என் மலர்
நீங்கள் தேடியது "youth dead"
- பொங்கல் பண்டிகைக்காக யுகேஷ், தனது மனைவியுடன் பொலவபாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
- இரவில் கழிப்பறைக்கு சென்ற யுகேஷ் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என தெரிகிறது.
ஈரோடு:
ஈரோடு, சடையம் பாளையம், பகவதியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் யுகேஷ் (28). இவருக்கும் கோபியை அடுத்துள்ள பொலவபாளையம் பகுதியை சேர்ந்த கலைவாணி (23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு முன்னரே 2 முறை ஏற்பட்ட வாகன விபத்தில், யுகேஷுக்கு காலிலும், முதுகு தண்டுவடத்திலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக யுகேஷ், தனது மனைவியுடன் பொலவபாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
இரவில் கழிப்பறைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கழிப்பறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் யுகேஷ் கிடந்துள்ளார்.
இதையடுத்து, நம்பியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே யுகேஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற வேன் மீது மோதினார்.
- தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போரூர்:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது22). மினி வேன் டிரைவர். இவர் நேற்று இரவு வேனில் மரசாமான்கள் ஏற்றிக் கொண்டு புழல் பகுதியில் இருந்து பைபாஸ் சாலை வழியாக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மதுரவாயல் அருகே வந்தபோது வேனை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற வேன் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மினி வேன் டிரைவர் சந்துருவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
- செல்வமணி இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாக தெரிகிறது.
- செல்வமணி கட்டிடத்தின் 3-வது தளத்துக்கு படிக்கட்டு வழியாக நடந்து சென்றார்.
பொன்னேரி:
சென்னை, கானத்தூர் அடுத்த உத்தரண்டி ஜிகு கடற்கரை சாலையில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வமணி (வயது 23) என்பவர் அங்கேயே தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் செல்வமணி இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் அவர் கட்டிடத்தின் 3-வது தளத்துக்கு படிக்கட்டு வழியாக நடந்து சென்றார். அப்போது செல்வமணி செல்போனில் பேசியபடி சென்றதாக தெரிகிறது. திடீரென நிலைதடுமாறிய அவர் 3-வது மாடியில் இருந்து லிப்ட் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட காலி இடத்தில் தவறி விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த செல்வமணி உயிருக்கு போராடினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி செல்வமணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- வேட்டைக்கு சென்ற வாலிபர், வேட்டை நாய்களுடன் மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தோட்டத்து உரிமையாளரான அசோக்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 35). கூலி தொழிலாளியான இவர் வேட்டை நாய்களும் வளர்த்து வந்தார். அதனை வைத்து காட்டு பகுதிக்கு சென்று வேட்டையாடுவதிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு மாணிக்கம் தன்னுடைய 5 வேட்டை நாய்களை அழைத்து கொண்டு அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யன கவுண்டன்பட்டி கிராமத்தில் இருக்கும் காட்டு பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றுள்ளார்.
அந்த இடத்தில் அய்யன கவுண்டன்பட்டியை சேர்ந்தவர்களின் தோட்டங்கள் இருக்கிறது. அசோக்குமார் என்பவர் தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் சம்பங்கி பூக்கள் பயிரிட்டிருந்தார். அதனுள் வன விலங்குகள் எதுவும் புகுந்துவிடக்கூடாது என்பதற்காக சம்பங்கி பூக்கள் பயிரிடப்பட்டிருந்த இடத்தை சுற்றி மட்டும் மின்வேலி அமைத்திருக்கிறார்.
சாதாரணமாக பார்த்தால் உடனடியாக தெரியாத வகையில் மின்வேலி மிகவும் மெல்லிய கம்பியை பயன்படுத்தி சிறிதாக அமைக்கப்பட்டிருந்தது. இதனை அறியாத மாணிக்கம், அசோக்குமாரின் தோட்டத்து வழியாக நள்ளிரவில் சென்றிருக்கிறார்.
அப்போது அவரது கால் மின்வேலியில் பட்டுவிட்டது. இதனால் மாணிக்கம் மீதும், அவர் அழைத்து சென்ற வேட்டை நாய்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் மாணிக்கம் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். அவரது வேட்டை நாய்களும் மின்சாரம் பாய்ந்து பலியாகின.
மாணிக்கம் மற்றும் அவரது வேட்டை நாய்கள் இறந்து கிடப்பதை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து தோட்டத்து உரிமையாளரான அசோக்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காஞ்சிபுரம் மாநகர பகுதிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியிலிருந்தும், ஓரிக்கை பாலாறு பகுதிகளில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் ஒரு வார காலமாக கலந்து வருவதால் இந்தப் பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாண்டுகணீஸ்வரர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகன் சதிஷ் குமார். (21) மனநலம் பாதிக்கப்பட்டவர்.
சதீஷ் குமாருக்கு நேற்று அதிகாலையில் இருந்து வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதால் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் அவர் இறந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த வள்ளி -தமிழரசன் தம்பதியின் 10 மாத குழந்தை இமித்திரா மற்றும் 4 வயது சிறுவன் விஷ்ணுவர்தன் ஆகியோர்களுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தினர். கலந்து கொண்ட 45 நபர்களில் ஓபி குளம் பள்ளத்தெருவை சேர்ந்த விஜி (வயது 35), மோனிஸ்ரீ (9), பிரியதர்ஷினி (14) ஆகிய 3 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கண்டறியப்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரியாராஜ் கூறியதாவது:- மாண்டுகணீஸ்வரர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமாருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உடல் பலவீனமடைந்து குறைந்த ரத்த அளவு உருவாகி அதிர்ச்சி ஏற்பட்டது. இது மிகவும் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான நீரிழப்பு காரணமாக ஏற்படும் சிக்கல்களில் ஒன்றாகும். குறைந்த ரத்த அளவு ரத்த அழுத்தம் குறைவதற்கும் உடலில் ஆக்சிஜனின் அளவு குறைவதற்கும் வழிவகுக்கும். இதனால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இதுமட்டுமின்றி ரைஸ்மில்லில் பணிபுரியும் திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்த இருளர் இன பெண் இரையரசி (வயது 20) உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது.
மேலும், அதே பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களையும் கண்காணித்து வருகிறோம். குடிநீர் பிரச்சினையால் இந்த வயிற்றுப் போக்கு ஏற்பட்டதுபோல் தெரியவில்லை. குடிநீர் பிரச்சினையால் வயிற்று போக்கு ஏற்பட்டிருந்தால் அந்தப் பகுதியில் வசிக்கும் பலருக்கும் பாதிப்பு இருக்கும். இவர்கள் சாப்பிட்ட உணவில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே நாங்கள் மருத்துவ முகாம் நடத்தினோம். தண்ணீரில் கூடுதலாக ஒரு சதவீதம் குளோரின் கலந்து விநியோகிக்கும்படி வலியுறுத்தியுள்ளோம். தண்ணீரையும் ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாநகர பகுதிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியிலிருந்தும், ஓரிக்கை பாலாறு பகுதிகளில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் ஒரு வார காலமாக கலந்து வருவதால் இந்தப் பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
- தனது தாய் கண்முன்னே அருண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி நீரில் மூழ்கிய அருண் உடலை மீட்டனர்.
சத்திரபட்டி:
மதுரை மாட்டுத்தாவணியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் அருண்(வயது 28). இவர் மாட்டுத்தாவணியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருடைய உறவினரான வீரம்மாள் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் விஸ்வநாதன் நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதற்காக தன் தாயுடன் ஒட்டன்சத்திரம் வந்த அருண் துக்க நிகழ்வில் கலந்து விட்டு உறவினர்களுடன் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி தலையூற்று அருவியில் அஸ்தியை கரைக்கச் சென்றார். அஸ்தியை கரைத்து விட்டு அருவியில் குளிக்கச் சென்ற போது அருணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கி பலியானார்.
தனது தாய் கண்முன்னே அருண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி நீரில் மூழ்கிய அருண் உடலை மீட்டனர். அதன்பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குந்தன் குமார் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
- ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் குந்தன்குமார் (வயது27). இவர் சென்னை ராமாபுரம் சாந்தி நகரில் நண்பர்களுடன் தங்கி அதே பகுதியில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை குந்தன் குமார் செல்போனில் தனது பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி சுருண்டு கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக குந்தன் குமாரை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குந்தன் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். குந்தன் குமார் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டனர்.
- உயிரிழந்த அசோக்குமார் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடையம்:
சென்னையை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 28). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
தீபாவளி விடுமுறையையொட்டி இவர் காரில் தனது நண்பர்களான சென்னையை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகன் அசோக்குமார், ஆசிக் ஆகியோருடன் காரில் நெல்லைக்கு வந்தார்.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் சுற்றுலா சென்ற அவர்கள் 3 பேரும் இன்று அதிகாலை அங்கிருந்து கடையம் வழியாக குற்றாலத்திற்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டனர். காரை அசோக்குமார் ஓட்டினார். அதிகாலை 4 மணி அளவில் கடையத்தை அடுத்த முதலியார்பட்டி அருகே கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்து புளியமரத்தில் மோதியது.
இந்த பயங்கர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அந்த இடிபாட்டில் காரை ஓட்டி வந்த அசோக்குமார் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த அவரது நண்பர்களான மற்றொரு அசோக்குமார், ஆசிக் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டனர். மேலும் உயிரிழந்த அசோக்குமார் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு அசோக்குமார் மற்றும் ஆசிக் ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பலத்த காயம் அடைந்த வாலிபரை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
- மருத்துவமனையில் வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகேயுள்ள மேலகண்ட கிராமத்தை சேர்ந்தவர் நசீர் (வயது 37). சமையல் தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி இரவு சமையல் வேலைக்காக சென்றார். பின்னர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வரும் வழியில் விழுதமங்கலம் கூட்டுரோடு பகுதியில் இண்டர்நெட் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அதில் எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை. சாலையில் திரும்பும் வழியில் பள்ளம் இருந்ததால் நசீர் அதை கவனிக்கவில்லை. இதனால் மோட்டார் சைக்கிள் பள்ளத்துக்குள் விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் இன்று மதுராந்தகம்-பவுஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு வந்து அவர்களை சமரசம் செய்தனர்.
வாலிபர் இறந்தது தொடர்பாக சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விருந்தில் உணவருந்திய சிறிது நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
- பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் உடல்நலம் பெற்று வீட்டிற்கு திரும்பினர்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள திருவாசல் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது26). இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு 5-ம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி விக்னேஷ் வீட்டில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், கருவேப்பிலை சாதம் ஆகியவற்றுடன் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.
இந்த விருந்தில் உணவருந்திய சிறிது நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் உடல்நலம் பெற்று வீட்டிற்கு திரும்பினர்.
திருவாரூர் அருகே உள்ள வேளுக்குடியைச் சேர்ந்த திருவாரூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். அலுவலக ஒப்பந்த தொழிலாளி செல்வமுருகன் (வயது 24), சந்துரு (10), இளரா (62), செல்வகணபதி (25), பாலாஜி (22), கர்ப்பிணி மாரியம்மாள், யஷ்வந்த் (4), ராஜமாணிக்கம் (60) ஆகிய 8 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் திருவாரூர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பலனின்றி செல்வமுருகன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். அவரது உடல் அங்கேயே பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்துரு உள்பட 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே சுகாதார துறை அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெற்ற திருவாசலில் முகாமிட்டு உணவு சாப்பிட்டவர்களுக்கு வேறு ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என்று மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பரிமாறப்பாட்ட உணவின் தரம் குறித்து சோதனை செய்தனர்.
இது குறித்த புகாரின் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் , நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட 5 வகை சாதங்கள் கர்ப்பிணி பெண்ணான மாரியம்மாள் தாய் வீட்டிலிருந்து தயார் செய்து எடுத்து வரப்பட்டது.
விக்னேஷ் வீட்டின் தரப்பில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணி புலிவலத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலிலும், திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட வாழ வாய்க்காலில் உள்ள ஒரு ஓட்டலிலும் வாங்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.