search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Thangamani"

    நாளை மாலைக்குள் அதிமுக தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு முடிவுகள் தெரிந்துவிடும் என அமைச்சர் தங்கமணி நம்பிக்கை தெரிவித்தார். #Thangamani #ADMKAlliance
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக இடம்பெற்றுள்ள நிலையில், தேமுதிகவின் வருகைக்காக காத்திருப்பதால் கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேமுதிகவின் வருகை குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்பட்டு, தொகுதிகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.



    இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் தங்கமணி, நாளை மாலைக்குள் அதிமுக தலைமையிலான கூட்டணி முடிவுகள் தெரிந்துவிடும் என்றார்.

    “அரசியல் காரணங்களுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உண்மையான விவசாயிகளை அவமானப்படுத்தும் செயலாக போராட்டம் உள்ளது. உயர் மின்கோபுர பிரச்சினை தொடர்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளிடம் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும்’’ என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார். #Thangamani #ADMKAlliance

    நாமக்கல்லில் ரூ.9 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலவில் நாமக்கல் குளக்கரை திடலில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான கல்வெட்டை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, கலெக்டர் ஆசியா மரியம், கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் மயில்சுந்தரம் மற்றும் முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
    சாலையை தோண்டாமல் நவீன முறையில் கொளத்தூர் பகுதியில் முதன் முறையாக புதைவிட கம்பி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #TNAssembly #MKStalin #Thangamani
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் மின் கசிவு இல்லாத புதைவிட மின் கம்பிகளை அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பலமுறை இந்த சபையில் நான் வற்புறுத்தி இருக்கிறேன்.

    இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் தெரிவித்தார். என்றாலும் இதுவரை அந்த பணிகள் நடைபெறவில்லை. புதைவிட கம்பிகளை அமைப்பதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

    நான் சென்னை மேயராக இருந்தபோது பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் குழுவை அமைத்து ஆலோசனை செய்து மாநகராட்சி பணிகளை முடித்தோம்.

    அதுபோன்று ஒரு குழுவை அமைத்து ஆலோசனை செய்து கொளத்தூர் பகுதியில் புதை வடம் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க அமைச்சர் ஏற்பாடு செய்வாரா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

    சாலைகளை தோண்டி மின் கம்பி புதை வடங்களை புதைக்கும்போது பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. ஒரு இடத்தில் தோண்டும் போது தொலைபேசி கம்பி சிறிதளவு பாதிக்கப்பட்டதற்கு அந்த துறையினர் ரூ.60 லட்சம் நஷ்டஈடு கேட்டனர்.

    இது போன்ற காரணங்களால் ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது சாலையை தோண்டாமல் நவீன முறையில் கொளத்தூர் பகுதியில் முதன் முறையாக புதைவிட கம்பி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணி முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மற்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, “சென்னையில் மொத்தம் 13 ஆயிரத்து 500 கி.மீ. தூரத்துக்கு பூமிக்கு அடியில் புதைவிட கம்பி அமைக்க வேண்டி உள்ளது. இதில் 6,500 கி.மீ. தூரத்துக்கு புதைவிட கம்பிகள் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. மற்ற பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    தாம்பரம் பகுதியில் 1230 கி.மீ. தூரத்துக்கு புதைவிட கம்பி அமைக்க வேண்டி உள்ளது. இதற்காக 443 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் புதைவிட கம்பிகள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #MKStalin #Thangamani
    தமிழகத்தில் இந்த ஆண்டு தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருப்பதால், வருகிற கோடை காலத்தில் மட்டும் இன்றி எப்போதுமே மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார். #MinisterThangamani #Summer
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவியை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் இந்த ஆண்டு தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருப்பதால், வருகிற கோடை காலத்தில் மட்டும் இன்றி எப்போதுமே மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை.



    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வரை வேலை வேண்டும் என்பதற்காக கிராம சபை கூட்டங்கள் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தேர்தலுக்கு பிறகு தான் மக்களின் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterThangamani #Summer
    வேளச்சேரியில் புதிய துணை மின்நிலையத்திற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது வேளச்சேரியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று வாகை சந்திரசேகர் (தி.மு.க.) கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

    "தமிழ்நாட்டில் 1600 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேளச்சேரியில் பூமிக்கு அடியில் மின் கம்பி வடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. உறுப்பினர் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து புதிய துணை மின் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.

    பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 7 அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 1,694 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 7 அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 1,694 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இந்த விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா வரவேற்றார். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளராக மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசும்போது, குமாரபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. மேலும் பொறியியல் கல்லூரி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. நமது மாநிலத்தில் இவ்வாறு வழங்கப்படுவதை பார்த்து மற்ற மாநிலங்கள் இதை பின்பற்றுகின்றன. மாணவ, மாணவிகள் அரசின் உதவிகளை பெற்று பயனடைந்து தமிழகத்தை முன் மாதிரி மாநிலமாக திகழ செய்ய வேண்டும், என்றார்.

    முடிவில் தலைமை ஆசிரியர் கருப்பண்ணன் நன்றி கூறினார்.

    விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தங்கவேல், ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் செந்தில், நகராட்சி முன்னாள் தலைவர் வெள்ளிங்கிரி, டி.சி.எம்.எஸ். தலைவர் மூர்த்தி, நகராட்சி முன்னாள் துணை தலைவர் சுப்பிரமணியம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #Thangamani
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன் ஆகியோர் கறம்பக்குடி, மழையூர், புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் நகர பகுதிகளில் 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. கிராம பகுதிகளில் 80 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீதம் மின்சாரமும், ஊராட்சி பகுதிகளில் 40 சதவீதமும் வழங்கப்பட்டுவிட்டது. திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    நாகை மாவட்டத்தை பொறுத்தவரை வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் வழங்கப்பட வேண்டியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வார காலத்திற்குள் 100 சதவீத மின்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுவிடும்.

    வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பணியாற்றும் மின்சார ஊழியர்களுக்கு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி ஒரு சில சம்பவங்கள் விபத்துக்கள் நடந்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் வெளிமாநில மற்றும் மாவட்ட வாரிய ஊழியர்களுக்கு தமிழக முதல்வரி டம் கலந்து பேசி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு ஐந்தாம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டங்களில் மின்சார கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய பணியாளர்களை அமைச் சர்கள் தங்கமணி, கே.சி.கருப்பணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கந்தர்வக் கோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகம் ஆகியோர் சந்தித்து அவர்களுடன் உணவருந்திய காட்சி.

    மின்வாரியத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்கள் நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது அரசின் கொள்கை முடிவு. இருப்பினும் அவர்களின் கூலியை உயர்த்தி வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் கலந்து பேசி பரிசீலனை எடுக்கப்படும்.

    இயற்கை பேரிடரின் போது எவ்வாறு அவர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை நாங்கள் கண்கூடாக தற்போது பார்த்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் மின் வாரிய ஊழியர்களை சந்தித்த அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.கருப்பணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினர். #GajaCyclone #Thangamani
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் 45 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #MinisterThangamani
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், ராஜேந்திர பாலாஜி, மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி மணிவாசன், மாவட்ட ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலினால் 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 199 நிவாரண முகாம்களில் 3 வேளை உணவு, உடை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    மின்சாரத்தை பொறுத்த வரை திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மின்சார கட்டமைப்பு முழுமையாக பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் மின்கம்பங்களும், 201 துணை மின்நிலையங்களும், 841 மின்மாற்றிகளும் சேதமடைந்துள்ளது.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 3,787 மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சீரமைப்பு பணியில் 1,518 எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது.

    மின் வினியோகத்தை பொறுத்தவரை திருவாரூர் நகராட்சியில் 100 சதவீதமும், மன்னார்குடி நகராட்சியில் 92.66 சதவீதமும், கூத்தாநல்லூர் நகராட்சியில் 92.42 சதவீதமும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 75.02 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் 45 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterThangamani
    கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் ஓரிரு நாட்களில் முழுமையான மினி விநியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #MinisterThangamani
    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்கள் முருகேசன், மோகன் ஆகியோர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

    அவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று இரவு திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து அவர்கள் இருவரையும் பார்த்தார்.

    டாக்டர்களிடம் இருவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அவர்களது இருவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

    பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் கீழே விழுந்துள்ளன. 20 மின் கோபுரங்கள் வெடித்து சிதறி உள்ளன. 219 துணை மின் நிலையங்கள் சேதம் அடைந்தன. இவற்றை சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் 21 ஆயிரத்து 461 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இன்னும் 55 துணை மின்நிலையங்கள் சீரமைக்கப்பட வேண்டியது உள்ளது. மின்கம்பங்கள் நடும் பணிகளும் இன்னொரு புறம் தீவிரமாக நடந்து வருகிறது.

    பொதுவாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பொறுத்தவரை நகர பகுதிகளில் மின் இணைப்பு வழங்கும் பணியானது இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக வழங்கப்பட்டு விடும். தஞ்சாவூர் நகர பகுதியில் 98 சதவீதமும், திருவாரூரில் 60 சதவீதமும், நாகை நகர பகுதியில் 95 சதவீதமும் மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கிராமப்பகுதிகளை பொறுத்தவரை சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைய இன்னும் ஒரு வார காலம் ஆகும்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது தனியார் ஒருவர் ஜெனரேட்டர் போட்டதால் தான் இந்த சம்பவம் நடந்து விட்டதாக கூறப்படுகிறது. அது உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterThangamani
    கஜா புயலின் வேகம் அதிகமாக இருந்ததால் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்து விட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #Gaja #MinisterThangamani
    சென்னை:

    கஜா புயல் நேற்று நள்ளிரவு கரையை கடந்த போது நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிக பலத்த சேதம் ஏற்பட்டது. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் டவர்கள் சாய்ந்து விழுந்தன.

    இதுபற்றி மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கஜா புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதை உணர்ந்து முன்கூட்டியே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தோம்.

    இதற்காக புயல் பாதித்த திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க இரவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

    புயலின் வேகம் அதிகமாக இருந்ததால் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது. பல இடங்களில் பெரிய பெரிய மரங்கள் மின் வயர்கள் மீது விழுந்ததால் கம்பிகள் அறுந்து விழுந்து கிடக்கிறது.

    ஆயிரக்கணக்கான இடங்களில் டிரான்ஸ் பார்மர்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.

    தஞ்சாவூரில் 5 ஆயிரம் மின் கம்பங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் மின் கம்பங்கள் நாகை மாவட்டத்தில் 4 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கிறது. இவற்றை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.

    பல இடங்களில் மரங்கள் விழுந்து கிடப்பதால் அதை அகற்றிய பிறகுதான் மின் கம்பங்களை சரி செய்ய முடிகிறது.



    தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000 மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் மின் வாரிய ஊழியர்கள் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் நேரடியாக சென்று பணிகளை பார்வையிட்டு வருகிறேன்.

    மின் வினியோகம் சீராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரிகளுக்கு முதலில் மின் இணைப்பு கொடுத்து வருகிறோம். அதைத் தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கு மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எங்களிடம் போதிய மின் கம்பங்கள் இருப்பு உள்ளதால் தேவைப்படும் பகுதிகளுக்கு உடனுக்குடன் மின் கம்பங்களை அனுப்பி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் சத்ய கோபால் கூறியதாவது:-

    புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு 6 மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டிருந்தது. குடிசை வீடுகள், ஆஸ்பெஸ்டாஸ், தகர கொட்டகை வீடுகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாமுக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    மொத்தம் உள்ள 471 நிவாரண முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.

    மீட்பு குழுவினர் அனைவரும் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர். சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #Gaja #MinisterThangamani
    இந்தியாவிலேயே ஒரு முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றால் அது எடப்பாடி பழனிசாமி மீதுதான் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #EdappdiPalaniswami
    தஞ்சாவூர்:

    தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல் தடவையாக நேற்று தஞ்சைக்கு வந்தார்.

    தஞ்சையில் இன்று நடைபெறும் பல்வேறு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து அவர் வரும் போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் நேற்று மாலை பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா சிறைக்கு சென்றார். அதன் பின் அதிர்‌ஷடத்தில் விபத்து போல் எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார்.

    பொதுப் பணித்துறையையும், நெடுஞ்சாலைத்துறைகளையும் தன்வசம் வைத்து கொண்டு இதன் மூலம் ரூ.3ஆயிரம் கோடி வரை அவருடைய உறவினர்களுக்கு டெண்டர் வழங்கி ஊழல் செய்துள்ளார்.

    முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்- அமைச்சர் மட்டுமின்றி அமைச்சர்களும் ஊழலில் திளைத்து வருகின்றனர். அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஐயபாஸ்கர் ஆகியோர் மீது சி.பி.ஐ. விசாரணை வந்து கொண்டிருக்கிறது.

    ஜெயலலிதா இறந்த பிறகு அவர் செய்த ஊழலை விட எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் அதிகமாக நடைபெறுகிறது.

    இந்தியாவிலேயே ஒரு முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றால் அது எடப்பாடி பழனிசாமி மீதுதான். எனவே இதற்கு பிறகாவது எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். இதை தான் மாற்று கட்சியினர் மட்டுமின்றி தமிழக மக்களும் விரும்புகின்றனர். மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #EdappdiPalaniswami
    டெண்டர் விடாமல் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முடிவு செய்திருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #ADMK #edappadipalaniswami
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெண்டர் விடாமல் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து, 150 சதவீதம் அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய அ.தி.மு.க அரசு, கொள்ளை முடிவு செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாநிலமெங்கும் மின் வெட்டு வரப்போகிறது என்று பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் முன் கூட்டியே எச்சரிக்கை செய்தும், அ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஒரு செயற்கையான நிலக்கரிப் பற்றாக்குறையை ஏற்படுத்தி இப்படியொரு கொள்ளை லாபம் அடிக்கும் நிலக்கரி இறக்குமதியில் அ.தி.மு.க அரசும், அமைச்சர் தங்கமணியும் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.

    இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து அதானி எண்டர்பிரைசஸ் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு டன்னுக்கு 5008.45 ரூபாயும், ஸ்ரீ ராயல் சீமா என்ற கம்பெனிக்கு டன்னுக்கு 4936.25 ரூபாயும், யாசின் இம்பெக்ஸ் இந்தியாவிற்கு டன்னுக்கு 5098 ரூபாயும் கொடுப்பதற்கு அ.தி.மு.க அரசு ஒப்புக்கொண்டு, டெண்டர் விட வேண்டும் என்ற விதிகளையும் தளர்த்தி கொள்முதலில் ஈடுபடுகிறது என்ற செய்தி இந்த அரசு உறக்கமின்றி ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

    “கோல் இந்தியா” விடமிருந்து ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் நிலையில், அதிக விலை கொடுத்து அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியை வாங்குவது அ.தி.மு.க அரசின் கையாலாகாத்தனமாகவும் கைலாகுத்தந்திரமாகவும் தெரிகிறது.


    சில தினங்களுக்கு முன்பு மின்துறை அமைச்சர் தங்கமணி “மின்பகிர்மானக் கழகத்திடம் போதிய நிலக்கரி கையிருப்பு இருக்கிறது. நிலக்கரி பற்றாக்குறை ஏதுமில்லை” என்று கூறினார். ஆனால் முதல்-அமைச்சரோ “நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது. உடனே நிலக்கரி ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு அதிகரியுங்கள்” என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

    மின் பகிர்மானக்கழகத்தில் நிலக்கரிப் பற்றாக்குறை இருக்கிறதா இல்லையா என்பதில் அமைச்சரவைக்குள்ளேயே முரண்பாடுள்ள நிலையில், தமிழ்நாடு டெண்டர் சட்ட விதிகளைத் தளர்த்தி, அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டிய நெருக்கடி ஏன் மின் பகிர்மானக் கழகத்திற்கு வந்தது? “நிலக்கரி இறக்குமதி பற்றி ஒரு தெளிவான கொள்கை மின் பகிர்மானக் கழகத்திடம் இல்லை” என்று சி.ஏ.ஜி அறிக்கையில் முன் கூட்டியே சுட்டிக்காட்டியும், நிலக்கரி இறக்குமதிக் கொள்கையை வகுக்காமல் இப்படி டெண்டர் விதிகளைத் தளர்த்துவது ஏன்?

    அதானியின் கம்பெனிகள் ஏற்கனவே தமிழ்நாடு மின் வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டு அந்த கம்பெனிகள் மீது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை நடக்கும் போது, மீண்டும் அதே கம்பெனியிடமிருந்து நிலக்கரி வாங்குவது ஏன்? தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத் தலைவரும், அரசின் மின்துறைச் செயலாளரும் எப்படி டெண்டர் இல்லாமல் நிலக்கரி வாங்க ஒப்புக்கொண்டார்கள்? என பல்வேறு கேள்விகள் வரிசையில் நிற்கின்றன.

    அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கி, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. “காற்றாலை மின்சார ஊழல்” “நிலக்கரி கொள் முதல் ஊழல்” “மின்சாரம் கொள்முதல் ஊழல்” என்று மெகா ஊழல்களின் “நரகபூமியாக” மின்பகிர்மானக் கழகம் மாறி நாறிக் கொண்டிருக்கிறது.

    நிலக்கரி கொள்முதல் ஊழல் பற்றி மத்திய தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டினாலும், எதிர்க்கட்சிகள் புகார் சொன்னாலும், “நாங்கள் திருந்தவே மாட்டோம்” என்று பிடிவாதமான முடிவு எடுத்து இப்போது மீண்டும் நிலக்கரி ஊழலில் ஈடுபடுவது கடுமையான கண்டனத்திற்குரியது.

    ஆகவே டெண்டர் விதிகளைத் தளர்த்தி, முறைகேடுகள் மூலம் ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி வாங்குவதை அ.தி.மு.க அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், நிலக்கரி தேவை என்றால் வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். ஆளத் தெரியாதவர்கள் அரசாங்கப் பணத்தை சூறையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்த கொள்ளைக்குத் துணை போகும் அதிகாரிகளும் நிச்சயம் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய கால கட்டம் வரும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #ADMK #edappadipalaniswami
    ×