search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CPI M"

    கோவையில் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. #GirlHarassment
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறயிருப்பதாவது:-

    கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி படுகொலை செய்துள்ள சம்பவம் மிகுந்த மன வேதனையளிக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான பின்னணியில், அதே மாவட்டத்தில் மேலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 25-ந்தேதி காணாமல் போன குழந்தை வீட்டுக்கு அருகிலேயே பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன.

    சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்துள்ள இந்த கோரச் சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

    குரூரமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது, போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GirlHarassment
    ஆணவ படுகொலையை தடுக்க தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். #HonourKilling
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த நந்திஸ்-சுவேதா என்ற புதுமண காதல் தம்பதியினரை சுவேதியின் குடும்பத்தார் ஆணவ படுகொலை செய்தனர்.

    அவர்களது உடல்களை கர்நாடக மாநிலம் மாண்டிய அருகே சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி காவரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சுவேதாவின் தந்தை, பெரியப்பா மற்றும் உறவினர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் கொலையுண்ட நந்திஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித், முன்னாள் எம்.எல்.ஏ. டில்லி பாபு, தீண்டாமை ஒழிப்பு மாநில செயலாளர் சாமுவேல் ராஜ் ஆகியோர் இன்று காலை சூடகொண்டபள்ளியில் அவரது வீட்டிற்கு வந்தனர்.

    கொலையுண்ட நந்திஸ்-சுவேதா

    அப்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆணவ படுகொலை நெஞ்சை உலுக்கும் வகையில் நடந்துள்ளது. இதுபோன்ற ஆணவ கொலைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.

    ஆனால் சட்டமன்றத்தில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழத்தில் ஆணவ படுகொலை நடக்கவில்லை என்று கூறி உள்ளார்.

    இறந்துபோன நந்திஸ் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.

    மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை மட்டும் கைது செய்துள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் ஒரு கூட்டமே சதி செய்து உள்ளது. அவர்களை கண்டுபிடித்து போலீசார் கைது செய்யவேண்டும்.

    ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. உடனடியாக ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #HonourKilling
    அரசியலுக்கு வராத ரஜினியை குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #ADMK #ThambiDurai #Rajinikanth
    கரூர்:

    கரூர் தென்னிலையில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரசை தனிமைப்படுத்த அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது. இப்போது வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என பா.ஜ.க.வை எதிர்த்து. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, சீதாராம் யெச்சூரி சந்தித்து பேசியுள்ளார். பா.ஜ.க. மதவாத கட்சி என்று சொல்கிற இடது சாரிகளும், தி.மு.க.வும் இணைந்துதான் அன்று பா.ஜ.க.வை காப்பாற்றினார்கள். இன்று மோடியை வீழ்த்துவோம் என்று சொல்வது அரசியல்.

    தி.மு.க. இந்தியாவை காப்பாற்றும் என்பது கேள்விக்குறியாகும். இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியாதவர்கள் தி.மு.க. இலங்கையில் 1½லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தி.மு.க. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது. ஆனால் அவர்களால் இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியவில்லை. இப்போது. கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து இந்தியாவை வலிமையாக்குவோம் என்று கூறுவது அரசியலுக்காக, தேர்தலுக்காக, பிரசாரத்துக்காக.


    அ.தி.மு.க. தமிழகத்தை காப்பாற்றவும், இந்தியாவை வலிமையானதாக மாற்றுவதற்காகவும் பாடுபடும். தேர்தல் நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் சேர்ந்தால் கூட்டணி குறித்து யோசிப்போம் என துணை முதல்வர் கூறியுள்ளார். அரசியலுக்கு வராத ரஜினியை குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது என்றார்.

    பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், சிலையை முன்பே திறந்து வைத்து விட்டார்கள். இப்போது சிலையை மாற்றி வைக்கிறார்கள். இதற்கும் அழைப்பு வந்தது. ஆனால் மக்களிடம் மனு பெறும் நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிட்டிருந்ததால் இன்று ஜெயலலிதாவின் புதிய சிலை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றார். #ADMK #ThambiDurai #Rajinikanth
    பாரதிய ஜனதா அல்லாத எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்க சீத்தாராம் யெச்சூரி முயற்சி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மு.க.ஸ்டாலினை சந்திக்க சீத்தாராம் யெச்சூரி வருகிற 13-ந்தேதி சென்னை வருகிறார். #MKStalin #SitaramYechury
    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பாரதிய ஜனதா அல்லாத எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இதற்காக ஒவ்வொரு மாநிலமாக சென்று கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    அந்த வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சீத்தாராம் யெச்சூரி வருகிற 13-ந்தேதி சென்னை வருகிறார்.

    பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த ஓரணியில் நிற்க என்னென்ன வியூகம் வகுப்பது என்பது குறித்து அப்போது ஆலோசனை நடத்துகிறார்கள்.


    இந்த சந்திப்பை உறுதி செய்வதற்காக மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன் டி.கே.ரெங்கராஜன் எம்.பி.யும் உடன் சென்றிருந்தார்.

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை சென்னை வந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக பாராளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்து பாடுபட மு.க.ஸ்டாலினுக்கு அவர் அழைப்பு விடுக்க உள்ளார். #DMK #MKStalin #SitaramYechury
    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எவ்வளவோ கிடப்பில் இருக்கும் போது பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போட்டதற்கு பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு போடுவது மிகவும் கண்டனத்துக்குரியது.

    காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்றாமல் கிடப்பில் போட்ட போது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.

    எனவே பண்டிகை காலமான தீபாவளிக்கு மகிழ்ச்சி பொங்க குடும்பத்துடன், குழந்தைகளுடன் பட்டாசு வெடித்தவர்களை குற்றவாளி போல் தேடி பிடித்து வழக்கு பதிவு செய்வதும், போலீஸ் வாகனத்தில் பிடித்துச் சென்று அவமானப்படுத்துவதையும் மக்கள் விரும்புவதில்லை.

    தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் பிரச்சனைகள் அதிகம் உள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல் பொது மக்களிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்வதும், பொது மக்களை போலீஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து காலை முதல் மாலை வரை உட்கார வைப்பதையும் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது அநியாயம்.

    எனவே பட்டாசு போடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது. போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தஞ்சை, நாகை, திருவாரூரில் தூர்வாரும் பணி நடைபெறாததால் வாய்கால்கள் வறண்டு கிடப்பதாக பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததன் காரணமாக தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் 150 டி.எம்.சி. அளவுக்கு கடலில் கலந்து வீணாகி உள்ளது.

    தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தூர்வரும் பணிகள் முறையாக நடைபெறாததால் கிளை வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன. நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது.

    கடந்த மாதம் (ஜூலை) 13-ந் தேதியே மேட்டூர் அணையை திறந்திருந்தால் ஓரளவுக்கு நீரை சேமித்திருக்கலாம். விலை மதிப்பில்லாத தண்ணீரை கடலில் வீணாக்கி வருகின்றனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு இனியாவது மாற்று பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    வைகை, காவிரி, குண்டாறு இணைப்பு திட்டம், ஆதனூர் கதவணை திட்டம், சுமார் ரூ.11 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்டிருந்த காவிரி பாசன மேம்பாட்டு திட்டம் போன்றவற்றை இந்த அரசு செய்ய தவறிவிட்டது. காவிரி சமவெளி பகுதி என்பதால் தடுப்பணை கட்ட முடியாது என முதல்-அமைச்சர் சொல்கிறார். பின்னர் ஏன் 62 தடுப்பணைகளை கட்டுவதாக அறிவித்துள்ளார்? அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார்.

    நீர் மேலாண்மை குறித்த புரிதல் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகிறார். அவர் நீர் மேலாண்மையில் ஆய்வு செய்து டாக்டரேட் பட்டம் பெற்றவரல்ல. காவிரி டெல்டா பற்றி அவருக்கு என்ன தெரியும்? கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட 150 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது.

    சுமார் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள கேரளா மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ.500 கோடியை மட்டுமே ஒதுக்கி உள்ளது. இதே போன்ற அணுகுமுறையைத் தான் கடந்த காலங்களில் தமிழக அரசுடன், மத்திய அரசு கையாண்டது. இயற்கை இடர்பாடுகள் வருகின்றபோது மாநில அரசுகளை மத்திய அரசு சுமையாக கருதுகிறது. இது ஒரு தவறான அணுகுமுறையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் திண்டுக்கல் உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் சொத்து வரி 100 சதவீதம் வரை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால் வாடகை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. ஏழைகளின் மீது திணிக்கப்படும் இந்த வரி உயர்வை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2 நாட்கள் நடைபயணம் தொடங்கியது.

    திண்டுக்கல் மரியநாதபுரத்தில் தொடங்கிய இந்த நடை பயண பிரசாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாநிலக் குழு நிர்வாகி பாண்டி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், நகர செயலாளர் ஆசாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மரியநாதபுரத்தில் தொடங்கி குள்ளனம்பட்டி, ராஜலெட்சுமிநகர், நாகல்நகர் சந்தை, ஆர்.வி.நகர், முகமதியாபுரம், பேகம்பூர் சவேரியார்பாளையத்தில் இன்றைய பிரசாரம் நிறைவடைகிறது. நாளை திருமலைசாமிபுரத்தில் தொடங்கி ரவுண்டு ரோடு, அபிராமி நகர், கோபால்நகர், ஒய்.எம்.ஆர்.பட்டி பஸ்நிலையம், மணிக்கூண்டு, நந்தவனம் ரோடு, நாராயணபிள்ளை தோட்டம் வழியாக காமராஜர்புரத்தில் நிறைவடைகிறது.
    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மதவாத பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைப்பதற்கு எதிராக புதிய வியூகங்களை அமைக்கப்படும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ParliamentElection #BJP
    சிதம்பரம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. தனது ஆதரவு மாநில கட்சிகள் மூலம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி நாடு முழுவதுமான பெற்ற வெற்றி இல்லை. மக்கள் மன்றத்தில் பா.ஜ.க. தோல்வி அடைந்து விட்டது. இந்தியா முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஏற்பட்ட தோல்வியே இதற்கு சான்று.

    கருப்பு பணம் ஓழிப்பு, விலைவாசி உயர்வு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் பற்றி எதிர்கட்சிகளின் கேள்விக்கு பிரதமரின் பதில் ஏற்று கொள்ளகூடியதாக இல்லை. மேலும் கல்வி, விவசாயிகளுக்கான இரட்டிப்பு வருமானம் 2022-ல் வரும் என்பது ஏற்று கொள்ள முடியாது. 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கும் தற்போது பிரதமரின் பதிலும் முரண்பாடாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மதவாத பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைப்பதற்கு எதிராக வியூகங்களை அமைக்கும் வகையில் செப்டம்பர் மாதம் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தப்படும்.

    தற்போது ஏரிகள் போர்கால அடிப்படையில் 20 நாட்களில் தூர்வாரப்படும் என்கிறார்கள். வறட்சி காலங்களில் எதுவும் செய்யாமல் தற்போது ஏரிகள் தூர்வாரப்படும் என்ற அறிவிப்பு மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் உள்ளது. மேட்டூர் அணையில் நீர்திறந்து விடப்பட்ட பிறகு ஏன் தூர்வார வேண்டும். நீர்நிலைகளில் தண்ணீர் வரும் சூழ்நிலையில் அவசரகதியில் தூர்வாருவதால் எந்த பயனும் இல்லை. இது ஊழலுக்கு வழிவகுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #BJP

    அரசியல் அடிதடிக்கு பேர்போன கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க. தொண்டர்கள் இடையிலான மோதலில் 7 பேர் காயமடைந்தனர். #CPIBJPworkersclash
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ.க. தொண்டர்களிடையே அடிக்கடி அரசியல் மோதல்கள் நடந்து வருகின்றனர்.

    கடந்த மே மாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ.க. தொண்டர் அடுத்தடுத்து ஒரே நாளில் கொல்லப்பட்டனர்,

    இந்நிலையில்,  கண்னூர் மாவட்டத்தில் இன்று காரில் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களை மோட்டார் சைக்கிள்களில் வந்த பா.ஜ.க. தொண்டர்கள் வழிமறித்து தாக்கியதாகவும், இந்த மோதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 4 பேரும், பா.ஜ.க.வினர் 3 பேரும் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

    காயமடைந்த அனைவரும் மாட்டானூர் மற்றும் தலச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இவர்களில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. #CPIBJPworkersclash 
    ஆளுங்கட்சியின் குரலாகத் தான் ரஜினி இருக்கிறார் என்று திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது :-

    மக்கள் விரோத மத்திய பா.ஜனதா அரசு மற்றும் அ.தி.மு.க. அரசை அகற்றும் நோக்கத்துடன் மாற்றுக் கொள்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்குகிறது.

    இதன் நிறைவு நாள் கூட்டம் திருச்சியில் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்கிறார். மத்திய அரசு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு முதல் கூட்டம் கூட நடக்கவில்லை.

    ஜூன்.12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுமா? என்ற சந்தேகம் உள்ளது. நீட் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ரத்து செய்ய போராட வேண்டும். இதற்கு தற்கொலைகள் தீர்வு ஆகாது.

    தமிழக அரசின் தொழிற்துறை மானியக் கோரிக்கையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்பதை தெளிவாக்கியுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. ஆகியவை தான் இதற்கு காரணம்.

    தூத்துக்குடி துப்பாக்கி சுடும் சம்பவத்தில் ரஜினியின் கருத்து மக்களுக்கு எதிராக உள்ளது. மக்களை இழிவுப்படுத்திய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆளுங்கட்சியின் குரலாகத் தான் ரஜினி இருக்கிறார்.

    கமல் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றது மூலம் அந்த அமைப்பிற்கு சமூக அந்தஸ்தை கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தில் சகிப்பின்மையை பற்றி பேசுவது மதுக்கடையில் இருந்து கொண்டு மதுபானத்திற்கு எதிராக பிரசாரம் செய்வது போன்றது.

    இதில் அவர் பங்கேற்றிருக்க கூடாது. பா.ஜ.க.வை வீழ்த்த மதசார்ப்பற்ற கட்சிகளோடு தேர்தல் நேரத்தில் கைகோர்ப்பது என்கிற முடிவை எடுத்துள்ளோம். தேர்தல் நேரத்தில் அதற்கான யுக்தியை கையாள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth
    மத்திய திட்டக் குழுவின் அறிக்கையின்படி தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
    கும்பகோணம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்றதை தொடர்ந்து அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப போலீஸ் படையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி உள்ளது. இந்த நடவடிக்கை போதாது.

    கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதியின் நேரடி கண்காணிப்பில் மத்திய குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ. மூலமாகவும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்ப வேண்டுமே தவிர கைது செய்ய கூடாது.

    மாநில அரசின் தவறான கொள்கை காரணமாக உயர்கல்வி துறையில் 95 சதவீதம் தனியாரிடம் சென்றுவிட்டது. மத்திய திட்டக் குழுவின் அறிக்கையின்படி தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தமிழக அரசு மூடி மறைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்திருக்கிறது. பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவி விட்டது.

    மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பிரசார பயணம் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 14-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், சின்னைபாண்டியன், ஜெயபால் மற்றும் பலர் உடன் இருந்தனர். #GRamakrishnan
    ×