search icon
என் மலர்tooltip icon
    • ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • அமித்ஷா வருகை திருப்புமுனை தரும் வகையில் அமையும்.

    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வருகிற 5-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகிறார். இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரியும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னுடைய வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்து செயல்பட்ட அவர் இப்படிப்பட்ட முடிவை எடுத்துள்ளார். ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் இந்த முடியை எடுத்ததாக கூறுகிறார்கள்.

    ம.தி.மு.க. 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்தபோது அவர்களுக்கு விருதுநகர், ஈரோடு தொகுதியை நாங்கள் ஒதுக்கீடு செய்தோம். அவர்கள் கேட்காமலேயே அந்த தொகுதியை வழங்கினோம். தற்போது ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள். இது கவலை தரக்கூடிய செய்தியாகும். இதற்கு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முழு பொறுப்பேற்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தொழிலதிபராக இருக்கலாம். ஆனால் அவர் வணிக நிறுவனங்கள் சார்பில் விளம்பரங்கள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த தேர்தல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவா, வீழ்ச்சிக்காகவா என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை. ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது. குமரி மாவட்டம் வளர்ச்சி அடைய பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 5-ந்தேதி குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். அவர் ரோடு-ஷோ மூலமாக வாக்கு சேகரிக்கிறார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் ரோடு-ஷோ நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அமித்ஷா வருகை திருப்புமுனை தரும் வகையில் அமையும்.

    டாரஸ் லாரிகளால் பொதுமக்கள் நாளுக்கு நாள் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கழிவுகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் இங்கிருந்து வைரங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குமரி மாவட்டத்தை உரக்கிடங்கு மாவட்டமாக மாற்றி உள்ளனர். இதற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.

    தி.மு.க.வை சேர்ந்தவர்களின் வாகனங்கள் பறக்கும்படைக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படை அதிகாரிகளின் வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும்.

    ஜாதி, மதத்தை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. குமரி மாவட்டத்தை பிளவுபடுத்த தி.மு.க., காங்கிரஸ் முயற்சி மேற்கொள்கிறது. கனிமவள கடத்தலின்போது லாரி மோதி 6 பேர் பலியானார்கள். இதற்கு இந்த அமைச்சரோ, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரோ இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை.

    மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் கனிம வளங்களை மாநில அரசு நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும். நான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது.
    • அ.தி.மு.க. வேட்பாளர் பசுபதி பெயரிலும் சுயேட்சையாக இன்னொரு பசுபதி போட்டியிடுகிறார்.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.

    வேட்பு மனு பரிசீலனையின் போது சண்முகம், சண்முகவேலு, சண்முகசுந்தரம் என்ற பெயரிலேயே மொத்தமாக 10 பேர் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் 9 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது தெரியவந்தது.

    பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது. அவரைத் தவிர்த்து மற்ற அனைவருமே சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

    சத்துவாச்சாரியைச் சேர்ந்த சண்முகவேலு என்பவரின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது. வாணியம்பாடி அம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.சி.சண்முகம் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். தந்தை பெயர் சென்னப்பன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இவரின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது.

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த ஜி.சண்முகம் என்பவர் 2 மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஒன்று நிராகரிக்கப்பட்டு, இன்னொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல, வாணியம்பாடி கிரிசமுத்திரத்தைச் சேர்ந்த பி.சண்முகம், வேலூர் அருகே உள்ள திருவலத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், வேலூர் சலவன்பேட்டையைச் சேர்ந்த கே.சண்முகம், வேலூர் விருப்பாட்சி புரத்தைச் சேர்ந்த ஜி.சண்முகம், வாணியம்பாடி புதூரைச் சேர்ந்த எம்.பி.சண்முகம் ஆகியோரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    அதேபோல், அ.தி.மு.க. வேட்பாளர் பசுபதி பெயரிலும் சுயேட்சையாக இன்னொரு பசுபதி போட்டியிடுகிறார்.

    • உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு, உபரி நீரின் அளவு குறைந்தது.
    • கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ளது உப்பாறு அணை. திருமூர்த்தி அணையின் உபரி நீரை சேமிக்கும் வகையில், இந்த அணை கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் உபரி நீரால் பயன்பெற்று வந்த உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு, உபரி நீரின் அளவு குறைந்தது.

    அதோடு, அணைக்கு மழைநீர் வரும் ஓடையில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகங்களால் தடுப்பணைகள் கட்டப்பட்டதால், அணைக்கு வரக்கூடிய மழைநீரும் வராமல் போய்விட்டது. அணையின் நீராதாரங்கள் அழிக்கப்பட்டதால், உப்பாறு அணையால் பயனடைந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், உப்பாறு அணையை நம்பியுள்ள விவசாயிகள், திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசன திட்டத்தில் உபரி நீரை திறந்துவிடக்கோரி, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்தால் உப்பாறு அணைக்கு தண்ணீர் தருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் வாய்மொழியாக உறுதி அளித்தனர். ஆனால் கூறியவாறு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் நடுமரத்துப்பாளையம் பகுதி பொதுமக்கள் இன்று காலை வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இது குறித்த தகவல் அறிந்ததும் வருவாய் மற்றும் நீர்வளத்துறையினர், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • ஜெயக்குமார் பனங்கிழங்கு வாங்குவதற்கு நீலா புஷ்பா வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார்.
    • வெயிலில் சென்றதால் களைத்த அவர் திருட சென்ற வீட்டில் வாளியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீரீல் குளித்துள்ளதும் தெரிய வந்தது.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தை அடுத்த சாலைபுதூர் அம்மன் கோவில் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சித்திரை. இவரது மனைவி நீலா புஷ்பா ( வயது 60).

    இவர்களுக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கணவர் இறந்து விட்டதால் நீலா புஷ்பா மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர் பனங்கிழங்குகள் வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வியாபாரத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், 3 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் டி.எஸ்.பி. கென்னடி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டது சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (40) என்பது தெரியவந்தது. மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    ஜெயக்குமார் பனங்கிழங்கு வாங்குவதற்கு நீலா புஷ்பா வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் தனியாக வசித்து வருவதையும், அங்கு நகை, பணம் இருப்பதையும் தெரிந்து கொண்டார். அதன்படி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நகை-பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

    மேலும் வெயிலில் சென்றதால் களைத்த அவர் திருட சென்ற வீட்டில் வாளியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீரீல் குளித்துள்ளதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து திருடிய நகை-பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளது.
    • பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேரதல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி தமிழகத்துக்கு 5 முறை வந்துள்ளார்.

    மீண்டும் அவர் பிரசாரத்துக்காக தமிழகம் வருவதற்கு திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் வலைதள பக்கத்தில், தி.மு.க. ஆட்சியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    "நமோ செயலி" மூலமாக இன்று மாலை 5 மணிக்கு நமது கடின உழைப்பாளிகளான பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் "எனது பூத் வலிமையான பூத்" என்ற தலைப்பில் கலந்துரையாட உள்ளேன்.

    தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள், திட்டங்களை பாரதிய ஜனதா கட்சியினர் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் திறம்பட கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்.

    தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் சலிப்படைந்து சோர்ந்து போய் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    • பாரம்பரிய மீனவ சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். மீனவர்கள் நலன் காக்க தேசிய மீனவர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.
    • ஐபிஎல் விளையாட்டும் அ.தி.மு.க.வும் ஒன்று. அ.தி.மு.க.விலும் அத்தனை அணிகள் உள்ளன.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பொன்னேரியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த உச்சி வெயிலை விட உக்கிரமான ஒன்றிய அரசை விரட்டியே ஆக வேண்டும் என்று இவ்வளவு எழுச்சியோடு கூடி இருக்கிறீர்களே... அதற்கு முதலில் நன்றி. கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் நான் இதே இடத்தில் பிரசாரத்தை மேற்கொண்டேன். அப்போது இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 3 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தீர்கள். ஆனால் இந்த முறை 3 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் போதாது.

    கடந்த முறை நமது எதிரிகள் ஒன்றாக சேர்ந்து வந்தார்கள். இன்று எல்லோரும் பிரிந்து நிற்கிறார்கள். எனவே குறைந்தது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும். நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். குறைந்த பட்சம் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தால் மாதம் 2 நாள் நான் இங்கு வந்து திருவள்ளூர் தொகுதியில் தங்கி உங்களுடைய தொகுதியின் அனைத்து தேவைகளையும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றி தருவேன். நீங்கள் இதை செய்தால் எனது வாக்குறுதியை நான் காப்பாற்றுவேன். நீங்கள் எங்கள் வேட்பாளருக்கு போடும் வாக்கு, பிரதமர் மோடியின் தலையில் வைக்கும் வேட்டு.


    தலைவர் கலைஞர் ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் அறிக் கையை வெளியிட்டு சொல்வார். சொல்வதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்று செய்து காட்டினார். அவரது வழியில் வந்த முதல்-அமைச்சரும் சொல்வதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார். பொன்னேரி அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் முதல் தரமான மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும். அனைத்து குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி விரிவுபடுத்தப்படும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இந்த தொகுதியை சுற்றி உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்து தருவோம். மாதவரம் அல்லது விம்கோ நகரில் இருந்து மெட்ரோ ரெயில் சேவை மீஞ்சூர் வரை நீட்டிக்கப்படும். பாரம்பரிய மீனவ சமுகதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படு வார்கள். மீனவர்கள் நலன் காக்க தேசிய மீனவர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.

    இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மாயமாவதை தடுக்க தடையற்ற தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தி தரப்படும். இந்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் உங்களுக்கு கொடுத்து உள்ளார்.

    மகளிருக்கு கட்டண மில்லா பஸ் வசதி திட்டத்தை முதல்-அமைச்சர் கொடுத்தார். இங்கு வந்திருக்கும் மகளிரும் இதை பயன்படுத்துகிறீர்கள் தானே. இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் நிற பஸ்தான். இன்னும் சொல்லப்போனால் நாம், பெண்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

    அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் அதை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பெண்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இப்போது அவர்கள் தான் பஸ் உரிமையாளர்கள். எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம். இந்த 3 வருடத்தில் 460 கோடி பயணங்களை மேற் கொண்டு இருக்கிறார்கள். இதை நகைச்சுவையாக சொல்லவில்லை. இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி. இதுதான் திராவிட மாடல் அரசு. இப்போது பிங்க் பஸ்சை தாய்மார்கள் ஸ்டாலின் பஸ் என்று தான் சொல்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி யாரைப்பார்த்தாலும் முட்டி போட்டு விடுகிறார். பிரதமர் மோடியை பார்த்தால் படுத்து விடுகிறார். மனிதருக்கு முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கத்தான் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் முதுகெலும்பு இல்லாத ஒரே மனிதர் எடப்பாடி பழனிசாமிதான். மோடி பிரதமராக வரக்கூடாது என்று எங்களால் கூற முடியும். ஆனால் எடப்பாடி பழனிசாமி கூறுவாரா? ஐபிஎல் விளையாட்டும் அ.தி.மு.க.வும் ஒன்று. அ.தி.மு.க.விலும் அத்தனை அணிகள் உள்ளன.

    பிரதமர் மோடியின் பெயரை 29 காசு என்று மாற்றிவிட்டேன். ஏனென்றால், நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால் வெறும் 29 காசு தான் தருகிறார். இனி யாரும் பிரதமர் நரேந்திர மோடி என்று சொல்லாதீர்கள். இனி அவரது பெயர் 29 காசு. இன்னும் ஒரு மாதம் தான் அவர் பிரதமர். அதன் பிறகு அவர் பிரதமர் கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார்-யார் என்ற விவரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியலிடப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றுபவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றுபவர்கள் என இருவகைப்படுத்தி அவர்களுக்கு அதற்கேற்ப பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு கடந்த 24-ந்தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. 3 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் 1,500 பேர் வரை பங்கேற்காதது தெரியவந்துள்ளது.

    தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கும் இப்போது விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளரான மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    நோட்டீசை பெற்றுக்கொண்டுள்ள அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு விடுமுறை எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறுகையில், முதற்கட்ட பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளைக்கு மீண்டும் பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    • நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தாக்கியதாக கூறி, ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவனையில் சேர்ந்துள்ளார்.
    • நாளைக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் கொன்று விடுவோம் எனக்கூறி மிரட்டினர்.

    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த எச்சனஹள்ளியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 51). இவர், திராவிட தெலுங்கு தேசம் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில், திராவிட தெலுங்கு தேசம் கட்சி பாரதிய மக்கள் ஐக்கியதா கட்சியுடன் இணைந்து தமிழகத்தில் 13 இடங்களில் போட்டியிடுகிறது.

    இந்த கட்சிக்கு நாம் தமிழர் கட்சி முன்பு பயன்படுத்தி வந்த கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னை, நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தாக்கியதாக கூறி, ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவனையில் சேர்ந்துள்ளார்.

    இது குறித்து பாரதிய மக்கள் ஐக்கியதா கட்சி வேட்பாளர் ஆறுமுகம் கூறியதாவது:-

    நான் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோதிலிருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்னை கண்காணித்த வண்ணம் இருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனைக்கு வந்த போது அவர்கள் என்னை பின் தொடர்ந்தனர். இதையறிந்த நான் என் நண்பரின் காரில் ஓசூர் நோக்கி சென்றேன்.

    கிருஷ்ணகிரியில் இருந்து, 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்மனூர் அருகே சென்றபோது, 10-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிளில் வந்த நாம் தமிழர் கட்சியினர், எங்கள் காரை வழிமறித்து என்னையும் என்னுடன் இருந்தவர்களையும் கடுமையாக தாக்கினர். மேலும் விவசாயி சின்னத்தில் நீ போட்டியிட கூடாது. நாளைக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் கொன்று விடுவோம் எனக்கூறி மிரட்டினர். இவ்வாறு அவர் கூறினார்.

    காயமடைந்த ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    ஓசூர்:

    ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஓசூர் நோக்கி வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணமின்றி ரூ.10 லட்சம் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஓசூர் சீதாராம் மேடு ஜலகண்டேஸ்வரர் நகரை சேர்ந்த லோகேஷ் குமார் (35) என்பவர், பேரண்ட பள்ளி பகுதியில் கிரஷர் கம்பெனி நடத்தி வருவதாகவும், அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, பெங்களூரிலிருந்து பணம் வாங்கி வந்ததாகவும் தெரிய வந்தது. உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட அந்த பணத்தை, அதிகாரிகள் ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில், உதவி கலெக்டர் பிரியங்காவிடம் ஒப்படைத்தனர்.

    இதே போல், ஓசூர் அம்பாள் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக காரில் வந்த தினேஷ்குமார் (45) என்பவர் வங்கியில் செலுத்த, உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.60,000/- பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஓசூர் அருகே உள்ள கக்கனூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், பெங்களூரை சேர்ந்த காய்கறி வியாபாரி அன்னையப்பா (65) என்பவர் காரில் எடுத்து வந்த 2 லட்சத்தி 76 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பணம் ஓசூர் கொத்தூரில் காய்கறி வாங்கியதற்காக செலுத்த வேண்டிய பணம் என்பது தெரிய வந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல், ஓசூர் அருகே மாசிநாயக்கனப்பள்ளி கிராம பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வரும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் (23) என்பவர் இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பணம் பெட்ரோல் பங்கில் வசூலான பணம் என தெரிய வந்தது. ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    மேலும், ஓசூர் இஎஸ்ஐ ரிங் ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, காரில் சென்ற ஓசூர் கீழ் கொல்லர் தெருவை சேர்ந்த சின்னராஜ் (40) என்பவரிடமிருந்து 3 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கட்டுமான தொழிலுக்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார். ஆனால் அந்த பணத்திற்கு எந்த ஆவணங்களும் இல்லாததால் பணம் முழுவதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் சப் கலெக்டர் அலுவலகத்தில், சப் கலெக்டர் பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. ஓசூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 18 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும்.
    • கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும்.

    கோவை:

    கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதி மக்கள் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் வழியாக சிறப்பு ரெயில் ஒன்றும், சென்னை வழியாக மற்றொரு சிறப்பு ரெயிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் எண் 06050 கோவை- சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் வருகிற 31-ந்தேதி அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

    அதேபோல் ரெயில் 06049 ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரெயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும். அந்தவகையில் கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும். சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    ரெயில் எண் 06043 தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து 31-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 1.57 மணிக்கு வந்து 2 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

    06044 கொச்சுவேலி- தாம்பரம் சிறப்பு ரெயில் கொச்சுவேலியில் இருந்து 1-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில் கோவை ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.40 மணிக்கு வந்து 12.45 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் ஆகிய இடங்களில் நிற்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏரல் தாசில்தார் கோபால் பறக்கும் படை தலைமை அலுவலர் இசக்கியப்பனுக்கு தகவல் தெரிவித்தார்.
    • குடோனில் சுமார் ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    ஸ்ரீவைகுண்டம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் அம்மாள்தோப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து வருவதாக ஏரல் தாசில்தாருக்கு புகார் சென்றது.

    அதன் அடிப்படையில் ஏரல் தாசில்தார் கோபால் பறக்கும் படை தலைமை அலுவலர் இசக்கியப்பனுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பறக்கும் படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அங்கு சென்று பார்த்தபோது அம்மாள் தோப்பு பகுதியில் உள்ள ஒரு குடோனில் சுமார் ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்தியபோது வெள்ள நிவாரண பொருட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறினர். எனினும் இதுதொடர்பாக இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    தொடர்ந்து அந்த குடோனுக்கு பறக்கும் படையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சீல் வைத்து ஆவணங்களை ஏரல் தாசில்தார் கோபாலிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
    • நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    வாக்காளர்களுக்கு பணம்-நகை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் உரிய ஆவணங்கள் இருந்தால் விடுவித்து விடுவதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    பறக்கும் படை வாகன சோதனையில் இதுவரை ரூ.80 கோடி அளவுக்கு நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் பிடிபட்டால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து அந்த பணத்தை அங்கு ஒப்படைத்து விடுகின்றனர்.

    இதனால் பணம் நகை பொருட்களை வியாபாரிகள் ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

    இப்போது தேர்தல் நெருங்க நெருங்க சோதனைகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் ஆந்திராவில் இருந்து பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த 2 பேரிடம் இருந்து ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு மாட்டுச் சந்தைக்கு மாடு வாங்கு வதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறியும் விடவில்லை. பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர்.

    அடுத்தடுத்து சோதனை நடைபெறும் நிலையில் வியாபாரிகளும், நகை கடைக்காரர்களும் பணம் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதுபற்றி தேர்தல் கமிஷனில் முறையிட்டும் எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என வியாபாரிகள் ஆதங்கப்படுகின்றனர். கொள்முதல் செய்து நகை உள்ளிட்ட பொருட்களை கடைக்கு கொண்டு வர முடியாததால் வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதாகவும் வியாாரிகள் கூறி வருகின்றனர்.

    பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    இதுபற்றி மெட்ராஸ் தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கத் தவைர் ஜெயந்தி லால் சலானியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் போலீசார் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சோதிப்பதால் பொதுமக்கள் நகை வாங்க வருவதற்கு பயந்து கடைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவதற்கு சிறிய நகரங்களில் இருந்து பெரிய நகரங்களுக்கு பணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.

    இந்த மாதம் தொடர்ந்து நகை விலை உயர்ந்து கொண்டு வருவதால் எப்படியாவது கையில் உள்ள பணத்தை கொண்டு நகை வாங்கி விடலாம் என ஒவ்வொரு குடும்பத்தினரும் நினைக்கின்றனர். ஆனால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் நகை கடைக்கு வருவதை தவிர்க்கின்றனர்.


    இப்போது உள்ள விலைவாசியில் ஒரு பவுன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் சேர்த்து ரூ.55 ஆயிரம் ஆகிவிடும். எனவே தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள ரூ.50 ஆயிரம் என்ற அளவை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம்.

    மே 10-ந்தேதி அட்சய திருதியை நாள் நெருங்கி வருவதால் நகைக் கடைக்காரர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் தேர்தல் கமிஷன் கெடுபிடியால் நகை பட்டறையில் இருந்து நகைகளை கடைகளுக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    அட்சய திருதியை ஆர்டர், திருமண நகை ஆர்டர் உள்ள நிலையில் நிறைய நகைகளை கொண்டு செல்லும் போது பறக்கும் படையினர் பிடித்து விட்டால் உடனே அதை வாங்க முடியாது.

    2 மாதம் கழித்துதான் பெற முடியும். தங்கம் விலை தினமும் ஏறி வரும் நலையில் 2 மாதம் போலீசாரிடம் நகை இருந்தால் விலை ஏற்றத்தால் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விடும்.

    எனவே நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து நகைக் கடைகளில் கூட்டம் குறைந்துவிட்டது. வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதால் ஒவ்வொரு கடைக்காரர்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    அட்சய திருதியை தினத்தன்று 1000 கிலோ அளவுக்கு நகை வியாபாரம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்த அளவு வியாபாரம் இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×