என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீரிழிவு"
- உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
- பலர் ஜிம் சென்று மணிக்கணக்கில் உடற்பயிற்சிகளை செய்கிறார்கள்.
தற்போது உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இந்நாட்களில் இது ஒரு நோயாகவே கருதப்படுகிறது. ஏனெனில் உடல் பருமன் நீரிழிவு, கொலஸ்ட்ரால், பக்கவாதம் மற்றும் குழந்தையின்மை போன்ற கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் பிரச்சினை சரியான நேரத்தில் தீர்க்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மக்கள் உடல் எடையை குறைக்க கடினமாக உழைக்கிறார்கள்.
பலர் ஜிம் சென்று மணிக்கணக்கில் உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். பலர் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்தி பல கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். இருப்பினும், பலருக்கு உணவு முறை பற்றிய சரியான புரிதல் இல்லை. எனவே அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவர்களின் எடை குறைவதில்லை.
சில எளிய இயற்கையான வழிகளிலும் தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கலாம். ஆனால், நாம் எந்த வழியை பின்பற்றினாலும் அதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதிக சிரமம் இல்லாமல் உடல் எடையை விரைவாக குறைக்கும் சில எளிய வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலையில் எலுமிச்சை நீரை குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்றும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வெப்பத்தை உருவாக்குகிறது மற்றும் கலோரிகளை வேகமாக எரிக்கிறது. வேகமாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த எளிய முறையை பின்பற்றி பார்க்க வேண்டும்.
சாலட் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. உணவு உண்ட பிறகு சாலட் சாப்பிடுவது செரிமானத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்த சாலட்டை சாப்பிடுவதற்கு முன் உட்கொண்டால், அதிகப்படியான உணவைத் தவிர்க்கலாம்.
உணவிற்கு முன் சாலட் சாப்பிடுவதால் வயிறு நிரம்பி, குறைவாகச் சாப்பிடுவோம், அதிகமாக சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படும். இதனால் அதிக கலோரிகளை நாம் உட்கொள்ளாமல், குறைவான கலோரிகள் உடலுக்குச் செல்லும். இதன் மூலம் உடல் எடையும் வேகமாக குறையும். இரவில் ரொட்டி மற்றும் சாதம் இரண்டையும் தவிர்க்கவும். அரிசி மற்றும் ரொட்டி இரண்டிலும் கார்போஹைட்ரேட் உள்ளது.
இரவில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்பதால் உப்பசம் மற்றும் எடை கூடும். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசியை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதிக எடை கொண்டவர்கள் இரவில் சாதம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எண்டோகிரைன் சொசைட்டியின் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில், இரவில் தாமதமாக சாப்பிடுவது விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
உணவை தாமதமாக சாப்பிடுவதால், உடல் கொழுப்பை சரியாக எரிக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், இரவு உணவை இரவு 7 மணிக்கு முன்பே சாப்பிட வேண்டும். இதன் காரணமாக, உடலில் சேமிக்கப்படும் கொழுப்பு ஆற்றலாக மாறத் தொடங்குகிறது. ஆகையால் இரவு நேரத்தில் 7 மணிக்குள் உணவு உட்கொள்வதை பழக்கமாக்கிக்கொண்டால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
கொழுப்பு மிகுந்த, கலோரிகள் மிகுந்த தயிர், நெய், வெண்ணெய், சீஸ், இனிப்பு, பேக்கரிப் பண்டங்கள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். மாலை சிற்றுண்டிக்கு வடை, பஜ்ஜி, போண்டா, பீட்சா, பர்கர், சேவு, சீவல், சிப்ஸ், பப்ஸ், லேஸ், கடலைப்பருப்பு, கார்ன் ஃபிளேக்ஸ், முறுக்கு, மிக்சர், கார வகைகள், விதவிதமான ரொட்டிகள் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
பதிலாக வேர்க்கடலை, எள்ளுருண்டை, கடலை உருண்டை, பொரிகடலை, சுண்டல், முளைகட்டிய பயறு, காய்கறி கட்லெட், பழ சாலட் ஆகியவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள். மாலையில் பழச்சாறு/காய்கறி சூப் சாப்பிடுங்கள். ஐஸ்கிரீம், மில்க் ஷேக், கோக், குளிர்பானங்கள் வேண்டவே வேண்டாம். புரோட்டா, நூடுல்ஸ், ருமாலி ரொட்டி, ஃபிரைடு ரைஸ், நாண், பட்டர் நாண், பேல் பூரி, பானி பூரி போன்ற ஹோட்டல் உணவு வகைகளில் கலோரி மிக அதிகம். இவற்றைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.
கீரைகள், கத்திரிக்காய், புடலங்காய், சுரைக்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், முருங்கைக்காய், காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பாகற்காய், வாழைத்தண்டு ஆகியவற்றில் கலோரிகள் குறைவு. தினமும் சராசரியாக 500 கிராம் காய் நமக்குத் தேவை.
கிழங்குகள், மா, வாழை, பலா, சீத்தா, அத்தி, திராட்சை, சப்போட்டா ஆகியவற்றில் கலோரி அதிகம். ஆகவே, இவற்றைத் தவிருங்கள். அதற்கு பதிலாக, கொய்யா, மாதுளை, தக்காளி, சாத்துக்குடி, அன்னாசி, பேரிக்காய் சாப்பிடலாம். தினமும் 250 கிராம் பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
விரதம் இருக்காதீர்கள்; அடிக்கடி விருந்துக்கும் ஹோட்டலுக்கும் செல்லாதீர்கள். டிவி முன்னால் உட்கார்ந்து சாப்பிடுவதைத் தவிருங்கள். மது அருந்தாதீர்கள். தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி வேண்டாம்.
முட்டையில் வெள்ளைக் கருவைச் சாப்பிடலாம். மஞ்சள் கரு ஆகாது. ஃபிரைடு சிக்கன், தந்தூரி சிக்கன், ஆம்லெட் போன்ற எண்ணெயில் தயாரித்த அசைவ உணவு வகைகள் வேண்டாம்.
சமையலுக்குச் சூரியகாந்தி எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதன் அளவு ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 15 மி.லி. தேங்காய் எண்ணெய், பாமாயில், வனஸ்பதி ஆகியவற்றில் செறிவுற்ற கொழுப்பு அமிலம் அதிகமுள்ளது. இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, கொழுப்பு அதிகமாகி உடல் பருமனுக்கு வழிவகுக்கும். ஆகவே, இவற்றை தவிர்க்க வேண்டும். நினைத்தால் எண்ணெய் பயன்பாட்டைப் பெருமளவு குறைக்க முடியும்.
- முதல் தளத்திற்கு செல்வதற்கு கூட லிப்ட் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
- படிக்கட்டுகளை பயன்படுத்துவது பல்வேறு வகைகளில் இதயத்திற்கு பலன் அளிக்கும்.
அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் என உயரமான கட்டுமானங்களை கொண்ட இடங்களுக்கு செல்லும்போது பலரும் லிப்ட், எஸ்கலேட்டர் பயன்படுத்துகிறார்கள். முதல் தளத்திற்கு செல்வதற்கு கூட லிப்ட் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். நவீன சாதனங்களால் உடல் உழைப்பு குறைந்து கொண்டிருக்கும் நிலையில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தொழில்நுட்ப சாதனங்களை சார்ந்திருப்பது உடல் நலனை பலவீனப்படுத்திவிடும்.
சமீப காலமாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் சார்ந்த பிரச்சினைகள் விஸ்வரூபமெடுத்துக்கொண்டிருக்கின்றன. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது வேகமான நடைப்பயிற்சி மற்றும் ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இதயத்தின் ஆயுளை அதிகரித்து உடலை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
தினமும் நடைப்பயிற்சிக்கு செல்ல போதிய நேரம் இல்லாவிட்டாலும், ஏதாவதொரு வகையில் உடல் இயக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பது கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்கும். அதற்கான வழிகளில் ஒன்றாக, படிக்கட்டுகளை தேர்ந்தெடுக்கலாம். லிப்ட், எஸ்கலேட்டர் போன்றவற்றை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்துவது பல்வேறு வகைகளில் இதயத்திற்கு பலன் அளிக்கும். அது குறித்து பார்ப்போம்.
இதயத் துடிப்பு
நீங்கள் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கும்போது, தசைகள் வேலை செய்ய அதிக ஆக்சிஜன் தேவைப்படும். அதன் தேவையை பூர்த்தி செய்ய இதய துடிப்பு அதிகரிக்க தொடங்கும். அதனால் இதயம் ரத்தத்தை வேகமாக பம்ப் செய்யும். அப்போது தசைகளுக்கு ஆக்சிஜன் மட்டுமின்றி ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
ஆற்றல்
படிக்கட்டுகளில் நடக்க தொடங்கியதும் இதய துடிப்பு ஒவ்வொரு முறை அதிகரிக்கும்போதும் இதயத்தின் தசை சுவர்கள் அதிக அளவு ரத்தத்தை அழுத்துவதற்கு அதிக ஆற்றலுடன் சுருங்குகின்றன. இப்படி அதிக ஆற்றல் வெளிப்படுவது கால் தசைகள் உள்பட உடலின் திசுக்களுக்கு போதுமான ரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவும்.
ரத்த நாளங்கள்
படிக்கட்டு ஏறும்போது ரத்த ஓட்டத்திறன் அதிகரிக்கும். அது ரத்த நாளங்கள் விரிவடைவதற்கு வித்திடும். உடல் முழுவதும் ரத்த ஓட்டத்திற்கான தேவை பூர்த்தி செய்யப்படும். இதனால் மற்ற சமயங்களில் ரத்த ஓட்டம் எளிதாக நடப்பதற்கு வழி செய்கிறது. தசைகளுக்கு போதுமான ரத்தம் கிடைப்பதையும் உறுதி செய்கிறது.
ரத்த ஓட்டம்
ஒரு நிமிடத்திற்கு இதயம் பம்ப் செய்யும் ரத்தத்தின் அளவு 'கார்டியாக் அவுட்புட்' என குறிப்பிடப்படுகிறது. படிக்கட்டு ஏறும்போது இதயம் பம்ப் செய்யும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். உடலின் ஆக்சிஜன் தேவையையும் பூர்த்தி செய்துவிடும். உடல் உறுப்புகள் அனைத்திற்கும் ரத்தம் சென்றடைவதை உறுதி செய்வதாகவும் அமைந்துவிடும்.
காற்றில் இருந்து ஆக்சிஜனைப் பிரித்தெடுத்து ரத்த ஓட்டத்தில் கலக்க செய்வதற்கு நுரையீரல் கடினமாக உழைக்கிறது. இந்த ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் பின்னர் இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு தசைகளுக்கு செலுத்தப்படுகிறது. இது உடல் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றலை உருவாக்க பயன்படுகிறது.
ரத்த உறைவு
படிக்கட்டு ஏறுவதும் கார்டியாக் உடற்பயிற்சிகளின் ஒரு அங்கம்தான். தசை வலிமையை அதிகரிக்க செய்யும். எலும்புகளை வலுப்படுத்தும். மேலும் படிக்கட்டுகளில் ஏறும்போது உடலில் கலோரிகள் எரிக்கப்படும்.
படிக்கட்டு போன்ற பயிற்சியின் காரணமாக இதயத் துடிப்பு அதிகரிக்கும். அப்போது தமனிகளின் சுவர்களை தளர் வடைய செய்யும். வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை ரத்தக்குழாயில் அடைப்பதை தடுக்கும். அதனால் ரத்த உறைவு பிரச்சினை தவிர்க்கப்படும்.
- உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
- ராகியில் புரோலமைன், குளுட்டானின் உள்ளிட்ட அமினோ அமிலங்கள் உள்ளன.
கேழ்வரகில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு விவரங்களை பார்ப்போம். சிறுதானிய உணவுகளில் அரிசியை காட்டிலும் அதிகப்படியான புரதச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் உயிர் சத்துக்கள் அடங்கி உள்ளன. ஆதலால் தான் மருத்துவர்கள் சிறுதானிய உணவுகளை தற்பொழுது அதிகப்படியாக பரிந்துரை செய்கின்றனர். அனைத்து ஊட்டச்சத்துகளும் சிறுதானிய உணவுகளில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளன.
அரிசி மற்றும் கோதுமையை விட ஊட்டச்சத்து நிறைந்த ராகியில் அமைந்துள்ள புரோலமைன், குளுட்டானின் உள்ளிட்ட உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. ராகியில் முளைகட்டி பொடியாக்கி குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பது பழங்காலம் தொட்டு நம் பழக்கத்தில் உள்ளது. மேலும் ராகி நூடுல்ஸ், ராகி பணியாரம், ராகி சேமியா, ராகி இடியாப்பம், ராகி அல்வா, ராகி தோசை, ராகி அடை போன்றவைகளை தயாரிக்க முடியும். மேலும் ராகி முறுக்கு, ராகி மிக்சர், ராகி கேக், ராகி பிஸ்கட், ராகி லட்டு போன்ற நொறுக்கு தீனி வகை பலகாரங்களையும் செய்யலாம். கேழ்வரகு மாவில் எப்படி முறுக்கு செய்யலாம் என்று பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - ஒரு கப்
அரிசி மாவு - அரை கப்
கடலை மாவு- கால் கப்
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
எள்- ஒரு ஸ்பூன்
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்- ஒரு ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மாவு வகைகளுடன் உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளர வேண்டும். அதன்பிறகு சூடாக இருக்கும் எண்ணெய்யை மாவுக் கலவையில் ஒரு குழிக்கரண்டி அளவிற்கு சேர்க்க வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்கு பிசைய வேண்டும்.
வாணலியில் எண்ணெய்யை ஊற்றி காயவைக்க வேண்டும். எண்ணெய் காந்ததும் பிசைந்த மாவை முறுக்கு குழலில் போட்டு, சூடான எண்ணெய்யில் முறுக்குகளாக பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும். சுவையான ராகி முறுக்கு தயார்.
- 40 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 12 ஆயிரம் காலடிகள் நடப்பது நல்லது.
- குழந்தைகளை பொறுத்தவரை நடைப்பயிற்சி மேற்கொள்வது சாத்தியமில்லாதது.
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பலரும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். தினமும் குறிப்பிட்ட தூரம் நடப்பதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை நெருங்கவிடாமல் தற்காத்துக்கொள்ளலாம். சில நாள்பட்ட நோய் பாதிப்புகளில் இருந்தும் விடுபடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதனால் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.
எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? வயதுக்கு ஏற்ப நடக்கும் தூரம் மாறுபடுமா? வயதானவர்கள் குறைந்த தூரம் நடந்தால் போதுமா? என்ற கேள்வி நிறைய பேரிடம் எழுகிறது. ஒவ்வொருவரும் தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் காலடிகளாவது எடுத்து வைத்து நடக்க வேண்டும். 10 ஆயிரம் காலடிகள் என்பது சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடப்பதற்கு சமமானது. அப்படி நடப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நீரிழிவு, இதய நோய், பக்கவாதம், உடல் பருமன், மனச்சோர்வு, மார்பக புற்றுநோய் தொடர்பான நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவும். தினமும் 10 ஆயிரம் காலடிகள் எடுத்து வைத்து நடக்க முடியாவிட்டாலும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் காலடிகளாவது நடப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும். இருப்பினும் வயதுக்கு ஏற்ப நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளை பொறுத்தவரை நடைப்பயிற்சி மேற்கொள்வது சாத்தியமில்லாதது. அவர்களை நடக்க சொல்லி கட்டாயப்படுத்துவதை விட ஓடியாடி விளையாட அனுமதித்தாலே போதுமானது. வழக்கமான விளையாட்டுகளுடன் குதித்தல், மெதுவாக ஓடுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட வைக்க வேண்டும். பெரியவர்களை பொறுத்தவரை தினமும் 10 ஆயிரம் காலடிகள் எடுத்துவைத்து நடப்பது சிரமமானது. அவர்களால் 8 கிலோ மீட்டர் தூரம் நடக்க முடியாது. அதற்கு உடலும் ஒத்துழைக்காது.
வயது அடிப்படையில் எந்தெந்த வயதினர் எவ்வளவு தூரம் நடக்கலாம் என்பது பற்றி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதன் முடிவு உங்கள் பார்வைக்கு...
1. 40 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 12 ஆயிரம் காலடிகள் நடப்பது நல்லது.
2. 40 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 11 ஆயிரம் காலடிகள் நடப்பதை இலக்காக கொள்ளலாம்.
3. 50 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 10 ஆயிரம் காலடிகள் நடக்கலாம்.
4. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 8 ஆயிரம் காலடிகள் வரை நடக்கலாம்.
5. 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண்கள் தினமும் 12 ஆயிரம் காலடிகள் நடப்பதற்கு முயற்சி செய்யலாம்.
6. 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தினமும் 11 ஆயிரம் காலடிகள் வரை நடக்கலாம்.
7. உடல் எடையை குறைக்கும் நோக்கில் நடைப்பயிற்சி செய்பவர்கள் நடக்கும் அடிகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.
8. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தினமும் 12 ஆயிரம் அடிக்கு மேலும் நடப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
- பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்
- இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கா விட்டால் அது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) மற்றும் இதயத்தின் பம்ப் செய்யும் திறனை குறைத்து இதய செயலிழப்பையும் (ஹார்ட் பெயிலியர்) ஏற்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு இதய பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு நீரிழிவு நோய் இல்லாதவர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது 2 மடங்கு அதிகம்.
1. டைப் – 2 நோயாளிகளுக்கு உயிராபத்து அதிகம் வருவது இதய நோய்களால்
2. மற்றவர்களை விட நீரிழிவு உள்ளவர்களுக்கு 3 – 4 மடங்கு அதிகம் வரும்
3. பெண்களுக்கு (நீரிழிவு உள்ள) ஆண்களை விட அதிகமாக இதயநோய் வரும்.
மார்பு வலி, மாரடைப்பு, இரத்தக்குழாய் அடைப்பு, இதனால் உடலின் பல பாகங்கள் இரணமாகி, காயப்பட்டு, பயனற்று போதல் இவையெல்லாம் நீரிழிவு ஏற்படுத்தும் அபாயங்கள்.
இதய நோய் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்றலாம்:
1) புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மது அருந்துதல் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்துதல்,
2) ரத்தக் கொதிப்பு மற்றும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருத்தல்,
3) அதிக உடல் எடை இருந்தால், அதைக்குறைத்தல்,
4) உங்கள் மூன்று மாத ரத்த சர்க்கரையின் சராசரியான எச்.பி.ஏ1 சி யை 7 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருத்தல்,
5) மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளுதல்,
6) தினமும் உடற்பயிற்சி செய்தல்,
7) நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், புரதம் நிறைந்த பால், முட்டையின் வெள்ளை, கோழி இறைச்சி ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளுதல்.
நீரிழிவு வியாதி உள்ளவர்கள் மேல்மூச்சு, தலைச்சுற்றல், மயக்கம், தடுமாற்றம், கிறுகிறுப்பு, நெஞ்சில் பார உணர்வு, பளு அழுத்துவது போல் உணர்வு இவை இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும். இவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனடி இ.சி.ஜி மற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை சாப்பிடக் கூடாது என்று பொதுவாகவே கூறுவார்கள்.
- நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.
நீரிழிவு நோய் என்பது பொதுவாகவே பெரும்பாலான மனிதர்களுக்கு காணப்படுகிறது. நீரிழிவு நோய் வந்து விட்டாலே அடுத்தடுத்து பல நோய்களும் தொற்றிக் கொள்ளும். என்றுமே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை சாப்பிடக் கூடாது என்று பொதுவாகவே கூறுவார்கள்.
சில பேர் சர்க்கரையை கொஞ்சம் கூட சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். சில பேர் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து விட்டு தேன் மற்றும் நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்துவார்கள்.
தேனில் கிட்டத்தட்ட 300 வகைகள் உண்டு. ஒரு டீஸ்பூன் தேனில் 60 கலோரிகள் மற்றும் 17 கிராம் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சுண்ணாம்பு சத்து மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது.
தேனில் உள்ள அதிகமான அளவு கார்போஹைட்ரேட், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். வெள்ளை சர்க்கரையில் ஒரு டீஸ்பூனில் 13 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.
ஒரு டீஸ்பூன் தேனில், வெள்ளை சர்க்கரையை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் எப்போதாவது சர்க்கரைக்கு மாற்றாக தேன் சாப்பிடலாம். சர்க்கரையுடன் சேர்த்து கூடுதலாக தேன் சாப்பிடக்கூடாது.
மார்க்கெட்டில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த தேனை பயன்படுத்துவதை விட கொம்புத்தேன் என்று கிடைக்கும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தேனை பயன்படுத்துவது சிறந்தது. தேனில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக தேனை சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி. சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- தமிழ்நாட்டில் இட்லி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவாகும்.
- நீரிழிவு நோயாளிகள் அதிகமான அளவில் இட்லியை சாப்பிடக்கூடாது.
நீரிழிவு நோய் (Diabetes) என்பது உலகளாவிய கவலைக்குரிய நோயாக மாறி வருகிறது. உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. குறிப்பாக உலகிலேயே அதிக அளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர் என்பது அடுத்த அதிர்ச்சி செய்தி.
இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
நீரிழிவு நோயாளிகள் சில உணவுகளை உண்பது அவர்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. நீரிழிவு நோயாளிகளாக (Diabetes) இருந்தால், காலை உணவைக் கட்டாயம் தவிர்க்கக்கூடாது. உடலுக்கு ஆற்றலை வழங்கும்படியான ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இட்லி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவாகும். ஒரு இட்லியில் கிட்டத்தட்ட 58 கலோரிகள் இருக்கிறது. இதில் மாவு சத்து (கார்போஹைட்ரேட்) அதிகமாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு மிக அதிகமாக இருப்பதாலும், நார்ச்சத்து குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் அதிகமான அளவில் இட்லியை சாப்பிடக்கூடாது. எண்ணெய் மற்றும் கொழுப்பு இல்லாமல் இருப்பதும், சுலபமாக ஜீரணமாகி விடுவதும் இதன் நன்மைகளாக கருதப்படுகிறது.
அரிசி இட்லியை விட, ரவா இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி போன்றவற்றில் நார்ச்சத்து சற்று அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்லது. இட்லிக்கு தொட்டு சாப்பிடுவதற்கு தேங்காய் சட்னியை விட புதினா சட்னி, தக்காளி சட்னி அல்லது சாம்பார் நல்லது. அரிசி இட்லியாக இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு சாப்பிடலாம். ரவா இட்லி, ராகி இட்லி அல்லது ஓட்ஸ் இட்லியாக இருந்தால் ஒரு நாளைக்கு மூன்று இட்லி சாப்பிடலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாக வெளியேறும்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம் ஏற்படும் பிரச்சனை அதிகமாக வாய்ப்புள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம் ஏற்படும் பிரச்சனை அதிகமாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாக வெளியேறும். இதன் காரணமாக நீரிழப்பு அதிகளவில் இருக்கும். இதன் காரணமாகவும் தலை சுற்றல் ஏற்பட்ட்டு, மயக்கம் வரும். இரத்த சர்க்கரை அளவு அதிகமாதல், இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு காரணமாக திடீரென்று மயக்கம் வர வாய்ப்புகள் அதிகமுள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு தலை சுற்றல் ஏற்படுவதற்கு கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றோ அதற்கு மேலும் இருக்கலாம்:
ரத்த சர்க்கரை தாழ்நிலை (ஹைபோ கிளைசீமியா), ரத்த சர்க்கரை அதிகரித்தல், நீரிழப்பு (வயிற்றுப்போக்கு, வாந்தி அல்லது வேறு காரணங்களாலோ உடலில் இருந்து அதிகப்படியான நீரை இழக்கும் போது ஏற்படும் நிலை), குறைந்த ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், மீனியர் நோய் (இது ஒரு சமநிலை கோளாறு ஆகும்.
இதில் காதில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அதிகம் சேர்வதால் காதுகளுக்குள் அழுத்தம் எற்படும். இந்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும் போது மூளைக்கு சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு தலை சுற்றல் ஏற்படுகிறது), கழுத்து எலும்பு தேய்மானம், இதய கோளாறு, ரத்த சோகை, அதிகமான கொலஸ்ட்ரால் அளவு, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை, உட்கொள்ளும் மாத்திரைகள் செயல்பாடுகள். (உதாரணமாக - சர்க்கரை அளவை குறைக்க, கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு பாதிப்புக்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் செயல்பாடுகள்)
எனவே நீரிழிவு நோயாளிகள் தலைசுற்றல் ஏற்படும் போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனை செய்து மேற்கூறிய காரணங்கள் ஏதேனும் உள்ளதா என கண்டறிந்து, அதற்குரிய மருத்துவம் செய்து கொள்வது அவசியம்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு கால் நகங்கள் கருப்பாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் வருமாறு:
பொதுவாக பலரையும் வாட்டக்கூடிய நீரிழிவு நோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய் என்று இதனை கூறலாம். இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. இல்லாவிடின் உயிர் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு கால் நகங்கள் கருப்பாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் வருமாறு:
பூஞ்சை தொற்று: இது விரலின் நுனியில் தொடங்கி பின்னர் மையத்திற்கு பரவுகிறது. பொதுவாக கால் விரல்களை பாதிக்கிறது. குறிப்பாக காலில் ஷூ அல்லது விரல்களை மூடுமாறு அணியும் காலணிகளை அணிபவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெர்மெட்டோபைட் எனும் பூஞ்சையால் ஏற்படும் இந்த தொற்று ஒனைக்கோமைக்கோசிஸ் அல்லது டினியா உன்குயம் என்று அழைக்கப்படுகிறது.
நகங்களில் ஏற்படும் காயம்: நகத்தின் மேல் காயம் ஏற்பட்டால் நகத்தின் கீழ் உள்ள ரத்த நாளங்களை வெடிக்க செய்து, ரத்தம் அதிகமாக சேர்ந்து நகத்தின் நிறத்தை மாற்றும். பொருந்தாத காலணிகள் அல்லது இறுக்கமான காலணிகளை அணிந்து நடப்பது, ஓடுவது அல்லது வேலை செய்வதால் ஏற்படும் அழுத்தம் அல்லது காயங்களால் நகத்தின் நிறம் மாறலாம்.
மெலனோமா: சில சமயம் ஓர் அரிய நிகழ்வாக தோலில் ஏற்படக்கூடிய மெலனோமா புற்றுநோய் காரணமாக நகத்தின் நிறம் கருமையாக மாறும்.
நோய் பாதிப்பு: இதய நோய், சிறுநீரக பாதிப்பு அல்லது ரத்த சோகையினால் கூட நகத்தின் நிறம் கருப்பாக மாறலாம். உங்கள் கால் நகம் கருப்பாக மாறும் போது மருத்துவரிடம் சென்று கலந்தாலோசித்து அது குறித்து தகுந்த பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரையை பின்பற்ற வேண்டும்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
- இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.
உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.
நீரிழிவு பாதிப்பு உள்ள நோயாளிகள் தங்கள் உணவு முறையில் சிறு மாற்றத்தைச் செய்தாலேயே நீரிழிவு நோயைப் பெருமளவு குறைக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நெல்லை நேரடியாக வெயிலில் உலர்த்தி, வேக வைக்காமல், ஆலையில் அரைத்து அதன் உமி, தவிடு நீக்குவதால் கிடைக்கும் அரிசி பச்சரிசி ஆகும். நெல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் ஊறிய நெல்லை அரைப்பதத்திற்கு வேகவைத்து, வெயிலில் உலர்த்தி, பின்னர் உமியை நீக்குவதால் கிடைக்கும் அரிசி புழுங்கல் அரிசி ஆகும்.
நெல்லை வேகவைக்கும்போது உமியில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி, ஒரைசினால் போன்ற ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் அரிசிக்குள் திணிக்கப்படுவதால் புழுங்கல் அரிசி அதிக ஊட்டச்சத்து உள்ளதாக திகழ்கிறது. புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) 38 ஆகும், ஆனால் பச்சரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் 55 ஆகும்.
புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் பச்சரிசியை விட குறைவாக இருப்பதாலும், புழுங்கல் அரிசியில் வைட்டமின் பி, ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், நார்ச்சத்து பச்சரிசியை விட அதிகமாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே சிறந்தது.
புழுங்கல் அரிசி ஊற வைப்பது, வேக வைப்பது, உலர்த்துவது என்ற மூன்று நிலைகளை கடந்து பெறப்படுவதால் ஜீரணத்தை எளிதாக்கி வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. புழுங்கல் அரிசியில் ஆந்தோசையனின் என்ற ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அளவு அதிகமாக உள்ளது.
இது செல்களில் ஏற்படும் அழற்சியையும், ஃபிரீரேடிகல்கள் பாதிப்பையும் குறைக்கிறது. பச்சரிசியை ஒப்பிட்டு பார்க்கும்போது, புழுங்கல் அரிசியில் அதிகமான அளவு கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ் ஆகியவை இருக்கிறது. இத்தகைய நன்மைகளை பெற்றிருக்கும் புழுங்கல் அரிசி, நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட சிறந்ததாக கருதப்படுகிறது.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health