search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Valli"

    • ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • மயான பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.

    இதனையொட்டி கோவிலில் நள்ளிரவில் மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகள் முடிந்ததும் அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு அம்மனின் சூலம் தாங்கி சென்றனர்.

    அங்கு மயான மண்ணை கொண்டு மாசாணியம்மன் திருவுருவம் உருவாக்கப் பட்டிருந்து. நள்ளிரவு 1 மணிக்கு பம்பை இசை முழங்க மயான பூஜை தொடங்கியது.

    அப்போது அம்மன் அருளாளி அருண் சாமி வந்து ஆடியபடி, அம்மன் உருவத்தை சிதைத்து எலும்பை வாயில் கவ்வியபடியே பிடி மண்ணை எடுத்தார். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மாசாணி தாயே என பக்தி கோஷம் எழுப்பினர்.

    இந்த பூஜையில் ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள், வெளிமாவட்டத்தினர், வெளி மாநிலத்தினர் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீ மாசாணி அம்மன் நற்பணி மன்றம் சார்பில் வள்ளி கும்மியாட்டமும் நடைபெற்றது. இதனையும் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

    மயான பூஜையையொட்டி அங்கு ஆனைமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீநிதி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகா பூஜை நடந்தது. நாளை (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடக்கிறது.

    அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவையும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.

    25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் திரளான பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 26-ந்தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடி இறக்குதல், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும், 27-ந்தேதி காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • ஆதி மூலவரிடம் நம்முடைய குறைகளையும், தடைகளையும் நீக்கக்கோரி வணங்கி வர இன்ப வாழ்வு உண்டாகும்.
    • இந்த பிரார்த்தனை பூஜை காலங்களில் நாம் அண்டர்பதி திருப்புகழை ஓதி வணங்க வேண்டும்.

    திருமணம் தடை பட்டாலோ அல்லது நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருந்தாலோ, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை நாடினால் பலன் உண்டாகும்.

    நம் பிரார்த்தனை நிறைவேற சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரமும் ஏதாவது ஒரு கிழமையில் (ஆறு வாரமும், முதல் வாரம் வந்த கிழமையிலேயே தொடர்ந்து அடுத்த 5 வாரமும்) வர வேண்டும்.

    வரும் நேரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

    காலை என்றால் ஒவ்வொரு வாரமும் காலையிலே வர வேண்டும். மாலை என்றால் ஒவ்வொரு வாரமும் மாலையிலே வர வேண்டும்.

    திருமணம் ஆக வேண்டிய பெண்கள் ஆறு வாரமும், வாரம் ஒருநாள் என்று ஆறு தடவைகள் தொடர்ந்து வந்து சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட திருமணம் விரைவில் அமையப்பெறும்.

    திருமணம் ஆக வேண்டி ஆண்டவனிடம் பிரார்த்திக்க வருபவர்கள் வள்ளி மணவாள பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.

    ஆறாவது வாரம் ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்களுடன் வந்து மரகத விநாயகர், மூலவர், வள்ளி மணவாளப்பெருமான், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மை, ஆதிமூலவர் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

    வள்ளி மணவானப்பெருமாள் சன்னதியில் தரும் மாலையை திருமண மாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தை சுற்றி வர வேண்டும்.

    பின்னர் மாலையை வீட்டிற்கு எடுத்து சென்று திருமணம் நடைபெறும் வரை பாதுகாத்து வணங்கி வர வேண்டும். திருமணம் முடிந்ததும் தம்பதி சமேதரராய் இத்தலம் வந்து ஆறு தெய்வசந்நிதிகளுக்கும் அர்ச்சனை செய்து பழைய மாலையை கோவிலில் உள்ள மரத்தில் கட்ட வேண்டும்.

    இவ்வாறு இந்த ஆலயத்தில் தொடங்கப்பட்ட மணவாழ்வு உலகப்பயன்கள் அனைத்தும் பெற்று மகிழ்வுடன் தொடர இவ்வாலயம் வந்து அடிக்கடி முருகனின் அருள் வேண்டி வணங்கி செல்ல எல்லாம் சுபமாய் நடக்கும்.

    திருமணம் தவிர மற்ற வேண்டுதல்களான, வீடு, பிள்ளைப்பேறு, செல்வம், நோய் நிவர்த்தி ஆகியவை பெற வருபவர்கள் மேற்படி முறைப்படி ஆறு வாரமும் மூலவர் சந்நிதியில் அர்ச்சனை செய்து வர வேண்டும்.

    ஆறாவது வாரம் மூலவர் சந்நிதியில் இருந்து பெற்ற மாலையை அணிந்து ஆறு முறை நம் வேண்டுதலை இறைவனிடம் முறையிட்டு வெற்றி வேண்டி ஆலயத்தை வலம் வர வேண்டும்.

    இத்தலத்திற்கு பிரார்த்தனை செய்து வருபவர்கள் ஆறு வாரமும் திருப்புகழ் பாடி இறைவனை வணங்க வேண்டும். எண்ணியது முடிக்கும் எம்பெருமானை எண்ணி நம்மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    முதல் ஐந்து வாரங்களுக்கு, ஒவ்வொரு முறை வரும் போதும் இரண்டு தேங்காய், இரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, பூமாலை ஒன்று மற்றும் இரண்டு எலுமிச்சம்பழம் கொண்டு வணங்க வேண்டும். ஆறாவது வாரம் ஆண்டவனை வழிபட்டு, அர்ச்சனை அல்லது அபிஷேகம் செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு வாரமும் வந்து போகும் பொழுது நம்மிடம் கொடுக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை வீட்டிலே வைத்து பூ வைத்து பூஜித்து வர வேண்டும்.

    முதல் வார எலுமிச்சம் பழத்தை இரண்டாவது வார எலுமிச்சம் பழம் வந்தவுடன் எடுத்து கடல், கிணறு ஏதாவது ஓர் அசுத்தம் இல்லாத இடத்தில் சேர்த்துவிட்டு தற்சமயம் பெற்று வந்த பழத்தை பூஜிக்க வேண்டும்.

    இவ்வாறு ஐந்து வாரம் செய்து விட்டு ஆறாவது வாரம் நாம் பெற்று வந்த பழத்தை ஈரம் படாது பாதுகாத்து நம்முடைய பிரார்த்தனை நிறைவேறும் வரை பூஜிக்க வேண்டும்.

    இந்த பிரார்த்தனை பூஜை காலங்களில் நாம் அண்டர்பதி திருப்புகழை ஓதி வணங்க வேண்டும்.

    நம் பிரார்த்தனை நிறைவேறியதும் சிறுவாபுரி வந்து ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்கள் வைத்து பாலசுப்பிரமணிய சுவாமியை வணங்க வேண்டும்.

    இங்கு உள்ள இரண்டு முருகப்பெருமான் சன்னதிகளில், ஆதி மூலவரிடம் நம்முடைய குறைகளையும், தடைகளையும் நீக்கக்கோரி வணங்கி வர இன்ப வாழ்வு உண்டாகும்.

    இத்தலத்தில் பிரார்த்தனை செய்து வருவோர்கள் முதல் வாரத்திலோ அல்லது தொடர்ந்து வரும் வாரங்களிலோ பலன் பெறுவது உண்டு. ஒருவருடைய நம்பிக்கை மிகுந்த பிரார்த்தனை அவரின் காரியத்தை மிக விரைவில் முடித்து வைக்கிறது.

    • “மருதமலை மாமணியே முருகையா” என்று அனைவரையும் பாட வைக்க பெருமை தேவருக்கு உண்டு.
    • தமிழ்நாடு மக்கள் மருதமலையைத் தெரிந்து கொள்ளக் காரணமாக இருந்தவர் தேவர் என்று சொல்லலாம்.

    மருதமலை என்று சொன்னதும் மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் எம்.எம்.ஏ. சாண்டோ சின்னப்ப தேவர் தான் பலருக்கும் நினைவுக்கு வருவார்.

    தமிழ்நாடு மக்கள் மருதமலையைத் தெரிந்து கொள்ளக் காரணமாக இருந்தவர் தேவர் என்று சொல்லலாம்.

    மருதமலை சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட வைத்தது அவரது முருக சேவை என்றே கூற வேண்டும்.

    "மருதமலை மாமணியே முருகையா" என்று அனைவரையும் பாட வைக்க பெருமை தேவருக்கு உண்டு.

    மருதமலையின் அடிவாரத்திலே நம்மை வரவேற்கும் தலைநிமிர்ந்து நிற்கிற முன்மண்டபக் கோபுரம் தோவர் பிலிம்ஸ் உபாயம்.

    அடிவாரம் தொடங்கி மருதமலை முருகன் சன்னதி வரையிலும் மின்சார விளக்கு, மலைப்பாதை இவை எல்லாம் தேவர் மனமுவந்து செய்த தர்ம காரியங்கள்.

    தேவர் மண்டபம் முருக தரிசனம் வேண்டி வருபவர்கள் தங்கி இருக்கவும், விசேஷ தினங்களில் அம்மடத்தில் அமுது பொங்குதல், அன்னம் அளித்தல் ஆகிய காரியங்களுக்கு பயனுள்ளதாக அமைத்துத் தந்துள்ளார்.

    மருதாச மூர்த்தியின் அர்த்த மண்டபத்தில் உள்ள கதவு அமைத்துத் தந்ததும் அவரே. முடிக் கொட்டகை அருகில் உள்ள தண்ணீர்த் தொட்டி, கழிவு அறைகள் ஆகியவைகளை பக்தர்களின் நலத்தையும் சவுகரியத்தையும் முன்னிட்டு அமைத்துத் தந்துள்ளார்.

    தேவர் முருகனுக்கு செய்த திருப்பணிகளில் முக்கியமானது மலைப்படிகளில் இரவிலும் மக்கள் சென்றுவர ஏதுவாக மின்விளக்குகள் தமது பொருட் செலவிலேயே 1963-ல் முடித்துக் கொடுத்தது மட்டுமின்றி படியேற வலுவற்றவர்களும், வசதி படைத்தவர்கள் கார் முதிதலய வாகனங்களிலும் மேலே சென்று வருதற்கு ரூபாய் 3 லட்சம் செலவில் 1 மைல் தொலைவில் உள்ள மலைப்பாதையை அமைத்துக் கொடுத்தது மிகப்பெரிய பணியாகும்.

    மூலவருக்கு ரூபாய் பத்தாயிரம் செலவில் தங்கக் கவசம் செய்து கொடுத்தும் உள்ளார் இவை எல்லாம் தேவருக்கு முருகன் மீது உள்ள பக்தியையேக் காட்டுகிறது.

    • தைப்பூசத்தன்று சிவன், முருகன், மகாலட்சுமி கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவதைக் காணலாம்.
    • தாமிரபரணியில் தைப்பூசத்துக்கு பராசக்தி நீராடி இறைவன் அருளைப் பெற்றாள்.

    * தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூச நட்சத்திரம் சேரும் நாளே தைப்பூசத் திருநாளாகும். உலகில் முதலில் நீரும். அதிலிருந்து உயிர்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. இவை நடைபெற்ற நாள்தான் தைப்பூச நாள். இத்திருநாள் முருகன் அருளும் எல்லா திருத்தலங்களிலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தைப்பூசத்தன்றுதான் வள்ளியை முருகன் மணம் புரிந்து கொண்டார்.

    * ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று சிதம்பரம் நடராஜர் ஆலய சிவகங்கை தீர்த்தக்கரையில் தீர்த்தவாரியும், நடன தரிசனமும் சிறப்பாக நடைபெறுகின்றன. இவ்விழா தில்லையில் பத்து நாட்கள் நடைபெறும். இந்த தாண்டவம் காண வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமுனி ஆகிய மூன்று முனிவர்களின் சிலைகளை ஒரே பீடத்தில் எழுந்தருளச் செய்து சிவகங்கை கரைக்கு கொண்டு வருவர்.

    * திருப்பைஞ்சீலி சிவாலய குடைவரை சந்நிதியில் சிவனும் அம்பாளும் முருகருடன் காட்சி தருகின்றனர். அவர்கள் காலடியின் கீழ் குழந்தை வடிவ எமனைக் காணலாம். இங்கு தைப்பூசத்தன்று சிவன் எமனுக்கு பதவி அருளும் விழா நடைபெறும்.

    * பாபநாசம் பாபநாகர் ஆலயத்தில் தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்பிடை நின்று ஆடிக்காட்டியதால், அன்றைய தினம் நந்திக்கு சந்தனக் காப்பிடுவார்கள்.

    * தைப்பூசத்தன்று வடலூரில் ஜோதி தரிசனம் காணலாம். இதை சத்ய ஞான சபையில் மாதந்தோறும் பூசத்தன்று 6 திரைகளை விலக்கி பாதி தரிசனம் காண வைப்பர். ஆனால் தைப்பூசத்தன்று மட்டும் 7 திரைகளை முழுவதும் விலக்கி முழுமையான ஜோதி தரிசனத்தை கண்ணாடியில் காட்டுவார்கள். 1871-ல் பிரஜோபதி வருடத்தில் வள்ளலார் ராமலிங்க அடிகள் முதல் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார். அது இன்றளவும் நடைபெறுகிறது. அவர் ஏற்றிய அடுப்பு அணையா அடுப்பாக பக்தர்களுக்கு இடைவிடாது அன்னதானமளித்து வருகிறது.

    * கதித்தமலை முருகன் கோவிலில் தைப்பூசம் கழித்த 4-ம் நாளன்று காலை மலைமீது தேரோட்டம் நடைபெறும். இவ்வாலயம் மலைமீது அமைந்துள்ளதால் இங்கு தென்கிழக்கே ஒரு பாம்புப் புற்று பெரிதாக உள்ளது. இது ஒரு அதிசயப்புற்று. உத்தராயன புண்ணிய காலமாகிய தை முதல் ஆனி வரை வளர்ந்தும், தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி முதல் மார்கழி வரை தேய்ந்தும் வருவது சிறப்பாகும்.

    * பஞ்ச சபைகளில் ஒன்றான ஞானசபையில் சிவபெருமான், உமாதேவியோடு சேர்ந்து ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் தைப்பூசத் திருநாள். இத்தாண்டவத்தை கண்டுகளித்தவர்கள் (அவர்கள் காணவேதான் இவர் ஆடினார்) தில்லை மூவாயிரவர்கள், முனிவர்களான புலிக்கால் முனிவர், வியாக்ரபாதர், ஜைமினி ஆகியோர்.

    * தாமிரபரணியில் தைப்பூசத்துக்கு பராசக்தி நீராடி இறைவன் அருளைப் பெற்றாள்.

    * மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் 12-ம் நாள் தைப்பூசத்தன்று தெப்பத் திருவிழா நடைபெறும். சொக்கன், மீனாட்சியுடன் எழுந்தருளி உலாவருவார்கள். இக்குளம் தோண்டும்போது கிடைத்த மிகப்பெரிய கணபதிதான் முக்குறுணிப் பிள்ளையார்.

    * தைப்பூசம் வியாழக்கிழமையன்று வந்தால், அன்று மட்டும் திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் உள்ள காசிபநாதர் ஆலய நடராசருக்கு புனுகுசார்த்தி பூஜை செய்வார்கள். அதனால் இவருக்கு புனுகுசபாபதி என்றே பெயர்.

    * செல்வம் வேண்டுபவர்கள் வியாழனன்று வரும் பூசத்துன்று மகாலட்சுமி பூஜையை ஆரம்பிப்பார்கள். தைப்பூசத்தன்று சிவன், முருகன், மகாலட்சுமி கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவதைக் காணலாம்.

    • உலகம் புகழும் இந்த பாத யாத்திரை பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் நகரத்தார்கள் ஆவர்.
    • நாளடைவில் இந்த பாத யாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது.

    தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு. அது பழனிக்கு படையெடுத்து வரும் பக்தர்களின் கட்டுக்கடங்காத பாத யாத்திரை கூட்டம்.

    தைப்பூசம் சீசனில் பழனி நோக்கி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடந்தே சென்று முருகனை வழிபடுகிறார்கள்.

    பெயர்தான் தைப்பூசமே தவிர... மார்கழி தொடக்கத்தில் இருந்தே பக்தர்கள் சாரை, சாரையாக பழனிக்கு வரத் தொடங்கி விடுகிறார்கள்.

    உலகம் புகழும் இந்த பாத யாத்திரை பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் நகரத்தார்கள் ஆவர்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்கள் பழனி கோவிலுக்கு நடந்து வருவதை சில நடைமுறைகளுக்காக கடைபிடித்தனர்.

    பாதயாத்திரை வரும்போது ஒவ்வொரு குடும்பத்தினரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள்.

    அதை வைத்து அந்த குடும்பத்தினருடன் திருமண சம்பந்தம் பேசி முடிப்பார்கள்.

    நாளடைவில் இந்த பாத யாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது.

    பாத யாத்திரையின் போது காவடி ஏந்தி செல்வதும், அலகு குத்தி தேர் இழுத்து செல்வதும் முக்கிய அம்சம்.

    முருகனிடம் இடும்பன் வரம் கேட்ட போது, "நான் மலைகளை காவடி ஏந்தியது போல காவடி ஏந்தி வரும் பாத யாத்திரை பக்தர்களின் வேண்டுதல்களை, நீ நிறைவேற்ற வேண்டும்" என்றான்.

    அதை ஏற்று காவடி ஏந்தி பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வேண்டுதல்களை பழனி முருகன் நிறைவேற்றுகிறார்.

    நோய் தீர வேண்டும். நல்ல வரன் கிடைக்க வேண்டும். வியாபாரம் செழிக்க வேண்டும்.

    குடும்பத்தில் பிரச்சினை தீர வேண்டும் என்று லட்சக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் பழனி முருகனை நாடி, நடந்தே வருகிறார்கள்.

    சமீப காலமாக சென்னையில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

    தைப்பூசம் சீசனில் தங்கள் பூர்வீக ஊரில் இருந்து பழனிக்கு நடந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா, சிங்கப்பூர் உள்பட பல வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் வருவதை தமிழர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    இந்த சிறப்பால் அறுபடை வீடுகளில் பழனி திருத்தலம் தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளாக திருச்செந்தூர் முருகன் தலத்துக்கும் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    கோவில்பட்டி, விளாத்திக்குளம், அருப்புக்கோட்டை, நாகர்கோவில், திசையன்விளை, ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுகிறார்கள்.

    • இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.
    • இதையொட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.

    தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்று எல்லா முருக ஆலயங்களிலும் வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும்.

    இப்படி சிறப்பாக கொண்டாடக் காரணம் அன்றுதான் முருகன் வள்ளியை மணம்புரிந்து கொண்டான்.

    சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்திவேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம்.

    இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.

    தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரிணங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    இந்தத் தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார்.

    இதையொட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.

    அன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும்.

    மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.

    இந்தத் தைப்பூச நன்னாளில்தான் ஞான சம்பந்தர் மயிலையில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார்.

    இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகேயுள்ளது.

    தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.

    மேலும் அன்று மூன்று முனிவர்களும் ஒரே பீடத்தில் அமர்ந்து நடராசருடன் சிதம்பர சிவகங்கை தீர்த்தத்தில் நடக்கும் தீர்த்தவாரியில் கலந்த கொள்வார்கள்.

    அங்கு நடனமும் நடைபெறும். இதைக் காண்பது சிறந்த புண்ணியம்.

    குருவாகவும் திருவாகவும் விளங்கும் முருகப் பெருமானையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்குவது கல்வி கலைகளில் சிறக்க உதவும்.

    ஜோதி தரிசனம்

    வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும். மாத பூசத்தில் ஆறு திரை விலக்கிக் காட்டுவார்கள். வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதைக் காணலாம்.

    1. கறுப்புத்திரை - மாயசக்தி, 2. நீலத் திரை- திரியா சக்தி, 3. சிவப்புத் திரை - இச்சாசக்தி, 4. பச்சைத் திரை- பராசக்தி, 5. பொன்திரை- ஞானசக்தி, 6. வெள்ளைத்திரை- ஆதிசக்தி, 7. பல வண்ணத்திரை- சிற்பசக்தி.

    • பன்னிரு கரத்தாலும் அள்ளிக் கொடுப்பதால்தான் ‘வள்ளல்’ என்று பெயர் பெற்றான் முருகன்.
    • நெல்லையில், தாமிரபரணி ஆற்றங்கரையில் தவமிருந்து இறைவனின் திருவருளினை பார்வதி பெற்றாள்.

    பூச நட்சத்திரம் தை மாதத்தில் வரும்பொழுது நாம் முருகப் பெருமானை வழிபட்டால் நம்முடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    தைப்பூசம் நாளில் முருகப் பெருமானைக் கொண்டாடுவதற்கு மார்கழி முதல் நாளிலேயே மாலை போட்டுக்கொண்டு காலை, மாலை இருவேளைகளிலும் குளித்து, கவச பாராயணங்களைப் படித்து வழிபட்டு வர வேண்டும்.

    பூசத்தன்று பழனிக்கு சென்று, அங்கு தங்க ரதத்தில் பவனி வரும் சண்முகநாதப் பெருமானை கோடானு கோடி பேர் தரிசித்து வருகின்றனர்.

    குன்றக்குடி, பழனி, திருத்தணி, திருச்செந்தூர், சுவாமி மலை போன்ற ஆலயங்களுக்கும், அறுபடை வீடுகளின் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கும் பாத யாத்திரையாக சென்று வழிபட்டு வந்தால் இன்னல்கள் விலகி அமைதியான, வளமான வாழ்க்கை அமையும்.

    பாத யாத்திரையாக நடந்து செல்ல இயலாதவர்கள் உள்ளூரில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்குள்ள முருகப் பெருமானை வழிபட்டு வர வேண்டும்.

    பன்னிரு கரத்தாலும் அள்ளிக் கொடுப்பதால்தான் 'வள்ளல்' என்று பெயர் பெற்றான் முருகன்.

    பூச நட்சத்திரத்தன்று பார்வதி தேவி, முருகப் பெருமானிடம் 'சக்திவேல்' கொடுக்க, அதை வாங்கிப் போர் புரிந்து, சூரபத்மனை மயிலும், சேவலும் ஆக்கிய மால்முருகனை மனதில் பூசத்தன்று நினைத்தாலே, போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும்.

    பூசத்தன்ற முழுநாளும் விரதமிருந்து பால், பழம் மட்டும் சர்பபிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தரப்பம் நைவேத்யம் படைத்து, முருகப் பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக மாறும்.

    தைப்பூசத்திருநாளில் எளிய முறையிலாவது பழனி ஆண்டவரை வேண்டித் துதியுங்கள். தைப்பூச விரதம் வறுமை போக்கும், தடைகளை தகர்க்கும், குழந்தைப்பேறுகள் கிடைக்கச் செய்யும், ஆரோக்கியம் அளிக்கும், வாழ்வு வளம் பெறச் செய்யும்.

    இந்நாளில் விரதம் கடைப்பிடித்து முருகப் பெருமானை வழிபட்டு, அன்னதானம் செய்ய வேண்டும். இதனால் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற மூன்றுவகை சக்திகளையும் பெற்று வளமுடன் வாழலாம் என்று ஞான நூல்கள் சொல்கின்றன.

    நெல்லையில், தாமிரபரணி ஆற்றங்கரையில் தவமிருந்து இறைவனின் திருவருளினை பார்வதி பெற்றாள். அந்த நாள் தைப்பூசம்.

    எனவே இந்தப் புனித நாளில் சுபகாரியங்கள் நடத்தினால் தம்பதிகள் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

    • வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!
    • ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!

    * வேலின் முகம் -அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!

    * வேலின் கீழ் நுனி - வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!

    வேல் - பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!

    ஈட்டி - அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!

    வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!

    ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!

    இப்படி, பண்டைத் தமிழ்ச் சமூகம், "வேலை" முன்னிறுத்தி, எப்படித் தன் மரபுகளை ஒத்து வாழ்ந்தது. இன்றும் கிராமத்தவர்கள், இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகிறார்கள்!

    தொலைந்து போன வேல் வழிபாடு, தமிழ் வழி வழிபாட்டை மீண்டும் முன்னிறுத்த, அருணகிரி நாதர் முயற்சிகள் பல செய்தார்.

    பின்னால் வந்த பல கவிஞர்களும், வேலைப் போற்றிப் பாடியுள்ளார்கள்! பாரதியாரின் வேலன் பாட்டு, அதில் மிகவும் பிரபலம்!

    முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்!

    அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர்! முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்!

    முருகன் வேறு, வேல் வேறு அல்ல!

    முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு! ஆறு படைகள் உண்டு.

    • வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!
    • வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!

    வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!

    'வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது!

    ஆகவே, வேல் என்றால் -வெற்றி என்று அர்த்தமாகும்.

    ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் -வேல்!

    ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா!

    வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!

    சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது!

    பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்! ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!

    சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்!

    இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது! வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது: பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!

    பழமுதிர்சோலை, திருச்செங்கோடு,

    ஈழத்தில் செல்வர் சந்நிதி,

    மலேசியாவில் பத்துமலை, உள்ளிட்ட பல ஊர்களில்

    எல்லாம் வேல் வழிபாடு தான் நடைமுறையில் உள்ளது.

    • வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் - பங்குனி உத்திரம்
    • அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே -தைப்பூசம்!

    * முருகன் தோன்றிய நாள் - வைகாசி விசாகம்

    * அறுவரும் ஒருவர் ஆன நாள் -கார்த்திகையில் கார்த்திகை

    * அன்னையிடம் வேல் வாங்கிய நாள் - தைப்பூசம்

    * அசுரரை அழித்தாட்கொண்ட நாள் -ஐப்பசியில் சஷ்டி

    * வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் - பங்குனி உத்திரம்

    இப்படி... அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே -தைப்பூசம்!

    • அவனை ”வேல்வல்லான்” என்று கலித்தொகையும் ”வல்வேல் கந்தன்” என்று புறநானூறும் புகழ்கின்றன.
    • முருகனது வேல் மகிமையுடையது. மேன்மையானது, தெய்வீகத் தன்மையுடையது.

    முருகனது ஆயுதங்களில் வேலே சிறப்பாக போற்றப்படுகிறது.

    அவனை "வேல்வல்லான்" என்று கலித்தொகையும் "வல்வேல் கந்தன்" என்று புறநானூறும் புகழ்கின்றன.

    முருகனுக்கு வேலை அருளியவர் சிவபெருமான். அந்த வேலுக்குச் சக்தியை அளித்தவர் பராசக்தி என்று கூறலாம்.

    இதனால் இரட்டைச் சிறப்புகள் வேலுக்குக் கிடைக்கின்றன.

    பராசக்தியிடம் முருகன் வேல் வாங்கும் ஐதீகம், சிக்கலில் சிறப்பாக நடைபெறுகிறது.

    இங்கு ஐப்பசி மாதம் மகா கந்தசஷ்டி திருவிழாவின் ஐந்தாம் நாள், சிக்கல் சிங்கார வேலர், அன்னை பராசக்தி வேல் நெடுங்கண்ணியின் சன்னதிக்குச் சென்று வேலைப்பெறுகின்றார்.

    "வேல் வாங்குதல்" சிக்கலிலும், சூரசம்ஹாரம் திருச்செந்தூரிலும் உச்சநிலைச் சிறப்புகளுடன் நடைபெறுகின்ற காரணத்தினால், "சிக்கலில் வேல் வாங்கிச் செந்தூரில் சம்ஹாரம்" என்ற பழமொழி தோன்றியது.

    முருகனது வேல் மகிமையுடையது. மேன்மையானது. தலைமையானது, தெய்வீகத் தன்மையுடையது.

    எனவே, இது சிறப்பான வழிபாட்டிற்குரியது.

    பண்டைகாலத்தில் தனிக்கோட்டம் அமைத்து முருகனது வேலை வழிபட்டனர்.

    இதற்கு "வேல் கோட்டம்" என்று பெயர்.

    முருகனின் ஆறாம்படை வீடான சோலையில் இன்றும் வேல்தான் மூலவராக உள்ளது.

    ஆதிகாலத்தில் இந்த ஊர் வேல்கோட்டம் என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    வீடுகளில் செம்பாலும், பொன்னாலும், ஐம்பொன்னாலும் வெள்ளியாலும் வேல்களைச் செய்து போற்றி வழிபடுகின்றனர். இந்த வேல்களின் உயரம் ஆறங்குலத்திற்குள் இருக்க வேண்டும்.

    வேலைத்தனியாகவும் வழிபடலாம். அல்லது பீடத்தில் எழுந்தருளச் செய்தும், திருவாசி அமைத்தும் வழிபடலாம்.

    சிலர் வேலின் நடுவில் சிவப்புக் கல்லைப் பதிக்கின்றனர். இப்படி பதிப்பது மிக நல்லது.

    முருகனை வழிபடுவதைப் போலவே வேலையும் வழிபட வேண்டும்.

    சிலர் பரம்பரை பரம்பரையாக ஒரே வேலை பாதுகாத்து வழிபட்டு பக்திப் பெருமிதம் கொள்கின்றனர்.

    வேலைத் தினமும் வழிபடுவது நல்லது.

    குறிப்பாக செவ்வாய்க் கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் வேலை நிச்சயம் வழிபட வேண்டும்.

    மேலும், கிருத்திகை பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதல் முருகனுக்குரிய நாட்களில் வேல் வழிபாடு மிக அவசியம் ஆகும்.

    "எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்.

    எழுந்தே மகிழ்ந்து,

    தொழும்போதும் வேலும் மயிலும் என்பேன்

    தொழுதே உருகி,

    அழும்போதும் வேலும் மயிலும் என்பேன்.

    அடியேன் சடலம்

    விழும்போதும் வேலும் மயிலும் என்பேன்.

    செந்தில் வேலவனே."

    -பாம்பன் சுவாமிகள்

    • உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம்.
    • ‘பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது’ என்பது பழமொழி.

    01. தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.

    02. குளித்தலை கடம்பவன நாதர் ஆலயம் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. சப்த கன்னியருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார்.

    03. தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக் கிறது.

    04. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தா ராம்.

    05. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப் படுவது மலேசியாவில் மட்டுமே.

    06. மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.

    07. விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும்.

    08. ஆய்குடி ஹரிராம சுப்பிரமணியர் ஆலயத்தில் தை மாதம் புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறும். அன்று பாலசுப்பிரமணியர் கருவறையை பூக்களால் நிரப்புவர். தைப்பூசத்தன்று நடத்தப்படும் பரிவேட்டை உற்சவம் இங்கு மிகவும் புகழ் பெற்றது.

    09. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    10. நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள குமரக்கோவிலில் தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும் அதனைத் தரிசிப்பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கோவிலில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    11. நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வள்ளி மலை. வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப்படுகிறது. அந்த நாள் சைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

    12. கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரி யானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.

    13. இலங்கையில் நல்லூர் என்னும் திருத்தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலாயுதத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடுகிறார்கள். வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள். இங்கு தைப்பூச விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.

    14. மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பத்து குகை என்னும் இடம். இந்தக் குகைக் கோவிலின் முகப்பில் 42.7 மீட்டர் (141 அடி) உயரமுள்ள முருகப்பெருமான் அருள் புரிகிறார். இந்தச்சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழிவார்கள். இங்கு தைப்பூசம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படு கிறது.

    15.திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் தவிமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.

    16. திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத்தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர்.

    17. சூரனை அழிக்க பராசக்தி தன் ஆற்றல் முழுவதையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை உருவாக்கி அதை முருகனிடம் கொடுத்த நாள் தைப்பூச நாள்தான். இந்த வேல்தான் சக்திவேல். இது பிரம்ம பித்யா சொரூபமானது. இதை முருகனின் தங்கை எனவும் கூறுவர்.

    18. எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறும். இருந்தாலும் பழனியில் நடைபெறும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளைக் கண்டுவழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். தைப்பூச நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர். பூசத்தன்று விரதமிருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணக்கூடாது. 'பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது' என்பது பழமொழி.

    19.சனி பகவான் தொடாத கடவுள் முருகனே. சனியின் ஆதிக்க நட்சத்திரமான பூசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா எடுக்கின்றனர். வேல் வகுப்பு என்ற பாடலையும் தைப்பூசத்தன்று பஜனைப் பாடலாக வள்ளி மலையில் பக்தர்கள் பாடுகின்றனர்.

    20. திருவிடைமருதூரில் உள்ள காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை என்று பெயர். இதற்கு கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசத்தன்று சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் இப்பூசத்துறைக்கு வந்து, தீர்த்தவாரி கண்டு வீதிவழி ஆலயம் வருவார்கள். இக்காட்சி காணக்கிடைக்காதது. அத்துடன் இப்பூச நன்னாளில் இங்கு மூன்று நாட்கள் ஆரியக் கூத்து நடத்துவார்கள். ஆலயத்தில் அன்று விசேஷ பூஜை நடைபெறும்.

    ×