என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிகும்பேஸ்வரர் கோவில்"

    • வட இந்திய குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்ற தோற்றத்தில் இருக்கிறது.
    • கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும் என்று கோவில் முன்னாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் கூறினார்.

    தஞ்சை மண்ணின் மைந்தன் ராஜராஜசோழனின் கலை நயமிக்க ஆட்சியில் மிளிர்ந்த கோவில் நகரம், கும்பகோணம்.

    அங்கு அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மை தலமான ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள பெட்டகத்தில், வரலாற்றுக்கு சாட்சியாக பழங்கால கல் நாதஸ்வரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது வடிவமைக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் இருக்கும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

    இந்த கோவிலில் இருந்து கல் நாதஸ்வரங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் இன்னொன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. சாதாரண மர நாதஸ்வரம் 600 கிராம் எடைகொண்டது. இது அதைவிட 6 மடங்கு (3.600 கிலோ கிராம்) எடை கொண்டதாகவும், சுமார் 2 அடி நீளத்துடனும் காட்சியளிக்கிறது. வட இந்திய குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. ஆதி இசைக்கருவியான நாதஸ்வரம், ஆச்சா என்ற மரத்தில் உருவாக்கப்படுகிறது. வைரம் பாய்ந்த பாறை போன்ற மரத்தையே இதற்காக பயன்படுத்துவார்கள். கல்நாதஸ்வரம் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆதிகாலத்தில் இக்கருவியை கருங்கல்லில் செதுக்கிவாசித்திருக்கலாம் என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாக இருக்கிறது.

    கல் நாதஸ்வரத்தின் உலவுப்பகுதியானது 3 உறுதியான தனித்தனி பாகங்களாக செய்யப்பட்டு வெண்கலப்பூண் மூலம் இணைக்கப்பட்டு வெண்கல அனசுடன் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரங்களில் 7 ஸ்வரங்கள் இருக்கும். கல் நாதஸ்வரத்தில் 6 ஸ்வரங்களே உண்டு. அதனால் சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதிமத்திம ராகங்களை மட்டுமே வாசிக்க முடியும். இதனை 3 முதல் 3½ கட்டை சுதியில் வாசிக்க இயலும்.

    சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி போன்ற சுத்த மத்திம ராகங்களை இந்த நாதஸ்வரத்தால் வாசிக்க முடியாது. முழுமையாகவும் அடர்த்தியாகவும் மூச்சை உள்ளே செலுத்தினால் மட்டுமே இதில் நல்இசை கிடைக்கும். கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும் என்று கோவில் முன்னாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் கூறினார்.

    மறைந்த நாதஸ்வர மேதை மன்னார்குடி பக்கிரியா பிள்ளை 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் இந்த கல் நாதஸ்வரத்தை வாசித்துள்ளார். அவருக்கு பின் கோவில் நாதஸ்வர வித்வானான குஞ்சுதபாதம் பிள்ளை 30 ஆண்டுகளுக்கு மேல் வாசித்து வந்துள்ளார். அவருக்கு பின் சுவாமிநாதன் கல் நாதஸ்வரத்தை வாசித்தார்.

    இவர், சிக்கல் சிங்கார வேலன் திருத்தல தேவஸ்தான இசைப் பள்ளியில் பணியாற்றி வந்த புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் கலைமாமணி கோட்டூர் என்.ராஜரத்தினம் பிள்ளையின் சீடர். நாதஸ்வரம் மங்கள வாத்தியமாகும். இதனை நாகூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் வசித்து, நாகபாம்புகளை தெய்வமாக பூஜித்த நாகர் என்ற இனத்தவரால் முற்காலத்தில் வாசிக்கப்பட்டு வந்திருக்கிறது.

    நாகத்தினை போன்று நீண்டிருந்ததன் காரணமாக "நாகசுரம்" என்னும் பெயர் ஏற்பட்டது. இதில் இருந்து இனிமையான நாதம் கிடைப்பதால் பிற்காலத்தில் நாதஸ்வரம் என அழைக்கப்பட்டிருக்கிறது. 17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "பாத சங்கிரகம்" என்ற இசை நூல், துளைக்கருவிகளின் வரிசையில் இதனை "நாகசுரம்" என்றே குறிப்பிடுகிறது.

    நாதஸ்வரத்தின் மேல் பகுதியில் சீவாளி பொருத்தப்படும். ஜீவ வளி என்பதுதான் சீவாளியாகி இருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது. 4 வகை வேதங்களில், சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர்.

    ச,ரி,க,ம,ப,த,நி ஆகிய 7 ஸ்வரங்களும் ஆகாயத்தில் இருந்து ஒலிக்க கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று மகாபாரதம் கூறுகிறது. ஒவ்வொரு ராகத்திற்குள்ளும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன. ஒலியை கூர்ந்து நுட்பமாக கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள். அவர்கள் கேட்ட ஒலியே கட்டமைக்கப்பட்டு இசையானது. முறைப்படுத்தப்பட்ட இசையை, நாதஸ்வரம் போன்ற பல்வேறு கருவிகள் நமக்கு வழங்குகின்றன.

    மேலும் இதுகுறித்து ஆதிகும்பேஸ்வரர் கோவில் முன்னாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் கூறுகையில், இது 6 துளைகளை கொண்ட திமிரி வகை நாதஸ்வரம். ஆதி கும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி இந்த கல் நாதஸ்வரம் கோவிலில் வாசிக்கப்பட உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆயுத பூஜை நன்நாளில் இந்த கல் நாதஸ்வரத்தை நான் சுமார் 1 மணி நேரம் வாசித்தேன். அதைத்தொடர்ந்து தற்போது வருகிற 28-ந் தேதி எனது மகன் தமிழரசனுடன் சேர்ந்து, கோவிலின் தற்போதைய நாதஸ்வர வித்வானுடன் இந்த கல் நாதஸ்வரத்தை வாசிக்க உள்ளேன் என்றார்.

    • டிசம்பர் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் முடிவு செய்து உள்ளனர்.
    • 2 கொலுசுகளை டெல்லியை சேர்ந்த பெண் தொழிலதிபர் வழங்கினார்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவில் மகாமகத்துடன் தொடர்புடைய கோவில்களில் முதன்மையான கோவிலாக உள்ளது. இந்த கோவிலில் வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் முடிவு செய்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தற்போது கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலில் மங்களம் என்ற யானை உள்ளது. இந்த யானைக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் 1½ கிலோ எடையில் வெள்ளியில் செய்யப்பட்ட 2 கொலுசுகளை டெல்லியை சேர்ந்த பெண் தொழிலதிபர் வழங்கினார்.

    இதனைத்தொடர்ந்து கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, யானை மங்களத்தின் 2 முன்னங்கால்களில் புதிய வெள்ளிக்கொலுசுகளை அணிவித்தனர்.

    அப்போது கோவில் செயல் அலுவலர் முருகன், மற்றும் யானைப்பாகன் அசோக் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர். கால்களில் வெள்ளி கொலுசுகளை அணிந்தபடி நின்ற கோவில் யானை மங்களத்தை திரளான பக்தர்கள் பார்த்து ரசித்து சென்றனர்.

    • கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் மகாமக விழா உலக அளவில் பிரசித்திப்பெற்றதாகும்.

    இந்த கோவிலில் மந்திர பீடேஸ்வரி என்கிற மங்களாம்பிகை அம்பாளுடன் ஆதி கும்பேஸ்வர சாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழமையான இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கோவில் விமான பாலாலய விழா வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு 24-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யா யாகவாசனம், கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து 25-ந் தேதி கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    26-ந் தேதி 3-ம் கால யாகசாலை பூஜைகளும், 27-ந் தேதி நான்காம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விமான பாலாலய விழா குழுவினர் மற்றும் மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • 2009-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி குடமுழுக்கு நடந்தது.
    • இன்று முதல் கால யாக சாலை பூஜை நடக்கிறது.

    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகை அம்பாளுடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்தக்கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி குடமுழுக்கு நடந்தது.

    இந்தநிலையில் மீண்டும் கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக அரசு மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் ரூ.8 கோடியில் திருப்பணி தொடங்க முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பாலாலய சிறப்பு யாகம் நடந்தது.

    இன்று(சனிக்கிழமை) முதல் கால யாக சாலை பூஜைகளும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. வருகிற 27-ந்தேதி 4-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சு.சாந்தா, செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார்.
    • பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மாசிமக தீர்த்தவாரி தலங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் யானை ஒன்று உள்ளது. இந்த யானைக்கு மங்களம் என பெயர் சூட்டி உள்ளனர். இந்த யானை கடந்த 1982-ம் ஆண்டு காஞ்சி மகா பெரியவரால் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த யானைக்கு 58 வயதாகிறது.

    வயது அதிகமாவதை போல யானையின் சுட்டித்தனமும் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் யானை மங்களத்துக்கு சளி தொந்தரவு உள்ளது. இதனால் யானை தமிழக அரசின் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு செல்வதில்லை. சிறப்பு புத்துணர்வு முகாமில் வழங்கப்படும் உணவு, மூலிகை மருந்துகள், உடற்பயிற்சிகள் கோவில் வளாகத்திலேயே யானைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    வெயில் சுட்டெரித்து வருவதால், பாகன் அசோக்குமார் தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார். அதன்படி, வழக்கம்போல் யானை மங்களம் குளியல் தொட்டிக்கு அழைத்து வரப்பட்டது. தொட்டியில் இறங்கிய யானை மங்களம் சுமார் ஒரு மணிநேரம், துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சியும், இதனை வேடிக்கை பார்த்த பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது.

    கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    மேலும், சிலர் இதனை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இன்று காலை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #IGPonManickavel
    கும்பகோணம்:

    தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் பழமை வாய்ந்த சிலைகள் மாயமானதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மாயமான சிலைகளை கண்டு பிடிக்கவும், சிலைகளின் தன்மைகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து சிலைகள் கடத்தல் பிரிவு ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தஞ்சை பெரிய கோவிலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை, அவரது மனைவி லோகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டன. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சிலைகள் குஜராத் மாநில அருட்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது.

    கோப்புப்படம்

    தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். சிலைகள் கடத்தலில் தீனதயாளன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷா பங்களா வீட்டில் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த சிலைகளை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து கடந்த மாதம் தஞ்சை பெரிய கோவில் மற்றும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தொல்லியல் துறையினர் உதவியுடன் சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். இந்த கோவில்களில் இருந்த சிலைகளின் உலோக தன்மை, உயரம், எடை ஆகியவை ஆவணங்கள் படி சரியாக உள்ளதா? என்று நவீன கருவிகள் மூலம் சோதித்தனர். போலி சிலைகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் பொன். மாணிக்கவேல் இந்த மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார். இதனால் அவர் இதுவரை சிலைகள் கடத்தல் வழக்கில் மேற்கொண்ட விசாரணை என்னவாகும்? என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொன். மாணிக்கவேலுக்கு , பதவியை நீடித்து ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கையும் விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை 7.30 மணியளவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் வந்தார்.

    பின்னர் தன்னுடன் வந்த போலீசாரை வெளியே நிற்குமாறு கூறிவிட்டு அவர் மட்டும் தனியாக கோவிலுக்கு சென்றார். பின்னர் கோவிலில் இருந்த ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை சிலை, மற்றும் நாயன்மார்கள் சிலை, விநாயகர்சிலை, பஞ்சமூர்த்தி சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோவில் ஊழியர்களிடமும் சிலைகள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.

    சுமார் ஒருமணிநேரம் கோவில்களில் உள்ள சிலைகளை அவர் ஆய்வு செய்து விட்டு வெளியே வந்தார்.

    கும்பகோணம் கோவிலில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #IGPonManickavel
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் மங்களநாயகிக்கு, ‘மந்திரபீட நலத்தாள்’ என்ற திருநாமம் உண்டு.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் மங்களநாயகிக்கு, ‘மந்திரபீட நலத்தாள்’ என்ற திருநாமம் உண்டு.

    சம்பந்தர் இந்த அன்னையை ‘வளர்மங்கை’ என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார்.

    அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக ‘மந்திரபீடேஸ்வரி’ என்ற திருநாமமும் பெறுகிறாள். அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானதாக கருதப்படுகிறது.

    மங்களாம்பிகைக்கு செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    பல்வேறு சிறப்பு பெற்ற கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி நேற்றுமுன் தினம் இரவு அம்மன் தவக்கோலம், சிவபெருமான் காட்சியளித்தல் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையடுத்து நேற்று மாலை மாற்றும் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 12 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு திருமண மறைசடங்கு நிகழ்ச்சியும், சாமி வீதி உலாவும் நடைபெற்றது.

    வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) வரை ஊஞ்சல் உற்சவமும், 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகவத் படித்துறையில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 30-ந்தேதி (புதன்கிழமை) மகா சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
    கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 24-ந் தேதி மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
    கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 24-ந் தேதி மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

    25-ந்தேதி காலை 10.15 மணிக்கு மாலை மாற்றுதலும், 11 மணிக்கு ஊஞ்சலடி உற்சவமும், 12 மணி முதல் 1 மணிக்குள் மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 29-ந்தேதி காலை 10.45 மணிக்கு மேல் 12 மணிக்குள் பகவத் படித்துறையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து சாமி, அம்மன் சங்கரமடத்தில் எழுந்தருளுகின்றனர். 30-ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    ×