search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பது நல்லது.
    • குழந்தைகளுக்கு நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.

    பள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாட்களாகும். இந்த விடுமுறையில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பது பெற்றோருக்கு ஒரு சவால். குழந்தைகள் அதிக வெயிலில் விளையாடுவதால் வியர்வை வெளியேறுகிறது. அத்துடன் நீர், உப்புச் சத்தும் குறைகிறது. குழந்தைகளுக்கு தண்ணீர், மோர், பழச்சாறு போன்று அதிக நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.

    குழந்தைகளிடம் வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். மண்பானை தண்ணீருடன் வெட்டிவேர், நன்னாரி வேர், சப்ஜா விதைகளை சேர்த்தால் நீரின் சுவை, மணம் கூடும். இது இயற்கையான முறை தான். தண்ணீர் குளிர்ந்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி அருந்துவர். இதன் மூலம் உடல்உஷ்ணத்தை தவிர்க்கலாம்.

    உணவில் நீர்சத்து அதிகம் உள்ள சவ்சவ், பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம். வெயில் மதியம் 1 முதல் மாலை 4 மணிவரை அதிக பாதிப்பை தரும். இந்த நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால், சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே நிழலில் விளையாடும் கேரம் போர்டு, தாயம், பல்லாங்குழி, டேபிள் டென்னிஸ், செஸ் இவைகளை விளையாடலாம்.

    குழந்தைகள் கோடையில் பருத்தி ஆடைகள் உடுத்துவது நல்லது. தினமும் காலை, மாலை இரு வேளையும் குளிக்கச்செய்ய வேண்டும். ஆண் குழந்தைகள் வாரம் இரு முறையும், பெண் குழந்தைகள் 2 நாட்களுக்கு ஒரு முறையும் தலைக்கு குளித்து வந்தால், உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் தேவையான அளவு வெந்தயம், வெட்டிவேர் ஊற வைத்து 15 நிமிடம் கழித்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

    • பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும்.
    • பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியம்.

    முதல்முறையாக தாயான பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும். குழந்தைகள் பிறந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இளம் தாய்மார்களுக்கு சந்தேகம் இருக்கவே செய்யும். குழந்தையின் அழுகை, குழந்தை பராமரிப்பு வரை எதைக்கண்டாலும் மனதில் ஒருவித அச்சம் இருக்கவே செய்யும்.

    சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சையாக இருந்தாலும் குழந்தை பிறந்த பிறகு மற்றுமொரு சவால் குழந்தை வளர்ப்பு தான். பல பெண்களும் குழந்தை பிறந்தவுடன் கர்ப்பகால அவஸ்தைகள் முடிந்துவிடுவதாக நினைக்கிறார்கள். ஆனால் தாய்மையின் பயணமே அப்போது தான் தொடங்குகிறது. அதிலும் குறிப்பாக முதல் முறை தாயாகியிருக்கும் பெண்கள் அவசியம் குழந்தை வளர்ப்பு பற்றி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதல்:

    பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியம் என்பதை மருத்துவர் குழந்தை பிறந்ததும் வலியுறுத்துவார். பிரசவித்தவுடன் குழந்தைக்கு தரக்கூடிய தாய்ப்பால் சீம்பால் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாலில் குழந்தைக்கு தேவையான எதிர்ப்புசக்தி கிடைக்கும் என்பதால் முதலில் வெளிவரும் மஞ்சள் நிற பாலை குழந்தைக்கு தவிர்க்காமல் கொடுக்க வேண்டும்.

    தாய்ப்பால் கொடுக்கும் நிலை

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள் உண்டு. இளந்தாய்மார்கள் அனைவருமே செவிலியர் அல்லது மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலையை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் முறையை அறிந்து சரியாக பின்பற்றும் போது தாய்ப்பால் சுரப்பும் கிடைக்கும். குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பிணைப்பும் அதிகமாகும்.

    குழந்தையின் அழுகை

    குழந்தையின் அழுகை குறித்து சரியாக தெரியாது என்றாலும் ஓரளவேனும் அதன் அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். பசிக்கான அழுகை, டயப்பர் ஈர அழுகை, வயிற்றுவலிக்கான அழுகை, தூக்கத்துக்கான் அழுகை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி குழந்தையின் அழுகை காய்ச்சல் அல்லது வேறு பிரச்சனைகளால் தீவிரமாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்துகொள்வது அவசியம்.

    குழந்தைக்கான தடுப்பூசி

    பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணையை மருத்துவரே அளிப்பார் என்றாலும் அதை அம்மாக்களும் நினைவுபடுத்தி வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதை நினைவுபடுத்தி முன்கூட்டியே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    குழந்தைக்கான மருந்துகள் பிறந்த நேரத்தில் இல்லை என்றாலும் அதிக காய்ச்சல், சளி, இருமல், தாய்ப்பால் குடிக்காத காலங்களில் அவசரத்துக்கு என்ன செய்ய வேண்டும். எப்போது சிகிச்சைக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதையும் ஆலோசித்து வைத்துகொள்வது நல்லது.

    குழந்தையை குளிக்கவைக்கும் முறை:

    பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் அடுத்த நாள் முதலே குளிக்க வைக்கலாம். ஆனால் அம்மாக்களால் குழந்தையை குளிப்பாட்டுவது சிரமமாக இருக்கும். வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால் எப்படி குழந்தையை குளிக்க வைக்க வேண்டும் என்பதை பற்றி பெற்றோர்கள் இருவருமே தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். 

    குழந்தைக்கு மசாஜ் செய்யும் முறை, அதன் முக்கியத்துவம், தலைகுளியல், குளிக்க வைக்கும் முறை என அனைத்தையும் கற்றுக்கொள்வது நல்லது.

    • மனிதன் உருவான நாளில் இருந்து கதைகளும் உருவாகிவிட்டன.
    • கதைகளை சுமக்காத மனிதர்கள் யாருமே இல்லை.

    குழந்தையாக இருந்தபோது பாட்டியிடம் கதை கேட்டு தூங்கிய அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் அந்த அனுபவத்தை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்திட நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம். அதற்கு பெற்றோராகிய உங்களை தயார்படுத்தும் சிறிய முயற்சி இது.

    மனிதன் உருவான நாளில் இருந்து கதைகளும் உருவாகிவிட்டன. கதைகளை சுமக்காத மனிதர்கள் யாருமே இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கு பின்னும் ஒரு கதை இருக்கும். அந்த கதை வலி நிறைந்ததாகவும், மகிழ்ச்சியானதாகவும், மறக்க நினைப்பதாகவும், மறக்க முடியாதாகவும் இருக்கலாம்.

    தனது கதைகளை மற்றொருவருக்கு சொல்வதன் மூலம் தனது கருத்தை, எண்ண ஓட்டத்தை மற்றவரிடம் பகிர்கிறார்கள். இதன் மூலம் தங்களது மனக்கவலை நீங்குகிறது என்றும் நம்புகிறார்கள். கதைகள் என்பவை கற்பனையாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்கிற வரைமுறை இல்லை. நாம் பார்த்தவை, நமக்குள் நடப்பவை, சில சமயம் நமக்குள் எழுகிற கனவுகள்கூட கதைகளாக மாறுகின்றன.

    எனவே கதைகள் என்பவை எங்கோ தூரத்தில் இல்லை, நம்மோடுதான் இருக்கின்றன. அவற்றை கவனிக்க வேண்டும். பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றித்தான் பல கதைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. அவற்றை வாசிக்க வேண்டும். வாசித்தபின் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்.

    ஏன் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்? அவர்களையே அந்த புத்தகத்தை படிக்க வைத்துவிடலாமே என்ற கேள்வி பலருக்கு எழலாம். கதைகள் குழந்தைகளை அவர்கள் பார்த்திராத புதியதோர் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அவர்களின் கற்பனைத்திறனையும், கேட்கும் திறனையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கும். அடுத்தவரை பற்றி புரிந்து கொள்ள வழிவகை செய்யும்.

    தான் வாழும் சமூகத்தையும், தான் வாழ உதவி செய்யும் எல்லா உயிர்களையும் நேசிக்க கதைகள் கற்றுக் கொடுக்கின்றன. எத்தனை கதைகளை குழந்தைகள் கேட்டாலும் ஒரு சில கதைகள் அவர்களோடு ஐக்கியமாகிவிடுகின்றன.

    அவர்களது வாழ்க்கையை ஆக்கப்பூர்வமாய் மாற்றுகின்ற வேலையையும் கதைகள் செய்கின்றன. எனவே குழந்தைகளுக்கு கதைகளை சொல்லுங்கள். ஒவ்வொரு கதைக்கு பின்னும் ஒரு கருத்து நிச்சயம் இருக்கும். அதில் எந்த கருத்து உங்கள் குழந்தைக்கு தேவையோ அந்த கதையை சொல்லுங்கள்.

    உதாரணமாக உங்கள் குழந்தை பயப்படுகிறது என்றால் தைரியத்தை முன்நிறுத்தும் கதையை சொல்லுங்கள். அந்த கதை உங்கள் குழந்தையின் உள்ளத்துக்குள் சென்று நம்பிக்கையை கொடுக்கும். அதனால் பெற்றோர் கதைகளை வாசிப்பதற்கு ஆர்வம் காண்பிக்க வேண்டும்.

    அதில் வாழ்வியல் போதனைகளை வழங்கும் கதைகளை குழந்தைகள் ரசிக்கும் விதத்தில் சொல்லலாம். கதைகள் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் பக்குவமிக்க மனிதர்களாக மாற்றும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

    • காட்டன் டயப்பர்கள் குழந்தைகளுக்கு அணிவித்தால் குழந்தைகளின் தோலுக்கு எந்தவித கெடுதலும் இருக்காது.
    • அதிக செயற்கை பொருட்களாலான டயப்பர்களை உபயோகப்படுத்துவது குழந்தைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும்.

    குழந்தைகளுக்கு டயப்பர் அணிவது பெற்றோர்களுக்கு சவுகரியமான செயல் என்றாலும் அந்த டயப்பரால் சில தீமைகளும் இருக்கின்றன.

    அதிக செயற்கை பொருட்களாலான டயப்பர்களை உபயோகப்படுத்துவது குழந்தைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும்.

    ஈரமான டயப்பர்கள், வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களையும், சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள் அதிகரிக்கவும் வழி வகுக்கின்றன. 

    காட்டன் டயப்பர்கள் குழந்தைகளுக்கு அணிவித்தால் குழந்தைகளின் தோலுக்கு எந்தவித கெடுதலும் இருக்காது. அதை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால் கெமிக்கல் கலந்த மாடர்ன் டயப்பர் அணிவிப்பது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் முடிவுகள் தெரிவித்துள்ளன.

    மாடர்ன் டயப்பர்களில் ஒரு சில விஷப்பொருட்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அது குழந்தைகளின் உடல்நலனை பெரிதும் பாதிக்கும் என்றும் குறிப்பாக சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது

    எனவே வேதிப்பொருள்கள் பயன்படுத்தாத சுத்தமான காட்டன் டைப்பர்கள் பயன்படுத்தினால் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. அது மட்டுமின்றி அடிக்கடி டயப்பரை மாற்ற வேண்டும்.

    ஈரம் கசிந்தால், டயப்பர் கனமாக தெரிந்தால், குழந்தை மலம் கழித்துவிட்டால், துர்நாற்றம் வருகையில், குழந்தை விடாத அழுது கொண்டிருந்தால் டயப்பர்களை உடனே மாற்ற வேண்டும். குறைந்தது 2 அல்லது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

    • இயற்கை முறையில் மருந்து தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
    • இஞ்சியுடன் சுத்தம் செய்த வேப்பிலை சேர்த்து, சிறிதளவு உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.

    குழந்தைகள் பால், சாக்லேட், இனிப்பு வகைகள் சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்கும். குழந்தைகள் முகத்தில் அங்கங்கே தேமல் இருந்தால், சாப்பாடு சரியாக உட்கொள்ளாமல் இருப்பது, அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக பூச்சி வயிற்றில் இருக்கும். 

    இதற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து டாக்டரிடம் காண்பித்து கொடுப்பது நல்லது. இயற்கை முறையிலும் மருந்து தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகள் என்றில்லை பெரியவர்களுக்கும் இந்த மருந்து சிறந்தது.

    தேவையான பொருட்கள்:

    இஞ்சி - 50 கிராம்

    வேப்பிலை - 20 இலைகள்

    தேன் - தேவையான அளவு

    உப்பு - ஒரு சிட்டிகை

    சர்க்கரை - சிறிதளவு

    செய்முறை:

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியுடன் சுத்தம் செய்த வேப்பிலை சேர்த்து, சிறிதளவு உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டவும்.

    வடித்த சாறை அப்படியே 15 நிமிடம் வைக்கவும், அடியில் நஞ்சு தங்கி இருக்கும். மேலோடு தெளிந்த சாறை மட்டும் எடுத்து கசப்பு தெரியாமல் இருக்க தேவைக்கு தேன் கலந்து குடிக்கவும்.

    கைக்குழந்தைகள் அதிக இனிப்பு சாப்பிட வாய்ப்பு இருக்காது தேவைபட்டால் அரை சங்கு ஊற்றலாம். 9 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 சங்கு முழுவதும் கொடுக்கலாம்.

    அதற்கு மேற்பட்ட வயது மற்றும் பெரியவர்கள் கால் டம்ளர் குடிக்கலாம். சிறியவர்களுக்கு தேன் நன்றாக கலந்து கொடுக்கலாம். வயதிற்கு வந்த பெண்களுக்கு வரும் வயிறு உபாதைகளுக்கு இது சிறந்த மருந்து. கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக்கூடாது. கர்ப்பம் தரிப்பதற்கு முன், குழந்தை பெற்ற பிறகு இதை அடிக்கடி செய்து குடிக்கலாம்.

    ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் அடிக்கடி இதை செய்து குடிக்கலாம்.

    • இளநீர், மோர், எலுமிச்சை ஜூஸ் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை கொடுக்கலாம்.
    • கடுமையான வெயில் நேரத்தில் வெளியே விளையாக அனுமதிக்க வேண்டாம்.

    சிறு குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது என்பதே பெற்றோருக்கு ஒரு சவாலான காரியம் தான். எனினும் கோடை வெயிலில் குழந்தைகளை பாதுகாப்பது என்பது இன்னும் கடினமானது.

    பள்ளி விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை கோடை வெயிலில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

    * குழந்தைகள் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகள் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பார்கள் என்று காத்திருக்காமல், அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

    * வெறும் தண்ணீர் மட்டும் குடிக்க சில குழந்தைகளுக்கு பிடிக்காது. அதனால் இளநீர், மோர், எலுமிச்சை ஜூஸ் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை கொடுக்கலாம்.

    * கடுமையான வெயில் நேரத்தில் வெளியே விளையாக அனுமதிக்க வேண்டாம். நாமும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லாமல் இருப்பது நல்லது.

    * அப்படி வெளியே செல்லும்போது, தொப்பி, சன்ஸ்கிரீன், சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும் கண்ணாடிகள் போன்றவற்றை அணிவிக்க வேண்டும்.

    * குழந்தைகளுக்கு லேசான, பருத்தி உடைகளை அணிவிக்க வேண்டும்.

    * குழந்தைகளுக்கு சத்தான உணவாக கொடுக்க வேண்டும். 

    * பழங்கள், காய்கறிகள், சூப்கள், தயிர் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் கொடுக்க வேண்டும். வறுத்த, எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    * குழந்தைகளுக்கு கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப நோய்கள், சூரிய ஒளியின் தாக்கம் பற்றி கூற வேண்டும்.

    * குழந்தைகளை வெயில் நேரத்தில் வெளியில் விளையாடுவதை தவிர்க்க, குழுவாக சேர்ந்து ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கதை கேட்பது, வீட்டிற்குள் விளையாடுவது என்று பழக்கலாம்.

    • 4 மாதம் ஆகிவிட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி இணை உணவுகள் கொடுக்கலாம்.
    • குழந்தை பிறந்து 7 மாதம் ஆகிவிட்டால், நன்கு மசித்த சாதம், தயிர், மசித்த ஆப்பிள் கொடுக்கலாம்.

    பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது. குழந்தைகள் வளர வளர தாய்ப்பால் மட்டுமே அவர்களது பசியைப் போக்காது. குழந்தைகள் வளர்ச்சிக்கு திட உணவுகளை கொடுக்க வேண்டும்.

    * குழந்தை பிறந்த முதல் மாதம் தாய்ப்பால் தான் முதல் உணவாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை எந்த ஒரு திட உணவுகளையும் கொடுக்கக்கூடாது. முதல் மாதத்தில் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

    * குழந்தை பிறந்த 2-வது மாதத்தில் ஒரு நாளைக்கு 7-8 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    * 3-வது மாதத்தில் தாய்ப்பால் மட்டும் போதுமானது. இந்த மாதத்தில் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

     

    * 4 மாதம் ஆகிவிட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி இணை உணவுகள் கொடுக்கலாம். பழச்சாறு கொடுக்கலாம். அதிலும் ஆரஞ்சு ஜூஸை குழந்தைக்கு கொடுப்பது நல்லது. பழச்சாறு வீட்டில் தயாரித்ததாக இருக்க வேண்டியது அவசியம்.

    * 5-வது மாதத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு திட உணவுகளைக் கொடுக்க வேண்டும். வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை மசித்து கொடுக்கலாம்.

    * 6-வது மாதத்தில் குழந்தை சில உணவுகளை உட்கொள்ள மறுத்தால், அந்த உணவுகளை மீண்டும் கொடுக்க வேண்டாம். இந்த மாதத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலுடன், திட உணவுகளை கொடுக்கலாம்.

    * குழந்தை பிறந்து 7 மாதம் ஆகிவிட்டால், நன்கு மசித்த சாதம், தயிர், மசித்த ஆப்பிள் அல்லது வாழைப்பழம், வேக வைத்து மசித்த காய்கறிகள் போன்றவற்றையும் கொடுக்கலாம்.

    * குழந்தை பிறந்து 8-9 மாதம் ஆகியிருந்தால், அவர்களுக்கு இதுவரை கொடுத்த உணவின் அளவை விட, சற்று அதிகமாகவே உணவுகளை கொடுக்கலாம். கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டாம். குறிப்பாக சாக்லேட், ஜூஸ், சிப்ஸ், கேக் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    * 10 மாத குழந்தைகளுக்கு வேக வைத்த காய்கறிகள், சாதம், பால், தயிர், பழங்கள் போன்ற அனைத்தையுமே கொடுக்கலாம்.

    • புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி ஏதும் இல்லை. நல்ல நண்பனாக நம்முடன் பயணிப்பவை புத்தகங்கள்.
    • படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களைப் பரிசளியுங்கள்.

    குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும் வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும். புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுத் திறனையும், கற்பனை ஆற்றலையும், நினைவாற்றலையும் பெற்று விடுகின்றனர். இத்தகைய ஆற்றலால் பள்ளிப் பாடங்கள் படித்தல் கூட எளிதாக வசப்பட்டு விடுகிறது.

    படிக்கும் போதே மகிழ்ச்சியைத் தருவது புத்தகங்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதில் வரும் பாத்திரங்களை மனதில் காட்சிப் படுத்தும் போதே கற்பனைத் திறன் விரிவடைகிறது. மனம் சோர்ந்திருக்கும் போது ஊக்கத்தையும் தருவது புத்தகங்கள் தான். அறம் சார்ந்த சிந்தனைகளையும் சமூகம் சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்வது புத்தகங்கள். ஒரு குழந்தையை நேரிய வழியில் நடக்க வைப்பதற்கும் சிறந்த சமூக செயற்பாட்டாளானாக அவனை உருவாக்குவதிலும் பங்கு வகிப்பது புத்தகங்களே.


    புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி ஏதும் இல்லை. நல்ல நண்பனாக நம்முடன் பயணிப்பவை புத்தகங்கள். நம்சிந்தனையைத் தூண்டவும், சிந்தனையைப் புதுப்பிக்கவும் உதவுவது புத்தகங்கள். நம் மனதை உழுது, அதில் நல்ல பண்புகளை விதைப்பது புத்தகங்கள். சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும். புத்தகங்களை வாசிக்கும் குழந்தைகளை சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.

    படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களைப் பரிசளியுங்கள். கதைகளை படிக்கும் குழந்தைகளை பின்னர் அவற்றை கூறச் செய்யலாம். கதை சொல்லிகளாக இருந்த பாட்டிகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை குழந்தைகளைக் கொண்டு நிரப்புங்கள். பின்னாளில் அவர்களை சிறந்த கதை சொல்லிகளாக உருவாக்கும் நல் வாய்ப்பை புத்தகங்கள் வழங்குகின்றன.

    முதலில் பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அப்பழக்கம் இயல்பாக மாறிவிடும். தேடலை உருவாக்கி அவர்களின் சிந்தனைகளைத் துாண்டிவிடும். புத்தகங்களைப் படிக்கும் போது அவை நம்மை அந்த காலத்திற்கே கடத்திச் செல்லும். இயற்கை காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். வரலாற்றுக் காலத்தின் சுவடுகளில் அவர்களை பதிய விடும்.

    • கொஞ்சம் திட்டமிடல் மற்றும் உதவியுடன், இதற்கு நீங்கள் நல்ல முறையில் தயாராகலாம். இது ஒன்றும் அத்தனை மோசமானதல்ல.
    • குடும்பத்தினரிடம் இருந்து உணர்வு நோக்கிலான மற்றும் உடல்ரீதியிலான உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்

    ஒரு குழந்தையை வளர்ப்பதே பெரிய விஷயம் தான். அப்படி இருக்க இரண்டு மூன்று குழந்தைகளை வளர்ப்பது என்றால் எப்படி இருக்கும்? உங்களுக்கு பிறக்க இருப்பது இரட்டைக்குழந்தை என தெரிய வந்திருந்தால் காத்திருக்கும் சவாலை சமாளிக்கும் வழிகளை பார்ப்போம்.

    இரட்டை குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் இரு மடங்கு மற்றும் மும்மடங்கு மகிழ்ச்சியை அளிக்கும் என சொல்லப்படுவது உண்மைதான் என்றாலும், சவால்களும் பல மடங்கு இருக்கும். ஒரே நேரத்தில் ஒரு குழந்தைக்கு மேல் வளர்க்கும் நிலைக்கு தயாராவது கடினம் என்றாலும், இந்த நிலையை எதிர்பார்த்தால் முதலில் அமைதியாக யோசியுங்கள். கொஞ்சம் திட்டமிடல் மற்றும் உதவியுடன், இதற்கு நீங்கள் நல்ல முறையில் தயாராகலாம். இது ஒன்றும் அத்தனை மோசமானதல்ல. இரட்டையர்கள் அல்லது மூன்று குழந்தைகள் வளர்வதை பார்ப்பது மற்றும் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது அற்புதமானது. வாழ்நாள் முழுவதும் இருக்க கூடிய விஷேச பந்தத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள்.


    இரட்டைக்குழந்தை பிறக்க இருப்பதை அறிந்தவுடன் மனைவியும், கணவரும் முதலில் உற்சாகம் அடைந்தாலும் துவக்கத்தில் இருந்தே கடினமாக இருக்கும். "பிரசவத்தில் இருந்து இது துவங்கியது. இரட்டை குழந்தைகளை சீக்கரமே பிரசவம் பார்க்க வேண்டும். உங்கள் சுரப்பிகளும் உச்சத்தில் இருக்கும். இரட்டைக்குழந்தைகள் பிறந்தவுடன் தூக்கமே இருக்காது. ஆர்ம்ப காலத்தில், குறிப்பாக பால் கொடுப்பது சவாலாக இருக்கும். ஒரு குழந்தைக்கு பால் கொடுத்த பின் இன்னொரு குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து கொண்டே இருக்கும். உதவிக்கு அம்மா அல்லது கணவர் உடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    வேலைக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். ஒரு குழந்தைக்கு மேல் பாலூட்டி வளர்க்க வேண்டிய நிலைக்கு ஏற்ப அம்மா தன்னை உடல்ரீதியாக தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளைக் கையாளுவதற்கு சகிப்புத்தன்மையும் பொறுமையும் தேவை.

    புதிய பொறுப்புக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கும் போது ஒரு அம்மாவுக்கு மனநிலை மாற்றங்களும், உடல் ரீதியிலான சவால்களும் உண்டாகும். ஒரு குழந்தைக்கு மேல் இருக்கும் போது இது இன்னமும் சிக்கலாகும். குடும்பத்தினரிடம் இருந்து உணர்வு நோக்கிலான மற்றும் உடல்ரீதியிலான உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். முதல் சில மாதங்களில் பயிற்சி பெற நர்ஸ்கள் அல்லது ஆயாக்கள் இருப்பது மிகவும் உதவியாக இருக்கும். நிதி விஷயங்கள், உதவி அமைப்புகள் மற்றும் பணி சார்ந்த பிரச்சனைகளை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் இவற்றால் பின்னர் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கலாம். குழந்தை பிறந்த பிறகு முதல் இரண்டு ஆண்டுகள் தான் உண்மையில் சவாலானது. சில நேரங்களில் வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் உருவாகலாம் என்பதால் இரட்டையர் அல்லது மூன்று குழந்தைகளுக்கு அதிக கவனம் தேவை. இந்த நேரத்தில் தான் குழந்தைகள் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொள்வதோடு, சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டு, சுவையும் வளர்த்துக்கொள்கின்றனர். ஏதேனுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மன அழுத்தம் உண்டாகலாம். பல நேரங்களில் புதிய நோய்த்தொற்றுகள் தானாகவே சரியாகிவிடக்கூடும். ஆனால் நல்ல குழந்தை நல மருத்துவரை அறிந்து வைத்திருப்பது அவசியம்.


    இதேபோல் குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பிறகு அவர்களை மிகவும் பொறுமையாக கையாள வேண்டும். குறிப்பாக இரட்டைக் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. இது அவர்களின் ஆரோக்கியம் மற்றும் மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வளரும் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒப்பிடப்பட்ட இரட்டையர்கள் ஒருவருக்கொருவர் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குகிறார்கள், இது அவர்களின் பிணைப்பு மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். பல இரட்டையர்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் தொடர்ச்சியான ஒப்பீடுகளின் காரணமாக மற்ற இரட்டையர்களிடமிருந்து வெறுப்பு உணர்வை வளர்த்துக் கொள்கிறார்கள். எனவே குழந்தைகளின் உணர்வைக் கேட்டு அதற்கேற்ப அவர்களை ஊக்குவிக்கவும். 

    • குழந்தைக்கு மாதங்கள் அதிகரிக்கும் போது மூக்கு அல்லது தொண்டை காற்றுப்பாதையில் சில அடைப்புகள் இருக்க கூடும்.
    • குழந்தை வாய் வழியாக சுவாசிக்கும் போது அது வேறு பல சிக்கல்களையும் கொண்டிருக்க கூடும்.

    குழந்தை விழித்து கொண்டிருப்பதைவிட தூங்கும் போது தான் அம்மாக்கள் அதிகமாக கவனிப்பர்கள். எல்லா அம்மாக்களுக்கும் இது பொருந்தும். குழந்தையின் கை விரல்கள் கால் விரல்கள், கால்கள், குட்டி கண்கள், மூக்கு துவாரங்கள், சிறிய காதுகள் என ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்க்க தோன்றும்.

    அவர்கள் தூங்கும் போது குழந்தையை உற்று நோக்கும் அம்மாக்கள் குழந்தை வாயை திறந்த நிலையில் தூங்குவதையும் கவனித்திருப்பார்கள். இது அடிக்கடி நிகழ கூடியதுதான் ஆனால் குழந்தை வாய் திறந்து தூங்கினால் அது கவனிக்க வேண்டிய விஷயம் தான்.

    பிறந்த குழந்தை 3 முதல் 4 மாதங்கள் வரை வாயால் சுவாசிக்கமாட்டார்கள். அதே நேரம் குழந்தைக்கு மாதங்கள் அதிகரிக்கும் போது மூக்கு அல்லது தொண்டை காற்றுப்பாதையில் சில அடைப்புகள் இருக்க கூடும். அதனால் தான் வாய்வழியாக சுவாசம் நடைபெறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இது பொதுவானது என்றாலும் இது சிக்கலான நிலைமைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது தொடரும் போது வாய் வழியாக சுவாசிப்பது குழந்தைக்கு பழக்கமாகிவிடும்.


    ஆனால் குழந்தை வாய் வழியாக சுவாசிக்கும் போது அது வேறு பல சிக்கல்களையும் கொண்டிருக்க கூடும். மூக்கு சுவாசம் போன்று இது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் மூக்கு வழியாக குழந்தை சுவாசிக்கும் போது நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் செல்வதற்கு முன்பு அதில் இருக்கும் மாசு வடிகட்டப்படுகிறது. நாசி சுவாசம் நுரையீரலில் ஆக்ஸிஜன் உறிஞ்சுதலை அதிகரிக்க செய்கிறது. குழந்தையின் உடலில் ஆக்ஸிஜன் அதிகரித்தால் அது குழந்தையின் உயிர் ஆற்றலை மேம்படுத்த செய்யும். மேலும் இது நுரையீரலுக்கு சுவாசம் சீராக கிடைக்கும். ஆனால் வாய் வழியாக சுவாசித்தல் நல்லதல்ல.

    குழந்தைக்கு சுவாச பிரச்சனை இருக்கும் போதும் இது நிகழலாம். அதனால் குழந்தை தூங்கும் போதெல்லாம் இதை கவனியுங்கள். இது குழந்தைக்கு சுவாச பிரச்சனை இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளாகவும் இருக்கலாம். குழந்தை வாய் திறந்து தூங்கும் போது மூச்சுத்திணறல் மூச்சு விடுதலில் சிரமம் இருந்தாலும் இந்நிலை உண்டாகலாம்.

    குழந்தைக்கு சளி உண்டாகும் போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் அல்லது சளியால் சுவாசம் தடைபடலாம். அதனால் குழந்தை வாய் வழியாக சுவாசிக்கலாம். அல்லது ஏதேனும் ஒவ்வாமையால் இது உண்டாகியிருக்கலாம்.எனினும் சளி இருக்கும் போது குழந்தைக்கு உடனே சரியாக்க முடியாது என்பதால் அவர்கள் வாய் வழியாகத்தான் நிம்மதியான சுவாசத்தை பெறுவார்கள்.

    வாய் வழியே சுவாசம் என்பது குழந்தைக்கு உண்டாகும் மூச்சுத்திணறல் அறிகுறியாகவும் இருக்கலாம். குழந்தை மல்லாந்து படுத்திருக்கும் போது குழந்தையின் காற்றுப்பாதை ஏதேனும் சிறு வகையில் அடைப்புக்கு உள்ளாகியிருக்கலாம். இதற்கு டான்சில் அல்லது அடினாய்டு காரணமாக சொல்லப்பட்டுள்ளது.


    குழந்தைகள் குறட்டை விடுகிறார்களா என்று நினைக்காதீர்கள். அம்மாக்களுக்கு தெரியும் குழந்தையின் குறட்டை சத்தம். குழந்தை தூங்குவதில் சிரமம் இருக்கும் போது, இருமல் வரும் போது, மூச்சுத்திணறல் இருக்கும் போது உண்டாக கூடும்.

    சில குழந்தைகள் வேறு நோய் தாக்குதல் காரணங்களாலும் மூக்கு வழியாக சுவாசிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கலாம். அதனால் குழந்தை வாய் வழியாகவே எப்போதும் சுவாசித்தால் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் குழந்தைக்கு சுவாசப்பாதை தொற்றுடன் வேறு அறிகுறிகள் இருந்தால் அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

    குழந்தை வாயை திறந்து தூங்கினாலே அது ஏதோ குறைபாடாக இருக்குமோ என்று பயப்பட வேண்டாம். சாதாரணமாக சளி பிரச்சனை இல்லாத நேரத்திலும் வாய் வழி சுவாசம் தொடர்ந்து இருந்தால் மட்டுமே தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
    • பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் அவர்களின் தனித்திறனை வளர்க்க உதவும்.

    குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும். வேலை, குடும்ப பொறுப்புகள் என எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

    ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தைகளை உடன் இருந்து வழிநடத்தி செல்வது அவர்களை சரியான வளர்ச்சி பாதையில் பயணிக்க வழிவகை செய்யும். அவர்களின் சிந்தனைகள், செயல்திறன்களை மேம்படுத்த உதவும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    அறிவாற்றல் வளர்ச்சி

    குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும். பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்தே பிள்ளைகள் வளர்வார்கள் என்பதால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது முக்கியமானது. பெற்றோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அதனை பின்பற்றி பிள்ளைகளும் சிறந்த மனிதர்களாக உருவாகுவார்கள்.

    எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களை தீர்க்கும் திறன்களை மேம்படுத்திக்கொள்வார்கள். எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாளுதல், ஒழுக்கம், நேர மேலாண்மை போன்ற நடைமுறைகள் மூலம் தங்கள் தகுதியை வளர்த்துக்கொள்வார்கள்.

    உடல் வளர்ச்சி

    ஆரோக்கியமாக இருப்பது, உடற்பயிற்சி செய்வது, சரியான உணவுகளை உட்கொள்வது என பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்த விஷயத்தில் பெற்றோரைதான் பிள்ளைகள் ரோல்மாடலாக கருதுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

     மன வளர்ச்சி

    குழந்தைகள் புதுமையாக கற்றுக்கொள்ள பெற்றோர்களின் செயல்பாடுகள் உதவுகின்றன. தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், ஒழுக்கநெறிகளை தவறாமல் பின்பற்றவது, பிறருடைய கருத்துக்களுக்கு செவி சாய்ப்பது, ஆட்சேபனை இருப்பின் மனம் நோகாதபடி விளக்கி புரியவைக்கும் விதம் போன்ற விஷயங்களை பெற்றோரை பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கேற்ற மனப்பக்குவம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.

    ஒப்பீடு

    குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது. எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் தந்தையின் செயல்பாட்டுடன் அதனை ஒப்பிட்டு பார்ப்பார்கள். குழந்தைகள் மனதில் எளிதில் எதிர்மறை சிந்தனைகள் குடிகொண்டு விடும்.

    தாங்கள் ஆசைப்படும் விஷயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் சட்டென்று மனதொடிந்து போய்விடுவார்கள்.

    பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால் அவற்றை எப்படி கையாள்வது என்பதை பக்குவமாக குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க வேண்டும். நேர்மறையான அணுகுமுறையுடன் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.

    சின்ன சின்ன வீட்டு வேலைகளை செய்ய வைத்து குடும்ப பொறுப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமிட வேண்டும். குழந்தைகளின் தேவைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்வதும், நிறைவேற்றுவதும் மிக முக்கியமானது.

    எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர் தங்களை நேசிக்கிறார்கள், அவர்களுக்கு நாம் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் வளரும். பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.

    • கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு.
    • சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம்.

    இன்றைய காலகட்டத்தில் வைத்தியசாலையில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகள் மூன்று முதல் மூன்றேகால் கிலோ வரை இருந்தால் ஆரோக்கியமான குழந்தை என கருதுகிறோம். சில குழந்தைகள் பிறக்கும் போது ஐந்து கிலோ எடைக்கு மேல் இருக்கும்.

    இத்தகைய குழந்தைகள் வளர்ச்சி அடையும் போது உடற்பருமன் பாதிப்பிற்கு ஆளாகி, எதிர்காலத்தில் அதாவது நாற்பது வயதிற்குள்ளாகவே இதய பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.

    இருப்பினும் இந்த கொழுப்பு இயல்பான அளவைவிட கூடுதலாக உடலில் சேகரிக்கப்படும் போது அது ரத்த நாளங்களில் படிமங்களாக தங்கி, ரத்த ஓட்டத்தினை சீர்குலைத்து, இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மருத்துவர்கள் உங்களுடைய கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவு மீது எப்போதும் தீவிர கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார்கள்.

    மேலும் நாற்பது வயதை கடந்த ஆண்களும், பெண்களும் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் காலகட்டத்தில் கொழுப்பின் அளவை அறிவதற்கான பிரத்தியேக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

    கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளாகும். இது தண்ணீரில் கரையாத காரணத்தால் தானாகவே கொழுப்பு புரதங்களாக மாறி, ரத்த நாளங்களில் படிவுகளாக படிகின்றன.

    கொழுப்புகள் புரதங்களாக மாறி ஹார்மோன்கள், விட்டமின்கள், செல் கட்டமைப்பை உருவாக்குதல், பராமரித்தல் போன்றவற்றிற்கு இன்றியமையாத பணியை மேற்கொள்கிறது. இதன் காரணமாக அனைவருக்கும் கொழுப்பு என்பது அவசியம்.

    ஆனால் இயல்பான அளவை விட கூடுதலாக அதிகரிக்கும்போது அவை பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெஞ்சு வலி, மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

     கொழுப்புகளில் நல்ல கொழுப்பு- கெட்ட கொழுப்பு என்ற இரண்டு வகை உள்ளது. இதில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் பாதிப்புகள் உயர்கிறது. அதீத கொழுப்பு சேர்வது என்பது சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். இவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி தங்களது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

     நீரிழிவு நோயாளிகள், நாள்பட்ட சிறுநீரக தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள், ஹைபோதைராய்டிசம், புற்றுநோய், முகப்பரு, உயர் ரத்த அழுத்தம், சமசீரற்ற இதயத்துடிப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி அதீத கொழுப்பு பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள பிரத்தியேக ரத்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த பரிசோதனைகளின் முடிவுகளின் படி உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக முதலில் மருத்துவர்கள் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துவர்.

    இதனைத் தொடர்ந்து உங்களது வயது, ஆரோக்கிய நிலை, மருந்துகளின் பக்க விளைவு ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக பிரத்தியேக மருந்தியல் சிகிச்சைகளை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர்.

    ×