என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Democracy"

    • ஒரு நிகழ்வைக் காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
    • நிகழ்ச்சிகளுக்கான தடையை நீக்க வேண்டும்.

    அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாகும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த சில உத்தரவுகளைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம் எனும் நிலையில், ஒரு நிகழ்வைக் காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.

    கரூரில் கடந்த செப்டம்பர் 27&ஆம் நாள் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40&க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கரூர் நெரிசல் உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனிவரும் காலங்களில் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க விதிகளை வகுக்க அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    அவற்றை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த இடைக்காலத் தீர்ப்பில்,''தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக்கூட்டங்களை நடத்த எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்று இடைக்கால ஆணை பிறப்பிக்கிறோம். பொதுக்கூட்டங்களை நடத்துவதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.

    ஏதேனும் பகுதிகளில் பொதுக்கூட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் இல்லாத பட்சத்தில், அதற்கான இடத்தை சம்பந்தப்பட்ட தேர்வு செய்து தரும்படி சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளை அதிகாரிகள் கேட்டுக்கொள்ள வேண்டும்; அவ்வாறு அவை தேர்வு செய்து தரும் இடம் பாதுகாப்பானதாகவும், அவசர ஊர்தி உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லும் வசதி கொண்டதாகவும் இருக்கும்பட்சத்தில் அங்கு கூட்டங்களை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம்'' என்று கூறியுள்ளது. இதை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வும் உறுதி செய்திருக்கிறது.

    மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் இந்த இடைக்கால ஆணையைத் தொடர்ந்து மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நான் மேற்கொள்ளவிருந்த தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது;

    பொதுக்கூட்டங்களை மட்டும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்க காவல்துறை மறுக்கிறது.

    பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை தங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று காவல்துறை தட்டிக் கழிக்கிறது. இது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற விடாமல் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.

    அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடைபெறும் போது அவற்றுக்கு வருபவர்களின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தான் உறுதி செய்ய வேண்டும்; பங்கேற்கும் மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தேவை ஏற்பட்டால் அழைப்பதற்கு தயாராக அவசர ஊர்தி உள்ளிட்ட மருத்துவ வசதிகளை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தான் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்றக் கிளையின் கருத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக்கொள்கிறது.

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல லட்சம் மக்கள் பங்கேற்ற ஏராளமான மாநாடுகளும், பொதுக்கூட்டங்களும், போராட்டங்களும் இத்தகைய நிபந்தனைகளை தாமாக கடைபிடித்து நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் எந்தவொரு விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்க வில்லை.

    அதேநேரத்தில் கூட்ட ஏற்பாட்டாளர்களால் முறையாக விதிமுறைகள் கடைபிடிக்கப்படாத, காவல்துறையால் முறையாக ஒழுங்குபடுத்தப்படாத ஒரு துயர நிகழ்வை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    அது பாசிசம் தலைதூக்க வழிவகுத்துவிடும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(ஏ), 19(1)(பி) ஆகிய பிரிவுகளின்படி வழங்கப்பட்டுள்ள பேச்சு உரிமை, கருத்துரிமை, அமைதியாக ஓரிடத்தில் ஒன்று கூடும் உரிமை ஆகியவற்றை பறிக்கும் செயலாகும்.

    ஆட்சியாளர்களின் தவறுகளை எடுத்துக் கூறுவதும், நாட்டு நிலைமை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அரசியல் கட்சிகளின் கடமை ஆகும். போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், நடைபயணங்கள், துண்டுபிரசுரங்களை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளின் மூலம் தான் இவற்றை செய்ய முடியும்.

    மக்கள் கூடும் இடங்களில் தான் இந்த நிகழ்ச்சிகளை நடத்த முடியும். ஆனால், உயர்நீதிமன்றக் கிளையின் இடைக்காலத் தீர்ப்பைத் தொடர்ந்து தனியார் இடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும்படி காவல்துறையும், மாவட்ட நிர்வாகங்களும் கட்டாயப்படுத்துகின்றனர். இதை ஏற்க முடியாது.

    அரசியல் கட்சிகள் மக்களைத் தேடிச் செல்ல வேண்டுமே தவிர, மக்களை தங்களை நோக்கி வரும்படி கட்டாயப் படுத்தக் கூடாது. ஆளில்லாத இடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதும் சாத்தியமற்றது. தனியார் இடங்களை தேர்வு செய்து நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும்படி, உயர்நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி காவல்துறையினர் கூறுவது கட்சிகளின் செயல்பாட்டை முடக்கும் செயலாகும். இதற்கு நீதிமன்றங்கள் துணைபோகக் கூடாது.

    ஏற்கனவே, பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளின் நோக்கம் மக்களுக்கு நன்மையும், சேவையும் செய்வது தான். மக்கள் பணியாற்றும் கட்சிகள், இயக்கங்களின் கொடிக்கம்பங்களை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு இல்லாத வகையில் பொதுஇடங்களில் தான் அமைக்க முடியும்.

    இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அப்படித் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனியார் இடத்தை வாங்கி அதில் தான் கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும் என்றால், மக்கள் நல நோக்கம் கொண்ட எந்தக் கட்சியும் கொடிக்கம்பங்களை அமைக்கமுடியாது.

    ஊழல் செய்து சொத்து சேர்த்தக் கட்சிகள் மட்டும் தான் அதை செய்ய முடியும். அதையெல்லாம் உணர்ந்து தான் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் வரை நெடுஞ்சாலைகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்ற உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அது அரசியல் கட்சிகளை முடக்கி வைக்கும் செயலாகும்.

    அரசியக் கட்சிகளின் நிகழ்ச்சிகள் பாதுகாப்பாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் விதிகள் வகுக்கப் படுவதை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அதற்காக விதிகள் வகுக்கப்படும் வரை அரசியல் கட்சிகள் அவற்றின் ஜனநாயகக் கடமையை செய்யாமல் முடங்கிக் கிடக்க முடியாது.

    எந்த ஒரு சூழலையும் சமாளிக்க இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இன்றைய சூழலை சமாளிக்கவும் இடைக்கால ஏற்பாடு தேவை.

    எனவே, பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை மக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், நடைபயணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும். அதற்காக அரசின் சார்பில் விதிக்கப்படும் நியாயமான நிபந்தனைகளை அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டும் பொறுப்புடன் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை அவர்கள் பிரிக்கிறார்கள்.
    • அனைவரும் ஒன்று கூடி அரசியலமைப்பை, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.

    மும்பை:

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாளையொட்டி மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளதாவது:

    இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், பிராமண சமூகத்தினருக்கு நான் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன். நாம் ஒன்று கூடி நமது அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும். பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் அரசியல் சாசனத்தை அழிக்கிறார்கள், சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கிறார்கள். நாங்கள் உங்கள் ஆதரவை விரும்புகிறோம், நீங்கள் எங்களை ஆதரிக்கவில்லை என்றால் ஜனநாயகம் ஆபத்தில் சிக்கும்.

    ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் வெறுப்புச் சூழலுக்கு எதிராக போராடும் முயற்சியாகும். கொரோனா காரணமாக பாத யாத்திரை செல்ல கூடாது என்று அவர்கள் (பாஜக) ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். ஆனால் பிரதமர் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மத்தியில் ஆளும் அரசு பொய்யர்களின் அரசாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
    • வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும்.

    பா.ஜ.க., மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பரம்பரை அரசியலுக்கு சவால் விட்டதாகவும், இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

    ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது, 'முதலில் தேசம்' என்ற சித்தாந்தத்திற்குக் கிடைத்த மரியாதை" என்று கூறினார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

    எல்.கே. அத்வானி ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பிடியில் இருந்து விடுவிக்க தொடர்ந்து போராடினார். அனைவருக்கும் வழிகாட்டினார். அவர் பரம்பரை அரசியலை சவால் செய்தார். இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்தார்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், நாட்டின் ஏழை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும். மோடியின் உத்தரவாதம் எல்லா நம்பிக்கைகளும் சரியும் இடத்தில் இருந்து தொடங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 தூண்கள் மூலம் நாடு வேகமாக வலுவடையும்.
    • எதிர்க்கட்சிகளில் சிலர் நாட்டை நிராசையில் தள்ளிவிட நினைத்தனர்.

    குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்தார்.

    பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-

    குடியரசுத் தலைவரின் உரை மாபெரும் உண்மைகளை சொல்லியது.

    நாடு எந்த வேகத்தில் வளர்ச்சி பெறுகிறதோ அதை குடியரசுத் தலைவர் உரை வெளிப்படுத்தி உள்ளது.

    4 தூண்கள் பற்றி குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 4 தூண்கள் மூலம் நாடு வேகமாக வலுவடையும். பெண்கள், இளைஞர்கள், ஏழை எளியோர்கள், உழவர்கள் சக்தியே அந்த 4 தூண்கள்.

    நாட்டின் பல்வேறு வளர்ச்சியை பற்றி பேசிய குடியரசுத் தலைவர் பொருளாதார வளர்ச்சியையும் குறிப்பிட்டார்.

    இந்தியா விடுதலை பெற்றபோது அதற்கு சாட்சியாக விளங்கிய இந்த செங்கோல் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

    10 ஆண்டு ஆட்சியில் அமர்ந்தது போல தற்போது பல ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளீர்கள். பாராளுமன்றத்தில் இருக்கவே எதிர்க்கட்சிகள் தயங்குகின்றனர்.

    எதிர்க்கட்சிகளில் சிலர் நாட்டை நிராசையில் தள்ளிவிட நினைத்தனர்.

    புதிய பாராளுமன்ற நடைமுறைகளுக்கு செங்கோல் முன்நின்று வழிகாட்டுகிறது.

    மக்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் பாராளுமன்றத்தில் விவாதிக்கலாம்.

    காங்கிரசுக்கு ஒரு நல்ல எதிர்க்கட்சியாக இருக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்களும் மேலே வரவில்லை, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள நல்ல தலைவர்களையும் மேலே வரவிடவில்லை.

    இளம் எம்பிக்களின் குரலையும் காங்கிரஸ் முடக்குகிறது. இன்னும் எவ்வளவு காலம் தான் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பார்கள்?

    நாடு எவ்வளவு குடும்ப அரசியலை பார்த்து உள்ளதோ அதில் பெரும் பங்கு காங்கிரசை சாரும்.

    எதிர்க்கட்சிகளை திறம்பட வழிநடத்த காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. இந்த அவையில் உள்ள பல உறுப்பினர்கள் அடுத்த முறை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உத்தேசித்து உள்ளனர்.

    மல்லிகார்ஜூன கார்கே மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு மாறிவிட்டார். குலாம் நபி ஆசாத் கட்சியே மாறிவிட்டார்.

    ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் கட்சியின் எல்லா பதவிகளிலும் இருப்பதே குடும்ப அரசியல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்பியாக ஆவதை நான் வரவேற்கிறேன்.

    வாரிசு மற்றும் குடும்ப அரசியல் காரணமாக தேசம் ஏராளமான துயரங்களை அனுபவித்துள்ளது.

    ஒரு குடும்பத்தின் அரசியல் தற்போது காணாமல் போய்விட்டது. மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்தால் அதை காங்கிரஸ் ரத்து செய் என்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி அறிவிப்பு.
    • தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எந்த ஆதாரமும் இல்லாமல் அமலாக்க இயக்குநரகத்தால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

    மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

    அந்த வகையில், "நாட்டில் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி இன்று ஊடக பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அனைத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எக்ஸ், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக கணக்குகளில் தங்கள் சுயவிவரப் படத்தை மாற்றுவார்கள்.

    சுயவிவரப் படத்தில், "மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்" என்ற தலைப்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பது போன்று உள்ளது.

    நாட்டிலேயே பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடக்கூடிய ஒரே தலைவர் கெஜ்ரிவால் மட்டுமே. எனவே, லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எந்த ஆதாரமும் இல்லாமல் அமலாக்க இயக்குநரகத்தால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

    கலால் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய போதிலும் "ஒரு பைசா" ஆதாரத்தை கூட சமர்ப்பிக்க முடியவில்லை.

    பாஜகவும் மோடியும் கெஜ்ரிவாலை நசுக்க விரும்புகின்றனர். ஆம் ஆத்மி, நாட்டில் "சர்வாதிகாரத்திற்கு" எதிரான போரை நடத்தி வருகிறது.

    ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவது கெஜ்ரிவாலின் போராட்டம் மட்டுமல்ல, கட்சியின் சமூக ஊடக டிபி பிரச்சாரத்தில் சேரவும் மக்களை அவர் வலியுறுத்துகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான் என்று மீரட்டில் நடந்த தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசினார்
    • போட்டோ ஷூட், ட்ரைலர், டீசர், ஆடியோ லாஞ்ச் எல்லாம் பண்ணுவதற்கு, இந்திய மக்களின் வாழ்க்கை என்ன சினிமா படமாக தெரிகிறதா பிரதமர் மோடிக்கு?

    பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான்; கடந்த 10 ஆண்டுகளில் சாத்தியமற்றதாக கருதப்பட்ட விஷயங்களை சாத்தியமாக்கி இருக்கிறோம். ஊழல்வாதிகள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று மீரட்டில் நடந்த தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசினார்.

    இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில்,

    "10 ஆண்டு ஆட்சி ட்ரெயிலர் என்கிறார். போட்டோ ஷூட், ட்ரைலர், டீசர், ஆடியோ லாஞ்ச் எல்லாம் பண்ணுவதற்கு, இந்திய மக்களின் வாழ்க்கை என்ன சினிமா படமாக தெரிகிறதா பிரதமர் மோடிக்கு?

    வெற்று கதைகளை பேசுவதற்கு பதிலாக கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டேன் என்று சொல்வாரா மோடி?

    20 கோடி வேலை வாய்ப்பை உருவாக்கினேன் என்று சொல்வாரா மோடி?

    நாட்டிலேயே அமித்ஷாவின் உள் துறை தான் ஊழல் மிக்க துறை, இதை வைத்துக்கொண்டு ஊழலை ஒழித்து விட்டேன் என்று சொல்வாரா மோடி?

    இந்திய மக்கள் ட்ரெயிலரையும், ப்ரிவ்யூ ஷோவையும் எதிர்பார்க்கவில்லை. வளர்ச்சிக்கான ஆட்சியை தான் எதிர்பார்த்தனர். ஆனால் அதை உங்களால் தரமுடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளீர்கள். கடந்த 10 ஆண்டுகளில், அனைத்து தளங்களிலும் இந்தியா தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. ஊழல் தலைவிரித்தாடும் இந்த பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு உத்தரவிட்டது.
    • இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரை இந்தியாவில் இருந்து வெளியேற்றியது.

    ஒட்டாவா:

    கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கடந்த ஆண்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். இதையடுத்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு உத்தரவிட்டது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரை இந்தியாவில் இருந்து வெளியேறச் சொல்லியது. கனடாவை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுக்கும் நடைமுறையையும் நிறுத்தி வைத்தது.

    காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது குற்றம் சுமத்தியபோது ஆதாரமற்றவை என இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், கனடா நாட்டின் ஜனநாயகத்துக்கு இந்தியா இரண்டாவது பெரிய வெளிநாட்டு அச்சுறுத்தலாக உள்ளது. அச்சுறுத்தல் தருவதில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. அச்சுறுத்தல் தருவதில் 2-வது இடத்தில் இருந்த ரஷியா 3-வது இடத்திற்குச் சென்றுள்ளது. கனடாவின் அரசியல் கட்சி தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளால் செல்வாக்கு பெற்றிருக்கலாம். வெளிநாட்டு தூதர்களுடன் ரகசிய தகவல்களைப் பகிர்ந்திருக்கலாம் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    • தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
    • ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது.

    உலகப் பணக்காரர் எலான் மஸ்க் EVM வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து உலக அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களைக் கிளம்பியுள்ளது.

    குறிப்பாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமயத்தில் EVM மீதான நம்பகத்தன்மையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வியெழுப்பியிருந்த நிலையில் தேர்தலுக்குப் பின் சற்று தனித்திருந்த இந்த விவாதத்தை எலான் மஸ்க்கின் தற்போதைய கருத்து மீண்டும் கிளறிவிட்டுள்ளது.

    மஸ்க்கின் பதிவை மேற்கோள்காட்டி இந்தியாவில் EVM கள் முறைகேடு செய்வதற்கான கருப்பு பேட்டி மாதிரி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் EVM முறைக்கு எதிராக எலான் மஸ்க்கின் கருத்தைப் பகிர்ந்தனர்.

    இந்நிலையில்தான் ஆந்திர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலோடு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த ஒய்எஸ்ஆர் கட்சித் தலைவரும் முன்னால் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி EVM விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டால் அது நிறவேற்றப்படுவதுடன் மட்டுமிடின்றி அந்த தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுபோலவே ஜனநாய நாடு என்று கூறுவதை விட அங்கு ஜனநாயக முறைப்படியே அனைத்தும் நடக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேர்தல் நடைமுறைகளில் ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது. நாமும் ஜனநாயகத்தைக் காப்பற்ற அந்த திசையை நோக்கியே பயணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்  

    • ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் செங்கோல் வழங்கப்பட்டது.
    • பிரதமர் நரேந்திர நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.

    சென்னை:

    தமிழர் ஆட்சியின் பாரம்பரிய அடையாளமான 'செங்கோல்' புதிய பாராளுமன்ற கட்டிடம் திறந்தபோது அங்கு பிரதமர் மோடியால் வைக்கப்பட்டது.

    இந்தியா சுதந்திரம் பெற்றதும் பிரிட்டீஷ் கவர்னர் மவுண்ட்பேட்டனும், நேருவும் ஆட்சி அதிகாரத்தை எவ்வாறு வழங்குவது என்று யோசித்தபோது ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் செங்கோல் வழங்கப்பட்டது.

    அன்றைய தினம் நேருவிடம் வழங்கப்பட்ட அந்த செங்கோல் பின்னர் அருங்காட்சியகத்தில் இருந்தது. பிரதமர் மோடி அதை கண்டுபிடித்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் முறைப்படி கொண்டு வந்து வைத்தார்.

    நீதி வழுவாத ஆட்சியின் அடையாளமாக போற்றப்படும் செங்கோல் பாராளுமன்றத்தில் இடம் பெற்றதன் மூலம் தமிழர்களுக்கு பெருமை கிடைத்தது.

    இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டம் நடந்து வரும் நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஆர்.கே. சவுத்ரி பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். அது மன்னராட்சியின் அடையாளம். இங்கு நடப்பது மக்களாட்சி என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார்.

    இந்த கருத்தை தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஆதரித்துள்ளார். செங்கோல் அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க.வும் இதை ஆதரித்துள்ளது.

    டி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது, `செங்கோல் மன்னராட்சியின் அடையாளம். ஜனநாயக நாட்டில் அதற்கு பங்கு ஏதும் இல்லை என்று குறிப்பிட்டார்.

    தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் உள்பட இந்தியா கூட்டணியினர் செங்கோலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை மத்திய மந்திரி எல்.முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    அரசு நடத்துவதில் செங்கோல் எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதை பற்றி திருக்குறள் பேசுகிறது. சுதந்திரத்திற்கு பின் பிரிட்டீஷ் கவர்னர் மவுண்ட்பேட்டனும், நேருவும் அதிகாரத்தை எப்படி ஒப்படைப்பது என்று ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டுள்ளார்கள்.

    அவர் செங்கோலை பயன்படுத்தி நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் மூலம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை காங்கிரஸ் ஓரம் கட்டிவிட்டது. செங்கோல் எங்கு வைக்கப்பட்டிருந்தது என்பதை பிரதமர் மோடி கண்டு பிடித்து பெருமை சேர்த்தார்.

    மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாடி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கே. சவுத்ரி, பாராளுமன்றத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளது கண்டனத்துக்குரியது.

    தமிழக மன்னர்கள் தங்களின் மானமாகவும், நீதியின் சின்னமாகவும் காத்த செங்கோல், அவர்களின் காலத்துக்குப் பிறகு, சைவத் திருமடங்களின் மடாதிபதிகள் பதவி ஏற்கும் போது, பாகுபாடற்ற அருள் வழங்கும் வகையில் வழங்கப்பட்டன. அத்தகைய செங்கோலை புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் வைத்து பிரதமர் நரேந்திர நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.

    சமாஜ்வாடி கட்சி எம்.பி.யின் கடிதத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி கட்சியினரும் செங்கோல் மீது வெறுப்பை தெரிவித்து வருகின்றனர்.

    செங்கோல் மன்னராட்சியின் அடையாளம் எனவும், ஜனநாயக நாட்டில் அதற்கு பங்கு ஏதும் இல்லை எனவும், அதனால்தான் அருங்காட்சியகத்தில் இருந்தது என்றும் தி.மு.க. மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து மூலம் 'இந்தியா'கூட்டணியினர் தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியல் சட்டம் இல்லை என்றால் என்னை போன்றவர்கள் எல்லாம் இந்த அவைக்கு வந்திருக்க முடியாது.
    • அரசியல் சாசனத்தை அவமதிப்பதற்கான எந்த வாய்ப்புகளையும் காங்கிரஸ் விட்டு வைக்கவில்லை.

    மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    விடுதலைக்கு பிறகும் சில இந்தியர்கள் அடிமை மனநிலையிலேயே சிக்கி உள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இந்தியா, ஒரே நாடு என்பதை வலியுறுத்த தான் 370 சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்டது. நாட்டின் பொருளாதார ஒற்றுமைக்காகவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது.

    ஒரே நாடு ஒரே வரி என்பது நமது பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது. ஏழைகள் மற்றொரு மாநிலத்திற்கு செல்லும்போது, உணவு தானியம் கிடைப்பதற்காக ஒரேநாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் கொண்டுவரப்பட்டது.

    ஏழைகள் இலவச சிகிச்சை பெறுவதற்காக, ஒரே நாடு ஒரே சுகாதார என்ற திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் கொண்டு வரப்பட்டது.

    ஒரே நாடு ஒரே மின் வழித்தட திட்டத்தால் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.

    புதிய தேசிய கல்வி கொள்கையால் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    ஒரே நாடு ஒற்றுமையை வலியுறுத்த காசி தமிழ் சங்கம் நிழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    நாட்டில் எமர்ஜென்சி கொண்டு வந்து அரசியல் சாசனத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது. எமர்ஜென்சியின்போது ஊடக சுதந்திரமும் நசுக்கப்பட்டது.

    அரசியலமைப்பின் 25வது ஆண்டின்போது காங்கிரஸ் ஆட்சியில் தான் அந்த எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. ஜனநாயகத்தை நெறித்த கறைகளை காங்கிரஸ் கட்சியால் கழுவ முடியாது.

    நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியல் சாசன தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தபோது ஒரு காங்கிரஸ் தலைவர் என்ன அவசியம் என கேட்டார்.

    அரசியல் சட்டம் இல்லை என்றால் என்னை போன்றவர்கள் எல்லாம் இந்த அவைக்கு வந்திருக்க முடியாது.

    எங்களை தொடர்ந்து 3 முறை மக்கள் தேர்வு அனுப்பி வைத்துள்ளனர். நாட்டு மக்கள் முழு வலிமையுடன் அரசியல் சாசனத்துடன் நிற்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மட்டுமே 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தனர். ஒரே ஒரு காங்கிரஸ் குடும்பம் தான் இந்திய அரசியல் சாசனத்தை அதிகமாக காயப்படுத்தியது.

    1947 முதல் 1952 வரை நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை. அரசியல் சாசனத்தை அவமதிப்பதற்கான எந்த வாய்ப்புகளையும் காங்கிரஸ் விட்டு வைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கீழக்கரையில் மக்களாட்சி பாதுகாப்போம் மக்கள் சங்கமம் மாநாடு நடந்தது.
    • கொடியேற்றம், நாடகம், வினாடி-வினா போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேரான் தெருவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக மக்களாட்சி பாதுகாப்போம் என்ற தலைப்பில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் கொடியேற்றம், புரட்சிப்பாடல் நாடகம், வினாடி-வினா போட்டி, உடற்பயிற்சி வரலாற்று ஆசிரியர்களை கவுரவப்படுத்துதல், வெளிநாடு சென்று பல்வேறு பதக்கங்கள் வென்றவர்களை கவுரவப்படுத்துதல் மற்றும் பரிசளித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    கீழக்கரை நகர் தலைவர் அகமது நதீர் தலைமை தாங்கினார். ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.எஸ்.டி. பி.ஐ.கட்சியின் கிழக்கு நகர் தலைவர் நூருல் ஜமான் வரவேற்புரை வழங்கினார்.

    எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு நகர் தலைவர் ஹமீது பைசல் வாழ்த்துரை வழங்கினார். கீழக்கரை நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா, மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் சக்கினா பேகம் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

    பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் முகைதீன் அப்துல் காதர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கீழை ஜஹாங்கீர் அரூஸி தொகுப்புரை ஆற்றினார். மாநாட்டு குழுத் தலைவர் ஹமீது சாலிஹ் நன்றி கூறினார்.

    மாநாட்டில் கீழக்கரை பொதுமக்கள், ஜமாத்தார்கள், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஜனநாயகத்தை வலியுறுத்தும் ‘சாவி’ என்னும் கவிதையை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எழுதியுள்ளார். #MamataBanerjee #Key
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நடைபெற இருக்கும் தேர்தலில் பிரமாண்ட எதிர்க்கட்சி கூட்டணியை அமைத்து வருகிறார். அவர் அரசியல்வாதியாக மட்டுமின்றி இதுவரை 80-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். ஒரு பாடல் உள்பட பல கவிதைகளும் எழுதியிருக்கிறார். அவர் டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் தர்ணாவில் பங்கேற்க புறப்படும் முன்பு 18 வரிகள் கொண்ட ஒரு கவிதையை சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.

    ஜனநாயகத்தை வலியுறுத்தும் ‘சாவி’ என்ற அந்த கவிதையில், “இன்றைய மத்திய அரசில் ஒவ்வொருவரின் உதடுகளும் எவ்வாறு பூட்டப்பட்டுள்ளது, எப்படி இந்த நடைமுறை ஜனநாயகத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. ஜனநாயகத்தை படுகொலை செய்யும் இந்த மனப்பான்மை ஒரு நாள் வெடிக்கும்” என்று கூறியுள்ளார். பல வரிகளில் பிரதமர் மோடியை தாக்கியுள்ளார். அவரது இந்த கவிதை சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது.  #MamataBanerjee #Key
    ×