search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IG Pon Manickavel"

    சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை தமிழக அரசு எதிர்த்தால் தனது கருத்தை அறிய வேண்டும் என வக்கீல் யானை ராஜேந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். #PonManickavel
    சென்னை:

    தமிழக கோவில்களில், புராதான சிலைகள் பலவற்றை கொள்ளை அடித்தது தொடர்பாக பதிவான வழக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அவர் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் உயர் அதிகாரிகள், முக்கிய நபர்களை எல்லாம் கைது செய்ய தொடங்கினார்.

    இதையடுத்து, சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து, கடந்த நவம்பர் 30-ந்தேதி பிற்பகலில் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

    நவம்பர் 30-ந்தேதி ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஓய்வுப்பெற்றார். இதையடுத்து அன்று முதல் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.


    இதையடுத்து வக்கீல் யானை ராஜேந்திரன், சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டின் சிறப்பு அமர்வு, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேலை நியமித்துள்ளது.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்தால், என் தரப்பு கருத்தை கேட்காமல், ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை எதுவும் விதிக்க கூடாது’ என்று கூறியுள்ளார். #PonManickavel
    தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் போடப்படுவதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். #IGPonManickavel
    சென்னை:

    சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பங்கேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    ஓய்வு பெறுவதையொட்டி ரெயில்வே போலீசில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கும், குற்றவாளிகளை பிடித்துக் கொடுத்த பொதுமக்களுக்கும் பொன். மாணிக்கவேல் வெகுமதிகளை வழங்கினார். அப்போது அவர் போலீசார் மத்தியில் பேசியதாவது:-

    போலீஸ் துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் பணிச்சுமையுடனேயே பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 600 வழக்குகள் பதிவாகின்றன. இதனால் அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கு போலீசாருக்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. கொலை வழக்குகளை விசாரித்து முடிப்பதற்கு 3 மாதங்களுக்கு மேல் ஆகும்.

    ஒரு வழக்கை பதிவு செய்யும் போது போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி சட்டநுணுக்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீதிமன்றங்களில் வழக்கை திறம்பட நடத்த முடியும். நீதிமன்றத்தை எப்போதும் மதித்து செயல்பட வேண்டும்


    ஒரு வழக்கை பதிவு செய்யும் அதிகாரி எக்காரணம் கொண்டும் குற்றவாளிகளை தப்ப விட்டு விடக் கூடாது. கோர்ட்டில் குற்றத்தை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் 2 அல்லது 3 மாதங்களில் குண்டர் சட்டத்தை உடைத்துக் கொண்டு குற்றவாளிகள் வெளியில் வந்து விடுகிறார்கள்.

    தமிழக அரசுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சில அதிகாரிகளால்தான் பிரச்சனை. முழுமன நிறைவோடு பணி ஓய்வு பெறுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #PonManickavel
    சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது அனுமதியின்றி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PonManickavel #MadrasHC
    சென்னை:

    தமிழக கோவில்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் துப்பு துலக்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவித்தது. பொன்.மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையில் திருப்தி இல்லை என்றும் அரசு தெரிவித்தது. இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேலுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.


    இந்நிலையில், ஐஜி பொன் மாணிக்கவேல் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஓய்வு பெறும் நிலையில் உள்ள தன் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஐஜி பொன் மாணிக்கவேல் முறையிட்டார்.

    அவரது மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட அந்த பிரிவில் உள்ள அதிகாரிகள் மீது அனுமதியின்றி எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது. நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PonManickavel
    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இன்று காலை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #IGPonManickavel
    கும்பகோணம்:

    தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் பழமை வாய்ந்த சிலைகள் மாயமானதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மாயமான சிலைகளை கண்டு பிடிக்கவும், சிலைகளின் தன்மைகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து சிலைகள் கடத்தல் பிரிவு ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தஞ்சை பெரிய கோவிலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை, அவரது மனைவி லோகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டன. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சிலைகள் குஜராத் மாநில அருட்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது.

    கோப்புப்படம்

    தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். சிலைகள் கடத்தலில் தீனதயாளன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷா பங்களா வீட்டில் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த சிலைகளை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து கடந்த மாதம் தஞ்சை பெரிய கோவில் மற்றும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தொல்லியல் துறையினர் உதவியுடன் சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். இந்த கோவில்களில் இருந்த சிலைகளின் உலோக தன்மை, உயரம், எடை ஆகியவை ஆவணங்கள் படி சரியாக உள்ளதா? என்று நவீன கருவிகள் மூலம் சோதித்தனர். போலி சிலைகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் பொன். மாணிக்கவேல் இந்த மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார். இதனால் அவர் இதுவரை சிலைகள் கடத்தல் வழக்கில் மேற்கொண்ட விசாரணை என்னவாகும்? என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொன். மாணிக்கவேலுக்கு , பதவியை நீடித்து ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கையும் விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை 7.30 மணியளவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் வந்தார்.

    பின்னர் தன்னுடன் வந்த போலீசாரை வெளியே நிற்குமாறு கூறிவிட்டு அவர் மட்டும் தனியாக கோவிலுக்கு சென்றார். பின்னர் கோவிலில் இருந்த ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை சிலை, மற்றும் நாயன்மார்கள் சிலை, விநாயகர்சிலை, பஞ்சமூர்த்தி சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோவில் ஊழியர்களிடமும் சிலைகள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.

    சுமார் ஒருமணிநேரம் கோவில்களில் உள்ள சிலைகளை அவர் ஆய்வு செய்து விட்டு வெளியே வந்தார்.

    கும்பகோணம் கோவிலில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #IGPonManickavel
    தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி அலுவலகத்தில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். #RanvirShah
    சென்னை:

    சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அவரது தோழியும் பெண் தொழில் அதிபருமான கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது ஏராளமான சாமி சிலைகள், பழமையான தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஏற்கனவே கைதான தொழில் அதிபர் தீனதயாளனிடம் இருந்து ரன்வீர்ஷா சிலைகளை வாங்கி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கோர்ட்டு அனுமதி பெற்று அதற்கான ஆதாரத்தை காட்டி ரன்வீர்ஷா வீட்டிலும், கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை அருகே ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான 2 பண்ணை வீடுகள் உள்ளன. அங்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ரன்வீர்ஷா அங்கு சிலைகளை பதுக்கி இருந்தது தெரிய வந்தது. அந்த சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட தகவலை கும்பகோணம் கோர்ட்டிலும் போலீசார் தெரிவித்தார்கள். மொத்தம் 244 சிலைகள் மற்றும் கல் தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் தொழில் அதிபர்கள் ரன்வீர்ஷாவும், கிரண்ராவும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அவர்களுக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கடந்த சில வாரங்களாகவே ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வந்தனர். ஆனால் கடந்த 2 வாரமாக எந்தவித சோதனையிலும் ஈடுபடாமல் இருந்தனர். எனவே ரன்வீர்ஷா வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்ததாக கருதப்பட்டது.

    இந்த நிலையில் இன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பி.எஸ். அப்பேரல்ஸ் எனப்படும் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின் போது சாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நந்தி, கருடன் உள்ளிட்ட 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஏற்கனவே தங்களிடம் உள்ள சிலைகளுக்கு ஆவணங்கள் இருப்பதாக ரன்வீர்ஷா தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு போலீசார் கூறுகையில், “மிகவும் தொன்மையான மற்றும் பழமையான சிலைகளை வாங்கி வைத்திருப்பது குற்றம். அதை விற்பனை செய்வதும் குற்றம் என்று தெரிவித்து இருந்தனர்.

    எனவே பழமையான சிலைகள் யார்-யாரிடம் வாங்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய இன்று சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. அதில் அது தொடர்பான ஆவணங்கள் சிக்குமா? என்ற கோணத்திலும் சோதனை நடந்தது.

    இந்த சோதனையின் போது சாமி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


    இன்று நடந்த சோதனை தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரம் கூறியதாவது:-

    சிலை கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக ரன்வீர்ஷா, கிரண்ராவ் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக ரன்வீர்ஷா தரப்பு வக்கீல் தங்கராசு கூறுகையில், “தேர் பவனி வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட தேர் பவனி வாகனங்கள் தொன்மையானது அல்ல என்றார். #RanvirShah

    நாறும்பூநாதர் கோவில் சிலை கொள்ளை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ளவர்களை பிடித்து விசாரணையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் கூறினார். #PonManickavel
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பழவூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட நாறும்பூநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சுப்பிரமணியர், சிவகாமி அம்பாள், வெயிலுகந்தம்மன், கிருஷ்ணன், அஷ்டதேவர், நடராஜர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், வள்ளி, தெய்வானை, விநாயகர் மற்றும் நாறும்பூநாதருடன் இணைந்த பிரியமுடையாள் ஆகிய ஐம்பொன்னால் ஆன 13 சிலைகள் இருந்தது. இதனை கடந்த 2005-ம் ஆண்டு மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வழக்கு சிலைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கொள்ளை போன 13 சிலைகளில் தெய்வானை, பெரும்பொதி விநாயகர், விநாயகர், நாறும் பூநாதருடன் இணைந்த பிரியமுடையாள் ஆகிய 4 சிலைகளை தவிர மற்ற 9 சிலைகளையும் கடந்த 2008-ம் ஆண்டு சிலைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி, சிலைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றமாக செயல்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

    இதன் பின்னர் நீதிமன்றத்தில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு பழவூர் கோவில் நிர்வாகத்திடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சிலை கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகளில் தீனதயாளன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட நடராஜர் சிலையில் கை துண்டிக்கப்பட்டு பின்பு இணைக்கப்பட்டுள்ள விவகாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு தெரியவந்தது. இதன் பேரில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேற்று தொல்லியல் துறை தொழில்நுட்ப பிரிவினருடன் பழவூர் நாறும்பூநாதர் கோவிலுக்கு வந்தார். அங்கு துண்டிக்கப்பட்ட நடராஜர் சிலையையும், துண்டிக்கப்பட்ட கையின் உலோக தன்மையின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

    பின்னர் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இக்கோவிலில் 4 சிலைகள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது விசாரணையை நிறுத்தி வைத்து மீண்டும் விசாரணை நடத்தி வருகிறோம். இதன்படி நடராஜர் சிலையின் வலது கை துண்டிக்கபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக தொல்லியல் துறையின் தொழில்நுட்ப பிரிவினர் இன்று (நேற்று) ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில், விஞ்ஞான ரீதி அறிக்கையில் உலோகத்தன்மையின் வேறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. நடராஜர் சிலையில் கைகள் துண்டிக்கப்பட்டு சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளது. கைகள் இணைக்கப்பட்ட தொழில் நுட்பம் இந்தியாவில் கிடையாது. எனவே சர்வதேச தொழில்நுட்பத்தில் கைகள் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை தயாரித்து விசாரணையை ஓரிரு மாதங்களில் முடிப்போம்.

    இந்த வழக்கு தொடர்பாக அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடித்து விசாரணையை முடிவுக்கு கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonManickavel

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் கோவிலில் சாமி சிலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இன்று விசாரணை நடத்தினார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூரில் நாறும்பூநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது. இது தொடர்பாக பழவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பின்னர் இது தொடர்பான வழக்குகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கொள்ளைபோன சாமி சிலைகளை மீட்டார். இதில் நாறும்பூநாதர் கோவிலுக்கு சொந்தமான 9 சிலைகளும் மீட்கப்பட்டது.

    ஆனால் இந்த ஐம்பொன் சிலைகளில் தங்கத்தின் அளவு குறைவாக உள்ளது. இதனால் அதன் உண்மை தன்மைகள் பற்றி அறிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இன்று பழவூருக்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் கோவில் நிர்வாகிகளிடமும், ஊர் முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.

    சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான திருவையாறு அரண்மனையில் போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று ஆய்வு நடத்தினார்.
    திருவையாறு:

    தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிலை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியை சேர்ந்த தொழில் அதிபர் ரன்வீர்ஷா, வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் பழங்காலத்தை சேர்ந்த வெண்கல சிலைகள், கலை நயமிக்க கல் தூண்கள் உள்பட 89 கலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.

    தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனைகள் தஞ்சை மாவட்டம் திருவையாறிலும், திருவாரூரிலும் உள்ளன. இதில் திருவையாறில் உள்ள அரண்மனை காவிரி ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ளது. இது மராட்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதை 10 ஆண்டுகளுக்கு முன்பு ரன்வீர்ஷா விலைக்கு வாங்கினார். இங்கு ஆண்டுதோறும் 3 நாட்கள் “ப்ரக்ருதி பவுண்டேசன்” சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    சென்னையில் உள்ள ரன்வீர்ஷாவின் வீட்டில் பழங்காலத்தை சேர்ந்த கலை பொருட்கள் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து திருவையாறில் உள்ள அவருக்கு சொந்தமான அரண்மனையில் சோதனை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் திட்டமிட்டிருந்தனர். அதன்படி நேற்று திருவையாறில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனைக்கு நேற்று காலை 11 மணி அளவில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் வந்தனர்.

    அப்போது அரண்மனைக்குள் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். முன்னதாக அதிகாரிகள் அரண்மனையின் பெண் காவலாளியிடம், சிலைகளை அரண்மனைக்கு கொண்டு வந்தார்களா? இங்கிருந்து எதையாவது எடுத்து சென்றார்களா? என விசாரணை நடத்தினர். அதற்கு பதில் அளித்த காவலாளி, சிலைகள் எதுவும் கொண்டு வரப்படவில்லை என பதில் அளித்தார்.

    அரை மணிநேரம் ஆய்வு பணி நீடித்தது. அதன்பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் திருவையாறு அரண்மனைக்கு திடீரென வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொழில் அதிபரான ரன்வீர்ஷா பழங்கால அரண்மனைகளை வாங்கி பராமரிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவருக்கு சொந்தமான அரண்மனைகள் திருவாரூர், ஊட்டி ஆகிய இடங்களிலும் உள்ளன.

    கோர்ட்டில் முறையான அனுமதி பெற்று திருவையாறு அரண்மனையில் மீண்டும் ஆய்வு நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    தஞ்சை பெரிய கோவிலில் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். #IdolWing #PonManickavel
    தஞ்சை:

    தமிழகம் முழுவதும் பழமையான கோவில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தல் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட பல்வேறு தகவல்கள், ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சர்வதேச கடத்தல் மன்னனான ஜெர்மனியைச் சேர்ந்த சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டதில், இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏராளமான சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சமீபத்தில் சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 89 சிலைகள் மற்றும் தூண்கள் மீட்கப்பட்டன.

    இதற்கிடையே 50 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலில் இருந்து திருடப்பட்ட ராஜராஜ சோழன் சிலை, அவரது பட்டத்து அரசியான உலகமாதேவி சிலை ஆகியவை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது.



    கோயில் வளாகத்தில் உள்ள சிலை பாதுகாப்பு மண்டபத்தில் நடத்தப்பட்ட தொடர் ஆய்வில் மேலும் சில சிலைகள் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் இன்று ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கோவிலுக்குள் இருந்த பக்தர்களை வெளியேற்றி கதவுகளை மூடிவிட்டு ஆய்வு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  #IdolWing #PonManickavel 
    சிலைகள் மாயமான வழக்கு தொடர்பாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு நடத்தினார்.
    ஸ்ரீரங்கம்:

    ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜ நரசிம்மன் பிப்ரவரி மாதம் ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், “ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், கோவிலில் நூற்றுக்கணக்கான சிலைகள் மாயமாகி இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறி இருந்தார்.

    வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், ஸ்ரீரங்கம் கோவிலில் ஆய்வு நடத்தி, 6 வார காலத்துக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த மாதம் 10-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

    இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மற்றும் போலீசார் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நேற்று வந்து ஆய்வு செய்தனர். அப்போது புகார் கொடுத்த ரெங்கராஜ நரசிம்மன் உடன் சென்றார். அவர் கோவிலில் எங்கெல்லாம் வைக்கப்பட்டு இருந்த சிலைகள் மாயமாகி உள்ளது என்பது பற்றி விளக்கி கூறினார். இதற்கு கோவில் இணைஆணையர் ஜெயராமன் விளக்கம் அளித்தார். இந்த காட்சிகள் அனைத்தையும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். சுமார் 3 மணி நேரம் இந்த ஆய்வு நடந்தது.

    அதன்பிறகு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நிருபர்களிடம் கூறுகையில், “ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆய்வுப்பணிகளை தொடங்கி இருக்கிறோம். 25 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. 100 சதவீத ஆய்வையும் முடித்த பிறகு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வோம்” என்றார்.

    இதையடுத்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறும்போது, “பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கவோ அல்லது புகார் கொடுக்க விரும்பினாலோ திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு முகாம் அலுவலகத்துக்கு வந்து கொடுக்கலாம். இது தொடர்பாக தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்படும்” என்றார். 
    ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரித்து வந்த சிலை கடத்தல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதன் மூலம் திருடர்களை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது என்று விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார். #IdolSmuggling
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பல ஆண்டுகளாக கோவில் சிலைகளும், விலை உயர்ந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை விசாரிப்பதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் சாமி சிலைகளையும், பொருட்களையும் மீட்டுள்ளனர். உதாரணமாக வெளிநாடுகளில் இருந்தும், குஜராத்திலிருந்தும் ராஜராஜசோழன் சிலையை மீட்டு கொண்டுவந்தார்கள்.

    இதை பாராட்டி தமிழக அமைச்சரே நேரடியாக சென்று வரவேற்றார். பல சாமி சிலைகள் திருடு போயிருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை செய்வதற்காக பக்தர்களிடம் இருந்து 100 கிலோ தங்கத்திற்கு மேலாக காணிக்கையாக பெறப்பட்டு, முழுமையாக திருடப்படிருப்பதை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


    இதைத் தொடர்ந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் அவர்களை கைதும் செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நேர்மையான அதிகாரிகளிடம் இருந்து, சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைக்க கொள்கை முடிவு எடுத்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது பெரும் கண்டனத்திற்குறியது.

    ஒரு துறையில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்றி, அதில் நடந்திருக்கும் குற்றங்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நிலையில், நேர்மையான அதிகாரிகளுக்கு தமிழக அரசு துணைநின்று ஊக்கப்படுத்தாமல், திருடர்களுக்கு சாதகமாக அரசு முடிவு எடுப்பது, திருடர்களை காப்பாற்ற முயற்சிக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சாமி சிலைகளையும், கோவில் சொத்துக்களையும் கொள்ளையடிப்பவர்களை சட்டத்தின் படி இரும்புக்கரம் கொண்டு தடுக்கவேண்டும்.

    மேலும் கோவில் சொத்துக்களை திருடுபவர்களையும், அவர்களை காப்பாற்ற நினைப்பவர்களையும் “அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்”.

    இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றாமல், தொடர்ந்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைகள் செயல்படுவதன் மூலம் தான் உண்மையான குற்றவாளிகள் கண்டரியப்படுவார்கள். பல ஆண்டுகளாக கடத்தப்பட்ட சிலைகள், சிற்பங்கள் மீட்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடத்திலே ஏற்பட்டுள்ளது. ஆகவே நேர்மையான அதிகாரிகள் பணியில் தொடரவேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #IdolSmuggling #Vijayakanth
    பழனி கோவில் அலுவலகத்தில் நடந்த தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ரகசியமாக விசாரணை நடத்தி சென்றார்.
    பழனி:

    பழனி கோவில் சிலை மோசடி வழக்கை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என ஐகோர்ட்டு நீதிபதியிடமே பொன்மாணிக்கவேல் தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. கருணாகரன் இடமாற்றம் செய்யப்பட்டார். இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிலை மோசடி வழக்கில் முக்கிய புள்ளிகளை தப்பவைப்பதற்காக அதிகாரிகள் மாற்றப்பட்டதாக சந்தேகம் எழுந்தது.

    இதனிடையே நேற்று முன்தினம் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டு முக்கிய ஆவணங்கள் எரிந்ததால் பக்தர்களின் சந்தேகம் மேலும் அதிகரித்தது.

    நேற்று ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பழனி மலைக்கோவிலுக்கு வந்தார். பலத்த சூறாவளி காற்று வீசியதால் ரோப் கார் இயக்கப்படவில்லை. இதனால் வின்ச் மூலம் மலைக்கோவில் வந்தார். மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திருஆவினன்குடி கோவிலிலும் வழிபாடு செய்தார்.

    தனது மகளுக்கு ஆகஸ்டு 31-ந் தேதி திருமணம் நடைபெறுவதை முன்னிட்டு வழிபாடு செய்ய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும் கோவில் அலுவலகத்தில் தீ விபத்து நடந்த விபரம் குறித்து அதிகாரிகளிடம் ரகசிய விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

    இந்த தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எதுவும் எரிந்ததா? எனவும் விசாரித்து சென்றுள்ளார். ஆனால் நேற்று இரவே மதுரைக்கு சென்று விட்டார். இதனால் தீ விபத்து தொடர்பாக நடந்த விசாரணை குறித்த முழுமையான விபரம் தெரியவில்லை. #tamilnews
    ×