search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delta Districts"

    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதியளித்தது கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு மேலும் ஒரு பேரிடி என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #MekedatuDam #Eswaran
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    காவிரி தண்ணீர் தமிழகத்திற்குள் வரவிடாமல் தடுக்க கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாதென்று தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒருமித்த குரலுடன் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில், கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது ஏற்புடையதல்ல.

    மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு தமிழகத்திலிருக்கும் கொஞ்சநெஞ்ச விவசாயமும் முற்றிலும் அழிந்துவிடும். கஜா புயல் பாதிப்பில் செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழகத்திற்கும் இந்த செய்தி பேரிடியாக அமைந்திருக்கிறது.

    எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MekedatuDam #Eswaran
    அடுத்த 24 மணி நேரத்திற்குள் டெல்டா மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRain #DeltaDistrict #IMD
    சென்னை:

    தமிழக கடலோர பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் தரை பகுதிக்குள் நகர்ந்து வலு இழந்தது.

    இதனால் உள் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாகவும், சில சமயம் கன மழையும் பெய்து வருகிறது.

    வலு இழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலுக்கு சென்று மேலடுக்கு சுழற்சியாக பரவி உள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள குமரி கடல் பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.


    இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் டெல்டா மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. #ChennaiRain #DeltaDistrict #IMD
    கடந்த 3 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது. #Rain #DeltaDistricts
    தஞ்சாவூர்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த 16-ந்தேதி கஜா புயல் கரையை கடந்தது. இதையொட்டி பலத்த காற்று வீசியது.

    இதில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் வீடுகள் இடிந்து பலர் பலியாகினர். இதைத்தொடர்ந்து மீட்பு பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு சில இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இருந்த போதிலும் முகாம்களில் பல்லாயிரக்கணக்கானோர் தஞ்சமடைந்து உள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மீட்பு பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மீண்டும் வானிலை மையம் மழை எச்சரிக்கை விடுத்தது.

    அதன்படி கடந்த 3 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் புயல் சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மீள முடியாத நிலையை அடைந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது. இதில் இருந்து அவர்கள் மீள இன்றும் பல நாட்களாகும் அவல நிலை உருவாகி உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று கொட்டும் மழையிலும் மின்சார ஊழியர்கள் புயலில் சாய்ந்து மின் கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நெல்லை-திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த மின் ஊழியர்களும் இப்பணியில் ஈடுபட்டனர். தொடர்மழை நீடிப்பதால் நாகை முதல் வேதாரண்யம் வரை பல இடங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை பொருட்படுத்தாமல் 200-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் மின் கம்பங்களை நட்டு மின் இணைப்பை வழங்க முயற்சித்து வருகின்றனர்.



    டெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீளாத நிலையில் தொடர்மழை பெய்து வருவதால் பல வீடுகள் சேதமாகி இடிந்து விழும் அபாய நிலை அதிகரித்துள்ளது.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாரசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களிலும் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கி உள்ளது. மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் மழையால் மின் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

    நாகை மாவட்டம் கோடியக்காட்டில் உள்ள வன விலங்கு சரணாலயம் புயல் மற்றும் மழையால் உரு குலைந்து போய் விட்டது. அங்கு வசித்து மான்கள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் பல உயிரிழந்து விட்டன. இதனால் அங்கு நோய் பரவும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தை பொறுத்தவரை மீன்பிடித் தொழில் பிரதானமானது. அங்கு புயல் மற்றும் மழையால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் சேதமாகி விட்டன. இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நாகை, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், பூம்புகார், தரங்கம்பாடி, புதுபட்டினம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களில் ஏராளமான வீடுகள் மழையில் சேதமாகி விட்டன. அவர்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

    இதேபோல் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஓட்டு வீடு மறியல் மற்றும் குடிசை வீடுகளில் பெரும்பாலான மக்கள் வசித்து வந்தனர். அவர்கள் வீடு புயல் மற்றும் மழையால் சீரமைக்க முடியாத அளவுக்கு சேதமாகி விட்டது. பாதுகாப்பு முகாம் வசதி குறைவாக உள்ளதால் மக்கள் சேதமான வீடுகளில் தங்கும் சூழ்நிலை நிலவுவதால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை. தொழிலாளர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். மாணவ-மாணவிகள் புத்தகம், நோட்டு சேதமாகி விட்டதால் பள்ளிக்கு சென்று மீண்டும் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழையில் பல பள்ளி கட்டிடங்களும் சேதமாகி விட்டன. எனவே மழை நின்ற பின்னரும் அந்த பள்ளிகளில் சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வலங்கைமான், நீடாமங்கலம், பேரளம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் அந்த பகுதிகளில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயி அச்சத்தில் உள்ளனர்.

    டெல்டா மாவட்டங்களில் புயல் மழைக்கு பல லட்சம் தென்னை மரங்கள், வாழைகள், கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. அரசு நிவாரண பொருட்களை வழங்கிவரும் நிலையில் அவைகளை சென்று வாங்க முடியாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.

    பட்டுக்கோட்டையில் 9 நாட்களாக மின்சாரம் இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. இதற்கிடையே தொடர்மழை பெய்து குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் குடைபிடித்து கொண்டு மக்கள் சாப்பிடும் நிலை ஏற்பட்டது. பல குடும்பத்தினர் தூங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் மீட்பு பணிகளை மழை முடங்கி விட்டதால் நிலைமை எப்போது சீராகுமா? என்று மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் புயலில் சேதம் அடைந்த வீடுகளுக்கு அரசு 5 லட்சம் தார்ப்பாய்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் இன்னும் தொடர் மழை பெய்து வருகிறது. இது மக்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது. எங்களுக்கு இயற்கை மறுவாழ்வு வழங்கவிடுமா? விடாதா? என்று வேதனை அடைந்துள்ளனர். மழை நிற்காதவரை மீட்பு பணிகள் முழுமை பெறாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு இயற்கையின் கையில் உள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் இன்று காலை 8 மணி வரை பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நன்னிலம்- 197.3
    திருவாரூர்- 173.7
    நீடாமங்களம்- 152.8
    கும்பகோணம்- 147.3
    குடவாசல்- 136.2
    மன்னார்குடி- 114.2
    மதுக்கூர்-102.4
    நெய்வாசல்- 98.8
    திருத்துறைப்பூண்டி- 71.2
    மயிலாடுதுறை- 67.9
    மஞ்சலாறு- 61.2
    சீர்காழி- 45.6
    தஞ்சாவூர்- 45.5
    ஒரத்தநாடு- 44.8
    கொள்ளிடம்- 21.6 #Rain #DeltaDistricts
    கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் நடவடிக்கை பணிகளை செய்வதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். #GajaCyclone
    தஞ்சாவூர்:

    கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் நடவடிக்கை பணிகளை செய்வதில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளை நேரில் வந்து பார்வையிடவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதிகளுக்கு உடனடியாக குடிநீர், மின்சார வசதி செய்து தர வேண்டும், மீட்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாபேட்டையை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியினர் தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.

    இந்த மறியல் போராட்டததில் பெண்கள், குழந்தைகள், கட்சி நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் முழுவதும் உள்ள 33 வார்டுகளிலும் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.

    ஏராளமான டிரான்ஸ் பார்மர்கள் பழுதாகின. இதன் காரமணாக மின்சாரம் முழுமையாக தடைபட்டு குடீநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. வெளிமாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

    இதற்கிடையே நகரத்தில் படிப்படியாக மின் விநியோகம் கொடுக்கப்பட்டது. லாரிகள் மூலம் குடிநீரும் விநியோகிக்கப்பட்டது. இருந்தாலும் பல்வேறு வார்டுகளில் மீட்பு பணிகளை அதிகாரிகள் தொடங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



    அந்த வகையில் மன்னார்குடி நகரம் 23-வது வார்டு தெற்கு வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புயல் அடித்து 7 நாட்களை கடந்தும் பாதிப்புகளை பார்வையிட எந்த ஒரு அதிகாரிகளும் வராததை கண்டித்தும், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியமான தேவைகளை உடனடியாக வழங்க கோரியும் திரையரங்கம் எதிரில் பொதுமக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் போராட்டம் நடந்த இடம் அருகே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தங்கியிருந்த தனியார் விடுதி இருந்தது. உடனே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அமைச்சர் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு தங்களை அதிகாரிகள் நேரில் வந்து சந்திக்கவில்லை என்று வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பாதுகாப்பிற்கு நின்ற டி.எஸ்.பி. அசோகன் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு நகராட்சி ஆணையர் விசுவநாதன், மின்வாரிய அதிகாரி கண்ணன் ஆகியோர் வந்து மீட்பு பணிகளை உடனடியாக தொடங்குவதாக உறுதியளித்தனர்.

    இதைத் தொடர்ந்து ஏராளமான பணியாளர்கள் அந்த பகுதியில் மீட்பு பணிகளை உடனே தொடங்கினர். அதன் பின் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி பகுதியில் புயல் தாக்கிய நாளில் இருந்து இன்று வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 7 நாட்கள் ஆகியும் மின்சார விநியோகம் தொடங்கப்படாததால் விரக்தியடைந்த பட்டினச்சேரி மீனவர்கள், நாகூர் வாஞ்சூர் சோதனைச்சாவடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காரைக்கால், திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ் மற்றும் வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.

    தகவலறிந்த தாசில்தார் இளங்கோவன், நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உடனே அந்த பகுதியில் மின்சாரம் வழங்கப்படுவதாக உறுதியளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதே போன்று முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மெயின்ரோட்டில் பொதுமக்கள் திரண்டு வந்து இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் முத்துப்பேட்டை அடுத்துள்ள ஆலங்காடு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone
    கஜா புயல் தாக்கிய பிறகு டெல்டா மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கும் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது. #GajaCyclone #DeltaDistricts
    சென்னை:

    தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட மக்களை கதற வைத்த கஜா புயலின் சோகம் இன்னும் தீரவில்லை.

    ஒரே நாளில் மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்து விட்ட கஜா புயல், ஒரு வாரம் ஆகியும் மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டுள்ளது.



    4 மாவட்டங்களிலும் சுமார் 50 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதில் சுமார் 40 லட்சம் தென்னை மரங்களாகும். இதனால் தென்னையை நம்பி வாழ்ந்து வந்தவர்கள் வாழ்க்கை தலைகீழாக புரண்டுள்ளது. இதே போல மா, பலா மரங்களை வளர்த்து வந்தவர்களின் நிலையும் பரிதவிப்புக்குள்ளாகி இருக்கிறது.

    நெற்பயிர்கள் மற்றும் வாழையை இழந்துள்ள விவசாயிகள், 1200 படகுகளை இழந்துள்ள மீனவர்களுக்கும் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகளை சமாளித்து டெல்டா மாவட்ட மக்கள் எப்படி மீண்டு வரப்போகிறார்கள் என்ற வேதனையும், கேள்விக்குறியும் தமிழர்கள் மனதில் எழுந்துள்ளது.

    வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ள சுமார் 2 லட்சம் பேர் 650-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். தங்கள் கிராமங்களில் இயல்பு நிலை திரும்பாததால் அவர்கள் தொடர்ந்து முகாம்களையே நம்பி இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வாரமாக டெல்டா மாவட்டங்களில் மின்சாரம் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தவிப்புக்கிடையே உணவுப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதும் மக்களுக்கு கடும் சவாலாக உள்ளது.

    அமைச்சர்கள் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். சுமார் 3 லட்சம் பேர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் 4 மாவட்டங்களில் அனைத்து ஊர்களையும் கஜா புயல் புரட்டிப் போட்டு இருப்பதால் நிவாரணப் பணிகளை திட்டமிட்டப்படி செய்து முடிக்க இயலவில்லை. தடைகளை கடந்தே நிவாரணப் பணிகளை செய்ய வேண்டியதுள்ளது. இதனால் நிவாரண பணிகள் மந்தமான நிலையில் நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கஜா புயல் தாக்கப் போவதற்கு முன்பு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்திருந்த தமிழக அரசு, அந்த புயல் இந்த அளவுக்கு மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடி விடும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்டா மாவட்ட மக்களும் தங்களை புயல் புரட்டி போட்டு விடும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இதனால் புயல் தாக்கும் பட்சத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் மிக, மிக குறைவாகவே இருந்தது.

    குறிப்பாக டெல்டா மாவட்ட கிராமங்களில் கஜா புயலை நினைத்து மக்கள் பயப்படாமல் இருந்தனர். அந்த கிராமங்களுக்குள் நுழையக் கூட முடியாத அளவுக்கு சாலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப் பகுதிகளை நிவாரணப் பொருட்கள் சென்றடைவதில் இன்னமும் சிரமம் நீடிக்கிறது.

    சரிந்து விழுந்துள்ள மரங்கள், மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்களை முழுமையாக அகற்றினால்தான் நிவாரணப் பொருட்களை கிராமங்களுக்குள் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் உணவு மற்றும் குடிநீருடன் டெல்டா பகுதிக்கு செல்லும் தன்னார்வத் தொண்டர்கள் நடந்தே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

    பெரும்பாலான இடங்களில் இடிந்த வீடுகள், சரிந்து விழுந்துள்ள மரங்களை அகற்றினால், நிவாரண உதவி கிடைக்காமல் போய் விடும் என்ற தவறான வதந்தி பரப்பப்பட்டுள்ளது. அத்தகைய ஊர் மக்களிடம் அதிகாரிகள் சமரசம் செய்து மரங்கள், இடிந்த வீடுகளை அகற்றி வருகிறார்கள். மரங்களை அகற்றும் உபகரணங்கள் குறைவாக இருப்பதும் நிவாரண பணிகள் தாமதமாவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

    வேரோடு சாய்ந்த 2.17 லட்சம் மரங்களில் நேற்று வரை 91 ஆயிரத்து 960 மரங்கள்தான் அகற்றப்பட்டுள்ளன. சரிந்து விழுந்த 1.03 லட்சம் மின் கம்பங்களில் 13 ஆயிரத்து 848 மின் கம்பங்கள்தான் அகற்றப்பட்டுள்ளன. இவை முழுமையாக அகற்றப்பட்டால்தான் நிவாரணப் பணிகளை 100 சத வீதம் விரைவாக செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

    இதற்கிடையே கஜா புயல் சேத விபரங்களை ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி வரும் அதிகாரிகள் மூலம் தினமும் அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. புயல் சீற்றத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சரிந்த மரங்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது. இன்னமும் கணக்கெடுப்பு முடியவில்லை.

    இந்த நிலையில் வீடுகளை இழந்து தவிப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை புயல் தாக்கிய பிறகு முதல் 2 நாட்களில் சுமார் 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்பட்டது.

    நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட தகவலில், புயலுக்கு 1½ லட்சம் வீடுகள் சேதம் அடைந்து விட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று, டெல்டா மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கும் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது.

    வீடுகளை இழந்தவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் முகாம்களில் தங்கி உணவு பெற்று அரசின் பல்வேறு உதவிகளையும் பெற்று வருகிறார்கள். மற்ற 60 சதவீதம் பேர் அதாவது சுமார் 2½ லட்சம் பேர் வீடுகளை இழந்த நிலையில் அவற்றை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அரசு மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் உதவியை எதிர்பார்க்காமல் அவர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் திட்டங்களில் 6955 திட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. அதில் 6204 குடிநீர் திட்டங்கள் சரி செய்யப்பட்டு குடிநீர் சப்ளை தொடங்கி உள்ளது.

    அரிசி, கோதுமை மற்றும் உணவுப் பொருட்களும் தேவைக்கு ஏற்ப டெல்டா மாவட்ட பகுதிகளில் கை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாலும் அதிகமாக அனுப்பப்பட்டு வருகிறது. சுகாதார பணிகளும் முழு வீச்சில் நடக்கிறது.

    ஆனால் இந்த நிவாரணப் பொருட்கள் கிராம மக்களிடம் விரைவாக, தினமும் சென்று சேரவில்லை என மனக்குறை 70 சதவீத மக்களிடம் உள்ளது. மின்சாரம் இல்லாததும் மக்களிடம் குமுறலை அதிகப்படுத்தி உள்ளது.

    மின்சாரம் தங்கு தடையின்றி கிடைத்து, உணவு பொருட்கள் சப்ளையும் சீராகி விட்டால் டெல்டா மக்கள் நிம்மதி பெருமூச்சு விட முடியும். ஆனால் அந்த சுமூக நிலை திரும்ப எத்தனை நாட்கள் ஆகுமோ என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. #GajaCyclone #DeltaDistricts
    கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் ஓரிரு நாட்களில் முழுமையான மினி விநியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #MinisterThangamani
    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்கள் முருகேசன், மோகன் ஆகியோர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

    அவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று இரவு திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து அவர்கள் இருவரையும் பார்த்தார்.

    டாக்டர்களிடம் இருவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அவர்களது இருவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

    பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் கீழே விழுந்துள்ளன. 20 மின் கோபுரங்கள் வெடித்து சிதறி உள்ளன. 219 துணை மின் நிலையங்கள் சேதம் அடைந்தன. இவற்றை சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் 21 ஆயிரத்து 461 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இன்னும் 55 துணை மின்நிலையங்கள் சீரமைக்கப்பட வேண்டியது உள்ளது. மின்கம்பங்கள் நடும் பணிகளும் இன்னொரு புறம் தீவிரமாக நடந்து வருகிறது.

    பொதுவாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பொறுத்தவரை நகர பகுதிகளில் மின் இணைப்பு வழங்கும் பணியானது இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக வழங்கப்பட்டு விடும். தஞ்சாவூர் நகர பகுதியில் 98 சதவீதமும், திருவாரூரில் 60 சதவீதமும், நாகை நகர பகுதியில் 95 சதவீதமும் மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கிராமப்பகுதிகளை பொறுத்தவரை சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைய இன்னும் ஒரு வார காலம் ஆகும்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது தனியார் ஒருவர் ஜெனரேட்டர் போட்டதால் தான் இந்த சம்பவம் நடந்து விட்டதாக கூறப்படுகிறது. அது உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterThangamani
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #MinisterSengottaiyan #DeltaDistricts
    தஞ்சாவூர்:

    கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயலினால் பலர் உயிரிழந்தனர். வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன.

    வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.



    இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நாளை மாலைக்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    பள்ளிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்றும், பள்ளிகளில் விழுந்த மரங்களில் 70% அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் 45 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #DeltaDistricts

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நிவாரணப்பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசை முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். #GajaCyclone #Mutharasan
    மன்னார்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கோட்டூர், திருப்பத்தூர், திருக்களார், மீணம்பநல்லூர், களப்பாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார், பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 4 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. எனவே பொதுமக்கள் வாய்க்கால், குளத்தில் உள்ள நீரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் சுகாதாரம், குடிநீருக்கு மாநில அரசு முன்னுரிமை கொடுத்து துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ஆயிரக்கணக்கான மின்சார கம்பங்கள் அடியோடு சாய்ந்து விட்டதால் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் விநியோகம், சமையல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற முடியவில்லை. இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாடு அரசு, அனைவருக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லாத மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். மின் இணைப்பு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க, வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள், மற்றும் பணியாளர்கள் அழைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது வி.தொ.ச மாநில செயலாளர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ கே.உலகநாதன், வி.தொ.ச மாவட்ட செயலாளர் பாஸ்கர், கோட்டூர் ஒன்றியசெயலாளர் மாரிமுத்து, துணை செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர். #GajaCyclone #Mutharasan
    நாகை, வேதாரண்யம் மற்றும் மல்லிபட்டினம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. #Northeastmonsoon #Fishermen
    நாகப்பட்டினம்:

    டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இன்று (1-ந் தேதி) முதல் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் நேற்று முதலே பருவ மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக நாகை, திருப்பூண்டி, தலைஞாயிறு, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. வேதாரண்யத்தில் அதிக பட்சமாக 38.20 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.இந்த மழை தற்போது நடவு செய்யப்பட்டுள்ள சம்பா பயிருக்கு பயனை தரும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேதாரண்யம்- 38.20

    திருப்பூண்டி-26.60

    சீர்காழி-25.20

    நாகப்பட்டினம்-18.20

    மணல்மேடு-8.20

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் நகரில் இன்று காலை லேசான தூறல் மழை பெய்தது.

    தஞ்சை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை கும்பகோணத்தில் தூறல் மழை பெய்தது.

    இன்று காலை நாகை, வேதாரண்யம் மற்றும் மல்லிபட்டினம், ஆகிய பகுதிகளில் கடல் சீற்றமாக இருந்தது. மேலும் கடல் அலைகள் பல அடிகளுக்கு எழுப்பியப்படி இருந்ததால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.  #Northeastmonsoon #Fishermen
    நடப்பாண்டில் மழை மற்றும் காவிரி நீரால் இதுவரை தமிழ்நாட்டில் 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு உயர்வாகும். #PaddyCultivation
    சென்னை:

    கர்நாடகாவில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அந்த அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டது. 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்ததால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இதையடுத்து மேட்டூர் அணை நிரம்பியதால் கடந்த ஜூலை 22-ந்தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பின்னும் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியதால் தண்ணீர் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது.

    காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் நெல் சாகுபடியில் மும்முரமாக இறங்கினர்.

    ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் ஜூன் 12-ந்தேதிக்கு திறக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டாலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


    நடப்பாண்டில் மழை மற்றும் காவிரி நீரால் இதுவரை தமிழ்நாட்டில் 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு உயர்வாகும். கடந்த ஆண்டு 2.895 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக விவசாய துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நடப்பாண்டில் செப்டம்பர் 24-ந்தேதி வரை 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு 2.895 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. மேலும் நெல் சாகுபடி அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

    டெல்டா மாவட்டங்களில் அதிகபட்சமாக திருவாரூரில் 1.70 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாகையில் 81 ஆயிரம் ஹெக்டேர், தஞ்சாவூரில் 55 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி நடந்து வருகிறது. பெரும்பாலான பாசன நிலங்கள் காவிரி நீரால் பயன் அடைந்துள்ளன.

    இதே போல் பலத்த மழையால் ஈரோடு, கோவை, கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயம் நடந்து வருகிறது. இந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டு விவசாயம் முற்றிலும் நடைபெறவில்லை.

    2016-17ம் ஆண்டு 35.54 லட்சம் டன் நெல் உற்பத்தியும், 2017-18ம் ஆண்டு 72.77 லட்சம் டன் நெல் உற்பத்தியும் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு அதிகளவில் நெல் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #PaddyCultivation
    #CauveryWater #MetturDam
    டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் பெய்தமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வாட்டி எடுத்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சை நகரில் லேசாக மழை பெய்தது. பின்னர் கடும் வெயில் அடிக்க ஆரம்பித்தது. நேற்றும் காலையில் இருந்தே வெயில் வாட்டி எடுத்தது.

    இதைத் தொடர்ந்து மாலை நேரத்தில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.

    திடீரென வானம் மேகம் மூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் மாலை 5.30 மணிக்கு லேசான மழை பிடித்து, பின்னர் பலத்த மழையாக கொட்டியது. இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 9 மணி வரையிலும் மழை கொட்டி தீர்த்தது. அதன் பின்னரும் லேசான தூறல் விழுந்து கொண்டிருந்தது.

    பலத்த மழையால் ரெயில் நிலையத்தில் மழை நீர் சூழ்ந்து கொண்டது. பின்னர் மழை நீர் டிக்கெட் கவுண்டர் பகுதியில் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் மேரீஸ் கார்னரில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் மழை நீர் குளம் போன்று தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பஸ் தண்ணீரில் சிக்கி கொண்டது. இதனால் பயணிகள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு டயர்கள் உதவியுடன் பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    இது போன்று தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, வல்லம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

    கும்பகோணத்தில் பலத்த காற்றால் கும்பகோணம் டாக்டர் மூர்த்தி ரோடு ஹவுசிங்யூனிட் பகுதியில் ஒரு புங்க மரம் முறிந்து அருகில் செல்லும் மின் வயரில் விழுந்தது. இதனால் ஒருபுறமுள்ள மின் கம்பம் இரண்டாக முறிந்ததால் அப்பகுதி முழுவதும் இருளில் முழ்கியது.

    இதனையறிந்த மின்சாரத் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

    மின் ஒயரில் மரம் விழுந்ததால் டாக்டர் மூர்த்தி ரோடு, பாணா துறைதெரு, திருவள்ளுவர் நகர் , நால் ரோடு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு , போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் விடப்பட்டன.

    டெல்டா மாவட்டங்களில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மி.மீட்டரில் பின்வருமாறு:-

    தஞ்சாவூர் - 49.3
    நாகை - 25.6
    பூதலூர் - 24.2
    திருத்துறைப்பூண்டி - 15.2
    திருவாரூர் - 13.4
    பேராவூரணி - 7.2
    நெய்வாசல் தென்பாதி - 5.6
    ஒரத்தநாடு - 5.2
    வலங்கைமான் - 3.2
    மதுக்கூர் - 1.2
    பட்டுக்கோட்டை - 0.5
    டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் விவரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். #Mutharasan
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் காவிரி நீர் வராத கடைமடை பகுதிகளான பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி ஆகியவற்றை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் 2016-17-ம் ஆண்டில் ரூ.100 கோடிக்கும், 2017-18-ம் ஆண்டில் ரூ.300 கோடிக்கும் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதாகவும், இதன்மூலம் 3 ஆயிரத்து 854 குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

    இதேபோல் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் உலக வங்கியில் கடனுதவி ரூ.3 ஆயிரத்து 8 கோடி, பருவ நிலை மாற்ற திட்டத்தின் கீழ் ரூ.215 கோடி, அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் 360 கோடி செலவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அரச தெரிவித்துள்ளது.

    ஆனால் டெல்டா மாவட்டங்களில் எந்த ஆற்றிலும், வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணிகள் நடக்கவில்லை. அதனால் தான் கடைமடை வரை எந்த ஒரு வாய்க்காலிலும் தண்ணீர் வந்து சேரவில்லை.

    மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் தண்ணீர் வந்து சேராததால் 24-ந் தேதி (நாளை) பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருப்பு பேராட்டமும், 28-ந் தேதி பேராவூரணியில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டமும் நடத்தப்பட உள்ளது. தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது. அந்த நிதி அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளது.

    இந்த முறைகேடுகள் குறித்து பொது விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழக அரசு இதுபற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இனியாவது போர்க்கால அடிப்படையில் கரைகளை பலப்படுத்தி, தூர்வாரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று விட்டதாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan #DeltaDistrict
    ×