search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerala govt"

    கேரளாவை நிலைகுலைய வைத்த வெள்ள பாதிப்பின் போது மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் வாடகையாக மத்திய அரசு ரூ.290 கோடியை கேட்பதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்தது.

    கேரளாவில் வெள்ளத்தில் தவித்த மக்களை மீட்க முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டது. குறிப்பாக விமானப் படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் மக்களை துரிதமாக மீட்பதில் பெரும் உதவியாக இருந்தது.

    வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கேரள வெள்ள பாதிப்பு குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தகவல்களை தெரிவித்தார். அவர் பேசும் போது கூறியதாவது:-


    வரலாறு காணாத மழை காரணமாக கேரளாவில் ரூ.26 ஆயிரம் கோடியே 718 லட்சத்திற்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாக ஐ.நா. சபை ஏஜென்சிகள் கணக்கு எடுத்து உள்ளன. கேரள மறு சீரமைப்புக்கு ரூ.31 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பின் போது மத்திய அரசு கேரள மீட்பு பணிக்கு விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்களை வழங்கியது. இந்த செலவுக்காக ரூ.290 கோடியே 74 லட்சத்தை வழங்க வேண்டுமென மத்திய அரசு நம்மிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மீட்புப்பணியின் போது 56 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது. திருவனந்தபுரம், கோவை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தூரத்தை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 1 மணி நேரம் ஹெலிகாப்டர் பறக்க ரூ.3 லட்சம் செலவாகிறது. பெரிய ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதற்கு இதை விட கூடுதல் கட்டணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KeralaFloods
    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு அவசரம் காட்டியிருக்க வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கண்ணம் ராஜேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். #Sabarimala #CPI
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு உள்பட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த நிலையில் சபரிமலையில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கும் விவகாரத்தில் பினராயி விஜயன் மீது கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கண்ணம் ராஜேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த முதல்வர் அவசரம் காட்டி இருக்க வேண்டாம். அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி இது தொடர்பாக ஒரு சமாதான முடிவை எடுத்து இருக்கலாம்.

    இதன் மூலம் இந்த பிரச்சனையை அமைதியாக, பொறுமையாக கையாண்டு இருக்கலாம் என்பது எங்கள் கருத்து. ஆனாலும் ஆளும் கட்சிக்கு நாங்கள் அளித்து வரும் ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.  #Sabarimala #CPI
    சபரிமலையை அடுத்த அயோத்தியாக மாற்ற பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்றவை முயற்சித்ததாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். #Sabarimala #PinarayiVijayan #BJP
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய கேரள அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள், பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உள்பட இந்து அமைப்பினர் தீவிர போராட்டம் நடத்தி வருவதால் இதுவரை சபரிமலையில் இளம்பெண்கள் யாரும் தரிசனம் செய்ய முடியவில்லை.

    தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்திருப்பதால் அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளையும் போலீசார் விதித்துள்ளனர். இது பக்தர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    பாதுகாப்பு என்ற பெயரில் அய்யப்ப பக்தர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று கேரள ஐகோர்ட்டும் சமீபத்தில் கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையில் நேற்று நடைபெற்ற கேரள சட்டசபை கூட்டத்தில் சபரிமலை விவகாரம் பெரும் அமளியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் சபரிமலை பிரச்சனைப்பற்றி விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

    கேள்வி நேரம் முடிந்ததும் அது பற்றி விவாதிக்கலாம் என்று சபாநாயகர் கூறினார். அதைத் தொடர்ந்து முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசத் தொடங்கினார். அவரது பேச்சு நீண்டு கொண்டேச் சென்றதால் பொறுமை இழந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையின் மையப்பகுதியில் திரண்டு அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரையும் முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சட்டசபை கூட்டத்தில் பினராயிவிஜயன் பேசும் போது கூறியதாவது:-

    சபரிமலையில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கும் பிரச்சனையில் மாநில அரசு அவசரம் காட்டவில்லை. அதே சமயம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்து விட்டு பிறகு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன.


    இந்த பிரச்சனையை வைத்து சபரிமலையை அடுத்த அயோத்தியாக மாற்ற பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்றவை முயற்சித்தன. அயோத்தியில் என்ன நடந்ததோ அது தான் சபரிமலையிலும் நடந்தது. சபரிமலையில் நடைபெற்ற போராட்டம், வன்முறையின் பின்னணியில் சதி திட்டம் உள்ளது. சபரிமலையில் வன்முறையை ஒரு போதும் அரசு அனுமதிக்காது.

    சபரிமலையில் வன்முறை யில் ஈடுபட்டதாக 320 பேர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். அவர்களது பின்னணியை பார்த்தால் அவர்கள் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் என்பது தெரியும்.

    சபரிமலைக்கு இளம்பெண்கள் வந்தால் கோவில் நடையை மூடுவேன் என்று தந்திரி கூறியதன் மூலம் அவர் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை தடுக்க முயன்று உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sabarimala #PinarayiVijayan #BJP
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரள அரசும், மக்களும் உதவ வேண்டும் என்று பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #GajaCyclone #KamalHaasan #PinarayiVijayan
    சென்னை:

    கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    அண்மையில் வீசிய கஜா புயல், தமிழக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி, கேரள அரசினையும் மக்களையும் தங்களால் இயன்ற உதவிகளை தமிழ்நாட்டிற்கு இப்பொழுது அளித்திட முன் வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறது. இப்பேரிடர் காலங்களில் மனிதாபிமான உணர்வுகள் மக்களிடம் அதிகமாக மேலோங்கிட வேண்டும்.


    கஜா புயலின் தாக்கத்தினால் எங்கள் மக்கள் இழந்திருக்கும் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து, மீண்டு வருவதற்கு இன்னும் பல வருடங்களாகும். இருப்பினும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமது சகோதரர்களின் இயல்பு வாழ்க்கையை புனரமைக்கும் இப்பணியினை இன்றே தொடங்கிட வேண்டும்.

    பயிர்கள் சேதாரமடைந்து, மரங்கள் வேருடன் சாய்ந்து, படகுகளை இழந்து மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தையே இழந்து மிகக்கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

    நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, உன்னதமான மானுடக்கருணையை உணர்த்திட வேண்டிய அத்தியாவசியமான தருணம் இது. மனிதாபிமானமே மனிதத்தின் அடிப்படை உணர்வு. அதுவே நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் உணர்வுப்பாகம் அதுதான் இன்று இப்பொழுது, இங்கே எங்கள் தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்று.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #GajaCyclone #KamalHaasan #PinarayiVijayan
    சபரிமலை கோவிலுக்குசென்ற பெண்களை தடுத்ததாக 200 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும். 18-ம் படியில் போராட்டம் நடத்திய தந்திரிகளுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. #SabarimalaProtests #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு இந்து அமைப்பினரிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கோவில் நடை திறந்தபிறகு இப்போராட்டம் வலுவடைந்துள்ளது.

    கோவில் நோக்கி வரும் பெண்களை போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்த எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் சென்ற பத்திரிகையாளர் கவிதா, பெண்ணியவாதி ரெகானா பாத்திமா ஆகியோர் சன்னிதானம் வரை சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதேசமயம் கோவில் மேல்சாந்திகள், கோவிலை பூட்டி விடுவோம் என்று தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன், திடீரென 18-ம் படியின் கீழ் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    மேல்சாந்திகளின் போராட்டம் பற்றி அறிந்ததும், கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், தேவசம் போர்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். நடை பந்தலில் இருக்கும் பெண்கள் இருவரையும் உடனடியாக திருப்பி அனுப்பும்படி உத்தரவிட்டார்.  இதைத் தொடர்ந்து கவிதா, பாத்திமா இருவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் இந்துக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே சபரிமலை சன்னிதான 18-ம் படியின் கீழ் போராட்டம் நடத்திய தந்திரிகள், மேல்சாந்திகள், அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவிதாங் கூர் தேவசம் போர்டு முடிவு செய்தது. இதையடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நேற்று இரவே நோட்டீசு அனுப்பப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதில்லை என்று கூறி வந்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம், பக்தர்கள் போராட்டம் காரணமாக முந்தைய முடிவை மாற்றிக் கொண்டது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக கூறி உள்ளது.

    சபரிமலையில் தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இங்கு போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. கோவிலுக்கு செல்லும் பெண் பக்தர்களை தடுக்கக்கூடாது என்று போலீசார் உத்தரவிட்டிருந்தனர். இதனை மீறி நேற்றும் பத்தினம்திட்டை, நிலக்கல், பம்பை பகுதிகளில் பக்தர்கள் பலர் போராட்டம் நடத்தினர்.

    இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித் கூறும்போது, போராட்டத்தில் ஈடுபட்டு அசம்பாவிதங்களை ஏற்படுத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சபரி மலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் போராட்டக்காரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். பின்னர் அவர்கள் கைது நடவடிக்கைக்கு ஆளாவார்கள் என்றார்.

    இதற்கிடையே பத்தினம் திட்டா கலெக்டர், சபரிமலை பகுதியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை வருகிற 22-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். 22-ந்தேதி மாலை சபரிமலை நடை அடைக்கப்படும். எனவே அன்று வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் இன்று சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. #SabarimalaProtests #Sabarimala
    சபரிமலைக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்தான விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த வித முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. #Sabarimala #SabarimalaVerdict #SabarimalaProtests #ReviewPetition #KeralaGovt #DevaswomBoard
    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பலரும் ஆதரவும், இந்து அமைப்புகள் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    சமீபத்தில் சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானாது. கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து போராட்டக்காரர்கள் காலில் விழுந்து முறையிட்டு திருப்பி அனுப்பினர். மேலும், பெண் காவலர்கள் அங்கு பணியாற்றவும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



    இந்த போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், சபரிமலை விவகாரத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால் போராட்டத்தை கைவிட தயரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எந்த அரசியல் கட்சிகளுக்கும் பின்னால் தேவசம் போர்டு செல்லவில்லை என்றும் சபரிமலை விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக இருப்பதாகவும், சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து நாளை (வெள்ளிக்கிழமை) முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த வித முடிவும் எடுக்கலாம் என தேவசம் போர்டுக்கு கேரள அரசு முழு அனுமதி அளித்துள்ளது. #Sabarimala #SabarimalaVerdict #SabarimalaProtests #ReviewPetition #KeralaGovt #DevaswomBoard
    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 500 பெண் போலீசாரை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    ஆனாலும் கேரள அரசும் சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த உடனடியாக நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இது தொடர்பாக ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டு அதில் முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது சபரிமலை கோவில் நடைசாத்தப்பட் டுள்ளது. ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள் 18-ந்தேதி முதல் பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வார்கள். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததால் பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல இனி எந்த தடையும் இல்லை. அவர்கள் ஐப்பசி மாத பூஜையிலும் கலந்து கொள்ளலாம்.

    அதே சமயம் சபரிமலையில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருப்பதால் அது தொடர்பான நடவடிக்கைகளும் மாநில அரசு, தேவசம் போர்டு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.


    சபரிமலை வரும் பெண் பக்தர்கள் பாதுகாப்புக்காக அதிக அளவு பெண் போலீசாரை பம்பை, சன்னிதானத்தில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது. போலீஸ் நிலையம் வாரியாக பெண் போலீசை தேர்வு செய்து சபரிமலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. சபரிமலை கோவில் நடை திறப்புக்கு 2 நாட்கள் முன்னதாக வருகிற 15-ந்தேதியே பெண் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 500 பெண் போலீசாரை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களில் 350 பேர் கேரளாவில் இருந்து பணி அமர்த்தப்படுவார்கள். மற்றவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்படுகிறார்கள்

    இது தொடர்பாக கேரள அரசு தலைமைச் செயலாளர் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் இந்த 5 மாநிலங்களில் இருந்து பெண் போலீசாரை சபரிமலை பாதுகாப்பு பணிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டு உள்ளார்.  #Sabarimala
    கேரள மாநிலத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தின் எதிரொலியாக, மாநிலத்தின் அனைத்து கொண்டாட்டங்களையும் அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் உருக்குலைந்தன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியிலும், அதற்காக நிதி திரட்டும் பணியிலும் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.



    இந்நிலையில், கேரள மாநிலத்தில் வழக்கமாக நடைபெறும் சர்வதேச திரைப்பட கண்காட்சி உள்ளிட்ட அனைத்து கொண்டாட்டங்களையும் அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், நிதி சேமிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தவும் கேரள அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. #KeralaFloods
    பாவ மன்னிப்பு கோரிய பெண்ணை பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கேரள அரசு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Kerala #SupremeCourt
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தனது திருமண வாழ்வுக்கு முன்னதாக  நடந்த தவறு குறித்து பாவமன்னிப்பு கேட்பதற்காக சென்ற பெண்ணை வற்புறுத்தி பாதிரியார்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் மூலம் வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் பாதிரியார்கள் மீது குற்றவழக்குகள் பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியாரின் ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வருகிற ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ஆகஸ்ட் 6-ம் தேதி வரை குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதிரியார்கள் ஜார்ஜ் மற்றும் சோனி வர்க்கீஸ் ஆகியோரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. #Kerala #SupremeCourt
    உயரதிகாரியின் மகளால் தாக்கப்பட்ட கடைநிலை காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் துறையில் இனி எடுபிடி வேலைக்கு ஆள் கிடையாது என கேரள முதல்வர் உறுதியளித்துள்ளார். #Keralagovt #Orderlyduty #Pinarayivijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில போலீஸ் ஆயுதப்படை பட்டாலியன் கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்தவர் சுதேஷ் குமார். இவரது வீட்டில் காவலர் கவாஸ்கர் என்பவர் அப்துல் கறீம் கவாஸ்கர் என்பவர் ‘ஆர்டலி’யாக பணி செய்துவந்தார். 

    கார் டிரைவராகவும் ஏ.டி.ஜி.பி-யின் மனைவி மற்றும் மகளை திருவனந்தபுரம் நேப்பியார் மியூசியம் வளாகத்தில் உள்ள மைதானத்தில் கடந்த 14-ம் தேதி காலையில் நடைப்பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளார். நடைப்பயிற்சி முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது அவர்களின் அருகே காரை கொண்டு செல்ல சற்று கால தாமதமானதால் கவாஸ்கரை கூடுதல் டி.ஜி.பி-யின் மகள் ஸ்நிக்தா திட்டியிருக்கிறார். 

    தொடர்ந்து, கவாஸ்கர் காரை ஒட்டிச் சென்றபோதும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் ஸ்நிக்தா செல்போனால் தாக்கியதில் கழுத்து, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட  கவாஸ்கர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    தன்னை ஏ.டி.ஜி.பி-யின் மகள் தாக்கியதாக கவாஸ்கர் போலீசில் புகார் செய்தார். ஆனால் அவரது புகாரை ஏற்றுக்கொள்ளாமல் ஏ.டி.ஜி.பி-யின் மகள் கொடுத்த எதிர்புகாரின் அடிப்படையில் மியூஸியம் காவல்நிலையத்தில் கவாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து, கவாஸ்கருக்கு ஆதரவாக காவலர் நலச் சங்கம் தலையிட்டதால் ஏ.டி.ஜி.பி மகள் மீது பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    இதையடுத்து ஏ.டி.ஜி.பி சுதேஷ் குமார் மற்றும் கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவலர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலையிட்டதைத் தொடர்ந்து ஸ்நிகிதாவின் தந்தை சுதேஷ்குமார், ஆயுதப்படை போலீஸ் பட்டாலியன் கூடுதல் டி.ஜி.பி. பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். 

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீட்டில் பணிபுரியும் ஆர்டலிகளின் பட்டியல் மற்றும் வாகனங்களின் விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேரள அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில், கேரள சட்டசபையில் இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளித்த முதல் மந்திரி பினராயி விஜயன், போலீஸ் துறையில் இருந்து இனி உயரதிகாரிகளின் வீடுகளுக்கு ‘ஆர்டர்லி’ (எடுபிடி) வேலைக்கு ஆள் அனுப்பும் வழக்கம் ஒழிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. கே. சபரிநாதன் என்பவரின் கேள்விக்கு பதிலளித்த பினராயி விஜயன், உயரதிகாரிகளின் வீடுகளில் கடைநிலை காவலர்களை வேலைக்கு அனுப்பும் பழக்கம் வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது. இழிவான இந்தப் பழக்கம் கேரள மாநிலத்தில் இனி முற்றிலுமாக ஒழிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

    காவல்துறை என்பது கட்டுப்பாடான அமைப்பாகும். ஆனால், கட்டுப்பாடு என்னும் பெயரில் மனித உரிமை மீறல்களை அனுமதிக்க முடியாது. அரசின் உத்தரவை மீறி நடந்துகொள்ளும் உயரதிகாரிகள் யாரானாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பினராயி விஜயன் உறுதியளித்தார். #Keralagovt #Orderlyduty #Pinarayivijayan
    ×