search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbakonam"

    • சுவாமியின் திவ்விய தரிசனம் கண்டு பரவசத்தில் ஆழ்ந்துவிட்டார்.
    • சிவ நாமம் உச்சரிப்பதிலும் தம்மை முழுமையாக ஆட்படுத்திக்கொண்டார்.

    தஞ்சை கரை அருகில் மத்தியார் ஜூன சேத்திரத்தில் அமைந்த திருவிசைநல்லூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர், ஸ்ரீதர ஐயாவாள். இவர் முழு பெயர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் என்பதாகும். இவர் சிவ பெருமானை ஆராதனை செய்து வேதங்களை நன்கு கற்றவர்.

    எல்லையில்லா சிவ பக்தி உள்ளவர். மைசூர் சமஸ்தானத்தில் திவான பணிபுரிந்து வந்தவர். ஆனாலும் அதில் ஈடுபாடு இல்லாமல், இறைவனைத் தரிசிப்பதிலும், சிவ நாமம் உச்சரிப்பதிலும் தம்மை முழுமையாக ஆட்படுத்திக்கொண்டார். எனவே. பதவியைத் துறந்துவிட்டு நாடெங்கும் சிவதரிசனம் செய்யப் புறப்பட்டுவிட்டார்.

    அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் காவிரியின் வடக்கு, தெற்கு கரைகளில் அமைந்திருக்கும் சிவாலயங்களைத் தரிசித்து வணங்கியபடி திருவிடைமருதூர் என்னும் திருத்தலத்துக்கு வந்தார். அங்கிருந்த மகாலிங்க சுவாமியின் திவ்விய தரிசனம் கண்டு பரவசத்தில் ஆழ்ந்துவிட்டார். தினமும் மகாலிங்க சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், அருகிலுள்ள திருவிச நல்லூரிலேயே தங்கினார். தஞ்சையை ஆண்ட மன்னர் அவரை நல்ல முறையில் கவுரவித்து நிலம், வீடு போன்ற மானியங்கள் அளித்தார்.

    தினமும் மாலையில் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க மூர்த்தியை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் இவர் ஆக்யா ஷஷ்டி, ஸ்ரீ கிருஷ்ணத்வா தச மஞ்சரி, ஸ்தோத்ரபத்ததி, கங்காஷ்டகம், சிவபக்த லட்சணம், தயாசதகம், சிவபக்தி கல்பலதிகா போன்ற பக்தி நூல்களை எழுதியுள்ளார்.

    இவர் ஒரு சமயம் தன்னுடைய முன்னோர்களுக்காக சிரார்த்தம் (திதி) கொடுக்க வேண்டியிருந்தது. அப்பொழுது சிரார்தத்திற்கு தேவையான உணவுகளை மிகுந்த ஆச்சாரத்துடன் தயார் செய்தார். அப்பொழுது அங்கு சாப்பிட வந்த பிராமணர்கள் குளிக்கச்சென்றார்கள். அந்த நேரத்தில் ஒரு புலையன் (சிலர் குறவன் என்பார்கள்). 'எனக்கு மிகவும் பசிக்கிறது, உணவு தாருங்கள்' என்று ஸ்ரீதர ஐயாவாளிடம் வந்து வேண்டினார்.

    அவனது கஷ்டத்தை கண்டு மனம் உருகிய ஸ்ரீதர ஐயாவாள், அவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, வாழை இலை போட்டு, தன்னுடைய முன்னோர்களுக்காக செய்து வைத்த உணவை பரிமாறி சாப்பிட வைத்தார். 350 வருடங்களுக்கு முன் இது மிகப் பெரிய விஷயம். இவ்வாறு செய்த வரை, ஊரை விட்டு விலகி வைக்க கூட தயக்க மாட்டார்கள். ஆனால் ஸ்ரீதர ஐயாவாளுக்கு சம்பிரதாயத்தை விட ஒருவரின் பசியை ஆற்றுவது முக்கியமானதாக பட்டது.

    இந்த நிலையில் ஆற்றுக்கு குளிக்கச் சென்ற அந்தணர்கள் திரும்பி வந்தனர். அப்போது வீட்டிற்குள் புலையன் ஒருவனுக்கு, ஸ்ரீதர ஐயாவாள் உணவு அளித்ததை அறிந்து கோபம் கொண்டனர். பின்னர், சாஸ்திரத்தை மீறி நடந்து கொண்டதால், உங்களுடைய வீட்டில் நாங்கள் தர்ப்பண காரியங்களைச் செய்ய மாட்டோம்' என்று கூறி விட்டனர். அப்போது ஸ்ரீதர ஐயாவாள், "மறுபடியும் வீட்டை சுத்தம் செய்து தங்களுக்கு தனியாக உணவு தயாரித்து பரிமாறுகிறேன்" என்றார். ஆனால் அதை ஏற்க அந்தணர்கள் தயாராக இல்லை.

    அவர்கள், "நீ கங்கைக்கு சென்று குளித்துவிட்டு இந்த பாவத்தை போக்கிவிட்டு வா பின் நான் உங்கள் இல்லத்தில் உணவு அருந்துகிறோம்" எனக்கு கூறி எல்லா அந்தணர்களும் சாப்பிடாமல் திரும்பிச் சென்றனர். ஐயாவாள் ஒரு தர்ப்பையை எடுத்து முறைப்படி ஆவாகனம் செய்து முன்னோர்களுக்கு வேட்டி தட்சிணை பழம் முதலில் வைத்து படைத்தார்.

    அன்று மாலை மகாலிங்கேஸ்வரரை தரிசனம் செய்ய கோவிலுக்குச் சென்றார். மாலையில் கோவிலை திறந்த அர்ச்சகர் திகைத்து நின்றார். கோவிலின் உட்புறம் ஸ்ரீதர ஐயா வாள், தன்னுடைய வீட்டில் முன்னோர்களுக்கு படைத்த புதிய வேட்டி, பழம், தட்சிணை முதலானவை மகாலிங்கேஸ்வரர் சன்னிதியில் இருந்தன.

    இருப்பினும் தன்னுடைய முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய முடியாததை எண்ணி வருந்திய ஸ்ரீதர ஐயாவாள், மற்ற அந்தணர்கள் கூறியபடி கங்கையில் நீராடுவதற்காக காசிக்கு புறப்பட ஆயத்தமானார். அவர் வீட்டை விட்டு வெளிய வந்த சில அடி தூரத்தில், அவருக்கு எதிரில் ஒரு அழகிய பெண் வந்தாள். அவள் ஸ்ரீதர ஐயாவாளிடம், `நான் உனது கிணற்றில் இருக்கும் பொழுது, நீ ஏன் என்னை தேடி காசிக்கு செல்கிறாய் என்று கூறியபடியே திடீரென்று மறைந்து போனாள்.

    இந்த நிகழ்வைப் பற்றி ஸ்ரீதர ஐயாவாள், அந்தப் பகுதியில் இருந்தவர்களிடமும், அந்தணர்களிடமும் கூறினார். ஆனால் யாரும் அவரை நம்பவில்லை. அப்போது அவரது வீட்டிற்குள் இருந்த நீர் பெருக்கெடுத்து வெளியே வந்து தெருக்களில் ஓடியது. அப்போது அனைவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது. ஸ்ரீதர ஐயாவாள் வீட்டின் கிணற்றில் இருந்து நீர் பொங்கி எழுந்து பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். ஸ்ரீதர ஐயாவாளுக்கு சிவபெருமானின் அருள் இருப்பதை நினைத்து அனைவரும் அவரிடம் மன்னிப்பு கேட்டனர். பின்னர் அவரது முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்து வைத்தனர்.

     ஸ்ரீதர ஐயாவாள் இல்லத்து கிணற்றில் இருந்து கங்கை பிரவாகம் எடுத்து பொங்கியது. ஒரு கார்த்திகை அமாவாசை திதி தினம் ஆகும். இந்த நிகழ்ச்சி இன்று கூட, அதாவது வருடம் தோறும் கார்த்திகை அமாவாசை தினத்தில், ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த மடத்தில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை பொங்கி வருவதைக் காண முடியும்.

    இவரது வாழ்க்கை சரித்திரத்தில் இருந்து தீண்டத்தகாதவர்கள் என்று உலகத்தில் ஒருவரும் இல்லை என்றும், பசித்திருப்பவருக்கு அன்னம் இடுவதை விட பெரிய தர்மம் உலகத்தில் எதுவும் இல்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

    அமைவிடம்

    கும்பகோணத்திலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ தொலைவில் திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் மடம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து பேருந்து, ஆட்டோ வசதி உண்டு.

    • இத்தீர்த்தவாரியில் பங்கேற்பது மகாமக ஸ்நானமாகும்.
    • இத்தகைய கிரக அமைப்புகள் நாளில் ரிஷப லக்னத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

    மகாமக ஸ்நானம் செய்வதில் நான்கு நிலைகள் உண்டு.

    முதலாம் வகை:

    மகாமக தீர்த்தவாரி நடைபெறும் நேரத்தில் பங்கேற்பது முதல் வகையாகும்.

    சூரியன் கும்ப ராசியில் இருக்கும் போது அமையும் மாதம் மாசி மாதம்.

    குரு சிம்ம ராசியில் இருக்க வேண்டும்.

    அதற்கு நேர் ஏழாம் வீடான அதாவது சம சப்தம ஸ்தனமான கும்ப ராசியில் சூரியன் இருக்க வேண்டும்.

    சந்திரனும் மக நட்சத்திரமும் கூட வேண்டும்.

    அது பவுர்ணமி நாளாக இருக்க வேண்டும். அதுவே மகாமக நாளாகும்.

    இத்தகைய கிரக அமைப்புகள் நாளில் ரிஷப லக்னத்தில் (சுமார் 12 மணி அளவில்) மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

    இத்தீர்த்தவாரியில் பங்கேற்பது மகாமக ஸ்நானமாகும்.

    இரண்டாம் வகை:

    மக நட்சத்திரத்துடன் கூடிய மகாமக நாளில் காலை, இரவு என்ற வேறுபாடின்றித் தீர்த்தமாடுதல் இரண்டாம் வகையாகும்.

    மூன்றாம் வகை:

    மகாமக நாள்அமைந்த மாசி மாதத்தில் உள்ள எல்லா நாட்களிலும் மகா மக தீர்த்தத்தில் நீராடுதல் மூன்றாம் வகை.

    இந்த நாட்களில் நீராடும்போது மகாமக ஸ்நான தான விதிகளை நன்றாகப் பின்பற்ற முடியும்.

    நான்காம் வகை:

    குருவுக்கு 'ஆண்டளப்பான்' என்று ஒரு பெயர் உண்டு.

    ஒரு ராசியில் ஒருவருடம் இருப்பார்.

    அதனை ஒட்டி அமைவது குரு வருடம்.

    நவக்கிரக குரு சிம்ம ராசியில் பிரவேசம் செய்து கன்னி ராசிக்கு செல்லும்வரை அமைந்த காலப்பகுதி மகாமக வருடம் ஆகும்.

    மகாமக ஸ்நான தான விதிமுறைகளை நமக்குச் சவுகரியமான நாளில் குடந்தைக்குச் சென்று

    விதிமுறைகளைப் பின்பற்றி புண்ணிய நீராடலாம்.

    எல்லா நாட்களும் புண்ணிய நாட்களே ஆகும்.

    அவரவர் தம் பிறந்த நட்சத்திரம் முதலான நாட்களில் மகாமகம் குளத்தில் நீராடுவது விசேஷப் பலன்களைத் தரக்கூடியதாகும்.

    • புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவார்கள்.
    • அன்று முதல் நவகன்னியர் மகாமக குளத்தில் குளிப்பதாக ஐதீகம்.

    கும்பகோணம் காசி விசுவநாதர் கோவிலில் தெற்கு நோக்கிக் கோவில் கொண்ட நிலையில் நவகன்னியகள் உள்ளனர்.

    இவர்களை வழிபடுவதும் அர்ச்சிப்பதும் மகாமக யாத்திரையில் மிக முக்கியமாக செய்ய வேண்டிய காரியமாகும்.

    ஒன்பது நதிகளும், ஒன்பது கன்னியராகக் காசி விசுவநாதர் கோவிலில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

    மகாமக வருஷம் குருவின் சிம்மராசிப் பிரவேசத்தில் தொடங்குகிறது.

    அன்று முதல் நவகன்னியர் மகாமக குளத்தில் குளிப்பதாக ஐதீகம்.

    எனவே அவ்வாண்டில் நவகன்னியருக்குத் தினந்தோறும் தைலக் காப்பு செய்வார்கள்.

    இந்தத் தைலக் காப்புக்கு எண்ணெய் கொடுப்பது புண்ணியம் தரும் செயலாகும்.

    வார நாட்களில் செவ்வாய்க் கிழமைகளில் நவகன்னியரை வழிபடுவது விசேஷமாகப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

    மகாமகம் தீர்த்தத்தில் குளிப்பவர் அனைவரும் நவகன்னியர்களை போற்றி வணங்குதல் வேண்டும்.

    தம் பொருளாதார நிலைக்கேற்ப எண்ணையும், மஞ்சளும், சந்தனமும், குங்குமமும், மணம் பொருந்திய மலர்களும் கொண்டு இவர்களைப் பூஜை செய்ய வேண்டும்.

    பால் சாதம் நிவேதிக்க வேண்டும். தட்சிணையுடன் கூடிய தாம்பூலம் தருதல் வேண்டும்.

    வீட்டுக்குச் சென்ற பின்னால் ஒன்பது கன்னியரை நினைத்து ஒன்பது சுமங்கலிகளுக்கு உங்கள் சக்திக்கு ஏற்பத் தாம்பூலம் தந்து வணங்க வேண்டும்.

    நான்கு செவ்வாய்க் கிழமைகளில் தொடர்ந்து நவகன்னியரை வழிபட்டால்,

    * புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவார்கள்.

    * பருவம் எய்தாதவர்கள் பருவம் எய்தி நல்ல கணவனைப் பெற்று நீடுழி வாழ்வார்கள்.

    * கணவனோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் கணவனோடு மனம் ஒத்து வாழ்வார்கள்.

    * பெண்கள் வியாதிகளிலிருந்து நீங்குவார்கள்.

    என்ற பயன்களைச் சொல்கிறது கும்பகோண மகாத்மியம்.

    அருந்ததி, அனசுயை, சாயை, தமயந்தி, சசி, ருக்குமணி ஆகியோர் நவகன்னியரை வழிபட்டுப் பேறு பெற்றவர்கள் என்கிறது திருக்குடந்தைப் புராணம்.

    கணவனை இழந்த பெண்கள் நவகன்னியரைப் போற்றிப் பரவினால் அடுத்த ஜென்மத்தில் செல்வ வளமும்,

    நல்ல கணவனும் வாய்க்கப் பெற்று நிலைத்த இன்பத்தைப் பெறுவார்கள்.

    இப்படி பல பல பலன்கள் தரும் நவகன்னியருக்கு மகாமக ஆண்டில் இயன்ற நாட்களில் தைலாபிஷேகம் செய்வது ஒரு புண்ணிய செயலாகும்.

    • புஷ்கர கங்கையோ, பிரம்மனைவிட்டு பிரிய விரும்பவில்லை.
    • முப்பத்து முக்கோடி தேவர்களும் குறிப்பிட்ட நதிகளில் தோன்றுவதாக ஐதீகம்.

    தன்னை நோக்கி தவம் செய்த நவக்கிரக குருவுக்கு அருள் செய்ய நினைத்த பிரம்மன்,

    தன் கமண்டலத்திலிருந்து வந்த புஷ்கர கங்கையைப் பார்த்து, "நீ குருவுடன் சென்றுவிடு" என்று கட்டளையிட்டார்.

    புஷ்கர கங்கையோ, பிரம்மனைவிட்டு பிரிய விரும்பவில்லை.

    அதோடு குருவுடன் செல்ல கங்கைக்கு விருப்பமும் இல்லை.

    இதையடுத்து பிரம்மன், கங்கை, குரு ஆகிய மூவருக்கும் இடையில் ஒரு உடன்பாடு உறுதியானது.

    குரு ஒரு ராசியில் ஒரு வருடம் இருப்பார்.

    ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு நதியில் புஷ்கர கங்கை தோன்றி

    குருவுக்கு காட்சி தர வேண்டும் என்ற உடன்படிக்கை ஏற்பட்டது.

    அதற்கு புஷ்கர கங்கை ஒப்புக்கொண்டது.

    இந்த ஏற்பாட்டின்படி,

    குரு மேஷ ராசியில் இருக்கும் சித்திரை மாதத்தில் கங்கையிலும்,

    குரு ரிஷப ராசியில் இருக்கும் வைகாசி மாதத்தில் நர்மதையிலும்,

    குரு மிதுன ராசியில் இருக்கும் ஆனி மாதத்தில் சரஸ்வதியிலும்,

    குரு கடக ராசியில் இருக்கும் ஆடி மாதத்தில் யமுனையிலும்,

    குரு சிம்ம ராசியில் இருக்கும் ஆவணி மாதத்தில் கோதாவரியிலும்,

    குரு கன்னி ராசியில் இருக்கும் புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணாவிலும்,

    குரு துலாம் ராசியில் இருக்கும் ஐப்பசி மாதத்தில் காவிரியிலும்,

    குரு விருச்சிக ராசியில் இருக்கும் கார்த்திகை மாதத்தில் தாமிரபரணியிலும்,

    குரு தனுசு ராசியில் இருக்கும் மார்கழி மாதத்தில் சிந்துவிலும்,

    குரு மகர ராசியில் இருக்கும் தை மாதத்தில் துங்கபத்ராவிலும்,

    குரு கும்ப ராசியில் இருக்கும் மாசி மாதத்தில் பிரம்மபுத்ராவிலும்,

    குரு மீன ராசியில் இருக்கும் பங்குனி மாதத்தில் பிரநீதாவிலும்,

    புனித நீராடலுக்கு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நாட்களில் சிவன், விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் குறிப்பிட்ட நதிகளில் தோன்றுவதாக ஐதீகம்.

    • குல தெய்வத்துக்குரிய பூஜைகளை வழக்கப்படி செய்ய வேண்டும்.
    • இது தீர்த்த யாத்திரை என்பதால் தம்பதியர் சகிதமாக செல்வது நல்லது.

    தீர்த்தமாடுவது என்றதும் தண்ணீரில் மூழ்கி எழுந்து வருவதுதானே என்று நினைத்து விடக்கூடாது.

    புனித நீராடலுக்கு என்றே சில விதிகள் உள்ளன. இது பற்றி ஆதிகும்பேஸ்வரர் ஆலய குருக்கள் கூறியதாவது:-

    கும்பகோணத்துக்கு புறப்படும் முன்பு ஒவ்வொருவரும் தம் வீட்டில் வழிபாடு செய்தல் வேண்டும்.

    குல தெய்வத்துக்குரிய பூஜைகளை வழக்கப்படி செய்ய வேண்டும்.

    இதையடுத்து வீடு முழுவதும் புனித நீரை தெளிக்க வேண்டும்.

    முடிந்தவர்கள் ஏழைகளுக்கு அன்னதானம், உடைதானம் செய்ய வேண்டும்.

    அதன்பிறகே கும்பகோணத்துக்கு புறப்பட வேண்டும்.

    இது தீர்த்த யாத்திரை என்பதால் தம்பதியர் சகிதமாக செல்வது நல்லது.

    வீட்டில் இருந்து கும்பகோணம் எல்லை அடையும் வரை மகாமகம் தொடர்பான இறை சிந்தனையில் இருக்க வேண்டும்.

    வேறு பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செலுத்தக் கூடாது.

    பக்திபாடல்களை கேட்டபடி பயணிப்பது சிறந்தது.

    கும்பகோணத்துக்குள் நுழையும் முன்பு அஷ்டாதச தலங்கள் எனப்படும் 18 கோவில்களில் வழிபாடு செய்ய வேண்டும்.

    அந்த 18 ஆலயங்கள் உள்ள ஊர்கள் வருமாறு:-

    1. திருவிடை மருதூர்,

    2. திரிபுவனம்,

    3. அம்மாசத்திரம்,

    4. திருநாகேஸ்வரம்,

    5. அய்யாவடி,

    6. சிவபுரம்,

    7. சாக்கோட்டை,

    8. மருதாநல்லூர்,

    9. பட்டீஸ்வரம்,

    10. திரிசக்திபுரம்,

    11. தாராசுரம்,

    12. திருவலஞ்சுழி,

    13. சுவாமிமலை,

    14. திருஇன்னம்பூர்,

    15. திருப்புறம் பயம்,

    16. கொட்டையூர்,

    17. கருப்பூர்,

    18. பாணாதுறை.

    • நதிகளை அவர்கள் வெறும் தண்ணீர் ஓடும் இடமாக பார்க்கவில்லை.
    • தெய்வத்துக்கு இணையாக பார்த்தனர்.

    நதிகளுக்கும், நீர்நிலைகளுக்கும் நம் முன்னோர்கள் மிகுந்த மரியாதை கொடுத்தனர்.

    நதிகளை அவர்கள் வெறும் தண்ணீர் ஓடும் இடமாக பார்க்கவில்லை.

    தெய்வத்துக்கு இணையாக பார்த்தனர்.

    நதிகளை மையமாக வைத்தே எல்லா விழாக்களையும் அமைத்தனர்.

    ''நீரின்றி அமையாது உலகு'' என்பதற்கு ஏற்ப செயல்பட்டனர்.

    அதன் ஒரு பகுதியாகத்தான் புண்ணிய நதிகளில் நீராடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

    அமாவாசை, பவுர்ணமி தினங்களில் நதிகள், நீர்நிலைகளில் நீராடுவது மிகுந்த பலன் தரும் என்று நம்பினார்கள்.

    அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகம் போன்ற விழாக்களில் தீர்த்தமாடினால் மூன்று பிறவிகளின் பாவம் அகன்று விடும் என்பது ஐதீகம்.

    அதனால்தான் குடந்தையில் நீராட குலம் தழைக்கும் என்றனர்.

    சிறப்பு வாய்ந்த குடந்தை மகாமகம் குளத்தில் நீராடினால் அந்த பலனை பெற முடியும்.

    12 தல ஈசன்கள் மகாமகம் குளத்துக்கு வந்து தீர்த்தமாடுவார்கள்.

    மகாமகம் தினத்தன்று

    ஆதிகும்பேஸ்வரர்,

    காசி விசுவநாதர்,

    அபி முகேஸ்வரர்,

    கவுதமேஸ்வரர்,

    ஏகாம் பரேஸ்வரர்,

    நாகேஸ்வரர்,

    சோமேஸ்வரர்,

    ஆதிகம்பட்ட விசுவநாதர்,

    கோடீஸ்வரர்,

    காளஹஸ்தீஸ்வரர்,

    பாணபுரீஸ்வரர்,

    அமிர்தகவசநாதர்

    ஆகிய 12 தல ஈசன்கள் மகாமகம் குளத்துக்கு வந்து தீர்த்தமாடுவார்கள்.

    நவக்கிரக தலங்கள்

    கும்ப கோணத்தில் உள்ள சிவாலயங்களில் 8 ஆலயங்கள் நவக்கிரகங்களுக்குரிய தலங்களாக உள்ளன.

    அந்த தலங்கள் விவரம் வருமாறு:

    சூரியன் - நாகேஸ்வரர் கோவில்

    சந்திரன் - ஆதிகும்பேஸ்வரர் கோவில்

    செவ்வாய் - பாணபுரீஸ்வரர் கோவில்

    புதன் - கவுதமேஸ்வரர் ஆலயம்

    வியாழன் - சோமேஸ்வரர் ஆலயம்

    சுக்கிரன் - காசி, விசுவநாதர் ஆலயம்

    சனி - அபிமுகேஸ்வரர் கோவில்

    ராகு, கேது - காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்

    • துலாம் - அபிமுகேஸ்வரர் கோவில்
    • கும்பம் - ஆதிகும்பேஸ்வரர் ஆலயம்

    கும்பகோணத்தில் உள்ள ஆலயங்களில் 12 ஆலயங்கள் ராசி கோவில்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.

    அந்த கோவில்கள் விபரம் வருமாறு

    மேஷம் - வரதராஜபெருமாள் ஆலயம்

    ரிஷபம் - சாரங்கபாணி கோவில்

    மிதுனம் - சக்கரபாணி ஆலயம்

    கடகம் - காளஹஸ்தீஸ்வரர் கோவில்

    சிம்மம் - பாணபுரீஸ்வரர் ஆலயம்

    கன்னி - காசி விசுவநாதர் கோவில்

    துலாம் - அபிமுகேஸ்வரர் கோவில்

    விருச்சிகம் - கவுதமேஸ்வரர் ஆலயம்

    தனுசு - நாகேஸ்வரர் கோவில்

    மகரம் - சோமேஸ்வரர் ஆலயம்

    கும்பம் - ஆதிகும்பேஸ்வரர் ஆலயம்

    மீனம் - பிரம்மன் வேத நாராயண பெருமாள் கோவில்

    • கும்பகோணம் கோவிந்தபுரத்தில் ஸ்ரீவிட்டல் ருக்மணி ஸம்ஸ்தான் கோவில் உள்ளது.
    • ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் கோவிந்தபுரத்தில் பலகோடி மதிப்பில் கோவில் அமைத்துள்ளார்.

    தலச்சிறப்பு

    கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் ஸ்ரீவிட்டல் ருக்மணி ஸம்ஸ்தான் கோவில் உள்ளது. சேங்காலிபுரம் நாராயண தீஷிதர் புதல்வர் ராமதீஷீதர். இவர் இன்றும் பிரவசனம் செய்து கொண்டு வருபவர். இவரது புத்திரர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ்.

    நாமசங்கீர்த்தனமே நாதன்தாள் பற்றுவதற்கான நல்ல வழி என்பதை உலகெங்கும் பறைசாற்றிய ஞானானந்த சுவாமிகள் சீடரான குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகளையும், ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பிரேமி மகராஜ் ஆகியோரை தமது குருவாக ஏற்று நாடெங்கும் நாமசங்கீர்த்தனத்தை நடத்தி வருபவர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் ஆவார்.

    வடமாநிலத்தில் பண்டரிபுரத்தில் உள்ள ஸ்ரீபாண்டுரங்கனின் கோவிலை போன்று அனைத்து பக்தர்களும் கோவில் கர்ப்பகிரகத்தினுள் சென்று பகவானை தரிசிக்க வேண்டும் என்று ஜாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடு இல்லாமல் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் கோவிந்தபுரத்தில் பலகோடி மதிப்பில் கோவில் அமைத்துள்ளார்.

    பண்டரிபுரத்தில் இருந்து வந்தருளிய பாண்டுரங்கனும், ருக்மணியும் புதிய கோவிலில் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபம், அர்த்தமண்டபம், நாமசங்கீர்த்தனை கூடம், அன்னதானக்கூடம், மகாபக்த விஜயத்தில் இடம்பெற்றுள்ள பக்த சிரோண்மனிகளின் கதை சிற்பங்கள், பொன் போன்ற ஒளிரும் மேல் விதானம் மடப்பள்ளி போன்றவைகள் தெய்வீகமாக அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு பசுக்களுக்கான பிரத்தியேக கோசாலை அமைந்துள்ளது. ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் நாடெங்கும் நாமசங்கீர்த்தனம் செய்தே பக்தர்களின் கைங்கர்யத்துடன் கோவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

    தல வரலாறு

    கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில், ஸ்ரீவிட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 15, 2011 ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஜெயகிருஷ்ண தீட்சிதர் என்ற விட்டல்தாஸ் மகராஜ், பல கோடி ரூபாய் மதிப்பில், மகாராஷ்டிர மாநிலம், பண்டரிபுரத்தில் உள்ள போலவே, இக்கோவிலை அமைத்துள்ளார்.

    பண்டரிபுரத்தில் இருந்து வந்தருளிய பாண்டுரங்கனும், ருக்மணியும், புதிய கோவிலில் அருள்பாலிகின்றனர். மகாமண்டபம், அர்த்தமண்டபம், நாமசங்கீர்த்தன கூடம், அன்னதானக்கூடம், மகாபக்த விஜயத்தில் இடம்பெற்றுள்ள பக்த சிரோண்மணிகளின் சுதை சிற்பங்கள், பொன் போன்று ஒளிரும் மேல் விதானம், மடப்பள்ளி போன்றவை, பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன.இங்கு பசுக்களுக்கான பிரத்யேக கோசாலை அமைந்துள்ளது.

    விட்டல்தாஸ் மகராஜ், நாடெங்கும் நாமசங்கீர்த்தனம் செய்து, பக்தர்களின் கைங்கர்யத்துடன் கோவில் திருப்பணி செய்துள்ளார். விமான கும்பாபிஷேகத்தை, விட்டல்தாஸ் மகராஜ் நடத்தி வைத்தார். தொடர்ந்து சுவாமி, தாயார் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விசேஷ தீபாராதனை காட்டப்பட்டது. மண்டலாபிஷேக துவக்கத்தையொட்டி, மகாஅபிஷேகம் நடைபெற்றது.

    காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகள், அண்ணா கிருஷ்ண பிரேமி சுவாமிகள் ஆகியோரின் அருளாசியுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சேங்காலிபுரம் ராமதீட்ஷிதர் முன்னிலை வகிக்கிறார். கோவில் திருப்பணி வேலைகளில் மஹாராஷ்டிரா ஸ்தபதி பாலாஜி, சென்னை ஸ்தபதி செல்வநாதன், பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர். எங்கும் பார்க்கமுடியாத வகையில் பைபர் கிளாஸில் சீலிங் மோல்டு டெக்கரேஷன் செய்துள்ளனர். 100 கோடி விட்டல் நாமங்களை கீழே உள்ள அறையில் வைத்து அதன் மேலே மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது சிறப்பு ஆகும்.

    ஆயிரம் பசுக்கள்:

    ஸ்ரீவிட்டல் ருக்மணிதேவி சம்ஸ்தானத்தில் 2,000 பசுக்கள் கொண்ட மிகப்பெரிய கோசாலை உள்ளது. ஏகாதசி, கோகுலாஷ்டமி, ஆஷாட ஏகாதசி போன்ற தினங்களில் விசேஷ வழிபாடுகள் இங்கு நடைபெறுகின்றன.

    தினசரி இந்த சந்நிதியில் புஐயதேவரின் 24 அஷ்டபதியும் பாடப்படுவது வேறு எங்கும் காண முடியாத சிறப்பாகும். ஸ்ரீபாண்டுரங்கன். ருக்மணித் தாயார் திருத்தலத்தில் வருஷம் 365 நாள்களும் பகவானின் நாமாவளி ஒலித்துக் கொண்டிருக்கும்.

    அமைவிடம்:

    திருவிடைமருதூர் அருகிலுள்ள கோவிந்தபுரத்தில் ஸ்ரீவிட்டல் ருக்மணி சம்ஸ்தான வளாகத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபாண்டுரங்கன், ருக்மணித்தாயார் திருத்தலம்

    நடைதிறப்பு

    காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

    • கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது.
    • தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் உள்ள பெரிய நந்திகளில் இதுவும் ஒன்றாகும்.

    செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை"

    கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை".

    கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது.

    கோபுர வாயிலுக்கு எதிரில் கோமுகி தீர்த்தம் உள்ளது.

    கோபுர வாயிலின் இருபுறமும் பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன.

    கோபுர வாயிலைக் கடந்தால் நீண்ட நடைபாதை அதன் முடிவில் உள்ள மண்டபத்தில் பெரிய நந்தி உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் உள்ள பெரிய நந்திகளில் இதுவும் ஒன்றாகும்.

    ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத்தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,

    பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

    எனவே செல்வம் பெற விரும்புபவர்கள் இத்தலம் சென்று வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    • காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.
    • இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.

    பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய 'ஸ்ரீவாஞ்சியம்'

    மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத்தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்".

    காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.

    ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத்தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம்.

    ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும்.

    இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.

    இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

    ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும்.

    இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும்.

    ஸ்ரீயாகிய திருவை (மகாலட்சுமி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது.

    இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மகாலட்சுமியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.

    • மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக்கோயிலின் வெளிச்சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர்.
    • அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.

    மன நோய் அகற்றும் திருவிடைமருதூர்

    சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் " மகாலிங்கமானார்".

    இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர்.

    நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத்தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர்.

    மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக்கோயிலின் வெளிச்சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர்.

    கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் இந்த கோவில் உள்ளது.

    புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன்குடி அருமருந்தம்மை

    கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை.

    இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி.

    அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.

    நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறைருண விமோச்சனர்

    ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது.

    முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன.

    முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ருண விமோச்சன லிங்கேஸ்வரர் ".

    கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.

    ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.

    இச் சந்நதியின் முன் நின்று " கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

    இத்தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள்.

    ×