்போது 30 சதவிகிதம் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர் இது ஒரு வெற்றியாகும்.
சாலை விபத்துக்களில் அதிக உயிர்பலி தலைகவசம் அணியாததால் தான் ஏற்படுகிறது. நேரு வீதி இருவழி பார்க்கிங் கைவிடப்பட்டு, மீண்டும் பழைய முறைப்படி ஒருவழி பார்க்கிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் தற்போது சீராகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.