search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிக்கை"

    • எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும்.
    • சமூக வலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் கூடாது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியின் அடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் நியாயமானதாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பாக்கிறார்கள். குறிப்பாக தேர்தல் ஆணையம் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும், பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும், அரசியல் கட்சிகளிடையே பாரபட்சம் கூடாது, சமூக வலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் கூடாது, புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல விதிமுறைகளை வெளியிட்டு அறிவித்திருப்பதால் அனைத்து தரப்பு மக்களிடமும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணில் அங்கம் வகித்துள்ள த.மா.கா.வானது கூட்டணில் உள்ள அனைத்து கட்சிகளின் வெற்றிக்காக மக்களை நேரிடையாக சந்தித்து, வாக்குறுதிகள் கொடுத்து, ஓட்டு கேட்டு, மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சியானது பிரதமர் மோடி தலைமையில் அமைய பாடுபடும். நாடு முழுவதற்குமான தேர்தல் என்பதால் வாக்களிக்கும் தகுதி உள்ளவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும் என்பதற்கு ஏதுவாக விழிப்புணர்வுடன் தேர்தல் நடைபெற வேண்டும் என த.மா.கா எதிர்பார்க்கிறது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக, மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப, எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
    • தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2024-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஆசிரியர் உள்ளிட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, அப்பணிகளுக்கான ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் மாதம், போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் மாதம் ஆகியவை குறித்த விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் 10-ம் நாள் வெளியிடப்பட்டன.

    அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இது குறித்த அறிவிக்கையை எதிர்பார்த்து தகுதியுடைய தேர்வர்கள் காத்திருந்தனர்.

    ஆனால், பிப்ரவரி நிறைவடைந்து மார்ச் மாதத்தில் இரண்டாவது வாரமும் பிறந்துவிட்ட நிலையில் அறிவிக்கை வெளியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தையும், வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. இதை உணர்ந்து அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை, மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
    • உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கினால் தான் உற்சாகத்துடன் பணி செய்வார்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகக் காவல்துறையில் உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிபாளர் நிலை வரையிலான அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு பல மாதங்களாகியும், அதற்கு அரசு ஒப்புதல் அளிக்காத தால் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலும், மனச்சோர்வும் அடைந்துள்ளனர். காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவை யின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

    உதவி ஆய்வாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன் வருவாய்த்துறையில் உதவியாளராக பணியில் சேர்ந்த பலர் வட்ட ஆட்சியராகவும், தலைமை செயலகத்தில் தட்டச்சராக பணியில் சேர்ந்தவர்கள் நிர்வாக அலுவலராகவும் பதவி உயர்வு பெற்று விட்டனர். ஆனால், காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் அதே நிலையில் தொடர்கின்றனர். இது மிகப்பெரிய அநீதி ஆகும்.

    காவல்துறையின் இதயமாக திகழ்பவர்கள் துணை கண்காணிப்பாளர் நிலை முதல் உதவி ஆய்வாளர் நிலை வரை உள்ள அதிகாரிகள் தான். அவர்கள்தான் வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பவர்கள்.

    அவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கினால் தான் உற்சாகத்துடன் பணி செய்வார்கள்.

    எனவே, மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது.
    • சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் என்ன நடந்தது? என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

    அதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை, தடுப்பணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் சிக்கல் தீர்ந்துவிட்டது என்று ஆந்திர அமைச்சர் கூறியிருப்பது தான்.

    அதனால் புதிய அணையை கட்டப்போவதாகவும் ஆந்திர அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    அப்படியானால், ஆந்திராவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாக இத்தகைய பின்னடைவு ஏற்பட்டிருந்தால் தான் ஆந்திர அரசால் புதிய தடுப்பணைக்கு இன்று அடிக்கல் நாட்ட முடியும். எனவே, ஆந்திராவில் புதிய தடுப்பணைகளை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் என்ன நடந்தது? என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

    பாலாற்று நீரைப் பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கட்டக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

    அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளைக் கட்டுவதும், ஏற்கனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும். இதை அனுமதிக்கக்கூடாது.

    ஒரு காலத்தில் பால் போல் தண்ணீர் ஓடிய பாலாறு, இப்போது வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதனால் பாலாற்று தண்ணீரை நம்பி பாசனம் செய்து வந்த விவசாயிகளில் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாலாற்றின் குறுக்கே உடனடியாக ஒரு தடுப்பணையும், தேர்தலுக்குப் பிறகு மேலும் இரு தடுப்பணைகளும் கட்டப்பட்டால், ஆந்திரத்தில் வெள்ளம் ஏற்பட்டால் கூட தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வராது. அப்போது பாலாறு பாலைவனமாகவே மாறி விடக்கூடும்.

    பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்க ஆந்திரம் திட்டமிட்டு மேற்கொள்ளும் இந்த சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கான ஆந்திர அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

    அதுமட்டுமின்றி, ஆந்திர தடுப்பணைகளுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குக்கு உயிர் கொடுப்பதுடன், அந்த வழக்கைப் பயன்படுத்தி பாலாற்றின் குறுக்கே இனிவரும் காலங்களில் அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அக்டோபர் 31-ந் தேதி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை ஊழல் தடுப்பு வாரமாக கொண்டப்படுகிறது.
    • ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும்.

    திருப்பூர்,அக். 26-

    கல்லூரிகளில் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்ேததி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க, பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.அக்டோபர் 31-ந் தேதி, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம். ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த தினத்தையொட்டி, ஒரு வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக, மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் கொண்டாடி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான கருப்பொருள், ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்துக்காக அர்ப்பணியுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தலைப்பின் கீழ் அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கல்லூரிகளில் கடைபிடிக்க யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

    அதில், ஊழல் தடுப்பு தொடர்பான கருத்தரங்கம், பயிலரங்கம், பட்டிமன்றம், வினாடி- வினா போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும். சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி, இ மெயில், வாட்ஸ் ஆப் வாயிலாக, விழிப்புணர்வு செய்திகளை சக மாணவர்களிடையே பகிர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் காதர்கனி நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் சோசியல் டெமாக்ரடிக் கிரேடு யூனியன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஊரக பணியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் யூசுப் தலைமை தாங்கினார். மாநில தலைவர் முகமது ஆஷாத், மாநில பொது செயலாளர் ரவூப் நிஸ்தார், மாநிலத் துணைத் தலைவர் அப்துல் சிக்கந்தர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட கமிட்டி உறுப்பினர் கார்த்திகை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கடந்த 4.10.2023-ல் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் 15-வது குழும கூட்டத்தின் அறிக்கை சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.

    கடந்த 2010 முதல் பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 8-வது கல்வி தகுதி பெற்றவர்களை பணியில் தேர்வு செய்தனர்.அவர்களை அதே தகுதியில் பணியில் நீடிக்க செய்ய வேண்டும் என்றும் புதிதாக எடுப்பவர்களை 12-வது கல்வி தகுதியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக பணி செய்து வரும் ஊரக சமூகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊரக சமூக களப் பயிற்றுனர்க ளுக்கு கொடுக்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ.2500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் காதர்கனி நன்றி கூறினார்.

    • டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படு கிறது.

    மதுரை

    அ.தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர், புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, கழகத்தின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை (17-ந் தேதி) காலை 9 மணிக்கு டி.குன்னத்தூர் உள்ள அம்மாகோவில் மணிமண்டபத்தில் உள்ள புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுரு சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் படுகிறது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படு கிறது.

    அதனை தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கி ணங்க சோழவந்தான் குமாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டமும், திருமங்கலம் தொகுதியில் வருகிற 18-ந் தேதி கள்ளிக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டமும், அதனை தொடர்ந்து உசிலம்பட்டியில் 28-ந் தேதி மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

    மேற்கண்ட நிகழ்ச்சி களுக்கு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வட்ட நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் மற்றும் செயல்வீர்கள், செயல்வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்கு மாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அனைத்து வார்டுகளிலும் அ.தி.மு.க. கொடியேற்று நிகழ்ச்சி நடக்கிறது.
    • அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க.வின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள 16 கால் மண்டபம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ படத்திற்கு நாளை காலை 10 மணியளவில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட உள்ளது.

    அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கொடி கம்பம் கொடியேற்று நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதே போல மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், கிழக்கு தொகுதி, மேலூர் தொகுதி அனைத்து கழகங்க ளிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வார்டு பகுதிகளிலும் அ.தி.மு.க.வின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது,

    இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெய லலிதா பேரவை, இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, வர்த்தக அணி, மீனவர் அணி, விவசாய பிரிவு, வழக்கறிஞர் பிரிவு, அண்ணா தொழிற்சங்கம், சாரா ஓட்டுனர் அணி, சிறுபான்மை பிரிவு, மருத்துவ அணி, கலைப்பிரிவு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் முன்னாள் இந்நாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க உருவாகி 52-வது ஆண்டு தொடக்க விழாவினை கட்சி கொடியேற்றி கொண்டாட வேண்டும்.
    • 17-ந் தேதி தொண்டாமுத்தூர் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி ஆகிய நான், திரைப்பட இயக்குனர், நடிகர் ரவிமரியா, பழக்கடை மூர்த்தி ஆகியோர் பேசுகிறோம்.

    கோவை,

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க உருவாகி 52-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழகங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், கட்சி கொடியேற்றி கொண்டாட வேண்டும்.

    மேலும் அ.தி.மு.க. தலைமை அறிவித்தபடி வருகிற 17-ந் தேதி தொண்டாமுத்தூர் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான எஸ்.பி.வேலுமணி ஆகிய நான், திரைப்பட இயக்குனர், நடிகர் ரவிமரியா, பழக்கடை மூர்த்தி ஆகியோர் பேசுகிறோம்.

    18-ந் தேதி சூலூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் நான், திரைப்பட இயக்குனர், நடிகர் மனோஜ்குமார், ஜெயசீலனும், வால்பாறை யில் எம்.ஜி.ஆர் இளைஞ ரணி துணை செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அமுல்கந்தசாமி, பி.ஏ.சுப்பி ரமணியம் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்கள்.

    26-ந் தேதி கிணத்துக் கடவு ெதாகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மாணவரணி துணைச்செயலாளர் எம்.டிபாபு, பலகுரல் வெள்ளி யங்கிரியும், 28-ந் தேதி பொள்ளாச்சியில் நடக்கும் கூட்டத்தில் வக்கீல் பிரிவு இணை செயலாளரும், செய்தி தொடர்பாளருமான பாபுமுருகவேல், எரியூட்டி சேகர் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் இந்நாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்களது விவரங்களை அளிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர், உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும்.
    • மேற்கண்ட வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விவரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பித்திட வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சரக துணை பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களிடம் ஆதார் எண், குடும்ப அட்டை எண் கோரி கூட்டுறவுத்துறையின் மூலம் 18.4.2023 அறிவிப்பு வெளியிடப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் மூலம் பலமுறை நேரில் அணுகியும், இதுநாள் வரை தற்போதைய புகைப்படம், ஆதார் எண், குடும்ப அட்டை எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குள் மேற்கூறிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் சமர்ப்பித்திட வேண்டும்.

    எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு சங்கத்தில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே உரிய காலத்திற்குள் தங்களது விவரங்களை அளிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர், உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும்.

    அதன்பின் எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலில் தங்களால் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் அந்த தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்படும். எனவே மேற்கண்ட வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விவரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பித்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கையில் கூறியிருந்தார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மக்களுடைய கோரிக்கை கள் எல்லாம் திட்டங்களால் செயல்படுத்துவதற்காக தான் தேர்தல் வாக்குறுதி களை கொடுக்கப்படு கிறது. அதை நம்பித்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள்.ஆனால் அந்த அடிப்படை தத்துவத்தை இலக்கணத்தை தி.மு.க. அரசு தகர்த்தெறிந்தி ருக்கிறது.

    சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரி யர்கள் மற்றும் கூட்டு நலச் சங்கத்தினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். கணினி, தையல்பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்ட 8 பிரிவு பகுதி நேர ஆசிரி யர்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், நிரந்தர ஆசிரி யராக ஆக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்கள்.

    இதை நிறைவேற்ற கோரி தொடர்ந்து ஆசிரி யர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். கல்விதான் எதிர்கால சந்ததியை பாதுகாக்கும். அப்படி கல்வியை போதிக் கும் ஆசிரியர்களே இன்றைக்கு உயிரே போனாலும் பரவாயில்லை என்று போராட்டம் நடத்து கிறார்கள்?

    இப்படி 520 தேர்தல் வாக்குறுதிகளுக்கும் போராட்டத்தை நடத்தி னால் தமிழ்நாடு போராட்ட களமாக மாறி விடும். ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிக்கும் ஒவ்வொரு பிரிவினர் போராடுகிறார் கள். தேர்தல் வாக்குறுதி களை கொடுத்து அதனை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கிற அரசாக திமுக அரசு உள்ளது.

    ஆகவே தான் இந்த 520 தேர்தல் வாக்குறுதிகளும் காகித பூவாக காட்சிய ளிக்கிறது. உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வரும் இந்த ஆசிரியர்கள் போராட் டத்தை கண்டு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கை களை செவி சாய்த்து கேட்டு நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வை உருவாக்கிய தலைவர்களை அண்ணாமலை விமர்சித்தார்
    • அண்ணாமலையை நீக்குமாறும் இந்திய தலைமையிடம் கோரிக்கை வைத்தனர்

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் எதிர்கட்சியான அ.தி.மு.க. அங்கம் வகித்து வந்தது. ஆனால், 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியுற்றது. பா.ஜ.க.வுடனான கூட்டணிதான் இதற்கு காரணம் என அக்கட்சியில் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனாலும் கூட்டணி தொடர்ந்தது.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வினரின் சித்தாந்த தலைவர்களில் முக்கியமானவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரை குறித்து கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. இது அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்தது.

    இது மட்டுமல்லாமல், "மத்தியில் மோடி, தமிழகத்தில் எடப்பாடி" எனும் அ.தி.மு.க.வின் முழக்கத்தையும் அண்ணாமலை ஏற்க மறுத்தார். 

    இதை தொடர்ந்து அண்ணாமலையை பா.ஜ.க.வின் தலைமை பொறுப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வின் அகில இந்திய தலைமையிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதனை தலைமை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாகவும், அக்கூட்டணி முறிந்ததாகவும் அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர் கே.பி. முனுசாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க.வின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் !

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாக பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

    மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை, கடந்த 20.06.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை பற்றியும் அவதூறாக விமர்சித்து வருகிறது.

    இந்த செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், தலைமைக் கழக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 திங்கட்கிழமை) கழகப் பொது செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் 'புரட்சி தமிழர்' திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையே, பா.ஜ.க.வுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என தீர்மானம் இயற்றி அ.தி.மு.க. அக்கூட்டணியிலிருந்து விலகியதற்கான காரணங்களை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சி இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி" என்பதற்கு பதிலாக "பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி" என வாசகங்கள் இடம் பெற்றிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×