search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "desilting works"

    டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் விவரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். #Mutharasan
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் காவிரி நீர் வராத கடைமடை பகுதிகளான பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி ஆகியவற்றை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் 2016-17-ம் ஆண்டில் ரூ.100 கோடிக்கும், 2017-18-ம் ஆண்டில் ரூ.300 கோடிக்கும் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதாகவும், இதன்மூலம் 3 ஆயிரத்து 854 குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

    இதேபோல் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் உலக வங்கியில் கடனுதவி ரூ.3 ஆயிரத்து 8 கோடி, பருவ நிலை மாற்ற திட்டத்தின் கீழ் ரூ.215 கோடி, அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் 360 கோடி செலவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அரச தெரிவித்துள்ளது.

    ஆனால் டெல்டா மாவட்டங்களில் எந்த ஆற்றிலும், வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணிகள் நடக்கவில்லை. அதனால் தான் கடைமடை வரை எந்த ஒரு வாய்க்காலிலும் தண்ணீர் வந்து சேரவில்லை.

    மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் தண்ணீர் வந்து சேராததால் 24-ந் தேதி (நாளை) பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருப்பு பேராட்டமும், 28-ந் தேதி பேராவூரணியில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டமும் நடத்தப்பட உள்ளது. தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது. அந்த நிதி அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளது.

    இந்த முறைகேடுகள் குறித்து பொது விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழக அரசு இதுபற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இனியாவது போர்க்கால அடிப்படையில் கரைகளை பலப்படுத்தி, தூர்வாரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று விட்டதாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan #DeltaDistrict
    தஞ்சை, நாகை, திருவாரூரில் தூர்வாரும் பணி நடைபெறாததால் வாய்கால்கள் வறண்டு கிடப்பதாக பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததன் காரணமாக தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் 150 டி.எம்.சி. அளவுக்கு கடலில் கலந்து வீணாகி உள்ளது.

    தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தூர்வரும் பணிகள் முறையாக நடைபெறாததால் கிளை வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன. நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது.

    கடந்த மாதம் (ஜூலை) 13-ந் தேதியே மேட்டூர் அணையை திறந்திருந்தால் ஓரளவுக்கு நீரை சேமித்திருக்கலாம். விலை மதிப்பில்லாத தண்ணீரை கடலில் வீணாக்கி வருகின்றனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு இனியாவது மாற்று பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    வைகை, காவிரி, குண்டாறு இணைப்பு திட்டம், ஆதனூர் கதவணை திட்டம், சுமார் ரூ.11 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்டிருந்த காவிரி பாசன மேம்பாட்டு திட்டம் போன்றவற்றை இந்த அரசு செய்ய தவறிவிட்டது. காவிரி சமவெளி பகுதி என்பதால் தடுப்பணை கட்ட முடியாது என முதல்-அமைச்சர் சொல்கிறார். பின்னர் ஏன் 62 தடுப்பணைகளை கட்டுவதாக அறிவித்துள்ளார்? அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார்.

    நீர் மேலாண்மை குறித்த புரிதல் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகிறார். அவர் நீர் மேலாண்மையில் ஆய்வு செய்து டாக்டரேட் பட்டம் பெற்றவரல்ல. காவிரி டெல்டா பற்றி அவருக்கு என்ன தெரியும்? கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட 150 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது.

    சுமார் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள கேரளா மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ.500 கோடியை மட்டுமே ஒதுக்கி உள்ளது. இதே போன்ற அணுகுமுறையைத் தான் கடந்த காலங்களில் தமிழக அரசுடன், மத்திய அரசு கையாண்டது. இயற்கை இடர்பாடுகள் வருகின்றபோது மாநில அரசுகளை மத்திய அரசு சுமையாக கருதுகிறது. இது ஒரு தவறான அணுகுமுறையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேதாரண்யம் குடிமராமத்து பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தமிழ்நாடு பாடநூல்கழக நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். #Chennairain

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தால்ககா தலைஞாயிறு பகுதிகளில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தமிழ்நாடு பாடநூல்கழக நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு மற்றும் கீழையூர் ஒன்றியங்களில் சிகார் கிராமம் அண்டக்குடி வாய்க்காலில் ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், மேலநாகலூர் கிராமம் நாகலூர் வாய்க்காலில் ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், எட்டுக்குடி கிராமம் வடக்கு காட்டாறு எட்டுக்குடி கிளை வாய்க்காலில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், கலெக்டர் பார்வையிட்டார்.

    பின்னர் தலைஞாயிறு ஒன்றியம் தொழுதூர் வடக்கில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தொழுதூர் வாய்க்கால் மதகு பழுதுபார்த்தல் பணிகளையும், மாராச்சேரி கிராமம் கோடிவி நாயநல்லூர் வாய்க்காலில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும், அருந்தவம்புலம் கிராமத்தில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மல்லியனாறு வடிகால் இடதுகரையில் மதகு பழுதுபார்த்தல் பணிகளையும் கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் தமிழ்நாடு பாடநூல்கழக நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தங்கமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், கண்ணப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். #Chennairain

    கடலூர் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணி மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை ஆய்வு செய்வதற்கு வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக ககன் தீப் சிங் பேடி இன்று காலை கடலூருக்கு வந்தார்.

    கடலூர் கம்மியம் பேட்டை பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் கரையை பலப்படுத்தும் பணி ரூ.22 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை ககன் தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதனை ஆய்வு செய்ய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் குடிமராமத்து பணியினை ஆய்வு செய்ய என்னை நியமித்து உள்ளனர்.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணியை ஆய்வு செய்து வருகிறேன். மேலும் கடலூர் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் கெடிலம் ஆற்றில் இருபுறமும் நிரந்தரமாக கரையை பலபடுத்தும் பணியும் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் மூலம் கடலூர் நகரில் உள்ள கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது வெள்ளம் ஊருக்கு புகாமல் நிரந்தரமாக தடுக்கப்படும். மேலும் கடலூர் மாவட்டத்தில் பரவனாறு,செங்கால் ஓடை, பழைய கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளேன்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, வெலிங்டன் ஏரி, வீராணம் ஏரி, ஆகிய ஏரிகளில் தமிழக அரசு மற்றும் என்.எல்.சி. நிறுவனமும் இணைந்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் தண்டபாணி, மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, சப்- கலெக்டர் சரயூ மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். #GagandeepSinghBedi
    குடிமராமத்து பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனத்தை வரவேற்கிறோம் என்று பி.ஆர்.பாண்டியன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Chennairain #PrPandian

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    காவிரியில் இருந்து உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு வழங்க முடியும் என்ற கர்நாடகாவின் உள்நோக்கத்திற்கு ஆணையம் துணைபோய்விடக் கூடாது. உரிய நீரை உரிய காலத்தில் திறக்கப்படுவதை தான் கணக்கில் கொள்ள வேண்டும்.

    நடப்பாண்டு ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவதை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.

    இந்நிலையில் கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக ராசிமணல், மேகதாது ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டியே தீருவோம் என பேசியுள்ளார். இது குறித்து ஆணைய தலைவர் தனது கண்டனத்தை தெரிவிக்காமல் மவுனம் காத்து வருவது தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதாகும்.

    மேலும் ஒரு போக சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் என்று நம்பி எதிர்பார்த்து தமிழக விவசாயிகள் உள்ளனர். எனவே இது குறித்து ஆணைய தலைவர் மசூத் உசேனை விரைவில் சந்தித்து பேச உள்ளோம்.

    குடிமராமத்துப் பணிகளில் ஊழல் முறைகேடுகளின்றி உரிய காலக்கெடுவுக்குள் பணிகள் முழுமையும் நிறை வேற்றுவதை கண்காணிக்க அரசுத் துறை செயலாளர்கள் நியமிக்க வேண்டுமென முதல்-அமைச்சரை வலியுறுத்தியதன் பேரில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து உள்ளதை வரவேற்கிறோம்.

    இக்குழு தமிழகம் முழுவதும் ஆய்வு பணிகளை உடன் தொடங்குவதோடு, பணிகளின் நிலை குறித்து மாவட்டம் தோறும் விவசாயிகளோடு ஆய்வு கூட்டங்கள் நடந்திட வேண்டுமென குழு தலைவரும் வேளாண் துறை முதன்மை செயலாளருமான ககன்தீப்சிங்பேடியை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Chennairain #PrPandian

    தமிழ்நாட்டில் ரூ.328.95 கோடியில் நடக்கும் 1,151 குடிமராமத்து திட்ட பணிகளை கண்காணிக்க 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக ரூ.100 கோடி செலவில் 1513 ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்தொடர்ச்சியாக,  மொத்தம் 328.95 கோடி செலவில் 1511 ஏரிகள் புனரமைப்பு பணிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து ஏரிகள் புனரமைப்பு பணிகளை முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில், ரூ.328.95 கோடியில் நடக்கும் 1,151 குடிமராமத்து திட்ட பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க ககன்தீப் சிங் பேடி, அமுதா, பவன்குமார் பன்சால் உட்பட ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று உத்தரவிட்டுள்ளார். #IASofficers #TNdesiltingworks
    ×