search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறக்கும் படை சோதனை"

    • பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
    • நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    வாக்காளர்களுக்கு பணம்-நகை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் உரிய ஆவணங்கள் இருந்தால் விடுவித்து விடுவதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    பறக்கும் படை வாகன சோதனையில் இதுவரை ரூ.80 கோடி அளவுக்கு நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் பிடிபட்டால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து அந்த பணத்தை அங்கு ஒப்படைத்து விடுகின்றனர்.

    இதனால் பணம் நகை பொருட்களை வியாபாரிகள் ஒரு கடையில் இருந்து மற்றொரு கடைக்கு கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

    இப்போது தேர்தல் நெருங்க நெருங்க சோதனைகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் ஆந்திராவில் இருந்து பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த 2 பேரிடம் இருந்து ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு மாட்டுச் சந்தைக்கு மாடு வாங்கு வதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறியும் விடவில்லை. பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர்.

    அடுத்தடுத்து சோதனை நடைபெறும் நிலையில் வியாபாரிகளும், நகை கடைக்காரர்களும் பணம் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதுபற்றி தேர்தல் கமிஷனில் முறையிட்டும் எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என வியாபாரிகள் ஆதங்கப்படுகின்றனர். கொள்முதல் செய்து நகை உள்ளிட்ட பொருட்களை கடைக்கு கொண்டு வர முடியாததால் வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதாகவும் வியாாரிகள் கூறி வருகின்றனர்.

    பறக்கும் படையினர் சோதனையால் தங்க நகை வியாபரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    இதுபற்றி மெட்ராஸ் தங்கம், வைரம் வியாபாரிகள் சங்கத் தவைர் ஜெயந்தி லால் சலானியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் போலீசார் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சோதிப்பதால் பொதுமக்கள் நகை வாங்க வருவதற்கு பயந்து கடைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவதற்கு சிறிய நகரங்களில் இருந்து பெரிய நகரங்களுக்கு பணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.

    இந்த மாதம் தொடர்ந்து நகை விலை உயர்ந்து கொண்டு வருவதால் எப்படியாவது கையில் உள்ள பணத்தை கொண்டு நகை வாங்கி விடலாம் என ஒவ்வொரு குடும்பத்தினரும் நினைக்கின்றனர். ஆனால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் நகை கடைக்கு வருவதை தவிர்க்கின்றனர்.


    இப்போது உள்ள விலைவாசியில் ஒரு பவுன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் சேர்த்து ரூ.55 ஆயிரம் ஆகிவிடும். எனவே தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள ரூ.50 ஆயிரம் என்ற அளவை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம்.

    மே 10-ந்தேதி அட்சய திருதியை நாள் நெருங்கி வருவதால் நகைக் கடைக்காரர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் தேர்தல் கமிஷன் கெடுபிடியால் நகை பட்டறையில் இருந்து நகைகளை கடைகளுக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    அட்சய திருதியை ஆர்டர், திருமண நகை ஆர்டர் உள்ள நிலையில் நிறைய நகைகளை கொண்டு செல்லும் போது பறக்கும் படையினர் பிடித்து விட்டால் உடனே அதை வாங்க முடியாது.

    2 மாதம் கழித்துதான் பெற முடியும். தங்கம் விலை தினமும் ஏறி வரும் நலையில் 2 மாதம் போலீசாரிடம் நகை இருந்தால் விலை ஏற்றத்தால் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விடும்.

    எனவே நகைகளை பட்டறையில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெளிவு படுத்த வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து நகைக் கடைகளில் கூட்டம் குறைந்துவிட்டது. வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதால் ஒவ்வொரு கடைக்காரர்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    அட்சய திருதியை தினத்தன்று 1000 கிலோ அளவுக்கு நகை வியாபாரம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்த அளவு வியாபாரம் இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
    • வாகன சோதனையில் இதுவரை 17 ஆயிரத்து 610 ரூபாய் மதிப்பிலான 25,560 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து ரூ.50 ஆயிரத்திற்க்கு மேல் ரொக்க பணம், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பரிசுப்பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 4 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை 10 பேரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.13 லட்சத்து 49 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தப் பணம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பணம் மாவட்ட கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

    இது தவிர போலீசார் மேற்கொண்ட சோதனையில் இதுவரை 17 ஆயிரத்து 610 ரூபாய் மதிப்பிலான 25,560 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேப்போல் 4,800 ரூபாய் மதிப்பிலான கஞ்சா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ×