search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
    • உள்துறை மந்திரி அமித்ஷா வந்து செல்லும் பகுதிகளில் தென்காசி மாவட்ட காவல்துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தென்காசி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனை ஒட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இதைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வருகிற 5-ந்தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலமாக தென்காசி அருகே இலஞ்சியில் உள்ள ராமசாமி பிள்ளை பள்ளியில் வந்து இறங்குகிறார்.

    பின்னர் அவர் ஆசாத் நகரில் இருந்து தென்காசி புதிய பஸ் நிலையம் வரை திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார் என தென்காசி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா வந்து செல்லும் பகுதிகளில் தென்காசி மாவட்ட காவல்துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது.
    • 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த வீ.கே.புதூர் அருகே உள்ள வீராணம் சாலையில்

    வீ.கே.புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது அவர் நபர் வீராணம் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த சுரேஷ்(வயது 34) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பிடித்து அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக விசாரணை செய்ததில் சுரண்டை அம்மன்கோவில் தெருவை சேர்ந்த நாக ராஜா(35) என்பவரிடமிருந்து வெடி மருந்துகள் வாங்கி 8 நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்ததாக அவர் தெரிவித்தார்.

    மேலும், அதில் 2 குண்டுகளை சுரண்டையை சேர்ந்த மனோ சங்கர் என்பவரிடமும், ஒரு குண்டை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடமும் கொடுத்து வைத்திருப்பதாகவும், 3 குண்டுகளை கடந்த 30-ந்தேதி வீராணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் சுரேஷ் மற்றும் கார்த்திக் சேர்ந்து வெடித்து பள்ளி சுவற்றை சேதம் செய்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து சுரேஷ், நாகராஜா, கார்த்திக், மனோ சங்கர் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டனர்
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள புல்லுக்காட்டுவலசை சுடலைமாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ராஜா (வயது 20). அதே ஊரை சேர்ந்தவர்கள் கணேசன் மகன் மூர்த்தி(23), பேச்சி மகன் ஆனந்த் (23). இவர்கள் 3 பேரும் கட்டிட தொழிலாளிகள்.

    இந்நிலையில் 3 பேரும் நேற்று மாலையில் சக நண்பரான ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை சேர்ந்த ராமர் (23) என்பவரை தங்களது ஊரில் நடைபெறும் கோவில் கொடை விழாவை காண அழைப்பதற்காக 2 மோட்டார் சைக்கிளில் ஊத்துமலைக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அவரை அழைத்துக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் மூர்த்தி, ராஜா மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ராமர், ஆனந்த் ஆகிய 4 பேரும் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள கே.டி.சி. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் இரவில் புல்லுக்காட்டு வலசை நோக்கி 4 பேரும் சென்று கொண்டிருந்தபோது பாவூர்சத்திரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரமேஷ்(30) என்பவர் வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் நோக்கி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அவர்களது மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது.

    இதில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டு அனைவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். இதனை அந்த வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தார். அவர்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டனர். அப்போது ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

    மற்ற 4 பேரையும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ஊத்துமலையை சேர்ந்த ராமர் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கிய ராஜா, மூர்த்தி, ஆனந்த் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிள்களும் சுக்குநூறாக நொறுங்கியது.

    • தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த லட்சுமணன் செருப்பு தைக்கும் இரும்பால் மாரியப்பனின் மார்பில் குத்தினார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து லட்சுமணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேலக்கடையநல்லூர் இந்திரா நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). அதே பகுதியில் வசிப்பவர் லட்சுமணன் (50).

    நேற்று மாலை மாரியப்பன் தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக லட்சுமணன் வீட்டுக்கு அருகே சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த லட்சுமணன் செருப்பு தைக்கும் இரும்பால் மாரியப்பனின் மார்பில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மாரியப்பனை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    கொலை குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து லட்சுமணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.
    • காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    ஆலங்குளம்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. உங்கள் பிள்ளைகள் எங்களின் வெற்றி என்பது வரலாற்றிலே மாபெரும் புரட்சி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்.

    ஒன்றிய அரசு மாநிலத்தின் மொத்த வருமானத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, மாநிலங்கள் மீது அதிகாரத்தை செலுத்த முயலுகின்றது. அதிகாரம் பரவலாக வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கம்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தின் தன்னாட்சி என்பதுதான் நம்முடைய இலக்கு. இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.

    அப்படியென்றால் இந்தியாவை யார் ஆள்வது என்ற கேள்வி எழுகிறது. வெற்றி பெறும் மாநிலக் கட்சிகள் சுழற்சி முறையில் இந்தியாவை ஆள வேண்டும். அதுதான் மிகச்சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.

    பேரிடர் காலங்களில் ஆடு, மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது.

    இது மற்றவர்களுக்கு தேர்தல் களம், நமக்கு போர்க்களம். இந்த போர்க்களத்தில் அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன் என வேறுபாடு பார்க்க கூடாது. உடலோடு ஒட்டிப்பிறந்த அண்ணன், தம்பியாக இருந்தால் கூட லட்சியத்திற்காக வென்றால் வெட்டி வீசுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். பெற்ற தாய் தந்தையரே வந்தால் கூட எதிரிகள் தான்.

    காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது

    பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தென்காசி தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கிருஷ்ணசாமி அறிவித்தார், இதனையொட்டி, டிவி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் அவர் விண்ணப்பித்தார். ஆனால் தேர்தல் ஆணையம் இன்னும் சின்னத்தை ஒதுக்கவில்லை.

    இந்நிலையில், தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    • கேக் கெட்டு போனதை பார்த்து குழந்தைகளின் தாய் அதிர்ச்சி.
    • குழந்தைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவருக்கு ஸ்ரீரச்சனா மற்றும் நிஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் குழுந்தையின் பிறந்தநாளை ஒட்டி, பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அய்யங்கார் பேக்கரியில் கேக் வாங்கி கொடுத்து, பிறகு அங்கிருந்து சென்னை திரும்பியுள்ளார்.

    பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கேக்கை வெட்டிய குழந்தைகள், அதனை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் கேக் கெட்டு போய் இருந்ததை பார்த்து குழந்தைகளின் தாய் அதிர்ச்சி அடைந்தார். கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில், குழந்தைக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. உடனே குழந்தைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    கேக் கெட்டு போன விஷயம் தொடர்பாக குழந்தைகளின் தந்தை பேக்கரியை தொடர்பு கொண்ட பேசியுள்ளார். இதற்கு பதில் அளித்த பேக்கரி நிறுவனம், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் நடந்தேரிய தவறுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதாக தெரிவித்து இருக்கிறது. எனினும், இதை ஏற்க மறுத்த குழந்தைகளின் தந்தை பேக்கரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக தந்தை அளித்த புகாரின் கீழ் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேக்கரியில் சோதனை நடத்தினர். சோதனையில் சுமார் 50 கிலோ கெட்டுப் போன இனிப்பு மற்றும் தின்பண்டங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பேக்கரிக்கு அபராதமும், நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

    • பறக்கும் படை மற்றும் நிலையான படை குழுவினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
    • பறிமுதல் செய்த பணத்தை வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    தென்காசி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலையான படை குழுவினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் கடந்த 2 நாட்களாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட லட்சக்கணக்கான பணத்தை பறக்கும் படையினர் பறி முதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து தென்காசியை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த ஒருவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் வாங்கி சோதனை செய்து பார்த்தனர். அதில் கட்டுகட்டாக ரூ.35 லட்சம் இருந்தது. இதையடுத்து அதன் உரிமையாளரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தியதில், அவர் தென்காசி அருமனை தெருவை சேர்ந்த செய்யது அலி (வயது 32) என்பது தெரியவந்தது.

    மேலும் செய்யது அலி தென்காசியில் நகைக்கடை நடத்தி வருகிறார். மதுரைக்கு நகை வாங்குவதற்காக பஸ்சில் பணத்துடன் சென்ற நிலையில், அங்கு நகை வாங்கவில்லை என்பதால் கொண்டு சென்ற பணத்தை அப்படியே திரும்பவும் கொண்டு வந்ததாக கூறினார்.

    ஆனாலும் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நகை, ரூ.2,500 மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புதுத் தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன்.

    கடந்த வாரம் 13-ந்தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே மின்மீட்டர் பெட்டிக்குள் சாவியை வைத்துவிட்டு கணவன்-மனைவி 2 பேரும் பள்ளிவாசலுக்கு இரவு தொழுகைக்கு சென்றார்.

    தொழுகை முடிந்த பிறகு இரவு வீட்டுக்கு வந்த போது, 10 பவுன் நகை, ரூ.2,500 மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, சுதாகர் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டது கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தீன் முகமது பாதுஷா (வயது 20) என்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அந்த வாலிபரிடம் இருந்த அனை த்து பொருள்களையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    • கணேஷ் குமாரும், முத்துக்குமாரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
    • விபத்து குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 42). இவர் வியாபார நிமித்தமாக தனக்கு சொந்தமான மினி லோடு வேனில் கேரள மாநிலத்திற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். வேனை தளவாய்புரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(32) என்பவர் ஓட்டி வந்தார்.

    லோடு வேன் இன்று அதிகாலையில் புளியங்குடி எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சங்கரன்கோவில் பகுதியில் இருந்து கனிமவளம் ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கனிமவள லாரியும், லோடு வேனும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    இந்த பயங்கர விபத்தில் லோடு வேனின் முன்பக்க கேபின் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் கணேஷ் குமாரும், முத்துக்குமாரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரையும் மீட்டனர். ஆனால் எனினும் பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். கணேஷ்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அவரை போலீசார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • காரை ஓட்டிவந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரிடம் விசாரித்தனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு தலைமையிலான குழுவினர் இன்று காலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் நெல்லை-சங்கரன்கோவில் சாலையில் சின்னகோவிலான்குளம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, நெல்லையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 பணம் இருந்தது.

    இதுகுறித்து காரை ஓட்டிவந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரிடம் விசாரித்தனர். ஆனால் அவரிடம் முறையாக ஆவணம் எதுவும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அதிகாரியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

    • கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது இந்த தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் 3-வது இடம் பிடித்தார்.
    • தென்காசி தனி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கலாமா என கட்சி தலைமை யோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா ஆகிய பிரதான கட்சிகள் தனித்தனியாக கூட்டணி அமைத்து வருகின்றன.

    இதில் பா.ஜனதா தனது தலைமையில் 3-வது கூட்டணி அமைத்து இந்த முறை தமிழகத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்ற களப்பணியை தீவிரமாக செய்து வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவின் கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. அவர்களுடன் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


    இதில் த.ம.மு.க. நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தனது கட்சிக்கு 2 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா எம்.பி. பதவியும் வழங்கவேண்டும் என்று கேட்டதாகவும், அவ்வாறு கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை எனில் ஒரு தொகுதியை கண்டிப்பாக கேட்டு பெற திட்டமிட்டி ருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு ஒரு சீட்டுக்கு பா.ஜனதா சம்மதம் தெரிவிக்கும்பட்சத்தில் தென்மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் த.ம.மு.க. போட்டியிடும். அந்த சீட் தென்காசி தொகுதியாக இருக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் பலரும் பேசி வருகின்றனர்.

    தென்காசி தொகுதி ஜான்பாண்டியனின் கட்சிக்கு ஒதுக்கப்படும்போது, அவர் தனது மகளான வினோலின் நிவேதாவை களமிறக்க வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேச்சுகள் அடிபடுகின்றன. ஏற்கனவே அவர் சில மாதங்களாக தென்காசியை மையமாக கொண்டு பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார் என்பதால் அந்த தொகுதிக்கு அவர் அதிகமாக முனைப்பு காட்டுவதாகவே தெரிகிறது.


    இதுஒருபுறம் இருக்க பா.ஜனதாவுக்கு ஆதரவாக பேசி வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, திடீரென அ.தி.மு.க. பக்கம் தாவி உள்ளார். அவர் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து தென்காசி தனி தொகுதியை கேட்டு பெற்று போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில் அந்த தொகுதி தனக்கு கிடைக்காது என்பதை தெரிந்து கொண்டுள்ளார். இதனால் அந்த தொகுதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் அவர் சேர்ந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதற்கு முனைப்பு காட்டுவதாகவும் தெரிகிறது.

    அதே நேரத்தில் தென்காசி தொகுதியில் இந்த முறை பா.ஜனதா வேட்பாளரே நேரடியாக தாமரை சின்னத்தில் களம் காணவேண்டும் என்பது அக்கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த மாவட்டத்தை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக அக்கட்சியின் ஸ்டார்ட் அப் பிரிவு மாநில நிர்வாகி விஸ்வை ஆனந்தன் வேலை செய்து வருகிறார். அவர் போட்டியிடும்பட்சத்தில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என அவர்கள் நம்புகின்றனர்.

    கடந்த 1998-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சுமார் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோற்றது என்பதால், கூட்டணிகளுக்கு இந்த தொகுதியை ஒதுக்க வேண்டாம் எனவும் அக்கட்சியினர் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.


    கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது இந்த தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் 3-வது இடம் பிடித்தார். தற்போது பா.ஜனதா கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்துள்ளதால் அக்கட்சியின் நிர்வாகிகளும் தென்காசி தொகுதியை பெற விரும்புகிறார்கள் என்று பேசப்படுகிறது.

    இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக தி.மு.க.வை சேர்ந்தவர் இருந்து வருகிறார். இதனால் இந்த முறையும் தி.மு.க.வுக்கே தென்காசியை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியினர் தலைமையிடம் கேட்டு வருகின்றனர். தொண்டர்களின் கோரிக்கையை தி.மு.க. நிறைவேற்றும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

    அதேநேரத்தில் இந்த தொகுதியில் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியும் அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால், அவர்களும் தி.மு.க. கூட்டணியில் தென்காசியை ஒதுக்க கேட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை வழங்கப்பட்ட தொகுதிகளில் சிலவற்றில் தி.மு.க. நேரடியாக களம் காண திட்டமிட்டுள்ளதால், அவர்களுக்கு போட்டியிடுவதற்கான தொகுதி குறையாமல் இருக்க தென்காசி தனி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கலாமா என கட்சி தலைமை யோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ×