search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்"

    • பொதுமக்களிடையே ஆன்மீகம் அதிகரித்தால் நாடு நன்றாக இருக்கும்.
    • வெளிநாட்டில் இருந்து சாமி சிலைகள் கொண்டு வரவேண்டும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- ஆன்மீகம் அதிகமானால் குற்றம் களையும். வீடுகளில் அமைதி ஏற்படும். தமிழகத்தில் உள்ள சைவ வைணவ கோவில்களின் பழங்கால சொத்துகள் மூலம் ரூ.28 கோடி வருமானம் வருகிறது. இதில் ஒரு கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை திருப்பி கோவிலுக்கு வழங்க வேண்டும்.

    12 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை. 22 ஆயிரத்து 600 ஏக்கர் காலி இடத்தில் கடந்த 8 மாதத்தில் மட்டும் வாடகை பாக்கி ரூ.151 கோடி உள்ளது. பழமையான தொன்மையான 5 ஆயிரம் கோவில்களை புதுப்பிப்பதாக திருப்பணி செய்ததாக கூறுகின்றனர். இதில் கமிஷன் அடிக்கிறார்கள்.

    திருப்பணி என்ற பெயரில் பழமையான கல்வெட்டுகள் அழிந்து விட்டது. பழனியில் 16-ம் நூற்றாண்டிற்கு முன்பான கல்வெட்டுகளை அழிந்து விட்டது. திருப்பணி என்ற பெயரில் தொன்மையை அழித்துக்கொண்டு வருகின்றனர்.

    திருப்பணியை இந்து சமய அறநிலையத்துறை செய்ய தகுதி இல்லை. கோவில் புதுப்பிக்கும் பணியை மாநில ஆர்க்காலஜி துறை தான் செய்யவேண்டும். கோவில்களில் அனைத்தையும் செய்பவர்கள் அர்ச்சகர்கள். இவர்களை காப்பாற்றவில்லை என்றால் கோவில்கள் காலியாகிவிடும்.

    இன்னும் 15 வருடத்தில் 26 ஆயிரம் கோலில்களில் அர்ச்சகர்கள் இருக்க மாட்டார்கள். அர்ச்சகர்களை காப்பாற்ற சம்பளம் கொடுக்க வேண்டும். வசதி இல்லாத 1500 ஆண்டுகளுக்கு முன்பான 10 ஆயிரத்து 652 தொன்மையான கோவில்கள் அனைத்தும் கேட்பாரற்று இருக்கிறது.

    பொதுமக்களிடையே ஆன்மீகம் அதிகரித்தால் நாடு நன்றாக இருக்கும். இல்லையென்றால் சீரழியும். சைவ வைணவர்களின் ஒன்றுமை உடைந்து நொறுக்கி உள்ளது. 2012-ம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில் இருந்து 2 ஆயிர்து 622 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் 2012-ம் ஆண்டு முன்பு ஏன் இந்தளவு சிலைகள் மீட்க முடியவில்லை. அமெரிக்க போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசுடன் பேசி மீதமுள்ள சிலைகளை மீட்க வேண்டும்.

    உச்சக்கட்ட நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்த வேண்டிய துறையாக உள்ளது. ஆர்வம் குறைவான அதிகாரிகளை உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்டதால் 2020 ல் இருந்து பல முக்கிய வேலைகளை செய்யவில்லை.

    கடந்த மாதம் கோவில்களில் இருந்து ரூ.28.49 கோடி எடுத்துள்ளனர். விளம்பரத்திற்கு நான் அடிமை கிடையாது. வெளிநாட்டில் இருந்து சாமி சிலைகள் கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்தர்கள் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வரிசையாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • குன்றத்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    சென்னை:

    சென்னையில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பல கோவில்களில் 1-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் புத்தாண்டையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வரிசையாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் புத்தாண்டு தரிசனத்துக்காக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சிறப்பு அபிஷேகத்துக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சென்னை தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    வடபழனி முருகன் கோவில் புத்தாண்டையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முருக பெருமான் தங்க நாணய அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது.

    பின்னர் பகல் 12 மணிக்கு தங்க கவச அலங்காரமும், மாலையில் ராஜ அலங்காரமும் நடக்கிறது. புத்தாண்டை முன்னிட்டு இரவு 9 மணிக்கு கோவில் நடை மூடப்படாது என்றும் இரவிலும் பக்தர்கள் உள்ள வரை சாமியை தரிசனம் செய்து செல்லலாம் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வெளியே சிறப்பு தரிசன டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி சாமியை தரிசனம் செய்து செல்லும் வகையில் கோபுர வாசல் முதல் 150 அடிக்கு நிழற்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பூங்காநகர் ராசப்பா தெருவில் கந்தகோட்டம் முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் தொடங்கப்பட்ட நாள் டிசம்பர் 31-ந் தேதி ஆகும். இதை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். இதைத்தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சாமி ஊர்வலம் நடைபெறும். மேலும் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பொது மக்களுக்கு சாமி தரிசனம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    திருவொற்றியூர் தேரடியில் அமைந்துள்ள வடிவுடையம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி 1-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. பின்னர் சாமி தரிசனம் தொடர்ந்து நடைபெறும். மாலை 5 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். பின்னர் 6.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை சாமி தரிசனம் நடை பெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    தி.நகரில் உள்ள பத்மாவதி தாயார் சன்னிதானத்தில் புத்தாண்டையொட்டி 1-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சாமிக்கு விசேஷ அலங்காரங்கள், தீபதூப ஆராதனைகள் நடைபெறுகிறது. பின்னர் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்

    திருமுல்லைவாயலில் உள்ள பச்சையம்மன் மன்னாதி ஈஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரம்ம முகூர்த்த நேரமான 4.30 மணி முதல் 6 மணிக்குள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பூப்பந்தல் அமைத்து சாத்துப்படி அலங்காரம் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    குரு தலமான பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவல்லீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டிற்கு வருகை தருவார்கள். டிசம்பர் 31 இரவு முதல் பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வருவார்கள். எனவே பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட்டுள்ளன. சென்னையின் பிற பகுதிகளிலிருந்து திருவேற்காடு வந்து செல்ல மாநகர பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக சிறப்பு வரிசை ஏற்படுத்தப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோபூஜை, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 1-ந்தேதி இரவு 10 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் புத்தாண்டை யொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பின்னர் பக்தர்கள் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு வழங்குவதற்காக 25 ஆயிரம் லட்டுகளும் தயார் செய்யப்படுகிறது. குன்றத்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் புத்தாண்டு முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜையுடன் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு உற்சவர் பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.
    • விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த காங்கேயநத்தம் கிராமத்தில் ரெங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 4 தலைமுறைகளாக பலருக்கு குல தெய்வ கோவிலாக இருந்து வருவது வீரம்மாள் கோவில். அந்த வகையில் விஜயகாந்த் தனது தந்தை வழியில் வீரம்மாள் கோவிலுக்கு வரத்தவறியதில்லை.

    இந்த கோவில் திருப்பணிகளுக்காக ஏராளமான நன்கொடைகளை வாரி வழங்கிய வள்ளலாக திகழ்ந்த விஜயகாந்த், தன்னால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையிலும் தனது மனைவி, மகன்களை அனுப்பி வைத்து உதவிகள் செய்து வந்துள்ளார். கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.

    சுப நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அதனை தொடங்கும் முன்பு வீரம்மாள் கோவிலுக்கு விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்திருந்து பூஜைகளில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். குறிப்பாக மகா சிவராத்திரி தினத்தன்று மனைவி, மகன்களுடன் வந்து இரவில் கோவிலில் தங்கி படையலிட்டு, 6 கால பூஜையிலும் பங்கேற்று வழிபாடு நடத்தியுள்ளார்.

    பின்னர் கோவிலில் இருந்து புறப்படும் முன்பாக அங்கு வரும் பங்காளி முறை கொண்ட அனைவரையும் அழைத்து நலம் விசாரிப்பதோடு, அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகளின் கல்வி குறித்தும் கேட்டறிந்து மன நிறைவு பெறுவார்.

    அதிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் கஷ்டப்படுவர்களிடம் அவர்களின் தேவை குறித்து கேட்டறிந்து உதவிகள் பல செய்துள்ளார். இருந்தபோதிலும் அதனை வெட்ட வெளிச்சமாக காண்பித்ததில்லை. நீங்கள் நன்றாக இருந்தால்தான் உங்களின் குழந்தைகளின், அவர்களின் எதிர்காலமும் நன்றாக இருக்கும் என்பதில் எப்போதும் நம்பிக்கை கொண்டவன் என்பதில் உறுதியாக இருந்த கேப்டன் விஜயகாந்த், பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

    தலைமுறைகள் பல கடந்தாலும், குலதெய்வ கோவிலுக்கும், அங்கு வரும் பலரது குடும்பத்தாருக்கும் யாரும் அறியா வண்ணம் உதவிகள் செய்துவந்துள்ள விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.

    காங்கேயநத்தம் கிராமத்தில் வீரம்மாள் கோவில் பலருக்கு குலதெய்வமாக இருந்தபோதிலும், கண்கண்ட தெய்வமாக விஜயகாந்த் இருந்துள்ளார் என்பது வெளியில் தெரியாத உண்மை.

    • மாவட்ட நிர்வாகம் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதிமொழி அளித்தனர்.
    • தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா மைவாடி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தில் கடந்த 5-ந்தேதி பட்டியல் இன நபர் மீது வன்கொடுமை தாக்குதல் நடைபெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது.

    அப்போது ராஜாவூர் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பொது வீதிகளில் கால்களில் செருப்பு அணிந்து செல்ல முடியாது, அப்பகுதியில் உள்ள டீ கடையில் இரட்டை டம்ளர் முறை இருப்பதையும் மற்றும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ராஜகாளியம்மன் கோவிலில் பட்டியல் இன மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு உள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த மக்களின் உரிமைக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 -ந்தேதி உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம், வன்கொடுமை நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும், மேலும் பொது இடங்களில் பட்டியல் இன மக்களுக்கு சட்ட உரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 18 -ந் தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.


    மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் 24-ந்தேதி உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

    இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதிமொழி அளித்தனர். இதையடுத்து ராஜாவூர் கிராமத்தில் உள்ள கோவிலில் வழிபடவும், பொது பாதையில் காலில் செருப்பு அணிந்து நடக்கவும் முடிவு செய்ததுடன், அதை உறுதி செய்யும் வகையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் மாநில தலைவர் செல்லக்கண்னு முன்னிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ராஜாவூர் கிராமத்தில் பேரணியாக பொது பாதையில் காலில் செருப்பு அணித்து சென்றனர். பின்னர் அங்குள்ள ராஜ காளியம்மன் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர்.

    முன்னதாக இந்த சமூக மாற்ற நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் பஞ்சலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் வடிவேல், சிஐடியு., நிர்வாகி பன்னீர்செல்வம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம், இந்திய தொழிற்சங்க மையம், ஆதிதமிழர் சன நாயக பேரவை, திராவிடர் தமிழர் கட்சி, ஆதிதமிழர் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், ஆதிதமிழர் முன்னோர் கழகம், ஆதி தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் சென்று வழிபட்டதன் மூலமாக பட்டியல் இன மக்களின் வழிபாட்டு உரிமை போராட்டம் வெற்றி பெற்று ள்ளது என்றனர். மேலும் கோவிலில் வழிபட தடை நீங்கியதால் ராஜாவூர் பகுதி பட்டியல் இன மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது.

    உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இங்கு பல்லவ மன்னர்கள் உருவாக்கிய சிற்பங்களை பார்க்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் பாறைகளை குடைந்து அழகாக உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள் கேமரா, டிரோன் ஆகியவை மூலம் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுக்கிறார்கள்.புதிதாக திருமணமான தம்பதிகள், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் கடற்கரை கோவில் வளாகத்தில் போட்டோ ஷூட் நடத்துகிறார்கள். மேலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் வாகனங்களில் கூட்டமாக வந்து புல்தரைகளில் அமர்ந்து அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது.

    சில காதல் ஜோடிகள் கடற்கரை கோவிலில் அத்துமீறி ஏறி, தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை எழுதி அலங்கோலப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

    இதையடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் வணிக நோக்கங்களுக்காக புகைப்படம் எடுத்தல், திருமணத்துக்கு முன் போட்டோ ஷூட் எடுத்தல், விஐபி, விவிஐபி வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

    மேலும் வியாபாரிகள் வியாபாரம் செய்வது, காதலர்கள் சிற்பங்களின் மீது ஏறுவது, பிடித்தவர்களின் பெயர்களை எழுதுவது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது, பொதுக்கூட்டம் நடத்துவது, பொது விளம்பரம் செய்வது ஆகிய செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரோன் கேமரா பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான நோட்டீஸ் கடற்கரை கோவில் நுழைவு தூணில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    • பல ஆண்டுகளாக கோவில் குளத்தில் நீரின்றி தரை மட்டம் தெரியும் அளவிற்கு இருந்தது.
    • பக்தர்கள் முன்னாள் கவுன்சிலர் வே.வாசுவுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

    வில்லிவாக்கம்,டிச.13-

    அயனாவரம் சயானி பஸ் நிறுத்தம் அருகே உள்ளது அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் கோவில் எதிர் திசையில் சுற்றிலும் குடி யிருப்புகளுக்கு மத்தியில் பரந்து விரிந்து உள்ளது. பல ஆண்டுகளாக கோவில் குளத்தில் நீரின்றி தரை மட்டம் தெரியும் அளவிற்கு இருந்து முற்றிலும் நீர்வரத் தும் குறைந்து இருந்தது. இது குறித்து அயனாவரம் பகுதியில் உள்ள பல்வேறு திருக்கோவில் குளங்களை பராமரித்து வரும் தி. மு.க. பகுதி செயலாளரும் மலர் டிரஸ்ட் நிறுவனரும் முன்னாள் கவுன்சிலருமான வே.வாசுவின் கவனத்துக்கு பக்தர்கள் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து தனது சொந்த நிதியிலிருந்து சென்னை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூபாய் 11, 45,970 (11லட்சத்து 45 ஆயிரத்து 970 ரூபாய்) மதிப்பில் சாலையின் மேற்குப் பகுதியில் இருந்து 150 மீட்டர் நீளத்திற்கு 3 அடி அகலம் 3 அடி ஆழத் திற்கு சொந்த பணத்தில் மழைநீர் கால்வாய் அமைத்து சாலையோரம் ஓடும் மழை நீரினை குளத்திற்கு பைப் மூலம் கொண்டு செல்லும் வகையில் பணியினை நடத்தி முடித்தார். இதன் காரணமாக கடந்த வாரம் மிக்ஜாம் புயலின் தாக்கத் தால் பெய்த கனமழையால் சாலை ஓரத்தில் இருந்த மழை நீர் அனைத்தும் குளத்திற்கு சென்றது. இதையடுத்து சுமார் 30 அடி ஆழத்திற்கு குளம் முழுவதும் மழை நீர் நிரம்பி சுற்றி மழை நீரால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதன் மூலம் அந்த பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் நிலத்தடி நீர் உயரும். இதனை தொடர்ந்து

    75 ஆண்டுகளுக்கு பிறகு காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் மழை நீரை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் முன்னாள் கவுன்சிலர் வே.வாசுவுக்கு பாராட்டுகளையும் நன்றி களையும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தி.மு.க. வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளரும் மலர் டிரஸ்ட் நிறுவனருமான வே.வாசு கூறியதாவது:-

    பல ஆண்டுகளாக நீர் இல்லாமல் இருந்த இந்த கோவில்குளத்தை நாங்கள் சரி செய்ததால் தற்சமயம் பெய்த பலத்த மழையால் 30 அடிக்கு மேல் மழை நீர் தேங்கி உள்ளது. இதனை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் குளத்தில் மழை நீர் தேங்கும் வகையில் கிழக்குப் பகுதியில் இருந்து 250 மீட்டர் அளவிற்கு மழைநீர் வடிகால் அமைத்து கிழக்குப் பகுதியில் தேங்கும் மழை நீரை குளத்திற்குள் விடும் பணிகள் விரைவில் தொடங்கும். காசி விசுவநாதர் கோவில் நிர்வாகத்தின் கீழ் வரும் இந்த குளத்தினை நாங்கள் சீர் செய்து விட்டோம். ஆனால் கோவில் நிர்வாகத்தினர் கோவில் குளத்தினை முறையாக பராமரிக்காத காரணத்தினால் சுற்றி உள்ள மரத்தில் உள்ள கழிவுகள் அனைத்தும் குளத்தில் மிதிக்கிறது. இதனை சீர் செய்ய எங்கள் பங்களிப்பை நாங்கள் தருவதற்கு தயாராக இருக்கி றோம். கோவில் நிர்வாகம் இந்த கோவில் குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது எனது தாழ்வான கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
    • தாலியை திருடிவிட்டு காரில் ஏறி சென்றதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த திருவிழாவின் போது இரண்டு தேர்களை பக்தர்கள் தோளிலும், தலையிலும் சுமந்து கொண்டு வீதி உலா வருவர்.

    மதுரை காளியம்மன் தினமும் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அப்போது அம்மனின் கழுத்தில் தாலி பொட்டு, கருகமணி, தாலி குண்டு, மாங்கல்யம், தங்க தாலி சங்கிலி உள்ளிட்டவை அணிவிக்கப்படும்.

    அதன்படி நேற்று கோவில் பூசாரி மருதை அம்மனுகு சிறப்பு அலங்காரம் செய்து நகைகளை அணிவித்தார். பின்னர் அவர் பூஜைகள் செய்தார்.

    இந்த நிலையில் ஒரு குடும்பத்தினர் அம்மன் முன் அமர்ந்து வழிபாடு நடத்தினர். இதை தொடர்ந்து கோவில் பூசாரி மருதை மடப்பள்ளிக்கு சென்று பொங்கல் வைத்துவிட்டு அம்மனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார்.

    அப்போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 15 பவுன் தாலி சங்கிலி திருட்டு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தார்.

    அறங்காவலர் குழுத்தலைவர் விஜய் ஆனந்த், தொட்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தத்தில் ஒரு தம்பதி குழந்தையுடன் வந்து தரிசனம் செய்துவிட்டு சென்ற பிறகு தான் தாலி திருடப்பட்டது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் தாலியை திருடிவிட்டு காரில் ஏறி சென்றதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்பத்துடன் வந்து அம்மன் தாலி சங்கிலியை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடிவருகின்றனர்.

    இந்த திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் அமைக்கப்பட்ட 3 தனிப்படைகள் தீவிரமாக கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பர்கத்பாஷா(25). நேற்று மதியம் அவர் கூடுவாஞ்சேரியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் முன்பு இருந்தார். அப்போது கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.

    அந்த நேரத்தில் 4 பேர் கும்பல் திடீரென பர்கத்பாஷாவிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் பர்கத்பாஷாவின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இதனை கண்டு கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பலத்த காயம் அடைந்த பர்கத்பாஷா ரத்தம் சொட்ட, சொட்ட அங்கிருந்து நடந்து சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தெற்கு கோபுர வாசல் வழியாகத்தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். உள்ளே நுழைந்ததும் விநாயகர் சந்நிதி உள்ளது.
    • கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.

    மயிலம் அடிவாரத்தில் இருந்து குன்று நோக்கி வரும் சாலையில் வந்தால் கோவிலின் தெற்கு வாசல் வந்து சேருவோம்.

    கோவிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கித்தான் இருக்கிறது.

    இது எப்போதும் அடைத்துக் கிடக்கும்.

    எனவே தெற்கு கோபுர வாசல் வழியாகத்தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

    உள்ளே நுழைந்ததும் விநாயகர் சந்நிதி உள்ளது.

    தெற்கு வளாகத்தில் விசாலாட்சி விஸ்வநாதர் இருக்கிறார்கள்.

    இவர்களை பாலசித்தரை ஐக்கியப்படுத்திய கோலத்தில் காணலாம்.

    கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.

    இவருடைய வாகனமாகிய மயில் வடக்கு நோக்கி இருக்கிறது.

    இங்கு உற்சவ மூர்த்திகள் மூன்று உண்டு.

    வெளியே தென் பக்கத்தில் ஒரு மடம் இருக்கிறது.

    அதில் பால சித்தர் சிலையை காணலாம்.

    இங்கு பிரம்மமோற்சவக் காலம் பங்குனி மாதம்.

    தைப்பூசப் பெருவிழாவும் உண்டு. பிரம்மோற்சவம் 5ஆம் நாளும் தைப்பூசத்திலும் முருகன், பெரிய தங்க மயில் வாகனத்தில் வீதி வலம் வருவார்.

    இவை இரண்டும் பக்தர்களுக்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    • இது மிகவும் சிறிய மலை, மயிலைப் போல் காட்சி அளிக்கும் மலை.
    • முருகனோடு அசுரனான சூரபத்மன் போர் செய்து தோற்றான்.

    மயிலம் தலம் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் திண்டிவனத்துக்கு அருகில் இருக்கிறது.

    திண்டிவனத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் மயிலம் மலை முருகன் கோவில் இருக்கிறது.

    இது மிகவும் சிறிய மலை, மயிலைப் போல் காட்சி அளிக்கும் மலை.

    இதனால் இந்த மலைக்கு மயிலம் எனறு பெயர்.

    கந்தபுராணத்தில் இது பற்றிய தகவல் ஒன்று உள்ளது.

    முருகனோடு அசுரனான சூரபத்மன் போர் செய்து தோற்றான்.

    அப்படித் தோற்றவன் நல் அறிவு பெற முருகனுக்கு வாகனமாக இருக்க விரும்பினான்.

    அவன் தனது விருப்பத்தை முருகனிடம் தெரிவித்தான்.

    உடனே முருகன், "நீ மயில் போன்ற மலையாகி வராக நதியின் வடகரையில் நின்று தவம் செய்.

    உன் ஆசையைப் பூர்த்தி செய்கிறேன்" என்றார்.

    அவனும் அதன்படியே நின்று தவம் செய்தான்.

    அவன் மீது இரக்கப்பட்ட முருகன் இங்கே கோவில் கொள்ளக் காரணமாயிற்று என்கிறது தல புராணம்.

    மயிலம் மலையில் கோவிலை நிர்மாணித்தவர்கள் பொம்மையபுரம் மடாதிபதி ஆவார்.

    சூரபத்மன் வரலாறு தவிர மற்றொரு செய்தியும் இத்தலத்திற்கு உண்டு.

    சிவகணத் தலைவர்களில் சங்கு கன்னர் என்பவரும் ஒருவர்.

    இவர் செய்த ஒரு குற்றத்திற்காக சாபம் பெற்றார்.

    அதன்படி அவர் பூலோகத்தில் மனிதனாகப் பிறந்தார்.

    இவர் மயிலம் மலைக்கு கிழக்கேயுள்ள கடற்கரையில் பாலசித்தராக அவதாரம் எடுத்தார்.

    பால யோகியான இவர் தன் சாப விமோசனம் வேண்டி மயிலம் மலையில் தவம் இருந்தார்.

    முருகனோ, இவரை சிவ அபராதி என்று கூறி காட்சி தர மறுத்து விட்டார்.

    இதையடுத்து வள்ளி, தெய்வயானையின் உதவியை நாடிய பால யோகி தனக்கு வழிகாட்டுமாறு மன்றாடி வேண்டுகோள் விடுத்தார்.

    பாலயோகி மீது இரக்கப்பட்ட தேவியர் இருவரும் அவருக்கு கருணை காட்ட முடிவு செய்தனர்.

    அதன்படி அவர்கள் பாலசித்தருடைய ஆசிரமத்திற்கு எழுந்தருளினார்கள்.

    முருகனிடம் முதலில் தேவியர் பால சித்தருக்கு பரிந்துரை செய்து பார்த்தனர்.

    அவர்கள் வேண்டுகோளை ஏற்க முருகன் மறுத்தார்.

    இதன் காரணமாக வள்ளி, தெய்வானை இருவரும் பாலசித்தரின் ஆசிரமத்திலேயே தங்கி விட்டனர்.

    எத்தனை நாள்தான் முருகர் தன் தேவியரைப் பிரிந்து இருப்பார்?

    எனவே, முருகன் வேட ரூபத்தில் சித்தர் ஆசிரமத்திற்கு வந்தார்.

    அப்போது முருகனுக்கும், சித்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    முடிவில் வாதம் மல்யுத்தமாக மாறியது.

    இந்த நிலையில் சூரபதுமனுக்குக் காட்டிய தன் திருகோலக் காட்சியை சித்தருக்கும் முருகன் காட்டினார்.

    பின் பால சித்தருடைய விருப்பப்படி கல்யாண கோலத்தில் மலைமீது தம்பதி சமேதராய் கோவில் கொண்டார்.

    மயிலம் மலையில் முருகன் கோவில் கொண்டதற்கு இந்த நிகழ்வே காரணம் என்று கூறப்படுகிறது.

    • தாமிரபரணி கரையில் முத்தாலங்குறிச்சி தவிர வேறு எங்கேயும் லட்சமி நரசிம்மர் தனிச்சன்னத்தியில் இல்லை.
    • லட்சுமி தேவி கூட நரசிம்மரின் கோபத்தினை தணிக்க முடியவில்லை.

    தாமிரபரணி கரையில் முத்தாலங்குறிச்சி தவிர வேறு எங்கேயும் லட்சமி நரசிம்மர் தனிச்சன்னத்தியில் இல்லை.

    நரசிம்ம அவதாரத்தின் போது பெருமான் மிகுந்த கோபத்துடன் இரணியனை வதம் செய்தார்.

    வதம் முடிந்த பிறகும் கூட அவரின் கோபம் தணிந்தபாடில்லை.

    லட்சுமி தேவி கூட நரசிம்மரின் கோபத்தினை தணிக்க முடியவில்லை.

    அந்த சமயம் சிறுவனான பிரகாலாதன் தைரியமாக பகவானை நோக்கி சென்றான்.

    பின் பகவானின் மடியில் போய் தைரியமாக ஏறி அமர்ந்துக்கொண்டான்.

    அவரின் முகத்தினை நோக்கி தனது கையை கொண்டு போய் வருடி விட்டான்.

    வெப்பம் கக்கும் கோபத்தில் இருந்த பகவானின் நாக்கு ஏதோ நீண்ட நெடுங்கை போல் நீட்டிக் கொண்டு பாலன் பிரகலாதன் முதுகில் தேய்த்து தனது சூட்டைத் தணித்தார்.

    கொஞ்சம் கொஞ்சமாக கோபம் தணிந்தது. பகவான் தன் பழைய நிலைக்கு வந்தார்.

    பகவானின் கோபம் தணிந்தபிறகே தேவர்கள், முனிவர்கள் ஏன் லட்சமிதேவியே அருகில் செல்ல முடிந்தது.

    முத்தாலங்குறிச்சி சிவன் கோவில் அருகே உள்ள சன்னதியில் லட்சுமி நரசிம்மர் உள்ளார்.

    இதில் நரசிம்மரின் தொடையில் லட்சுமி அமர்ந்துள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் லட்சுமி நரசிம்மர் கேட்ட வரம் தரும் தெய்வமாக இங்கே அமர்ந்து உள்ளார்.

    இந்த கோவிலை எப்போது வேண்டும்மென்றாலும் திறந்து பக்தர்களுக்கு காட்ட உள்ளூரில் குணவதியம்மன் கோவில் பூசாரி வீட்டில் சாவி உள்ளது.

    ஆகவே இந்த ஊருக்கு சென்றால் உடனே சுவாமி தரிசனம் செய்து விடலாம்.

    இந்த கோவிலுக்கு செல்ல நெல்லை சந்திப்பில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு.

    நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 16 வது கிலோ மீட்டரில் உள்ள செய்துங்கநல்லூரில் இறங்கினால்

    அங்கிருந்து ஆட்டோ மூலம் 6 கிலோ மீட்டரில் உள்ள முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தினை அடையலாம்.

    • பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.
    • உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள அனுமந்தபுரம் பஞ்சாயத்து ராஜா தோப்பு பகுதியில் அமைந்துள்ளது முனியப்பன் கோவில் அதன் அருகே காமாட்சி அம்மன் கோவிலும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள் பூட்டி இருந்த கோவில் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கோவில் பூசாரி மற்றும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி, குத்து விளக்குகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவயிடம் வந்த போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமாரவை கைபற்றி அதில் இருந்த பதிவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் கோவில் கதவின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே வரும் கொள்ளையன் சட்டை அணிந்திருக்கவில்லை. உண்டியலுக்கு வந்து அதனை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்கிறான். இதனையடுத்து அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க தாலியை எடுத்து கொண்டு தப்பி செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.

    இது குறித்து அனுமந்தபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது;-

    இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த காரிமங்கலம் போலீசார் கொள்ளை நடந்த இடம் தங்களது எல்லைக்கு உட்பட்டது இல்லை. பாலக்கோடு் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றனர்.

    ×