search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth dead"

    • ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் சதீஷ் என்ற கபாலி (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் புறாக்களை வளர்த்து வருகிறார்.

    இவரது வீட்டையொட்டி பொன்னுசாமி வீதி உள்ளது. இதன் அருகே மின் டிரான்ஸ்பார்மரும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ் வளர்க்கும் புறா ஒன்று பொன்னுசாமி வீதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் உட்கார்ந்து இருந்தது. எங்கே மின்சாரம் தாக்கி இறந்து விடுமோ என்ற பயத்தில் புறாவை காப்பாற்ற சதீஷ் முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் கைபட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சதீஷை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னா் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தையடுத்து கடந்த 30-ம் தேதி பொன்னுசாமி வீதியில் பாதாள சாக்கடை நீர் சுத்திகரிப்பு நீரூற்று நிலையத்தால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், மின் டிரான்ஸ்பார்மர் அடிக்கடி வெடித்து வருதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி இதனை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று இரவு தாயும், மகளும் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் 2பேரின் உடல்களை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள டோரிப்பள்ளியை அடுத்த உங்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ட ராமப்பா (வயது 50). இவர் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மீனாட்சி(47) என்ற மனைவியும், கிரி (23) என்ற மகனும், காவ்யா (18) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிரி ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சப்படி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி உயிரிழந்தார்.

    கிரிக்கும் வேறு நபருக்கும் தகராறு இருந்து வந்தது. எனவே, அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் மீனாட்சியும், தங்கை காவ்யாவும் சூளகிரி போலீசில் விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை காண்பிக்குமாறு புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    மேலும், கிரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதியாக நம்பிய அவர்கள் நேற்றும் சூளகிரி போலீசாரை சந்தித்து விசாரித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.

    தனது மகன் சாவு குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்காததால், மீனாட்சியும், அவரது மகள் காவ்யாவும் மிகுந்த சோகத்தில் காணப்பட்டனர். மனமுடைந்து போன மீனாட்சியும், காவ்யாவும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு தாயும், மகளும் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத் தீப்போல் பரவியது.

    இதுகுறித்து தகவலறிந்த பேரிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தாய் மற்றும் மகளின் உடல்களை மீட்க முயன்றனர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த உறவினர்கள் மீனாட்சி, காவ்யா ஆகியோரின் உடல்களை எடுக்க விடாமல் தடுத்தனர். மேலும், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த், தாசில்தார் சக்திவேல், கிராம அலுவலர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் உறவினர்களிடம், உங்கள் சந்தேகங்களை புகாராக எழுதி கொடுங்கள், நான் விசாரித்து போலீசார் கவன குறைவாக செயல்பட்டிருந்தால் ஒரே நாளில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    அதன்பின்னர் உறவினர்கள் 2 பேரின் உடல்களை போலீசார் எடுத்து செல்ல அனுமதித்தனர். அதன்பின்பு போலீசார் 2பேரின் உடல்களை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகன் விபத்தில் இறந்ததால் துக்கம் தாங்காமல் தாய், தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

    • காதல் திருமணம் செய்த 15 நாளில் வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • யுவன்சங்கர்ராஜா எப்படி இறந்தார்? கிணற்றுக்குள் விழுந்தது எப்படி? கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் யுவன்சங்கர் ராஜா (வயது22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த நவீனா(21) என்பவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து யுவன்சங்கர் ராஜாவும், நவீனாவும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் இணையத்தளத்தில் வெளியான வேலைவாய்ப்பு மூலம் திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு, பரேஸ்புரம் பகுதியில் உள்ள முயல் பண்ணையில் வேலைக்கு சேர்ந்தனர். கணவன்-மனைவி இருவரும் முயல் பண்ணையில் பராமரிப்பு பணி செய்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள தரைக்கிணற்றில் உள்ள தண்ணீரில் யுவன் சங்கர் ராஜா பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவாலங்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி யுவன் சங்கர்ராஜா உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    யுவன்சங்கர்ராஜா எப்படி இறந்தார்? கிணற்றுக்குள் விழுந்தது எப்படி? கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிணற்றுக்குள் யுவன்சங்கர் ராஜா விழுந்தபோது அவரை காப்பாற்ற மனைவி நவீனா முயன்றதாக தெரிகிறது. கணவன்-மனைவி இருவரும் இரவு நேரத்தில் அவ்வழியாக வந்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதல் திருமணம் செய்த 15 நாளில் வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தனது உறவினரான தமிழரசன் கறிக்கடையில் பகுதி நேரமாக கறி வெட்டும் வேலை செய்து வருகிறார்.
    • கறி வெட்டிக்கொண்டிருந்த பிரகாஷ் மீது கார் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது உறவினர் பிரகாஷ் (வயது 30). இவர் மகளிர் சுய உதவிக்குழுவில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.

    மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தனது உறவினரான தமிழரசன் கறிக்கடையில் பகுதி நேரமாக கறி வெட்டும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலையில் இருந்து கறிவெட்டி கொண்டிருந்தார். அப்போது காலை சுமார் 9.30 மணி அளவில் உடுமலையில் இருந்து ஒரு கார் வேகமாக வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அங்குள்ள தமிழரசன் கறிக்கடைக்குள் புகுந்து நின்றது.

    இதில் கறி வெட்டிக்கொண்டிருந்த பிரகாஷ் மீது கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரகாஷ் பரிதாமாக இறந்தார். மேலும் கடைக்கு கறி வாங்க வந்த 2 பேர் மற்றும் கார் டிரைவர் செல்வராஜ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர்களை தாராபுரம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனைவி ரம்யா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பலியான மரியசிபுவுக்கு ரம்யா என்ற மனைவியும் 3 வயதில் மகன் மற்றும் 6 மாத மகள் உள்ளனர்.

    தக்கலை:

    தக்கலையை அடுத்த மணக்காவிளை அருகே உள்ள வெள்ளை பாறையடிவிளை பகுதியைச் சேர்ந்தவர் மரியசிபு (வயது 32), கட்டிட தொழிலாளி.

    இவர் நேற்று இரவு தக்கலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். கொற்றியோடு பகுதியில் இரவு 10 மணிக்கு வந்த போது அவரது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிள் மட்டும் அங்கு கிடந்துள்ளது. மரியசிபுவை காணவில்லை. அவரை தேடிப்பார்த்தும் பலன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள ஆற்றில் மரியசிபு பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதனை பார்த்தவர்கள் உடலை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி ரம்யா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மரியசிபு மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் அவர் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் அவரது சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மரியசிபுவுக்கு ரம்யா என்ற மனைவியும் 3 வயதில் மகன் மற்றும் 6 மாத மகள் உள்ளனர்.

    • முக்காணி பங்க் அருகே செல்லும்போது பின்னால் வேகமாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி தேவர் தெருவை சேர்ந்தவர் முத்து ராமலிங்கம். இவருக்கு பாதாளவடிவு என்ற மனைவியும், 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

    இதில் இளைய மகன் மாதவன் (வயது 24) கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது ஊரில் நடைபெற்ற கோவில் கொடை விழாவிற்காக ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு பூக்கள் வாங்குவதற்காக பழையகாயலுக்கு அவரது நண்பர் ஏரலை சேர்ந்த சங்கரலிங்கம் என்ற கோகுல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    முக்காணி பங்க் அருகே செல்லும்போது பின்னால் வேகமாக வந்த வேன், இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். மாதவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மாதவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாதவனின் அண்ணன் இசக்கிதுரை (34) கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு முன்பு திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் உறவினர்கள், வேன் டிரைவரை கைது செய்ய கோரி நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • யானை பாகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் ஆனைமலை டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுகத்தியை சேர்ந்தவர் முரளி (வயது24).

    இவர் டாப்சிலிப் யானைகள் முகாமில் பாகனாக வேலை பார்த்து வந்தார்.

    முரளி, வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள பரணி என்ற யானையை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் யானையை முகாமுக்குள்ளேயே நடைபயிற்சி உள்ளிட்டவற்றிற்கு அழைத்து செல்வது வழக்கம். மேலும் யானைக்கு தேவையான உணவுகளையும் வழங்கி வந்தார்.

    நேற்று காலை, வழக்கம்போல முரளி பணிக்கு புறப்பட்டு கொண்டிருந்தார். திடீரென அவர் மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தும் அவர் எழுந்திருக்கவில்லை.

    இதையடுத்து உறவினர்கள் அவரை தூக்கி கொண்டு, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முரளி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். யானை பாகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமுகை வழியாக ரங்கம்பாளையம் அருகே வந்த போது எதிரே வந்த லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
    • விபத்து குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    சென்னையை சேர்ந்தவர் பெண்டால் நாயுடு(வயது 30). இவரது நண்பர் மோகன் ரெட்டி(24).

    இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

    பின்னர் அங்கு சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பெண்டால் நாயுடு ஓட்டிச் சென்றார்.

    சிறுமுகை வழியாக ரங்கம்பாளையம் அருகே வந்த போது எதிரே வந்த லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பெண்டால் நாயுடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மோகன்ரெட்டியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆழமான பகுதிக்கு சென்ற யுகேந்திரன் தண்ணீரில் மூழ்கினார்.
    • ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டை அரசு பொது மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் யுகேந்திரன் (வயது 26). இவர் நண்பர்களுடன் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூலைமேனி கிராமத்தில் உள்ள காட்டு செல்லியம்மன் கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் முடித்து விட்டு அனைவரும் அருகில் உள்ள குளத்தில் குளித்தனர்.

    அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற யுகேந்திரன் தண்ணீரில் மூழ்கினார். அவரை நண்பர்கள் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள் யுகேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யுகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    • வாலிபர் நண்பர்களுடன் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார்.
    • ஆர்.கே. பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருத்தணியை அடுத்த ஆர்.கே. பேட்டை, ஆதிபராபுரம் காலனி, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா (வயது26). கூலித் தொழிலாளி.

    இவர் நண்பர்களுடன் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது சிவா தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த எம்.சான்ட் ஏற்றி வந்த லாரி மீது வெயில் ராஜின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • தகவல் அறிந்து விரைந்து வந்த கயத்தாறு போலீசார், வெயில்ராஜ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பனிக்கர்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாகலாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாபநாசம். விவசாயி. இவரது மகன் வெயில்ராஜ்(வயது 23).

    இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, அப்பகுதியில் உள்ள கையுறை தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு லைசென்ஸ் எடுப்பதற்காக அவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    கயத்தாறு அருகே சவலாப்பேரி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த எம்.சான்ட் ஏற்றி வந்த லாரி மீது வெயில் ராஜின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த வெயில்ராஜ் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த கயத்தாறு போலீசார், வெயில்ராஜ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பலத்த காயம் அடைந்த ஸ்ரீ ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
    • விபத்து தொடர்பாக லாரி டிரைவரான கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கோயம்பேடு, சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராஜா (வயது24). இவர் நேற்று நள்ளிரவு கொளத்தூர் 200 அடி சாலை செந்தில் நகர் பஸ்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீ ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து ஸ்ரீராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×