search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special pujas"

    • புதிய பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
    • சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கம் வாசித்தனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    அருணசலேஸ்வரர் உண்ணாமுலை அம்மன் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாளித்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் புதிய பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    பின்னர் சம்பந்த விநாயகர் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கம் வாசித்தனர். இதில் அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் உறுப்பினர்கள் கோமதி குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். ஏராளமான பக்த்ர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் இன்று காலை முதல் கிரிவலம் சென்றனர்.

    • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ந்தேதி திறக்கப்படுகிறது.
    • பங்குனி உத்தரதிருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக திறக்கப்படுவதை தவிர்த்து மாதந்தோறும் 5 நாட்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இது தவிர விஷு, ஓணம் பண்டிகை மற்றும் பங்குனி உத்திரம் திருவிழா ஆகியவற்றின் போதும் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவை யொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுகிறார்.

    மறுநாள் (14-ந் தேதி) முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், நெய் அபிசேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 18-ந் தேதி வரை 5 நாட்கள் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, களபாபிசேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    பங்குனி உத்தரதிருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை9.45 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனகுரு கொடியேற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழாவில் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெற உள்ளது. 25-ந் தேதி 10-ம் திருநாளில் பம்பயைில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும்.

    • ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • மயான பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடந்தது.

    இதனையொட்டி கோவிலில் நள்ளிரவில் மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகள் முடிந்ததும் அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு அம்மனின் சூலம் தாங்கி சென்றனர்.

    அங்கு மயான மண்ணை கொண்டு மாசாணியம்மன் திருவுருவம் உருவாக்கப் பட்டிருந்து. நள்ளிரவு 1 மணிக்கு பம்பை இசை முழங்க மயான பூஜை தொடங்கியது.

    அப்போது அம்மன் அருளாளி அருண் சாமி வந்து ஆடியபடி, அம்மன் உருவத்தை சிதைத்து எலும்பை வாயில் கவ்வியபடியே பிடி மண்ணை எடுத்தார். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மாசாணி தாயே என பக்தி கோஷம் எழுப்பினர்.

    இந்த பூஜையில் ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள், வெளிமாவட்டத்தினர், வெளி மாநிலத்தினர் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீ மாசாணி அம்மன் நற்பணி மன்றம் சார்பில் வள்ளி கும்மியாட்டமும் நடைபெற்றது. இதனையும் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

    மயான பூஜையையொட்டி அங்கு ஆனைமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீநிதி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகா பூஜை நடந்தது. நாளை (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடக்கிறது.

    அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவையும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.

    25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் திரளான பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 26-ந்தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடி இறக்குதல், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும், 27-ந்தேதி காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது.
    • அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிப்பது தமிழகத்தில் வேறெங்கும் காணமுடியாது.

    இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் நாள்தோறும் திருமூர்த்தி மலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்த கன்னிகள் மற்றும் நவகிரகங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. மேலும் இங்குள்ள பஞ்சலிங்க அருவி வனப்பகுதியில் உள்ள ஆறுகளின் உதவியுடன் மூலிகை தண்ணீரை அளித்து வருகிறது.

    இயற்கை சூழலில் அமைந்துள்ள அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் உற்சாகத்தோடு வருகின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கார்த்திகை, பிரதோஷம், மகா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. குறிப்பாக ஆடி மற்றும் தை மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    இதில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற தை அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மதியம் முதல் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் குதிரைகள் மற்றும் மாடுகள் பூட்டிய வண்டியில் வந்தனர்.

    பின்னர் அவர்கள் இரவு முழுவதும் பெருமாள் கோவில் மற்றும் அணைப் பகுதியில் தங்கினர்.இன்று அதிகாலையில் எழுந்து பஞ்சலிங்க அருவிக்கு சென்று குளித்துவிட்டு மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர்.ஒரு சிலர் தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து திருமூர்த்திமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தாராபுரம் அமராவதி ஆற்றில் தை அமாவாசையை யொட்டி பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தினர். இதனால் காலை முதலே அமராவதி ஆற்றில் பொதுமக்கள் குவிந்தனர்.

    இதேபோன்று அமராவதி ஆற்றங்கரையோர பல்வேறு இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பொன்காளியம்மன் கோவில்,அங்காளம்மன் கோவில், தண்டபாணி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தை அமாவாசை தினமான இன்று திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி கோவில்களில், சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நடந்தது. திருப்பூர் ஈஸ்வரன் கோவில், வீரராகவ பெருமாள் கோவில், பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில், வாலிபாளையம் சுப்ரமணியர் கோவில், நல்லூர் ஈஸ்வரன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், மங்கலம் ரோடு பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். கோவில்களுக்கு குடும்பத்துடன் வந்த பக்தர்கள், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பக்தர்களுக்கு வெண்பொங்கல், தயிர்சாதம், தக்காளிசாதம், சுண்டல், துளசி உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

    அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில், நல்லா ற்றங்கரை மண்டபத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தை, ஆடி மாத அமாவாசை, சிவராத்திரி தினத்தன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். வருகிற 9-ந்தேதி தை அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி பிரதோஷ நாளான இன்று (7-ந் தேதி) அதிகாலையிலேயே மலையேற அடிவார பகுதியான தாணிப்பாறை பகுதியில் சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

    காலை 6.40 மணிக்கு வனத்துறையினரின் தீவிர சோதனைக்கு பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் மலையேறி சென்றனர்.

    மலைப்பாதையில் உள்ள சங்கிலி ஓடை, மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தை மாத அமாவாசையை முன்னிட்டு இந்த முறை வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப் பட்டிருந்தது. மலை அடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மலையேறி சென்ற பக்தர்கள் சுந்தர மகாலிங்கம் கோவிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் முடி காணிக்கை செய்தனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்கத்தக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    • 700 ஆண்டுகள் பழமையானது அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில்.
    • திருமண கோலத்தில் சனி பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள கடலோரப் பகுதி, சேதுபாவாசத்திரம். இந்த ஊரின் அருகே உள்ள விளங்குளம் என்ற இடத்தில் 700 ஆண்டுகள் பழமையான அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில், மாந்தா - ஜேஸ்டா ஆகிய இரண்டு மனைவிகளுடன் திருமண கோலத்தில் சனி பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

     சூரிய பகவானின் மகன்களான சனீஸ்வரருக்கும், எமதர்மராஜனுக்கும் சிறு வயதில் பகை இருந்தது. அதனால் சனியின் காலில் எமதர்மராஜன் அடிக்க, சனியின் காலில் ஊனம் ஏற்பட்டது. அந்தக் கால் ஊனத்துடன் மன அமைதி தேடி, பூலோகத்தில் அமைந்த புனிதத் தலங்களை தரிசித்து வந்தார், சனி பகவான். சுரைக்காய் குடுவையை ஏந்தி பிச்சை பெற்று, அதில் கிடைக்கும் தானியங்களை சமைத்து அன்னதானமாக அளித்து வந்தார்.

    ஒரு நாள் விளாமரங்கள் அடர்ந்த இந்த பகுதிக்கு வந்தார், சனி பகவான். அப்போது ஓரிடத்தில் விளாமரத்தின் வேரால் தடுக்கப்பட்டு, அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். அங்கே பல கோடி யுகங்களாக மறைந்திருந்த `பூச ஞான வாவி' என்ற ஞான தீர்த்தம் சுரந்து, சனி பகவானை மேல் எழுப்பி கரை சேர்த்தது. இது நடந்தது சித்திரை மாத வளர்பிறை திருதியையும், பூச நட்சத்திரமும், சனிக்கிழமையும் சேர்ந்த ஒரு தினமாகும். இதனால் சனி பகவானின் ஊனம் நிவர்த்தியானதாக தலவரலாறு சொல்கிறது.

    சனி பகவான் விழுந்த பள்ளத்தில் நீரூற்றாக வெளிப்பட்ட ஞான வாவி, குளமாக மாறியதால், இந்த கிராமம் 'விளம்குளம்' என்று அழைக்கப்பட்டது. பின்னர் அதுவே மருவி `விளங்குளம்' என்றானது. ஊனம் நீக்குதல், திருமணத்தடை போன்ற தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் இந்தக் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    அதுமட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் இங்கே வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் அட்சய திருதியை திருநாளில் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது. சனிப் பெயர்ச்சி அன்றும் இங்கே விசேஷ பூஜைகள் செய்யப்படும்.

    • 5-ம் திருவிழாவான இன்று கருட தரிசனம் நடைபெற்றது.
    • ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் தரிசனம் நடைபெற்றது.

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 10 நாள் மார்கழி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. மார்கழி விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 5-ம் திருவிழாவான இன்று முக்கிய நிகழ்வான கருட தரிசனம் நடைபெற்றது.

    விழாவில், அதிகாலை 5 மணியளவில் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் தரிசனம் நடைபெற்றது. வீரமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன் தாணுமாலய சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கிழக்கு நோக்கி எழுந்தருளினர்.

    அந்நேரத்தில், அவர்களைச் சுற்றி கருடன் வலம் வரும் கருட தரிசனம் நடைபெற்றது. இதை காண்பதற்கு சுசீந்திரம் கோயில் வளாக பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    பின்னர், இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி ரதவீதியை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. கருட தரிசனத்துக்கு அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • ரிஷிகள் வந்த வனம் என்பது மருவி 'ரிஷிவந்தியம்' என அழைக்கப்படுகிறது.
    • சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரீஸ்வரராக ஒளி வடிவில் சிவன் காட்சி தருகிறார்.

    பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டதால் `ரிஷிகள் வந்த வனம்' என்பது மருவி ரிஷிவந்தியம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேதா அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருமலை நாயக்கரால் புதுப்பித்து கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு வரலாற்று சான்றாக இந்த கோவிலில் திருமலைநாயக்கரின் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது.

    சிவன் பார்வதி திருமணம் கயிலாயத்தில் நடந்தது. அப்போது தென் திசை உயர்ந்து வடதிசை தாழ்ந்தது. இதை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை செல்ல சிவபெருமான் உத்தரவிட்டார். சிவனின் கட்டளையை ஏற்ற அகத்தியர் பல தலங்களில் தங்கி சிவபூஜை செய்து சென்றார். ஓரிடத்தில் சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தார். இந்தக்காட்சி எந்நாளும் உலக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என அகத்தியர் வேண்டினார். அப்போது 'எனக்கு (லிங்கத்திற்கு) தேன் அபிஷேகம் செய்யும் காலத்தில் இங்குள்ள லிங்கத்தில் என்னுடன் பார்வதியும் இணைந்து தோன்றுவாள்' எனக்கூறி மறைந்தார்.

    விஜயநகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக சிலர் காடு வெட்டும் போது மண்வெட்டியில் வெட்டுப்பட்ட சுயம்பு லிங்கம் கிடைத்தது. அந்த லிங்கம் தான் மூலவர் அர்த்தநாரீஸ்வரர். இன்றும் கூட வெட்டுப்பட்ட கீறலை சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம். இந்தக் கோவில் துவாபாரயுகத்தில் தோன்றியது என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்தலத்திற்கு அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வந்து ஈசனை வழிபட்டுள்ளனர்.

    இங்கு வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும். பூஜை செய்த ரிஷிகளுக்கு நற்பலன்களையும், குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார்.

    குரு நமச்சிவாயரின் சீடரான குக நமச்சிவாயர் திருவண்ணாமலையில் இருந்து பல தலங்களை தரிசித்து விட்டு ரிஷிவந்தியம் வழியாக சிதம்பரம் சென்றார். அவ்வாறு செல்லும்போது, அவருக்கு பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று, `தாயிருக்க பிள்ளை சோறு' என்ற செய்யுளை பாடினார். உடனே அம்மன் அவர் முன் தோன்றி 'நான் இங்கு ஈசனுடன் அர்த்தபாகம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக என்று கூறினார்.

    இதையேற்று குக நமசிவாயரும் அதன்படியே 'மின்னும்படி வந்த சோறு கொண்டு வா என்ற பாடலை பாடினார். இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகை அம்மன் பொற்கிண் ணத்தில் சோறு கொண்டு வந்து குகநமச்சிவாயரின் பசியாற்றினாள் என வரலாறு கூறுகிறது.

    தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தலத்தில் இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை வழிபடாமல் சென்று விடுவான்.

    தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த முத்தாம்பிகை அம்மன், ஒருமுறை அபிஷேகக் குடங்களை மறைத்து வைத்துவிட்டாள். பால்குடங்களை காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித் தான். அப்போது சிவபெருமான் இந்திரன் முன் தோன்றி, இனிமேல் முத்தாம்பிகை அம்பாளுக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படி கூறினார்.

    மேலும் தினமும் நடக்கும் தேன் அபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாகவும் கூறி மறைந்தார்.

    தேன் கெடாது தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேன் அபிஷேகத்தில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரீஸ்வரராக (ஆண்பாதி. பெண்பாதி) ஒளி வடிவில் சிவன் காட்சி தருகிறார். மற்ற அபிஷேகம் நடக்கும் போதுலிங்க வடிவம் மட்டுமே தெரியும்.

    கோவில் அமைப்பு

    முத்தாம்பிகை அம்மன் உடனுறை அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளே சென்றதும். உயர்ந்த கொடிமரம் உள்ளது. அதன் அருகே நந்திபெருமான் காட்சி அளிக்கிறார். பின்னர் உள்ளே அர்த்தநாரீஸ்வரர் காட்சி அளிக்கிறார். அவரை தரிசித்து விட்டு வரும் வழியில் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ளன. மேலும் சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், அகத்தியர், கஜலட்சுமி, வள்ளி, தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

    அர்த்தநாரீஸ்வரருக்கு இடப்புறத்தில் முத்தாம்பிகை அம்மன் காட்சி தருகிறார். இதன் உட்பிரகாரத்தில் பெருமாள் புலி பாதங்களுடன் எழுந்தருளி இருப்பதையும் காணலாம்.

    மேலும் முத்தாம்பிகை அம்மன் சன்னிதிக்கு நவக்கிரக சன்னிதியும் உள்ளது. முத்தாம்பிகை அம்மனை தரி சித்து விட்டு வெளியே வரும்போது அருகே உள்ள மண்டபத்தில் யாளிச்சிலை ஒன்று உள்ளது. அதன் வாயினுள் ஒரு கல் உருண்டை உள்ளது. பந்து போன்ற அந்த உருண்டையை நம்முடைய கைவிரலால் எந்த பக்கம் வேண்டுமானாலும் உருட்டலாம். ஆனால்' வெளியில் எடுக்க முடியாது. இது சிற்ப வேலைப்பாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், சிலை வடித்தவர்களின் திறமையையும் காட்டுகிறது.

    இதற்கு தென்கிழக்கு மூலையில் வசந்த மண்டபம் உள்ளது. அதில் பல்வேறு இசைகளை வெளிப்படுத்தும் சரிகமபதநி' இசைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    விழாக்கள்

    இக்கோவில் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. மேலும் கோவிலில் அகத்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஞான போத புஷ்கரிணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவம் 10 நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் கார்த்திகை மாதம் 3-வது திங்கட்கிழமையில் சாமிக்கு 108 சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ நாட்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்வது வழக்கம்.

    கோவில் புதுப்பித்து பல ஆண்டுகள் ஆவதால் கோவில் மேல்தளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கோவிலை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருமணத்தடை நீங்கவும். குழந்தை பாக்கியம் பெறவும், சுகப்பிரசவம் வேண்டியும் ஏராளமானோர் இக்கோவிலில் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் தேன் வாங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்த தேனை சாப்பிட்டால் பேச்சு குறைபாடு நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். மேலும் சாமிக்கு புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    அமைவிடம்

    முத்தாம்பிகை அம்மன் உடனுறை அர்த்தநாரீஸ்வரரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் தரிசிக்கலாம். திருக்கோவிலூரில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் தியாக துருகம் வழியாக கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் இக்கோவில் உள்ளது. திருக்கோவிலூர், தியாக துருகம், கள்ளக்குறிச்சியில் இருந்து இக்கோவிலுக்கு செல்ல பேருந்துகள் உள்ளன.

    • உற்சவர் கங்கையம்மன்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன.
    • திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதனால் நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏழு கங்கையம்மன் கோவிலில் உற்சவர் கங்கையம்மன்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன. பூஜைகள் முடிந்ததும் உற்சவர்களான ஏழு கங்கையம்மன்கள் எதிரே போடப்பட்டு இருந்த திரைகள் அகற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதையடுத்து உற்சவர் கங்கையம்மன்கள் அங்கிருந்து சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம் நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய உற்சவர்கள் ஊர்வலம் ஏழு பகுதிகளான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம், பேரிவாரி மண்டபம், ஜெயராம் ராவ் வீதி, சன்னதி வீதி, பிராமண வீதி எனப்படும் தேர் வீதி, காந்தி வீதி, கொத்தப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்ல சுமார் 3 மணி நேரம் ஆனது. உற்சவர் ஏழு கங்கையம்மன்கள் அந்தந்த நிலையை அடைந்ததும், அங்கு உற்சவர் ஏழு கங்கையம்மன்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டன.

    திருவிழாவில் ஸ்ரீகாளஹஸ்தி நகர மக்கள், பக்தர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவர் ஏழு கங்கையம்மன் மற்றும் உற்சவர் ஏழு கங்கையம்மன்களை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடுகள், கோழிகள் பலியிட்டனர். ஒருசில பக்தர்கள் கோவில் வாசலில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    நிறைவாக உற்சவர் ஏழு கங்கையம்மன்களுக்கு பல்வேறு பூஜைகள் முடிந்ததும் இரவு 9 மணியளவில் மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு உற்சவர் ஏழு கங்கையம்மன்கள் மற்றும் மூலவர் ஏழு கங்கையம்மனுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று இன்று (வியாழக்கிழமை) நீரில் கரைக்கப்படுகின்றன. இதோடு கோவில் திருவிழா நிறைவடைகிறது.

    கோவில் திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திருவிழாவின்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஸ்ரீகாளஹஸ்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினத்தில் இருந்து இன்று காலை வரை நகருக்குள் பஸ்கள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கனரக வாகனங்கள் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. சிவன் கோவில் நான்கு மாட வீதிகளில் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தன.

    • ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது.
    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத் தேர் உண்டு.

    * நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத் தேர் உண்டு. பணம் கட்டியவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் மாலை 6.௩௦ மணிக்கு தங்கத்தேரை இழுக்கலாம்.

    * நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் மட்டும் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    * ஆஞ்சநேயர் கோவிலில் புதிய வாகனங்களுக்கு பூஜை போடுவதை நாமக்கல் நகர மக்கள் வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இருசக்கர வாகனங்களுக்கு பூஜைபோட கட்டணமாக ரூ.50ம், கார், வேன்களுக்கு ரூ.200ம், பஸ், லாரிகளுக்கு ரூ.500ம் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

    * வருடந்தோறும் அனுமன் பிறந்த மூல நட்சத்திர நாளில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் வடை மாலைகள் சாத்தப்படுகிறது.

    * ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    * நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபி ஷேகம் 2009-ம் ஆண்டு நடந்தது.

    * ஆஞ்சநேயர் செய்த வீர, தீர செயல்கள், சீதையிடம் ஆஞ்சநேயர் பேசியது, ராமரின் இதயத்தில் இடம் பெற்றது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஓவியங்களாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது.

    * நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் துளசி, வெற்றிலை மாலைகள் மற்றும் பூமாலைகள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

    * ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துதல் மற்றும் முத்தங்கி அலங்காரம் உள்ளிட்ட கட்டளை தாரர் சேவைக்கான முன்பதிவு கோவில் அலுவலகத்தில் நடந்து வருகிறது.

    * தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் அபிஷேகத்தில் சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    * மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்ப டுகிறது.

    * அமாவாசை, பவுர்ணமி, ஆடிப்பூரம், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும்.

    * ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது.

    * ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெண்ணை பக்தர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

    * நாமக்கல் நரசிம்மரின் அவதாரங்கள் கோவிலின் மேற்கூரையில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    * ஆஞ்சநேயர் கோவில் சன்னதி தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    * நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்க கவசம் அலங்காரமும் முத்தங்கி அலங்காரமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த அலங்காரத்தில் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.

    • நாளை விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
    • சிறப்பு மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    ராமநாதபுரம்:

    விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உப்பூர் விநாயகர் கோவிலில் நாளை விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைந்துள்ளது ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 10-ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருவிழாவில் தினமும் விநாயகர் சிம்ம, மயில், யானை வாகனம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனிடையே திருவிழாவின் 6-வது நாளான நேற்று விநாயக பெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு ரிஷப வாகனத்தில் விநாயகா் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 18-ந் தேதி (திங்கட்கிழமை) தேரோட்டமும், 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

    • கடைசி ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • சோழவந்தான், காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர் உள்பட 21 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து சண்முகவேல் அர்ச்சகர்பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

    சோழவந்தான் வடக்கு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் மகளிர் குழு சார்பில் தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. மேளதாளத்துடன் 4 ரத வீதியும் சுற்றி வந்து ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக கம்பத்தில் அபிஷேகம் செய்தனர். பின்னர் கூழ் வார்த்து பக்தர்களுக்க வழங்கினர்.

    திரவுபதி அம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், உச்சி காளியம்மன் கோவில், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில், உச்சி மகா காளியம்மன் கோவில், திருவேடகம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஏடகநாதர்-ஏலவார் குழலி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. சோழவந்தான், காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×